மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருந்தாலும், அவ்வப்போது இதுகுறித்த முக்கிய தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.
இப்போதும் ‘பொன்னியின் செல்வன்’ பற்றி இரு முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஒன்று ஏற்கனவே அறிந்த செய்திதான் என்றாலும், பாலிவுட் துறையில் பேசப்படும் செய்தியாக அது மாறியிருக்கிறது.
ஐஸ்வர்யா ராய் ‘நந்தினி’ கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே நாம் பார்த்தோம். ஆனால், இதன்மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சற்று வித்தியாசமான எதிர்மறை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் தோன்றவுள்ளதாகவும், மணிரத்னம் படங்களிலேயே ஐஸ்வர்யா ராயின் இந்தக் கேரக்டர் புதுமையாக இருக்குமெனவும் பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இதுமட்டுமின்றி, விஜய் சேதுபதியும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சிறிய கதாபாத்திரம் என்றாலும் கதையில் அவருக்கு மிக வலிமையான இடமிருப்பதாக கூறுகின்றனர். விக்ரம், ஜெயம் ரவி, அமிதாப் பச்சன், கார்த்தி, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, அமலா பால் உள்ளிட்டவர்கள் நடிப்பதாக கூறப்படும் இப்படத்தை தொடங்குவதற்காக, முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடம் மணிரத்னம் பேச்சுவார்த்தை நடத்திவருவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.