இந்திய தேசம் என்கிறார்கள். தேசம் என்பதற்கான பொருள் என்ன? தொடர்ச்சியான ஒரு நிலப்பரப்பில், ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப் பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து, வரலாற்றில் நிலைத்துவிட்ட சமூகமே ஒரு தேசம் என்பது தான் வரையறை. தற்போது ஆட்சி செய்யும் பாஜக, ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே மதம் என்று சொல்வதன் மூலம், இந்தியாவில் இருக்கும் பல தேசிய இனங்களை மறுத்திடும் கொள்கையைக் கொண்டுள்ளது.

ஆனால், தேசம் என்பதையே நான் ஏற்கவில்லை என்று அடித்துக் கூறுகிறார் ஒருவர். இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா? இரண்டு நாடுகளுக்கு தேசிய கீதம் எழுதிய பெருமை பெற்ற தாகூர் தான். தேசியம் குறித்து அவர் மூன்று நூல்கள் எழுதியுள்ளார்.

1.மேற்கத்திய நாடுகளில் தேசியம்

2.ஜப்பானில் தேசியம்

3.இந்தியாவில் தேசியம்

இம்மூன்று நூல்களின் மையக்கருவாக அவர் முன்வைப்பது எது தெரியுமா?

நான் இந்த தேசம் அல்லது அந்த தேசத்திற்கு எதிரானவன் என்று கூறவில்லை.தேசம் எனும் கோட்பாட்டிற்கே எதிரானவன். ஏன்? தீவிரமான சுயதம்பட்டம் அடிக்கிற தேச வழிபாடு மனித குலத்தின் இலக்கல்ல. சமூகத்திற்கும் தேசத்திற்குமான வேறுபாட்டையும் அவர் விளக்குகிறார்.

“சமூகத்திற்கு எவ்வித உள் நோக்கமும் இல்லை. சமூகத்தின் ஒரு அங்கம் என்ற முறையில் மனிதர்களுக்கு இடையே உள்ள உறவுக்கு இயற்கையான வரையறை இருக்கும். மனிதன் தனது கருத்துக்களை சுயமாக, சுதந்திரமாக வெளிப்படுத்த இயலும். ஆனால் உள் நோக்கத்துடன் இயந்திரகதியாக உருவாக்கப்படும் ஒரு அமைப்புதான் தேசம்.தேசத்தின் அடித்தளம் என்ன? அதிகாரவெறி,பேராசை,சந்தேகம், பொறாமை”. இதுவே அவர் கருத்து.

இந்தியா என்பது தேசமல்ல.

பல தேசங்களின் ஒன்றியம்தான். ஆசியக் கண்டத்தில் உள்ள, ஒரு துணைக் கண்டம்தான். இந்தியா எப்போதும் ஒரு நாடாக இருந்த வரலாறே இங்கு இல்லை என்பது தான் உண்மை. இந்தியா என்றால் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்பார்கள். 1947 ஆகஸ்ட்-15 விடுதலையடையும்போது காஷ்மீரும், கன்னியாகுமரியும் இந்தியாவோடு இல்லை என்பதே வரலாறு. கன்னியாகுமரி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டிலும், ஹரிசிங் மன்னனால் அங்குள்ள மக்கள் காஷ்மீர் சமஸ்தானத்திலும் இருந்தனர்.

வெள்ளையர்கள் வருகைக்கு முன்பு இந்தியா என்ற இன்றைய நிலப்பரப்பு முழுமையும் எவராலும் ஆளப்படவில்லை. கி.மு.5- 6 நூற்றாண்டுகளில் ஆட்சி செய்த மகதப் பேரரசு தொடங்கி,

 மௌரியப் பேரரசு

 குப்தப் பேரரசு

 ஹர்சப் பேரரசு

 சாளுக்கியப் பேரரசு

 ராஷ்டிரக் கூடப் பேரரசு

 டில்லி சுல்தான்கள்

 முகலாயப் பேரரசு வரை

இந்தியா முழுமையும் ஆளப்படவில்லை. வெள்ளையர்கள் காலத்திலும் கூட, இந்தியா என்ற இன்றைய அரசியல் நிலப்பரப்பு முழுமையும், ஒரு குடையின் கீழ் ஆளப்படவில்லை.

