1999ஆம் ஆண்டு டைம்லர் மற்றும் ரிச்சமண்ட் ஆகியோரால் தொடங்கப்பட்ட லாரியஸ் விருது, ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு விருது வழங்கி கெளரவித்துவருகிறது.

பொதுவாக, “விளையாட்டு என்பது சமூகத்தில் வாழும் மக்களின் இடைவெளியை குறைத்து ஒருவரோடு ஒருவரை இணைக்க இணைப்பு பாலமாக செயல்படுகிறது” என்பதுதான் இந்த அமைப்பின் முக்கிய குறிக்கோளாக பார்க்கப்படுகிறது. அந்த அடிப்படையில் உலகின் தலைசிறந்த பல வீரர்கள் இவ்விருதுகளை பெற்றுள்ளனர்.

ஆண்டு தோறும் வழங்கப்படும் இந்த விருதில் 2019ஆம் ஆண்டுக்கான விருதுகள் பெர்லினில் வழங்கப்பட்டன. 2019ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான லாரியஸ் விருது கால்பந்து வீரர் மெஸ்சி மற்றும் கார் பந்தய வீரர் ஹாமில்டோனுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டு உலகின் சிறந்த தருணமாக இந்திய கிரிக்கெட் அணி சச்சின் டெண்டுல்கரை, 2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் வென்ற பின், வீரர்கள் தோளில் சுமந்து சென்ற நிகழ்வானது அதிக வாக்குகள் பெற்று தேர்வானது.

விருது வழங்கும் விழாவில் சச்சின் டெண்டுல்கர் அவ்விருதினை பெற்றுக் கொண்டார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக் இந்த விருதை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது

விருதை பெற்ற பின் பேசிய சச்சின் டெண்டுல்கர், “ இது மிகவும் சிறப்பு மிக்கது. உலக கோப்பையை வென்றபோது இருந்த உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மிகவும் அரிதாக ஒட்டு மொத்த நாடும் அந்தத் தருணத்தை கொண்டாடியது” என்றார்.