சித்ராவிற்கு அந்த குமரன் பஞ்சாலைக்குச் செல்கிறபோதெல்லாம் தான் ஏதோ ஒரு வகையில் உடல்ரீதியாக துன்புறுத்தப்படலாம் என்பதுமனதில் பயத்தைக் கிளப்பிக் கொண்டு இருந்தது.அப்படியெதுவும் இதுவரை நடந்ததில்லை.

இந்த முறையும் பஞ்சாலையின் முகப்பில் சென்று காவலாளிக்கு வணக்கம் செலுத்தியபோது அவன் பார்த்த பார்வையில் ஏனோ உடம்பு நடுங்கியது.அவள் கழுத்தில் இருந்த அடையாள அட்டை கயிற்றுடன் தொங்கி விளையாட்டு காட்டியது.இந்த எண்ணம் விபரீதம் என்று தனக்குள் சொல்லிக் கொள்கிறாள்.. அவள் கைப்பையில் சமீபத்தில் சங்கு கழுத்து வடிவமைப்பில் ஒரு சின்ன பேனாக் கத்தி வைத்திருக்கிறாள். பேனாக் கத்தி என்பதை ஒருவரும் அறிய மாட்டார்கள். பேனா போல் எழுதுவதற்கு இருக்கும். மறுபுறம் விரித்தால் கூர்மையான கத்தி தென்படும். அதை ஏன்தன் கைக்குள் அடக்கி கொண்டாள் என்பதில் அவளுக்கு ஆச்சரியம் இருந்திருக்கிறது. தான் தன்னார்வக் குழுவின் இயக்குனர் மனோகரனிடம் தற்காப்புக்காக ஒரு பெப்பர் ஸ்ப்ரே வாங்கிக் கொள்ள முடியுமா என்று கேட்டாள். அதற்கெல்லாம் நிதி வசதி உள்ளதா என்றார்

.‘‘உனக்கு அந்த ஸ்பின்னிங் மில்லுக்குப்போய்ட்டு வர்ற பஸ் டிக்கட் கட்டணம் கூடத் தர முடியாமெ பல சமயம் சிரமப்படறம். இதுல,இதெல்லாம் என்ன விபரீதகற்பனை.”

இந்த முறை அந்த பஞ்சாலைக்கு அவள் செல்வது 17ஆவது முறை.அவளின் இன்னொரு சக தோழியான ஜெபம் மேரி இன்னொரு தன்னார்வக் குழுவில் வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் தியாகி பஞ்சமர் பஞ்சாலைக்கு முப்பதாவது முறை சென்றவள். அந்தப் பஞ்சாலையின் முதலாளியை முப்பதாவது முறை சென்றபோதே சந்திக்க முடிந்திருக்கிறது. அதனால்பதினேழு முறைகள் என்பதெல்லாம் மிசாதாரணம். தொடர்ந்து போய்க் கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் அந்த நிர்வாகிகளோ முதலாளியோ கண்ணில் படுவர். பேசுவதற்குவாய்ப்பு கிடைக்கும் என்றாள் அவளின் குழுவிலிருந்து சொல்லப்படுகின்ற பணி அந்தப் பஞ்சாலையில் உள்ள தொழிலாளருக்கு சுகாதாரம் மற்றும் உடல்நலம் குறித வகுப்பெடுக்கும் ஒப்பந்தத்தில் நிர்வாகத்தை உடன்பட வைப்பது. அதை நிர்வாகத்திடம் பேசி ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்துப் பெறுவதுதான். அதற்குப் பின் தொடர்ச்சியாக அவள் அங்கு அந்த வகுப்புகளில் பாடம் எடுக்கச் செல்லலாம் என்பதை உணந்திருந்தாள். தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகளைப் பற்றி சொல்லித் தரலாம்.அங்கு குழுக்கள் அமைக்கப்பட்டு பெண்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதில்லை என்ற ரீதியில் பிரச்சாரத்தையும் துவங்கி அந்தப் பஞ்சாலை பிரதேசம் பாலியல் அத்துமீறல்கள் இல்லாத பிரதேசம் என்று ஒரு பெரிய விழாவில் அறிவிக்கப்படும். தொடர்ந்து அவளின் அந்தப் பஞ்சாலை சார்ந்த விழிப்புணர்வு வேலைகள் அங்கு நடைபெறும். அடுத்த புராஜெக்ட்டில் வேறு தன்னார்வக் குழுவில் இன்னும் சம்பள உயர்வுடன் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அந்த நல்ல வார்த்தைகளுக்காகக் காத்துக் கொண்டிருக்க வேண்டும்.

பஞ்சாலை முகப்பில் இருந்த காவலாளி சற்றே மாநிறத்துடன் இருந்தான். அவனுக்கு உச்சமாய் இருபத்தைந்து வயது கூட இருக்காது. இதுபோன்ற காவலாளிகள் பெரும்பாலும் வயதானவர்களாகத்தான் இருப்பார்கள், ஆனால் அந்தக் காவலாளிக்கு இளம் வயது. ஒரு குடும்பஸ்தராக கூட இருக்க மாட்டார் என்று நினைத்தாள். தன்னைப் போல.

ஆனால் வெயிலிலும் அலைச்சலிலும் அவள் முகம் வாடி இருந்தது.அவன் கூர்ந்து அவளின் கவலை தோய்ந்த முகத்திற்கு ஆறுதல் தருவது போல் பேச ஆரம்பித்தான்.

அவளின் கழுத்தில் தொங்கிய அடையாள அட்டையைக் கழற்றி பக்கமிருந்த நாற்காலியில் வைத்தாள். உட்காரச் சொன்னதற்காய் நன்றி சொல்லிக் கொண்டாள்,

‘‘பத்து தரமாச்சும் வந்துட்டீங்க.. இன்னும் நீங்க உள்ளே போய் கூடப் பாக்க முடியல.”

‘‘பதினேழு தரம்…ஆமாங்க, அதுதான் ரொம்ப சிரமமா இருக்கு. இந்த ஒரு கம்பெனியிலிருந்து அக்ரிமெண்ட் போட்டா போதும அது பலனளிக்கும்…..இத்தனை நாள் வந்ததுக்கு அக்ரிமென்ட் போட்டுக் கண்லே பாக்க முடியலே.”

பஞ்சாலையின் முக்கிய முகப்பு பகுதியிலிருந்து நிர்வாக அலுவலகத்திற்கு செல்வதற்கு பேட்டரி கார் இருக்கிறது. அவனின் எண்ணைய் பூசிய தலைமயிர் பரப்பில் வெள்ளி மின்னுவது போல் இருந்தது. அவனது சம்மதம் இல்லாமல் கடக்க முடியாது. பஞ்சாலை முகப்பிலிருந்து அந்த நிர்வாக கட்டிடம் உள்ள நீளமான பாதைகளும் தூரமும் மனதில் வந்து போகும் அவளுக்கு.