1498 மே 20 வாஸ்கோடகாமா கோழிக்கோடு வந்து சேர்ந்தான். ஐரோப்பியர்களிடம் இம்மண் அடிமைப்படுவதற்கான ஆரம்ப முயற்சி அதுதான். 1498 முதல் 2022 வரையிலான 500 ஆண்டு அரசியல் வரலாறு குறித்து அறிந்திடல் வேண்டும். அப்புரிதல் இல்லாமல் ஒரே நாடு என முழங்குவது அறிவீனம் மட்டுமல்ல. ஆதிக்கச் சிந்தனையின் அடியொட்டியதே.

1857 மீரட் சிப்பாய் கலகம்தான் முதல் விடுதலைக்கான போராட்டம் என்ற கட்டமைப்பு தவறானது. எனது நிலத்தை எவனும் அடிமைப்படுத்த முடியாது என்ற குரல்கள், அதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே 1757 இல் தமிழ் மண்ணிலிருந்து தொடங்கிவிட்டது. இதுவே சுயாட்சியின் முதல் குரல்கள்.

பூலித்தேவன், ஒண்டிவீரன்,

வீரன் அழகுமுத்து, வீரன் சுந்தரலிங்கம், மருதநாயகம்,

கட்டபொம்மன், ஊமைத்துரை,

வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வீரன் வேலுத்தம்பி

தீரன் சின்னமலை, இராணி மங்கம்மாள், விருப்பாச்சி கோபால் நாயக்கர் என பட்டியல் நீளமானது.

இந்திய விடுதலை என்பது அரசியல் விடுதலை மற்றும் சமூகவிடுதலை ஆகிய இரண்டு போராட்டங்களுடன் இணைத்து நடைபெற்றது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய மூன்று கட்சிகளும் அரசியல் விடுதலைக்கு முக்கியத்துவம் கொடுத்தபோது, அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் சமூக விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுத்தனர். சமூக விடுதலைக்கான போராட்டமும், அரசியல் விடுதலைக்கான போராட்டத்தின் ஒரு அங்கம் என்ற புரிதல் வேண்டும் . இந்திய விடுதலைப் போராட்ட வரலாறைக் கால வரிசைப்படி நோக்கினால் புரியும். ஆனால் சங்கத்துவவாதிகள் இவ்விரண்டிலும் விலகி நின்றதோடு மட்டுமல்லாமல், வெள்ளையர் ஆட்சிக்கு அனைத்து வகையிலும் ஆதரவளித்தனர் என்பதே வரலாறு.

கால வரிசைப்படி இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு (அரசியல், சமூகம் )

 1498-வாஸ்கோடகாமா இந்திய வருகை

 1600-வாணிபம் செய்ய கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அனுமதி

 1615-ஜஹாங்கீர் அரண்மனைக்கு கம்பெனியார் வருகை

 1755-நெல்லை பூலித்தேவன்-ஒண்டிவீரன் எழுச்சி

 1757-பிளாசி யுத்தம்

 1759-வீரன் அழகுமுத்து எழுச்சி

 1764-மருதநாயகம் எழுச்சி

 1770-வங்கப்பஞ்சம்-சன்னியாசி எழுச்சி

 1779-கட்டபொம்மன்-சுந்தரலிங்கம் எழுச்சி

 1801-ஊமைத்துரை-மருதுசகோதர்கள் எழுச்சி

 1806-வேலூர் கோட்டைப் புரட்சி

 1809-வீரன் வேலுத்தம்பி எழுச்சி

 1857-முதல் இந்திய விடுதலைப் போர்

 1858-பிரிட்டிஷ் நேரடி அதிகாரம்

 1877-விக்டோரியா டெல்லியில் ராணியாக முடிசூட்டல்

 1885-இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்

 1905-வங்கப் பிரிவினை

 1906-அகில இந்திய முஸ்லிம் லீக்

 1908-திலகர்-வ.உ.சி.கைது

 1911-ஆஷ் கொலை

 1913-கத்தர் கட்சி உதயம்

 1914-முதல் உலகப் போர் ஆரம்பம்

 1915-காந்தியின் இந்திய வருகை

 1916-கத்தர் கட்சியினரை பிரிட்டிஷார் வேட்டையாடுதல்

 1916-தென்னிந்திய நல உரிமைச் சங்கம்

 1918-ரௌலட் சட்டம்

 1919-ஜாலியன் வாலாபாக் படுகொலை

 1920-கிலாபத்,ஒத்துழையாமை இயக்கம்.

 கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் இந்தியக் கிளை துவக்கம்.AITUC தொழிற்சங்கம் துவக்கம்.

 1921-மாப்ளார் எழுச்சி

 1922-சௌரி சௌரா எழுச்சி-ஒத்துழையாமை இயக்கம் கைவிடல்

 1925-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முதல் அகில இந்திய மாநாடு

 1925-பெரியாரின் சுயமரியாதை இயக்கம்

 1928-சைமன் கமிஷன் வருகை

 1929-டில்லி பாராளுமன்றத்தில் பகத்சிங் குண்டுவீச்சு

 லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் முழுசுதந்திரத்திற்கான தீர்மானம்

 1930-உப்பு சத்தியாகிரகம்-சட்டமறுப்பு இயக்கம்-சிட்டகாங் புரட்சி

 1931-பகத்சிங் தூக்கிலிடப்படுதல்

 1931-அண்ணல் அம்பேத்கர்-காந்தி பூனா ஒப்பந்தம்

 1934-அகில இந்திய காங்கிரஸ் சோசலிசக்கட்சி உதயம்

 1936-அகில இந்திய விவசாயிகள் சங்கம் துவக்கம்

 1937-பார்வர்ட் பிளாக் கட்சி உதயம்

 1939-இரண்டாம் உலகப் போர் துவக்கம்

 1940-தனிநபர் சத்தியாகிரகம்

 1942-வெள்ளையனே வெளியேறு தீர்மானம்

 1944-திராவிடர் கழகம் உருவாக்கம்

 1943-நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் அமைத்து சுதந்திர இந்தியா பிரகடனம் செய்தல்

 1946-பம்பாய் கப்பற்படை மாலுமிகள் எழுச்சி

 1947-தேசப் பிரிவினை- பாகிஸ்தான் உதயம்-இந்தியா விடுதலையடைதல்.

 1948-காந்தி சுட்டுக்கொலை-RSS செயல்பட தடை.

 1950-இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாகுதல்

இதில் சங்கத்துவத்தினரின் பங்கு என்ன?

இந்தியா விடுதலையடையும் போது 604 சமஸ்தானங்களும், 11 மாகாணங்களுமாக தனித்தனியே இருந்தது. வெள்ளையனை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த சமஸ்தானங்களே மாகாணங்களுக்குள் இணைக்கப்பட்டிருந்தது.

வெள்ளையனுக்கு கப்பம் கட்டி வாழ்ந்தவர்கள் தனி சமஸ்தானங்களாக இருந்தனர்.

இந்தியா-பாகிஸ்தான் என இரண்டாகப் பிரிந்தது.

இந்தியாவோடு 552 சமஸ்தானங்கள் இணையவும், பாகிஸ்தானோடு 49 சமஸ்தானங்கள் இணையவும் ஒப்புக் கொண்டன. 3 சமஸ்தானங்கள் இணைய மறுத்தன. இணைய மறுத்த சமஸ்தானங்கள்

1. ஜூனாகட் சமஸ்தானம் (குஜராத்)

2. ஹைதராபாத் சமஸ்தானம்

3. காஷ்மீர் சமஸ்தானம்

இந்திய ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை மூலம் ஜூனாகட், காஷ்மீர் சமஸ்தானத்தையும், ராணுவ நடவடிக்கை மூலம் ஹைதராபாத் சமஸ்தானத்தையும் இந்தியாவோடு இணைத்தது.

