தமிழக அரசு அலுவலங்களில் பணிபுரியும் ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கு ஆடை அணிந்து வருவதில் சில கட்டுப்பாடு விதிமுறைகள் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது.

சமீபகாலமாக அரசு அலுவலங்களில் பணி புரியும் ஆண், பெண் ஊழியர்கள் நாகரீக உடை என சில ஆடைகளை அணிந்து வருவது தேவையில்லாத பிரச்சனைகளையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுக்கு பல புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

புகாரைத் தொடர்ந்து ஆடை விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் “அரசு அலுவலங்களில் பணி புரிந்து வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் தூய்மையான ஆடைகளை அணிந்து வர வேண்டும். பெண்கள் சேலை, சுடிதார், சல்வார்கமிஸ் உள்ளிட்ட ஆடைகள் அணிந்து வரலாம். ஆனால் சுடிதார் மற்றும் சல்வார்கமிஷ் அணிந்து வரும்போது துப்பட்டா கண்டிப்பாக அணிந்து இருக்க வேண்டும் எனவும் ஆண்கள் சதாரண பேண்ட், சட்டை அணிந்து பணிக்கு வரலாம். டீ-சார்டுடன் வருவதை தவிர்க்க வேண்டும். நீதிமன்ற விசாரணைக்குச் செல்லும் ஆண்கள் கோட் அணிந்து செல்ல வேண்டும். பெண்கள் சேலை, சுடிதார் அணிந்து செல்லலாம். ஆனால் துப்பட்டா கண்டிப்பாக போட்டிருக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த உத்தரவு தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது