“சிதம்பரத்தை கைது செய்யாமல் எங்களால் உண்மையை வரவழைக்க முடியாது. எனவே, தயவுசெய்து சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கிவிடாதீர்கள்” என உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து, கடந்த 21ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் டெல்லியில் கைது செய்யப்பட்டார் ப.சிதம்பரம். வரும் 30ஆம் தேதி(நாளை) வரை அவரை சிபிஐ காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் அமலாக்கத் துறை வழக்கில் முன்ஜாமீன் கோரியும், சிபிஐ வழக்கில் ஜாமீன் கோரியும் ப.சிதம்பரம் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில், ப.சிதம்பரம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் மற்றும் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் அவர்கள் தரப்பு வாதங்களை இரண்டு நாட்களாக முன்வைத்தனர். தற்போது, சிதம்பரத்திற்கு எதிராக நேற்றும் இன்றும் அமலாக்கத்துறை சார்பாக வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்து வருகிறார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகின்றது.

இன்று(ஆகஸ்ட் 29) அமலாக்கத் துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடியதாவது, “சிதம்பரத்திடம் நாங்கள் நேர்காணல் செய்ய விரும்பவில்லை; அவரிடம் இருந்து உண்மையை வரவழைக்க விரும்புகிறோம். வழக்கில் சம்மந்தப்பட்டவர்களை வைத்து விசாரணை நடத்தவுள்ளோம். வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விட தப்பிக்கவே அதிகமாக ப.சிதம்பரம் முயற்சி செய்தார்.

சிதம்பரம் முன்பு தலைமறைவாக இருந்தவர். அவர் தான் இப்போது முன் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார். சிதம்பரம் செய்த குற்றம் சமூகத்திற்கும் நாட்டிற்கும் எதிரானது. அதனால் அவரை கைது செய்யாமல் எங்களால் உண்மையை வரவழைக்க முடியாது. எனவே ‘தயவுசெய்து சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்கிவிடாதீர்கள்’. ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்றவர்களின் வழக்குகளைப் பாதிக்கும்.” என வாதாடினார்.