இதில் ஹைதராபாத் மன்னன் நிஜாம் முஸ்லிம். மக்கள் பெரும்பான்மையோர் முஸ்லிம் அல்ல. காஷ்மீர் மன்னன் ஹரிசிங் முஸ்லிம் அல்ல. மக்கள் பெரும்பான்மையோர் முஸ்லிம் என்பது தான். இணைந்தவர்களுடன் இந்திய ஒன்றிய அரசு செய்த ஒப்பந்தம் தான் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370 வது சரத்து. இப்படி இணைப்பு முயற்சிகளில் ஈடுபட்டதால் வல்லபாய் சிலையின் அடியில் Statue Of Unity என்று எழுதி வைத்துள்ளார்கள்.

ஒரு புறம் 11 மாகாணங்கள். மறுபுறம் 500 க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள். பல மொழி, பல பண்பாடு. இவர்களை எப்படி இணைத்து இந்தியாவுக்கு சட்டமியற்றுவது என ஆலோசித்தனர். எனவே தான் அரசமைப்புச் சட்டத்தை எழுத அண்ணல் அம்பேத்கர் தலைமையில் குழு அமைத்தனர். இந்திய அரசமைப்பை, நமக்குள் எப்படி அமைத்துக் கொள்வது என்பது தான் அதன் பொருள்.

11 மாகாணங்களை வெள்ளையன் ஆண்ட போது எப்படி சட்டம் இருந்தது? அப்போது மாநில சுயாட்சி குறித்த நடந்த விவாதம் என்ன என்பதை அறிய வேண்டும்?

1911 இல் வைஸ்ராயாக இருந்த ஆர்டிங்ஸ் என்பவர், மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் தர வேண்டும் என்று பிரிட்டன் ஆட்சியாளர்களுக்குப் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையில் இந்தியாவை Union Of Autonomous Provinces என ஆக்க வேண்டும் அல்லது United States of India என்ற நிலையைக் கூட உருவாக்கலாம் என்றார்.

1915 இல் கோபால கிருஷ்ண கோகலே ‘அரசியல் கட்டளைகள்’ என்ற பெயரில் ஒரு அறிக்கை எழுதினார். அதில் ” மாகாண அரசுகளை, முழு அதிகாரம் படைத்த ஒரு விடுதலை அரசாக ஆக்க வேண்டும்” எனக் கோரினார். 1916 இல் காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து லக்னோ ஒப்பந்தம் செய்தது. அதில் “மாகாணங்களில் தன்னாட்சி அமைக்கப்பட வேண்டும் ” என வலியுறுத்தின.

1919 ல் மாண்டேகு-செம்ஸ் போர்டு சீர்திருத்தம் “மாகாண உரிமை தர மறுத்தது”. இதை முஸ்லிம் லீக் கடுமையாக எதிர்த்தது. 1924 ல் ஜின்னா தலைமையிலான முஸ்லிம்லீக் மாநாட்டில் ” முழுமையான நிலங்களைக் கொண்ட ஒரு கூட்டாட்சி முறையையே ஏற்படுத்தியாக வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1925 இல் சிங்காரவேலர் தலைமையில் கான்பூரில் தொடங்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அகில இந்திய மாநாட்டில் ” மாகாண சுயாட்சி தீர்மானம்” நிறைவேற்றப்பட்டது. 1930-31-32 ஆகிய மூன்று வருடங்களில் நடைபெற்ற வட்ட மேசை மாநாடுகளிலும், மொழி வழி மாநில உரிமைகள் பற்றியும், மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. 1931 சுதேச மன்னர்கள் மற்றும் மாகாணப் பிரிதிநிதிகள் கூட்டத்தை சைமன் கமிசன் கூட்டியது. இதில் பாட்டியாலா மற்றும் காஷ்மீர் மன்னர்கள், சுயாட்சி உரிமையை வலியுறுத்தினர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை 1921 லேயே மொழி வழி மாநிலம் சார்ந்த விவாதங்கள் தொடங்கியது.

சென்னை மாகாணமாக இருந்தபோதே ” தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி” என்றே காங்கிரசார் கட்சி தொடங்கினர். மாகாண ஆட்சி உருவாக்கி, ஆளுநருக்கு அதிகாரம் வழங்கிய போது, காங்கிரஸ் தான் முதலில் எதிர்த்தனர். 1937 டில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுவில் 11 மாகாண ஏற்பாட்டையும், ஆளுநர் அதிகாரத்தையும் காங்கிரஸ் ஏற்கவில்லை என்று தீர்மானம் போட்டனர். 1939 இல் பீஹார் மற்றும் ஒன்றிய மாகாண முதலமைச்சர்கள் ஆளுநர் தலையீட்டை எதிர்த்து ராஜினாமா செய்தனர். ஆங்கில அரசுக்கு எதிராக, மாகாண சுயாட்சி என்பது மாநில சுயாட்சிக்கு மூலமாக அமைந்தது என்பதே வரலாறு.

