மத்தியில் திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தால், மாணவர்களின் கல்விக் கடன் மற்றும் விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என ஓசூரில் இன்று (பிப்ரவரி 23) நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தெரிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

நாடாளுமன்ற தேர்தல்

2019 நாடாளுமன்ற தேர்தலை தமிழகத்தில் திமுகவுடன் இணைந்து காங்கிரஸ் சந்திக்கவுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது. எதிர் கட்சியான திமுக தங்களுடைய கூட்டணியை பலபடுத்திவரும் நிலையில், ஆளும் கட்சியான அதிமுகவும் தங்களது கூட்டணியை பலபடுத்திவருகிறது.

திமுக கிராம சபை கூட்டம்

கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் திமுக கிராம சபை கூட்டம் திருவாரூரில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், தொரப்பள்ளியில் திமுக சார்பில் இன்று நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அதற்கு முன்னதாக ராஜாஜியின் நினைவில்லத்துக்கு சென்ற மு.க.ஸ்டாலின், ராஜாஜியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

“வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் வர வாய்ப்புள்ளது. கடந்த ஒரு வருடமாக 18 தொகுதிகளும் காலியாக இருந்த நிலையில், தற்போது, 3 தொகுதிகள் சேர்ந்துள்ளது. எனவே ஒரே நேரத்தில்  இடைத்தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் வைக்கப்பட்டால் தேர்தல் செலவுகள் குறையும்.

இடைத்தேர்தல் வைத்தால் அதிமுக தன் பெரும்பான்மையை இழந்துவிடும் என்பதால் இடைத்தேர்தல் நடத்தவிடாமல் செய்கின்றனர்.  இவர்கள் சொல்வதைத்தான் மோடியும் கேட்கிறார். இதை  சொல்லித்தான் அதிமுகவை கூட்டணிக்குள் இழுத்துள்ளனர்.” என்று கிராம சபை கூட்டத்தில் கூறினார் மு.க.ஸ்டாலின்.

கல்வி கடன் ரத்து

மேலும் பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும். வரும் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வென்று திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து  செய்யப்படும். மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பு வருகின்ற பாராளுமன்ற தேர்தல் அறிக்கையிலும் கட்டாயம் இடம் பெறும்  என  தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோன்று விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்” என்று உறுதியளித்தார்.