சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மேகாலய உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.மிட்டலை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் விஜயா கமலேஷ் தஹில் ரமணி. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார். இதற்கு முன்பு இவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், தஹில் ரமணி அண்மையில் மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி காலியானது. இந்நிலையில் மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே.மிட்டலை தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஏ.கே.மிட்டல் 1977ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர்.

தொடர்ந்து பஞ்சாப் – ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய இவர், 2004ஆம் ஆண்டு அதே நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி ஜூன் வரை பஞ்சாப் – ஹரியானா உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வந்தார் ஏ.கே.மிட்டல். அதைத்தொடர்ந்து, நடப்பாண்டின் மே 28ஆம் தேதி மேகாலயா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தார். தற்போது ஏ.கே.மிட்டலை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.