ஆமாம்மா, நீங்க எந்தக் குழு.. உங்க குழு பெயர்.

இமயம்..

வேற குழுவும் அப்பப்போ வந்து போறாங்க அவங்களும் பார்க்க முடியல.. இமயம்.. உங்களுக்கு தெரியுமா அம்மா, காவிரி, நொய்யல் அப்படி இப்படி எல்லாம் கூட பேர் போறாங்க.

நெறையப் பேர்வந்து போறாங்க.

ஆமாங்க அவங்க எல்லாம் வந்து போறது தெரியும். எங்களுக்குக் கெடைக்கும்ன்னு சொல்லலாம். நம்பிக்கை இருக்கு.

அங்களுக்கும் அனுமதி கிடைக்கல.

அதுதான் எங்களுக்கும் அனுமதி கிடைக்க மாட்டேங்குது போல.

அவங்களுக்கு கேட்க எல்லாம் சரியா இருக்கா தெரியல. 

ஆமா.

இப்போ யாரும் இல்லையே.. முதலாளி வரும் போது சொல்றன்.

இப்படித்தான் சொல்றீங்க.. ஒவ்வொருதரமும் வரும்போது இப்படித்தான் சொல்றீங்க.. சரி போன் பண்ணிட்டு வரலாம்னு பார்த்தா போன் பண்ணுனா இமயம்ன்னு சொன்னா போதும் ரொம்ப பிசியா இருக்கம் அம்மா. அப்புறம் பார்க்கலாம்கீறிங்க. முதலாளி, மேனேஜர்.. யாருமே இல்லை என்கிறீங்க.. வெளிநாடு போய் இருக்காங்க, வெளியூர் போய் இருக்காங்க, ஒரு வாரம் கழிச்சு பேசிங்கறீங்களாம்மான்னு ஒரே பதில்.

அப்படி எல்லாம் பதில் சொல்லச் சொல்றாங்கம்மா. 

ஆனாலும் நீங்க தயவுபண்ணி மனசு வெச்சா முடியும். சிரமம்தாம்மா. 

அப்ப இன்னைக்கி உட்கார்ந்து அவங்க வர்ற வரைக்கும் காத்திருந்து பாத்துட்டு போறதுன்னு முடிவு பண்ணி இருக்கீங்களா?

ஆமாம்.

செரி.

அப்படித்தான் காத்துக்கிட்டு இருக்க முடிவு பண்ணி இருக்கன்.

அவங்க வந்தா சொல்றேன். நீங்க வேற எதாவது வேலை

இருந்ததுன்னா போயிட்டு வாங்க.

இல்ல. இன்னைக்கு இங்க மட்டும் இருந்து பாத்துட்டுப் போலாம்னு இருக்கேன். எத்தனை நாள் வந்துவந்து போறது. பழனிசாமி பல்வேறு பஞ்சாலைகளுக்கு 30, 40 முறைகள் சென்று இருக்கிறார். அதனால் அவர்களுடன் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் எந்த ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நிலையில் மேலாளரிடம் பெறப்படும் வாக்குறுதி பல சமயங்களில் அடுத்த நாட்களில்நடைமுறைக்கு வருவதில்லை இதெல்லாம் தேவையில்லைனு எம்.டி. சொல்லிட்டாங்க. அதனால வேண்டாம். அல்லது இங்க முந்தியே ஒரு கமிட்டி எல்லாம் இருக்கு. அதெல்லாம் அவங்களே பார்த்துக்குவாங்க ஆமா.. விஸ்வநாதன் வக்கீல் இருக்கிறார்.அவர் எல்லாத்தையும் பாத்துக்குவார்.

மெல்ல வெளியில் இருந்து வீசும் வெயிலுடன் கூடிய காற்றும், மின் விசிறி காற்றும் எல்லாம் சேர்ந்து அவள் முகத்து வியர்வையைத் துரத்திக் கொண்டிருந்தது. தொண்டையில் இறங்கிய குளிர்ந்த நீர் இன்னும் ஆசுவாசப்படுத்தியது. பெரிய அளவிலான உடல் வலி காணாமல் போகப் பிரயத்தனம் செய்தது. எங்கு சென்றாலும் விஸ்வநாதன் பெயரை சொல்கிறார்கள். விஸ்வநாதன் வழக்கறிஞர். அவர் மக்கள் தொடர்பு வேலைகள் எல்லாம் எப்படி செய்கிறார் என்ற கேள்வி வந்திருக்கிறது. பாதுகாப்பாக அப்படி ஒரு வழக்கறிஞர் பெயரைச் சொல்லி விட்டால் போதும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.

நீங்க புதுசா வந்து கமிட்டி பாம் பண்ணி தொழிலாளர்களெப் பார்த்துப் பேசி கூட்டம் போட்டு, அவரே எல்லாம் பண்ணுவாரு. அதுதா.

அவளின் பார்வையில் ஒரு பர்லாங் தூரம் கடந்து போய் அந்த நிர்வாக அலுவலகத்தில் யாராவது யாரையாவது சந்திப்பதுஇன்றைய குறிக்கோளாக இருந்தது. வெயில் கானல் நீரைப் பார்வைக்குக் கொண்டு வந்திருந்தது. பஞ்சாலை முகப்பிற்கு வரும்போது உதவி மேனேஜரை அடையாளம் கண்டு கொண்டாள். இருசக்கர வாகனத்தில் போய்க்கொண்டு இருந்த அவரிடம் கேட்டபோது ‘‘முதலாளி யாரும் இல்ல, நான் என்ன பண்ணட்டும் என்றபடி வாகனத்தை முடக்கி விட்டார்.”

ஐயா நீங்க இந்த ஊர்க்காரரா ?

தேனி மாவட்டம்.. அங்க வேலை இல்லை அதனாலதான்

இங்க வந்துட்டேன்.

அங்கதான் விவசாயம்.. தண்ணீ.. கம்பம் பள்ளத்தாக்கு எல்லாம்

பச்சையாக் கிடக்குமோ.. அதை தாண்டி எதுக்கு வர்றீங்க?

பாக்க பசுமையா நல்லா இருக்குன்னு சொல்றீங்க. வேலை சரியா இருக்காது. அந்தக் கூலி கம்மி. அதெ விட இரண்டு மடங்கு சம்பளம் இங்க கிடைக்கும்.

சரி, வீட்டு வாடகை விலைவாசி தண்ணீக்கு காசு கொடுத்து வாங்கறப்போ இந்த சம்பளம் கட்டுப்படியாகுமா?

அதுசெரிதா. ஆனாலும் இந்தப் பகுதியில் இருக்கிற பல மில்கள்லெ ஏதாச்சும் வேலை இருக்கும். அதான் வந்துடறோம். 

