2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 34 தொகுதிகளில் வெற்றி பெறும்  என சி வோட்டர் நிறுவனத்துடன் ரிபப்ளிக் டிவி இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் களம்

மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் தேதிகளை தேர்தல் ஆணையம் நேற்று (மார்ச் 10) அறிவித்திருந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடக்கும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியான அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஓரணியிலும், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் ஓரணியிலும் நின்று தேர்தலை சந்திக்கவுள்ளன. டிடிவி தினகரனின் அமமுக தனித்துப் போட்டியிடுவதாகக் கூறப்படுகிறது.

34 தொகுதிகளில் வெற்றி

தமிழகத்தில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில், எந்தக் கூட்டணி வாகை சூடும் என்று ரிபப்ளிக் டிவி கருத்துக் கணிப்புகள் நடத்தியுள்ளது. வெற்றி கூட்டணி குறித்த தகவல்களை நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடும் எனவும், அதிமுக தலைமையிலான கூட்டணி 5 இடங்களை மட்டுமே பிடிக்கும் எனவும் இந்தக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது எனவும் கூறப்பட்டுள்ளது.

வாக்குபதிவுகளில் திமுக தலைமையிலான கூட்டணி 44.8 விழுக்காடு வாக்குகளையும், அதிமுக தலைமையிலான கூட்டணி 32.3 விழுக்காடு வாக்குகளையும், மற்ற கட்சிகள் 22.9 விழுக்காடு வாக்குகளையும் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிபப்ளிக் டிவி, இதற்கு முன்பு கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் நடத்திய கருத்துக்கணிப்பில், திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவித்திருந்தது. தற்போது மக்களவை தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு 5 தொகுதிகள் குறைந்து 34ஆக உள்ளதாக கூறியுள்ளன.

பாஜகவின் நிலை

இதைதொடர்ந்து, தேசிய அளவில் தனித்து ஆட்சியமைக்க எந்தக் கட்சியும் பெரும்பான்மை பலம் பெறாது என ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், பெரும்பான்மை இடங்களுக்குச் சற்றுக் குறைவான இடங்களை பாஜக கூட்டணி பெறும் எனவும் முடிவு தெரிவித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 264 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 141 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 138 தொகுதிகளிலும் வெற்றி பெரும் எனவும் ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு எதிரான நிலை இருப்பதாக இந்தக் கருத்துக்கணிப்பின் மூலம் பாஜக ஆதரவு தொலைக்காட்சியாகக் கருதப்படும் ரிபப்ளிக் டிவி வெளிக்காட்டியுள்ளது குறிப்பிடதக்கது.