பாலா அடுத்ததாக இரட்டை நாயகர்கள் கொண்ட படத்தை இயக்கவுள்ளதாகவும் அதில் ஆர்யா மற்றும் அதர்வா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘வர்மா’ பாலாவின் இயக்கத்தில் உருவானது. முழுமையாக முடிக்கப்பட்ட இப்படம் சில காரணங்களால் கைவிடப்பட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இதன்பிறகு பாலா இயக்கும் படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது அவரது புதிய படத்தில் ஆர்யா, அதர்வா நடிக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஏற்கனவே பாலாவின் ‘நான் கடவுள்’ மற்றும் ‘அவன் இவன்’ ஆகிய படங்களில் ஆர்யா நடித்துள்ளார். அதர்வாவும் பாலாவின் ‘பரதேசி’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது மூவரும் மீண்டும் இணைந்து பணிபுரிகிறார்கள்.