சரி, இன்னிக்கு யாரையும் பார்க்க முடியுமா?

யாரும் இல்லம்மா. என்னுடைய கையிலெ எதுவும் இல்லெ. 

முதலாளிகமார் யாருமே இல்லை. நீங்க அவங்க வர்ற நாளாபார்த்து வாங்க. செய்தியைக் கடிதம் மூலமாகக் கொடுத்துட்டுப் போங்க.

அவள் தன் கைப்பையில் இருந்து எடுத்த கடிதத்தை இமயம் தன்னார்வ குழுவின் முகவரி அட்டையோடு சேர்த்துக் கொடுத்தாள். கடிதத்தின் முனை மடங்கியிருந்ததை நீவி விட்டுக்கொண்டாள். கொஞ்சம் வியர்வை அந்தக் கடித முனையிலும் ஒட்டிக்கொண்டது.  ஈரப்படுத்தியது.

இந்த வரலாற்றை எத்தனை தடவை கொடுத்திருப்பீங்க. 

நானும் கொண்டுபோய்க் கொடுத்து இருக்கேன்.

சரி, அப்போ நான் இன்னிக்கி காத்துட்டு இருந்து நேரடியாக குடுத்துட்டு, பேசிட்டுப் போறேன்.

சரிம்மா, என்னமோ பண்ணுங்கம்மா.

என்னை வெளியே போகச் சொல்லிட்டுத் துரத்த மாட்டீங்களே.

நான் வெயிட் பண்ணி யாரையாச்சும் பாத்துட்டுப் போறேன்.

சரி, நான் என்ன பண்ண முடியும். நான் உன்னைத்

தொரத்த முடியாது. யாராவது கண்ணுல பட்டு என்னன்னு கேட்டா தெரியாதுன்னு சொல்லிருவேன்.

கண்டிப்பா பார்க்கணும்.

காவலாளியிடம் ஒரே மாதிரி பேச்சு, உரையாடல் என்று ஒவ்வொருமுறையும் அலுப்பாகவே இருந்திருக்கிறது அவளுக்கு. இந்த வெயில், புழுதியெல்லாம் இன்னும் அலுப்பைத் தொடரச் செய்யும்.அவ்வளவு வலிமை இந்த வெயிலுக்கு.

அந்தோணிசாமிக்கு தினகரன் மில்லில் ஒரு அளவுக்கு செல்வாக்கு இருந்தது. அங்குள்ள உணவு விடுதியில் மேலாளராக இருக்கும் அவரின் உறவினர்கள் சொல்லி அந்த முதலாளி வீட்டுக்குப் போய் பேசி பலமுறை அந்த நிர்வாகிகள் உடன் சந்தித்துப் பேசி எப்படியோ ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்து வாங்கிகொண்டார். அவர் அடுத்த வாரம் தொழிலாளர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் துவங்க இருப்பதாக சொன்னார். அப்படி யாராவது தெரிந்தவர்கள் இருந்தால்தான் முதலாளியும் நிர்வாகிகளையும் அணுக முடியும் என்று தோன்றியது.

போன வாரம் ஒரு பயிற்சி அவளுடைய அலுவலகத்தில் இருந்தது. எல்லாருக்கும் ஒரு பலூனைக் கொடுத்து ஊதி எதையாவது எழுதச் சொன்னார்கள். சரி என்று பின்னால் திருப்பிப் பார்த்துக் கொண்டே இருந்தாள். இப்போதைய தன்னுடைய கனவு என்னவென்று எழுதச் சொன்னார்கள். தங்களுடைய நோக்கம் என்னவென்று எழுதச் சொன்னார்கள்.

சித்ராவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவளுக்குக் கிடைத்தது ஊதாநிற பலூன். வயிற்றின் உள்ளிருந்து காற்று வெளியேறி அதை நிரப்பினாள். ரொம்ப நாளாயிற்று இப்படி பலூன் ஊதி. அது பெரிதாகி ஜாலம் காட்டி காற்றில் மிதக்கத் தயாரானதும் அவளுக்கு சந்தோஷத்தை கொடுத்தது.

அந்த ஊதா நிற பலூனில் கனவு மெய்ப்பட வேண்டும் என்று எழுதினாள். என்ன கனவு. கல்யாணக் கனவா என்று குழுவின் தலைவி செல்வி கேட்டாள். ‘‘அதெல்லாம் இல்ல, இப்போதைக்கு ஏதாவது ஸ்பின்னிங் மில்லெ அக்ரிமெண்ட் எம் ஓ யு வாங்கணும். அதுதான் முக்கியம். அதைப் பற்றிக் கனவு. வேற என்னபண்றது. ஒவ்வொரு ஸ்பின்னிங் மில்லுக்கும் நடந்து பார்த்தால்தான் தெரியும்.”

அப்போது அந்தக் குழு விவாதம் சுகாதாரம் பற்றி ஒரு உப தலைப்பில் இருந்தது அவளின் கனவில் ஏதாவது ஒரு பஞ்சாலையில் ஒப்பந்தத்தை வாங்கி விடுவதுதான் முக்கியமான நோக்கமாக இருந்தது.பலரும் பல வண்ணங்களில் பலவிதக் கனவுகளை பலூன்களில் எழுதினார்கள். ஆனால் யாருடைய கனவிலும், பலூனிலும் இப்படி பஞ்சாலை ஒப்பந்தம் பற்றி குறிப்பு இல்லை. எல்லோரும் ஸ்வச் பாரத், சுகாதாரமான இந்தியா, எந்தத் தெருவிலும் சாக்கடையை ஓட விடக்கூடாது, எந்த தெருவிலும் கொசு புழக்கம் இருக்கக்கூடாது, எந்த தெருவும் குப்பைகள் இல்லாமல் இருக்கிற இடமாக மாற வேண்டும் என்பதுதான் கற்பனையாக இருந்தது. எல்லோருக்கும் சுத்தம் சுகாதாரம்.

அப்புறம் நீங்க சாப்டீங்களா ?

சாப்பாட்டுக்கு நேரம் இருக்கு.

ஆனாலும் உள்ள போனா கேன்டீன்ல சாப்பிடலாம். ஆனா நீங்க உள்ள போறதுக்கு உடமுடியாது.

சும்மா விடுவீங்களா.

முதலாளி உள்ளே இருந்தால் விடலாம்.

யாரையாச்சும் நேர்ல பார்த்தா கூடப் போதும் அவரோட.. இல்லைங்க அவர் போன் நம்பர் கிடைக்க மாட்டேங்குது. செல்போன்.. போன்ல பண்ணிட்டு வாங்குறாங்க. சில பேரு மெயில் பண்ணிட்டு அப்பாயின்மென்ட் வாங்கிட்டு வாங்குறாங்க. சரி நம்பர், ஈமெயில் அய்டி கொடுங்கன்னா கொடுக்க மாட்டேங்கிறாங்க. குடுக்குற ஈமெயிலில பதில் வர்ரதில்லை. சரி..அப்புறம் உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா ?