1937 ராஜாஜியால் குலக்கல்வி திட்டம் மற்றும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக ” தமிழ்நாடு தமிழருக்கே” என்று பெரியார் உச்சபட்சக் குரலில் பேசினார். 1939-1945 இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, தேர்தல் முறைப்படியான ஆட்சி அமைப்பைத் தவிர்த்துவிட்டு, ஆளுநர்களை உருவாக்கியது வெள்ளை அரசு. அப்போது முதலமைச்சர்கள் இல்லாமல் ஆளுநர்களே ஆட்சி செய்தனர்.

1940-42 இல் சென்னை மாகாண ஆளுநராக ஆர்தர் ஹோப் இருந்த போது பெரியாரை முதலமைச்சராகப் பதவியேற்க அழைத்தார். பெரியார் மறுத்துவிட்டார்.

1940 இல் தென்னிந்திய நல உரிமைச் சங்க மாநாடு நடைபெற்றது. தனிநாடு உரிமைத் தீர்மானம் மற்றும் அதற்கான திட்டக்குழுவையும் அறிவித்தது.

1944 இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் “திராவிடர் கழகம்” எனப் பெயர் மாற்றப்பட்டு, திராவிட நாடு விடுதலைப்படை அமைக்கத் தீர்மானம் நிறைவேற்றியது.

திராவிட நாடு கருத்து வலுவாக எழுந்தபோது, காங்கிரசில் இருந்த தனது ஆதரவாளர்களைப் பெரியாருக்கு எதிராகத் தூண்டிவிட்டு, எதிர்வினையாற்றினார் ராஜாஜி.

அதன்படி, காங்கிரசில் இருந்து கொண்டே 1946 இல் தமிழரசுக் கழகம் என்ற அமைப்பை, ம.பொ.சி. தொடங்கினார். இந்திய ஒற்றுமை- மாநில சுயாட்சி என்று ஒப்புக்குப் பேசினார்.

1963 இல் பிரிவினை தடைச்சட்டம் கொண்டு வந்தபின்பு, திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்ட அண்ணா,

விடுதலைக் கோரிக்கையைத் தான் கைவிட்டோம், விடுதலைக்கான காரணங்கள் அப்படியே தான் இருக்கிறது என்றார். இந்நிலையில் தமிழக வரலாற்றில் திமுக தான் மாநில உரிமையை வலுவாகப் பேசியது. பேசியும் வருகிறது. ராணுவம், நாணயம் அச்சடிப்பு,

வெளியுறவு, உள்நாட்டுத் தொடர்புகள் என்ற நான்கு தவிர, மற்ற அனைத்தும் மாநில உரிமை என்பதே, திமுகவின் மாநில சுயாட்சி உள்ளடக்கமாக இருந்தது.

அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கிய போது ,ஒன்றிய அரசுக்கு 97 அதிகாரமும், மாநில அரசுகளுக்கு 66 அதிகாரமும், இரண்டு அரசுகளுக்கும் ஒத்திசைவாக 47 அதிகாரமும் உருவாக்கப்பட்டன. ஆனால் மாநில அரசின் 66 அதிகாரத்தில், 31 அதிகாரங்கள் மட்டுமே மாநில உரிமையாக இருந்தது. மற்ற 35 அதிகாரத்திலும் ஒன்றிய ஆட்சி அதிகாரம் செலுத்தும் வகையிலும் இருந்தது. 1969 அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர், முதன்முறையாக டெல்லி சென்றார். விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள், உங்கள் பயணத்தின் நோக்கம் என்ன என்று கேட்டனர். மத்தியில் அதிகாரங்கள் குவித்திருக்கிறது.அதை மீட்டெடுக்க வந்தேன் என்றார். மத்திய-மாநில உறவுகளை ஆராய நிபுணர் குழு அமைப்பேன் என்றும் கூறினார்.

