சீனாவின் ஷாங்காய் நகரம்தான் உலகின் முதல் 5ஜி நெட்வொர்க் மற்றும் பிராட்பேண்ட் ஜிகாபிட் சேவையை பெறும் நகரமாக பெருமை பெற்றுள்ளது.

உலக நாடுகளிடையே அடுத்த தலைமுறை செல்லுலார் மற்றும் மொபைல் நெட்வொர்க் சேவையை உருவாக்குவதில் கடும் போட்டி நிலவிவருகிறது. அந்த வகையில் 5ஜி தொழில்நுட்பம் அடுத்த தலைமுறை செல்லுலார் தொழில்நுட்பமாக இருக்கிறது. தற்போதைய 4ஜி எல்.டி.இ. நெட்வொர்க்களைவிட 5ஜி சேவையைப் பயன்படுத்தும்போது டவுன்லோடு வேகம் 10 முதல் 100 மடங்குவரை அதிகமாக இருக்கும்.

இந்நிலையில், சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 5ஜி சிக்னல் பரப்பளவு மற்றும் பிராட்பேண்ட் ஜிகாபிட் நெவொர்க் உருவாக்கப்பட்டுள்ளதையடுத்து, சைனா மொபைல் 5ஜி நெட்வொர்க் சோதனை ஷாங்காயின் ஹாங்கௌவில் துவங்கப்பட்டுள்ளது. சீராக இயங்க துவங்கும்போது, பயனர்கள் தங்களது சிம் கார்டுகளை அப்டேட் செய்யாமல் புதிய நெட்வொர்க் சேவையை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. இதே பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக 5ஜி பேஸ் ஸ்டேஷன்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

5ஜி சேவை மையங்கள் சீனாவின் பல்வேறு பகுதிகளில் இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில்  ஹூவாய் நிறுவனம் 5ஜி சேவையை வழங்குவதற்கு, அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவருகிறது. ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி சேவைகளை பயன்படுத்த வேண்டாம் என பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும், ஹூவாய் சீன அரசாங்கத்துடன் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லையென தெரிவித்துள்ளது.

முதன்முதலில் 5ஜி சேவையை ஷாங்காய் மாவட்ட துணை மேயர் வு கிங் அவர்கள் வீடியோ கால் மேற்கொண்டு துவங்கி வைத்தார். இதற்கு அவர் ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனினை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.