கல்யாணத்துக்கு வகை எல்லாம் ஒன்னும் பெருசா தெரியலே இங்க. நான் இங்கே வெளியில இருக்கன் தனியாத்தா. மேனே ஜருக்கு வகையான ஆளா இருக்கிறதா சொல்லிட்டு இருக்கேன். நான் இங்கே செய்யற வேலை செக்யூரிட்டி வேலைதான். செக்யூரிட்டி வேலையெச் சொல்லிட்டுக் கல்யாணம் பண்ண முடியாது. ஆனாலும் வேற வேலைன்னு பொய்யெல்லாம் சொல்லிட்டு பொண்ணு கேட்டு பண்ணிட்டவங்க இருக்கறாங்க. எனக்கு இஷ்டம் இல்லை.வீட்டில் அப்பா அம்மா அதைத்தான் பண்ணிட்டு இருக்காங்க.. பொய்யா எதையாச்சும் சொல்லிட்டு. எங்க மாட்டுவம் எங்கே உதறவம்ன்னு எனக்குத் தெரியாது.

போன வாரம் ஒரு பயிற்சியின்போது இதுபோல் ஒப்பந்தம் பெறுவதில் உள்ள சிக்கல்களைப் பற்றி எழுதச் சொன்னார்கள். அதில் முதல் பகுதி நேர்மறையான விஷயங்களை என்று சொன்னார்கள்.

நம்மில் பலரை பல பஞ்சாலைகளில் இருக்கும் காவலாளிகள் புன்முறுவலுடன் வரவேற்கிறார்கள். முகப்பில் இருந்து நிர்வாக கட்டிடம் உள்ள ஒரு கிலோ மீட்டருக்கு அதிகமான தூரத்திற்கு கூட்டிச் செல்வதற்கு பேட்டரிகார்கள் தருகிறார்கள் அல்லது சிபாரிசு செய்கிறார்கள். குடிப்பதற்கு குளிர்ந்த நீர் தருகிறார்கள். எல்லாம் சீக்கிரம் நடக்கும், ஒப்பந்தம் கிடைக்கும் என்று ஆயிரம் நம்பிக்கையை காவலாளிகள் சொல்கிறார்கள். அந்தக் காவலாளிகளுக்கு இதைச் சொல்வதில் சோர்வு இருக்கிறது. அதை மீறி அவர்கள் ஏதாவது ஆறுதல் சொல்கிறார்கள் பெரும்பாலும் என்ன ஒப்பந்தம்.. என்ன செய்யப் போகிறோம் என்பதைத் தேவையில்லாமல் பல காவலாளியிடம் கொட்ட வேண்டியிருக்கிறது. ஆனாலும் யாரையும் சந்திக்க முடியாதபோது இப்படி யாரிடமாவது கொட்டிவிட்டு வருவதுகூட ஆறுதலாகத்தான் இருந்திருக்கிறது சித்ராவிற்கு.

எதிர்மறையான எண்ணங்கள் என்று வருகிறபோது முதல்ல இங்கே கமிட்டி இருக்கு. நீங்க எல்லாம் போயி ஒன்னும் புதுசா போட வேண்டியது இல்லை. அப்புறம் முதலாளியும் எம்டியும் எங்காவது வெளியூரில் இருப்பாங்க. பிளைட்ல பறந்துட்டு இருப்பாங்க. உங்களுக்காக அவங்க எல்லாம் இங்க உட்கார்ந்திருக்க முடியுமா? நீங்க வர்ற நேரத்துக்கு அவங்க இருக்க முடியுமா என்று விரட்டுவார்கள். முதலாளி, தன் சார்பாக என்று சொல்லி யாரையும் சந்திப்பதற்குக் கூட அனுமதி இல்லாமல் போய்விடுகிறது. எதற்கெடுத்தாலும் ஏதாவது ஒரு வழக்கறிஞர் பெயரைச் சொல்லி அவர்தான் இந்த மில்லுல எல்லாத்துக்கும். அவரோட பேசி சொல்லச் சொல்லுங்கள். அவர் சொன்னா எங்களுக்கு ரொம்ப சேப்பா இருக்கும்.

அவள் தன்னுடைய தன்னார்வக் குழு அலுவலகத்தில் அந்த வழக்கறிஞர் பெயரைச் சொல்லி அவரிடம் பேசி சுலபமாக உள்ளே செல்வதற்கு வழி செய்யுமாறு கேட்டுக் கொண்டாள், அவர்களும் பேசியதாக சொன்னார்கள்.ஆனால் இன்னும் அந்த விசயம் முடியாமல் இருக்கிறது.

நீங்க எல்லாம் உளவு பார்க்க வருவீங்க. வந்து பார்த்துட்டு என்ன நடக்குதுன்னு வெளிய போய் சொல்வீங்க. அதனால எதுக்கு என்று சில காவலாளிகள் சொல்கிறார்கள்.

வந்து போறிங்கம்மா. இந்த சம்பவம் நடக்குது அந்த சம்பவம் நடக்குதுன்னு இங்க கஷ்டப்படுற கதையெ வெளியே சொல்றீங்க.. என்றும் சொல்கிறார்கள்.

சட்டுன்னு முடியற மாதரி அப்படி எல்லாம் வாய்ப்பு இருக்குங்களா? 

அதை நான் என்ன சொல்றது.. உன்கிட்டதான் கேக்கணும்.

ரகசியமா என்று சிலவற்றை எடுத்துச் சொன்னார்கள்.

சித்ரா பயிற்சியின்போது எழுதிய சவால்களில் முதல் சவால் ஏதாவது ஒரு பஞ்சாலையில் ஒப்பந்தத்தைப் போட்டு விடுவது. கையெழுத்து வாங்கி விடுவது. இரண்டாவது அந்த ஆண்டில் பல பயிற்சி வகுப்புகளை தொழிலாளர்களுக்காக எடுத்து விடுவது. கரண்ட்கட் சமயத்தில் வந்து வகுப்பு எடுங்க என்று செண்பகா மில்லில் சொன்னதை வைத்துக் கொண்டு எப்போது மின்வெட்டு ஆகிறது என்று பார்த்து அந்த நேரத்தில் சென்று வருவது, அதற்கான அனுமதி பெறுவது அவளின் அடுத்த கனவாக இருந்தது.

சமீபத்தில் மின்சார இலாகாவில் பலரின் தொலைபேசி எண்களை அவள் வாங்கி வைத்து இருந்தாள். அவ்வப்போது தொலைபேசி செய்து இந்த வாரத்தில் ஏதாவது மின்வெட்டு இருக்குமா, சட்டென்று ஒரு நாள் முழுக்க மின்சாரம் இல்லாமல் இருக்குமா என்றெல்லாம் கேட்டிருக்கிறாள். என்னம்மா, நல்லா போயிட்டு இருக்கிற சமயத்தில் கரண்ட் கட் எப்போ வரும், எப்போ போகும்ன்னு எங்க உயிரை வாங்குறீங்க என்று சில அதிகாரிகள் அலுத்துக் கொண்டார்கள். அவளுக்கு சந்தேகம் வந்திருக்கிறது. என்ன தான் மின்சாரத்தடை என்றாலும் ஒப்பந்தம் போடாமல் மின்சாரத் தடை நேரத்தில் போய்விட முடியுமா.. முடியாது ஆனால் இதற்கு எதற்கு இந்தப் பிரயத்தனம் எல்லாம்..

பயிற்சியில் அவள் எழுதிய குறிப்புகளை எல்லாம் படித்தபோது மற்றவர்களும் அதையே தான் சொல்லக் காத்திருப்பது தெரிந்தது. ஆனாலும் ஒரு நாள் ஒப்பந்தம் பெற்று விடுவோம் என்பது நம்பிக்கையாக இருந்தது. பஞ்சாலை நிர்வாக அலுவலகத்தில் யாராவது தலையாட்டி சரி என்று சொல்லிவிட்டால் போதும், தன் அலுவலகத்தில் சொல்லி ஒரு ஒப்பந்தத்தை தட்டச்சு செய்து கொண்டு வந்து கையெழுத்து வாங்கி விடலாம். அது போதும். அது கூட தட்டச்சு செய்து தயாராக இருக்கும்.

உள்ளார ஒரு தரம் போயிட்டு

வந்தா என்ன இங்கே எக்ஸிபிஷனா நடக்குது வேடிக்கை பார்க்கிறதுன்னு கேப்பாங்க.

இல்லைங்க, உள்ளார மேனேஜர் யாராவது தட்டுப்படுவாங்க. ஏதாவது வழி கிடைக்கும்.

எத்தனை தடவயோ வந்திட்டு இருக்கீங்க. நானுந்தா பாக்கறன்.

இன்னிக்கு உள்ள போயிட்டு வரலாமா.

என்னம்மா நீங்க நச்சரிக்கிறதுனாலே கேட்டன்.

சரி போறேன்.

போய் அங்க என் பெயரைச் சொல்லாதேம்மா.

அது எப்படிங்க சொல்லாம இருக்க முடியும்? செக்யூரிட்டி

இல்லாமல் உள்ளே வர முடியாது.

கேட்டா செரி. என்னவோ சொல்லிக்க.

அப்புறம் உன் இஷ்டம்.

அவளுக்கு ஆசுவாசம் பிறந்து விட்டது போலிருந்தது உடம்பில்

பூத்திருந்த வியர்வைப் பூக்கள் எல்லாம் கருகி வீழ்ந்துவிட்டன. காற்று

ஆசுவாசப்படுத்தி அவளை புது மனுசி ஆகிவிட்டது போலிருந்தது.

சேலைத் தலைப்பால் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டாள்

ஸ்டிக்கர் பொட்டு நழுவி இருக்கும என்ற பயத்தில் எதிரில் இருந்த

கண்ணாடியில் பார்த்தாள். அது முகம் பார்க்கும் கண்ணாடியாக

இல்லாமல் கருப்புத் தாள் ஒட்டப்பட்டது இருந்தது. உள்ளே

இருக்கிற பொருட்களைப் பிரதிபலிப்பதாக இருந்தது. புத்துணர்ச்சி

வந்துவிட்டது போல் அவள் நினைக்கத் தொடங்கினாள்

வர்றங்க தேங்க்ஸ். ரொம்ப நன்றிங்க. தேங்க்ஸ். ரொம்ப நன்றிங்க.

சரி சரி, எவ்வளவு சீக்கிரம் வந்தர முடியுமா வந்திரும்மா. அந்த வரைக்கும் எனக்குப் பாதுகாப்பா இருக்கும்.

சரிங்க சரிங்க.. ரொம்ப நன்றிங்க..ரொம்ப

நன்றி.

சித்ராவிற்கு அவள் அப்பாவின் ஞாபகம் வந்தது. அவர் நெசவுத்தொழில் செய்து வந்தார். கால் ஆணி வலுவிழந்து போய் நெசவு மிதி பலகையை மிதிப்பதற்கு முடியாமல் போயிற்றுபிறகு ஒரு புகையிலை குடோனில் காவலாளியாக வேலை செய்தார். எப்போதும் வாகனங்களும் பெரிய மனிதர்களும் வியாபாரத்திற்காக வந்து போகிற இடம். பெரும்பாலும் உட்கார இடம் கிடைக்காது. நேரம் கிடைக்காது.நின்று கொண்டுதான் இருக்க வேண்டும். யாராவது வந்து போய்க் கொண்டிருப்பார்கள். உட்கார்ந்துவிட்டால் என்ன மரியாதை இல்லாமல் உட்கார்ந்து இருக்கே என்று கேட்பார்கள். அவர்கள் திட்டுவதை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். நினைத்துக் கொண்டு நின்று சலித்து அந்தக் கால்கள் தரும் வலியை இரவுகளில் வேதனையாக வெளிப்படுத்தி இருக்கிறார். அம்மா அப்பாவின் கால்களைத் தொட்டுத் தொட்டு அழுத்தி ஆசுவாசப்படுத்துவார்கள். வெந்நீர் கொண்டு வந்து வெந்நீர் பாத்திரத்தில் அப்பாவின் கால்களை அமிழ்த்தி வைப்பார். வெந்நீரில் துணியை நனைத்து கால்களை சுத்தப்படுத்துவார். ஆனால் அவருடைய கால் வலி குறைந்தவுடன் ஆழ்ந்த தூக்கத்திற்குப் போய் விடுவார். நரம்புகள் சுருண்டிருப்பதைக் காட்டியிருக்கிறார்.. ஆனால் தூக்கம்தான் அவரை ஆசுவாசப்படுத்துவது என்பது அவளுக்கும் தெரிந்திருந்தது. அப்பாவின் தம்பி மகன் பனியன் கம்பெனியில் நின்றுகொண்டே கட்டிங் செய்கிற வேலையைப் பல ஆண்டுகள் செய்து வந்தார் அவருக்கு இப்படித்தான் காலில் நரம்புகள் சுருண்டு கிடப்பதைக் காட்டியிருக்கிறார். அதை சரி செய்வதற்காக இரண்டு கால்களிலும் ஆக நாலைந்து முறை ஆபரேஷன் என்ற வகையில் சிகிச்சை செய்திருந்தார். ஆனால் எதுவும் ஒத்துழைக்கவில்லை. பனியன் கம்பனியில் இருந்து ஓய்வெடுத்துக் கொள் சரியாகும் என்று மருத்துவர்களும் ஆலோசனை சொல்லி இருக்கிறார்கள். அவரும் சின்ன வயதில் வேறுவழியில்லாமல் இப்படி காவலாளியாக ஆகித்தான் போனார். பனியன் கம்பெனியில் நின்று கொண்டு வேலை செய்ய முடியவில்லை. வேறு என்ன வேலை செய்யத் தெரியும் என்று வேதனையும் தொடங்கி விட்டது.

வேறு வழி இல்லாமல் அவர் காவலாளி வேலைக்குத் தான் சென்றார். செக்யூரிட்டி என வயசானவங்கதான் வருவாங்க, நீ என்ன இந்த நாப்பது வயசிலேயே வந்துட்ட என்று அவரைக் கேட்டார்கள். முடியல, அதான் வந்தன். இதென்ன அநியாயமா இருக்கு, முடியலையேன்னு வர்றவங்களுக்கு எல்லாம் செக்யூரிட்டி வேலைக்கு ஆகுமா என்று கேட்டிருக்கிறார்கள். அப்பா அவரின் காலில் நரம்புகள் சுருண்டு கிடப்பது போல் கடைசிக் காலங்களில் உடம்பைக் குறுக்கிக் கொண்டு படுக்கையில் கிடந்தார். தொடர்ந்து நின்று கொண்டிருப்பது, அதிக ஓய்வு இல்லாமல் இருப்பதை அவர் உடம்பைக் குறுக்கு வைத்துவிட்டது. உடம்பு தாறுமாறாய் சிரமப்படுத்த வைத்தது. அப்படியான சூழலில்தான் அவர் ஒரு பூச்சி சுருண்டு கிடப்பது போல தன்னை சுருக்கிக் கொண்டு கால்களையும் கைகளையும் இறுக்கிக் கொண்டு படுக்கையில் ஒருநாள் இறந்து கிடந்தார். அதை நினைக்கிற போதெல்லாம் அவளின் கண்களில் நீர் கசியும். இந்தக் காவலாளிகள் மேல் அவள் எந்த ஒரு வசவையும் கோபத்தில் எந்தக் கணத்திலும் தந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறாள். அவள் அப்பாவும் காவலாளியாக இருந்திருக்கிறார். எத்தனை பஞ்சாலைகள்.. எத்தனை அலுவலகங்களில்.. எல்லா இடங்களிலும் காவலாளிகள்…எல்லாவற்றிலும் அவள் நுழைகிறபோது அங்கு இருக்கிற காவலாளிகளைப் பார்ப்பதை தவிர்ப்பாள். ஏதோ ஒரு வகையில் அவர்கள் அப்பாவை ஞாபகத்தில் கொண்டு வந்து விடுவார்கள். அது அவளைப் படுத்திக் கொண்டே இருந்தது.

அவளின் சித்தப்பாவும் இப்படித்தான் ஒரு பனியன் தொழிற்சாலையில் காவலாளியாக இருந்தார்.. இரவில் தொடர்ந்து தூக்கம் கெட முடியவில்லையென்று அந்த வேலையை விட்டு விட்டார். அவர் குருடாம்பாளையத்தில் இருந்தபோது நிறைய கடன் ஆகி விட்டது. நெசவுத் தொழில் நிம்மதியாக இருக்கவிடவில்லை. ஒரு நாள் இரவில் தறிச்சாமான்களை விட்டு விட்டு கிளம்பி விட்டார். இரவில் விளக்கை ஏற்றி வைத்து விட்டு நடுஇரவில் கிளம்பி விட்டார். இரு தினங்கள் அந்த விளக்கு எரிந்து கொண்டே இருந்திருக்கிறது. வீட்டில் யாரோ இருக்கிறார்கள் என்ற தோரணை அது.. பல நாட்கள் எரிந்து விளக்கணைந்து இருட்டானபின்புதான் வீட்டில் யாரும்

இல்லை என்பது மற்றவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.திருப்பூருக்குப் போனவர் சொசைட்டியில் கூலி நெசவுக்கு உட்கார்ந்தார். அதுவும் குடும்பத்தை ஓட்டக் கட்டுப்படியாகவில்லை.

சட்டெனத் தாகம் எடுப்பது போல் இருந்தது. கைப்பையில் சிறு பாட்டில் இருந்த. தினந்தோறும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கச் சொல்லி அவள் தினமும் பார்க்கும் ஆபீஸ் வலியுறுத்திக் கொண்டே இருந்தது.. அவள் சென்றாண்டு வேலை செய்த குழு அனுபவம் ஞாபகம் வந்தது. தொழிற்சாலைகளில் தண்ணீர் சேமிப்பு, மின்சார சேமிப்பு என்று வலியுறுத்தி பல பிரச்சாரங்களை செய்கிற பணி அவளுக்கு… அதுவும் சாயப்பட்டறைகளில் பயன்படுத்தும் தண்ணீரைக் குறைக்க பிரச்சாரம் செய்ய சாயப்பட்டறைகளுக்குப் போகச் சொன்னார்கள்.அங்கு போன பின்பு “ எங்களுக்கெல்லாம் இது தெரியும். பெரிய பெரிய என்ஜினியர்களே, வெளிநாட்டுக்காரங்கள வெச்சு பாத்திட்டு இருக்கம். உங்க வேலையெ நீஙக பாருங்க.”

இன்னம் ரெண்டு வருஷத்திலே ஒரு லட்சம் கோடி ரூபாய் அந்நிய செலவாணி இலக்கு. அதுக்கு இந்த பாராமீட்டரெல்லா தேவையா இருக்குது.அச்சீவ் பண்ணனும்..கொறச்சலான தண்ணீ, கொறச்சலான கரண்ட், சோலார் பயன்பாடு, கழிவு நீர் மேலாண்மை…

சரிம்மா. எங்களுக்குத் தெரியும். அதெ உங்க வீட்லே இருந்து ஆரம்பிங்கம்மா.

அவள் கைப்பையைத் தோளில் இடித்துக் கொண்டு நடக்கிறபோது ஆசுவாசம் கிடைத்தது போல் இருந்தது. காற்று மெல்ல அவளைத் தழுவி முகப்பு பக்கமிருந்து நிர்வாக கட்டிடத்திற்குத் தாலாட்டிக் கூட்டிச் சென்றது. இன்னும் குளுமையை அவள் உணர ஆரம்பித்த போது நிர்வாக கட்டிடத்தின் முகப்பு பகுதிக்கு வந்திருந்தாள். சிவப்பு சேலையுடன் வரவேற்பு பகுதியில் இருந்த பெண் நின்று கொண்டிருந்தாள். எதிரில் இருந்த இருவர் பேசிக்கொண்டு இருந்தார்கள். அவர்களில் ஒருவர் அந்தப் பஞ்சாலையின் முக்கிய நிர்வாகி என்று நினைத்தாள் சில விழாக்களில் அவரைப் பார்த்து இருக்கிறாள்.