1969, ஆகஸ்டில் நீதிபதி ராஜமன்னார் தலைமையில், மாநில சுயாட்சி குறித்து ஆய்வு செய்வதற்காக, மூவர் குழு அமைப்பதாக சட்டமன்றத்தில் அறிவித்தார்.

நீதிபதி ராஜமன்னார் குழு பரிந்துரைகளை சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றினார் கலைஞர். நீதிபதி ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளில் அரசியல் அமைப்புச் சட்டத்தில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களை மாநிலங்களில் அமலாக்க, ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உண்டு எனக்கூறும் 256 பிரிவும், சில விசயங்களில் ஒன்றிய அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளை மாநில அரசுகள் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக்கூறும் 257 பிரிவும், முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்பது மிக முக்கியமான பரிந்துரையாகும்.

1970 பிப்ரவரியில், திருச்சியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் “மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் மாநில சுயாட்சி மாநாடு நடத்தப்பட்டது. பெரியார்- காயிதே மில்லத்- அஜய் முகர்ஜி (மே.வங்கம்),சோசலிஸ்ட் தலைவர் அரங்கில் ஸ்ரீதரன், பிரணாப் முகர்ஜி, எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.

மாநில சுயாட்சி என்ற நூலை திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான திருமிகு. முரசொலி மாறன் எழுதினார்.

மாநில சுயாட்சி குறித்த உலகளாவிய அறிஞர்களின் மேற்கோள்களுடன் அந்நூல் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பேராசிரியர்.அன்பழகன் “ஒரு கடிகாரத்தின் மணி முள் முதன்மை உடையதுதான். எனினும் நிமிட முள் பேரளவில் இயங்கினால்தான், மணி முள் சிறிதளவு இயங்கும். அதைப் போல, மக்களோடு நெருக்கமாக இருக்கும் மாநில அரசு பேரளவு இயங்க, மத்திய அரசு இணக்கமாக இருப்பதே மக்களாட்சி நெறி” என்றார். தமிழகம் பெருமளவில் மதித்த தலைவரான வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது, திமுகவின் முயற்சியால், மாநிலங்களுக்கு இடையேயான Inter state council உருவாக்கினார். ஆனால் அவரது ஆட்சி பாஜகவால் கவிழ்க்கப்பட்டது.

திமுக ஆட்சியில் 2007 இல் ஆளுநர் உரையில்,மாநில சுயாட்சி கொண்டு வர முயற்சிப்போம் என்றது. 2009 இல் அண்ணா நூற்றாண்டு நிகழ்வின் மையப் பொருளாக மாநில சுயாட்சிக் குரல் தான் எதிரொலித்தது.

தற்போது 15ஆவது நிதிக்குழுவில் மாநிலங்கள் வளர்ச்சி அடைய விடாமல் நிதி ஆதாரத்தை முடக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து, முதல்வர் ஸ்டாலின், மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதினார்.

மாநில சுயாட்சியின் ஒரு அங்கமாக “இந்திய அளவில் சமூகநீதிக்கான கூட்டமைப்பையும் ஏற்படுத்த முயற்சிக்கிறார். மாநில சுயாட்சிக்கான குரல்

அன்றைய பூலித்தேவன் முதல் வீரன் வேலுத்தம்பியும், தீரன் சின்னமலையும் எழுப்பிய குரலின் நீட்சிதான். மாநில சுயாட்சிக்கு எதிரானவர்கள்

பூலித்தேவன் முதல் தீரன் சின்னமலை வரையிலான குரலுக்கு எதிரானவர்கள்தான்.

மாநில சுயாட்சி என்பது

தமிழக நலன் சார்ந்த கோரிக்கை மட்டுமல்ல. இந்திய மாநிலங்கள் அனைத்துக்குமான கோரிக்கையே.

சுருக்கமாகச் சொன்னால்

மாநில சுயாட்சி என்பது

மாநில நலன் சார்ந்தது மட்டுமல்ல.

இந்திய நலன் சார்ந்ததும் தான்.

xaviersuji@gmail.com