தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க ஆதார் கார்டை ஏன் கட்டாயமாக்க கூடாது? என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இன்று (பிப்ரவரி 26) கேள்வி எழுப்பியுள்ளது.

டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும்

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். ”மதுரை மாவட்ட டாஸ்மாக் மதுபானக் கூடங்களில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்வதற்கான டெண்டரில் குறைந்த கால அவகாசமே வழங்கப்பட்டுள்ளது. எனவே அந்த டெண்டர் அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும்” என அம்மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு இன்று (பிப்ரவரி 26) விசாரணைக்கு வந்தது. அப்போது, இரண்டு ஆண்டுகளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதைகேட்ட நீதிபதிகள், ‘தமிழகத்தில் பெரும்பாலான குற்றச்சம்பவங்கள் டாஸ்மார்க் பார்களிலேயே நடக்கின்றன.  மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் அதிகளவு விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரிக்கின்றன.  மேலும், மாணவ, மாணவிகள் மதுவுக்கு அடிமையாவது தமிழகத்தில் அதிகரித்துள்ளது” எனக் கருத்து தெரிவித்தனர்.

மதுபானம் வாங்க ஆதார் அட்டை அவசியம்?

அதைதொடர்ந்து, தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகளில் மது வாங்க ஆதார் அட்டையை ஏன் கட்டாயமாக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், டாஸ்மாக் கடை திறந்திருக்கும் நேரத்தை பிற்பகல் 2 மணியிலிருந்து இரவு 10 மணி வரை ஏன் மாற்றக்கூடாது எனவும் கேள்வி எழுப்பினர்.

மேலும், தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை ஏன் முழுவதுமாக மூடக்கூடாது என அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பார்களுக்கான டெண்டர் அறிவிப்பு இரண்டு ஆண்டுகளுக்கென வெளியானது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பாக மார்ச் 12ஆம் தேதியன்று டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

அடுக்கடுக்கான கேள்விகள்

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை நேற்று (பிப்ரவரி 25) விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் எப்போது நிரந்தரமாக மூடப்படும் எனக் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடதக்கது.

தமிழகத்தில் 2016இல் எத்தனை டாஸ்மாக் கடைகள் இருந்தன? அதன் பின்னர் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன?, அவை எத்தனை கட்டங்களாக மூடப்பட்டன? 2016ஆம் ஆண்டுக்கு பின்னர் எத்தனை டாஸ்மாக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டன?, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எப்போது முழுவதுமாக மூடப்படும்? என்ற பல கேள்விகளை நேற்று முன்வைத்த நீதிபதிகள், 2016ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளால் கிடைக்க பெற்ற வருவாய் எவ்வளவு? என்றும் அறிக்கை தாக்கல் செய்யக் கூறியுள்ளனர்.