சிவப்பு சேலைப் பெண் ஓடிவந்து சித்ராவை நெருக்கமாக அணுகி கொஞ்சம் அந்தப் பக்கமா நில்லுங்க. என்ன யார் வேணும் என்றாள்.

நிர்வாகிகள் போலிருந்த பலரும் உள்ளே செல்ல ஆரம்பித்தார்கள். என்ன வேண்டும்?

இமயம் குழுவில் இருந்து வந்திருக்கன். ஹெச் ஆர் மேனேஜரெ பார்க்கலாமா?

நின்று கொண்டிருந்த அந்த இருவரும் உள்ளே நகர்ந்து போக அந்த அறையின் குளுமை அவளை இன்னும் ஆசுவாசப்படுத்தி பெருமூச்சை விடச் செய்தது. புதிதாய் பூத்திருந்த வியர்வைப் பூக்கள் வடிந்து விழுந்தன. அவள் தன் பக்கம் இருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள். வரவேற்பறையில் இருந்த நான்கு அய்ந்து பேருக்கு தேனீரும் பிஸ்கட் வந்தது, அவளுக்கு ஒரு கோப்பை தரப்பட்டது. மெல்ல அந்த உப்பு பிஸ்கட்டை சுவைத்தபடி அந்த அறைக்குக் குளுமையைக் கொண்டுவரும் அந்த சாதனத்தைப் பார்த்தாள். அது அப்பாவி போல் உட்கார்ந்திருந்தது. இப்படியே பத்து நிமிடம் கடந்து விட்டால் போதும். எல்லாவற்றுக்கும் ஆசுவாசம் கிடைத்து விடும் என நினைத்தாள். இன்றைய அலுப்பு எல்லாம் கரைந்து விடும். இன்றைய நாளை நல்லபடியாய் ஓட்டிவிடலாம் என்று நினைத்தாள். எச்.ஆர்.மேனேஜரைப் பார்த்தால் போதும்.அவர் தலையசைத்தால் நிர்வாக இயக்குனர் கையெழுத்து போட்டுவிடுவார். எல்லாம் சுபமாக முடியும். அவளின் கனவு சீக்கிரம் நிறை வேறிவிடும் என்ற எண்ணம் பரபரவென வந்தது.இப்போது எச்.ஆர். மேனேஜரை சந்தித்து விடுவது…அடுத்தது ஒப்பந்தம் போட்டு விடுவது ஒப்பந்த பத்திரத்தில் உள்ளபடி தொழிலாளருக்கு சுகாதாரம், உடல் நிலை குறித்த வகுப்புகள் எடுப்பது.உச்சபட்சமாய் பெண் தொழிலாளர்களுக்குப் பாலியல் தொல்லை இல்லை என்று உறுதிம�ொழி தரச் சொல்வது.அதைச் சார்ந்து நிர்வாகம், பெண் தொழிலாளர்களை மையமாகக் கொண்ட ஒரு குழு அமைப்பது. பிறகு பாலியல் வன்முறை இல்லாத தொழிற்சாலை என்று பிரகடனப்படுத்துவது.. அப்படிப் பிரகடனப்படுத்தும் விழா பிரமாண்டமானதாக இருக்கும். அவள் சென்ற ஆண்டில் வேலை செய்து வந்த இன்னொரு குழு குழந்தை தொழிலாளர் இல்லாத பகுதியாய் 17ஆவது 18-ஆவது வார்டுகளை அறிவித்தது. அதற்காய் ஆறு மாதங்கள் மெனக்கெட வேண்டியிருந்தது. முதலில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்துப் பள்ளிக்கு செல்லாத சிறுவர்கள் இருக்கிறார்களா என்று கண்டறிந்தாள். பள்ளிக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகள், வீட்டில் இருக்கும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிற சற்றே பெரிதான குழந்தைகள்.. எல்லோரும் குழந்தை தொழிலாளர்கள் என்ற புதிய வரையறை அவளுக்கு அதிசயமாகபட்டது. வேலைக்குப் போகிறவர்கள் மட்டும்தான் குழந்தை தொழிலாளர்கள் என்று இருந்தது. இப்போதைக்கு வீட்டில் இருந்தால்கூட அவர்களும் குழந்தைத் தொழிலாளர்கள் தான் என்ற வரையறை புதிதாக வந்துவிட்டதை சமீபத்தில் தான் தெரிந்து கொண்டாள். 18ஆம் வார்டை முழுமையாக்குவது சிரமமாக இருந்தது. அங்கு இருந்த இரண்டு சிறுவர்களை பெற்றோரிடம் பேசி வேலைக்கு அனுப்ப வேண்டாம் என்று சொல்லிக் கெஞ்சினாள். பள்ளிகளில் சேர்த்தல் எவ்வளவு அவசியமானது என்று சொல்லி வலியுறுத்தினாள். இயலவில்லை.அந்த வார்டுகளில் இருந்த அரசியல் பிரமுகர்கள், சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள் அந்தப் பகுதியை குழந்தை தொழில் உழைப்பு இல்லாத பகுதியாக அறிவிப்பதில் வெகுவாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள், அந்தப் பிரகடனப்படுத்தப்பட்ட விழாவிற்கு ஒரு முக்கிய நடிகர் வந்திருந்தார். அவர் தன்னுடைய படங்களில் எல்லாம் சமூக கருத்துக்களை ஏழைகளுக்குச் சொல்பவராக இருந்தார். பஞ்ச் டைலாக்கில் அவை வரும்.ஒரு நாள் முழுக்க நடந்த அந்த விழாவில் அந்த வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்களும் கலந்து கொண்டு விருந்து உண்டு மகிழ்ந்தார்கள். அப்படி ஒரு விருந்தை தாங்கள் சாப்பிடவே இல்லை என்று அவர்கள் சொல்லி மகிழ்ந்தார்கள். பலரிடமும் அதன்பின்னும் அவர்கள் சொல்லி மகிழ்ந்தார்கள்.

இந்த ஒப்பந்தத்தின் அடுத்த நிலை இந்த தொழிற்சாலை பாலியல் வன்முறையோ புகாரோ இல்லாத தொழிற்சாலை என்று அறிவிக்கப்படுவதற்கு நிறைய சிரமப்பட வேண்டியிருக்கும். இதுபோல் பல தொழிற்சாலைகளை ஒருங்கிணைத்து அந்தப் பிரகடனத்தை செய்வார்கள். அதற்கும் ஒரு பெரிய நடிகரும் திரைத்துறை சார்ந்த ஏதாவது நடிகரோ,இயக்குனரோ, பெரிய காவல்துறை அதிகாரியோ வருவார்கள். நல்ல உணவு கிடைக்கும், நல்ல உபசரிப்பு இருக்கும். ஆனால் அதற்கெல்லாம் இந்தப் பஞ்சாலையில் இருக்கும் பெண்களைக் கூப்பிடுவார்களா என்ற சந்தேகம் அவளுக்கு இருந்தது. குழந்தை தொழில் ஒழிப்பு இல்லாத பிரதேசம் என்று அறிவிப்பது போல பாலியல் அத்துமீறல் இல்லாத தொழிற்சாலை பகுதி என்று அறிவிப்பதில் ஒரு பெரிய பெருமிதத்தை அவளின் தன்னார்வ குழு இயக்குனர் கனவாகக் கொண்டிருந்தார். சித்ராவுக்கும் அது ஒரு கனவாகவே இருந்தது. 

எச்.ஆர். மேனேஜரிடம் பேசி விட்டுத் திரும்பும்போது ஆசுவாசமாக இருந்தது அவளுக்கு. குளிர்சாதன அறையின் குளிர்ச்சி பல மடங்கு பெருத்து விட்டது. அவர் நிர்வாகிகளுடன் பேசியும் ஒரு வாரத்துக்குள் பெண்ஊழியர்களிடம் பேசியும் குழு அமைக்கத் தகவல் சொல்வதாகச் சொன்னார். அவரின் கைபேசி எண்ணைக் கொடுத்து இருந்தார்.அவரின் குளிர் சாதன அறையில் இருந்ததில் பெரிய ஆசுவாசம் வந்துவிட்டது அவளுக்கு. இத்தனை முறைக்கு இங்கு வந்து போயிருந்தாலும் இன்றைக்குத் தான் அவள் எச்.ஆர். மேனேஜரைச் சந்தித்திருக்கிறாள். இன்னும் பத்து முறை ஆனாலும் பரவாயில்லை. நடந்து நிர்வாகிகளிடம் ஒரு கையெழுத்து பெற்று விட்டால் போதும். இப்போதைக்கு அவளுடைய வேலை உத்தரவாதப் பட்டுவிடும். இந்த ப்ராஜெக்ட் இன்னும் ஒரு ஆண்டிற்கு நீடிக்கும். அதுவரைக்கும் தன்னுடைய வேலை உத்தரவாதம் கிடைத்துவிடும். தற்காலிகமானது என்றாலும் இந்த உத்தரவாதம் அவளுக்கு எப்போதும் ஆசுவாசம் தந்திருக்கிறது. இது முடிந்தால் இன்னொரு குழுவில் கூட சேர இதைக் காட்டி முயலலாம் என நினைத்தாள்.

அவள் மெல்ல நடந்து காவலாளியின் பகுதிக்கு வந்தார்.

மெல்ல நடப்பது இன்னும் ஆசுவாசம் தருவது போல் இருந்தது.

காவலாளி முகத்தில் ஏதோ கோபத்தை வரவழைத்துக் கொண்டவர் போல் இருந்தார்.

என்னம்மா உன் மேல முடிஞ்சுதா?

எச்.ஆர். சாரெப் பாத்தேன்.. முடிச்சிட்டார். பேசி ஏதாவது சொல்றன்னு சொல்லி இருக்காரு.

உன் வேலை முடிஞ்சுது. என் வேலையும் முடிஞ்சது.போச்சு. என்ன சொல்றீங்க?

இல்ல.உள்ள இருந்து கூப்பிட்டாங்க. யார் வந்தாலும் எம்டி இல்ல, மேனேஜர் இல்லைன்னு சொல்லச் சொல்லி கம்பெனில சொல்லி இருக்கும்போது எப்படி உள்ளாரவுட்டே அப்படின்னு கேட்டாங்க.

அய்யய்யோ.. சாரி சார். நான் வந்து கம்பல் பண்ணிக் கேட்டதனால் நீங்க அனுப்புனீங்க. உங்க உதவி ரொம்ப பிரயோஜனமா இருந்துச்சு.

உனக்குப் பிரயோஜனமாக இருக்கும். ஆனால் எனக்கு வேலை போயிடுச்சு.

என்ன சொல்றீங்க. இது மாதிரி யாரையுமே உள்ள அனுப்பாதன்னு சொல்லி இருக்கும்போது இப்ப எதுக்கு அனுப்பிச்ச?

நீ என்ன செக்யூரிட்டி வேலை பார்க்கிறயா இல்ல மாமா வேற பார்க்குறீங்களா?ன்னு கேட்டாங்க.

ஐயையோ, அப்படி எல்லாம் கேட்டாங்களா?

அதுக்கு மேலயும் கேப்பாங்க.

சாரிங்க.

நீங்க சாரி சொல்லி என்ன பண்றது.. எனக்கு வேலை போயிருச்சு. நான் என்ன உன் கொழுந்தனாரான்னு கேட்கறான் ஒருத்தன். இனி என்ன பண்றதுனு தெரியல.

ஐயோ.. சார் யாரைப் பாத்துச் சொல்லணும்.

இங்க இனி மேல எத்தனை சொன்னாலும் எனக்கு வேலை மறுபடி வந்துடுமா?

காவலாளி அவன் அறைக்குள் புகுந்து கதவை மெல்ல சாத்தத் தொடங்கினான். ஒரு நிமிடம் காவலாளியின் முகத்தை ஒருக்களித்து இருந்த கதவின் வழியே பார்த்தவளுக்கு சங்கடம் தந்தது.

அடுத்த முறை தான் வரும்போது இந்தக் காவலாளி இருப்பானா அல்லது வேறு காவலாளியிடம் ஆரம்பத்திலிருந்து எல்லாவற்றையும் சொல்ல வேண்டுமாஎன்பது அவளின் யோசிப்பாக இருந்தது. ஓர் ஒப்பந்தம்.. அது எப்படியும் கையெழுத்தாகி விடும். அந்தஒப்பந்தம் குறித்த இப்போதைய உறுதிமொழி இப்போதைக்கு அவளுக்கு ஆசுவாசம் தருவதாக இருக்கும் என்று நினைத்தாள். காவலாளிக்கு வேலை போனது பற்றி அவளின் நினைவில் எதுவும் இல்லாதவளாய் பஞ்சாலை முகப்பை விட்டு வெளியேறினாள். காற்று வெப்பத்துடன் இருந்தாலும் வியர்வையைப் போக்குவதாக இருப்பதை உணர்ந்தாள்.

அவளின் அடையாள அட்டையை நாற்காலியில் கழட்டிப்போட்டதும் ஞாபகம் வரவில்லை.