லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கைதி’ படப்பிடிப்பை முடித்துக்கொடுத்த கையோடு, அடுத்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள தொடங்கிவிட்டார் கார்த்தி.
மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம், அதன் தமிழ் ரீமேக் என இரண்டையும் இயக்கிய ஜீத்து ஜோசப் தற்போது கார்த்தியுடன் நினைந்துள்ளார். இந்தப் படத்தில், கார்த்தியின் அக்காவாக ஜோதிகா மற்றும் தந்தையாக சத்யராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.
இன்னும் பெயரிடப்படாமல் உருவாகிவரும் இப்படம்தான் ஜோதிகா – கார்த்தி இணைந்து நடிக்கும் முதல் படமாகும். கடைக்குட்டி சிங்கம் படத்துக்குப் பிறகு மீண்டும் இதில் கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
படப்பிடிப்பு தொடங்கி ஊட்டி போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், இதில் நடிக்கும் பிற கலைஞர்கள் பற்றிய தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில், இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க நிகிலா விமல் படப்பிடிப்பில் இணைந்துள்ள தகவல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர் கிடாரி, வெற்றிவேல் போன்ற படங்களில் நடித்தவராவார்.
கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்துக்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது.