குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காத்தவராயன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். வேலூர் மாவட்டம் குடியாத்தம்(தனி) சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் காத்தவராயன். இவர் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற 18 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு இதயநோய் பாதிப்பு இருந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் போதிய பலன் அளிக்காததால் அப்போலோ மருத்துவமனையில் சேர்ந்து கடந்த மாதம் ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து காத்தவராயன் இல்லத்திற்குச் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் விசாரித்து வந்தார். இந்நிலையில் மீண்டும் உடல்நிலை மோசமானதால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார்.

காத்தவராயன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், மத்திய மாவட்ட திமுக துணை செயலாளராக இருந்துள்ளார். 58 வயதான இவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைதாகி சிறை சென்றவர்.

நேற்று திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் காத்தவராயனும் இறந்ததால் திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் தமிழக சட்டமன்றத்தில் திமுக எம்.எல்.ஏக்களின் பலம் 98ஆக குறைந்துள்ளது.