சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அவரது கால் நூற்றாண்டுக்கும் மேலான வாழ்க்கை கழிந்தது. வெளியில் வந்ததுமே அவர் முதலில் பார்க்க விரும்பிய நாடு இந்தியா. சிறைவாழ்க்கை முடிந்த சில நாட்களுக்குள்ளாகவே இந்தியாவுக்கு வந்தார். ஏனெனில் இது காந்தி பிறந்த தேசம்.

ரோலிஹ்லஹ்லா மண்டேலா ஜூலை 18, 1918இல் பிறந்தார்.

தென்னாப்பிரிக்காவின் டிரான்ஸ்கி பிராந்தியத்தில் இம்பாசே நதி வளப்பத்திய பகுதியில் இம்வெசொ என்கிற குக்கிராமம். பழங்குடியின பரம்பரை.

‘ரோலிஹ்லஹ்லா’ என்கிற சொல்லுக்கு க்ஸோஸா மொழியில் ‘கிளையைப் பிடித்து இழுப்பது’ என்று பொருளாம். ஆனால் பொதுவாக இச்சொல்லுக்கு அர்த்தமாகச் சொல்லுவது ‘பிரச்சினையை உருவாக்குபவன்.’

மண்டேலாவின் தந்தை ஒரு பழங்குடியினத் தலைவர். அங்கிருந்த பல்வேறு பழங்குடி இனத்தவரையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பில் இருந்தார்.

வெள்ளையரின் காலனி ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு, மண்டேலாவின் தந்தை தன்னுடைய அந்தஸ்தினை இழந்தார். உள்ளூர் மாஜிஸ்ட்ரேட்தான் எல்லாருக்கும் தலைவர் ஆனார். குழந்தையாக இருந்த மண்டேலாவைத் தூக்கிக்கொண்டு அவரது பெற்றோர் இடம்பெயர்ந்தார்கள்

கூனு என்கிற மற்றொரு கிராமத்துக்குச் சென்றார்கள். இது முன்பு வசித்து வந்த இம்வெசாவை விட குக்கிராமம்.

பசும்புல் போர்த்திய நீண்ட சமவெளி. சாலைகள் இல்லை. கால்நடைகள் நடந்து, நடந்து உருவாக்கிய பாதைகள். உள்ளூரிலேயே விளையும் தானியங்களும், காய்கறிகளும்தான் உணவு. குழந்தை மண்டேலா களிமண் மற்றும் மரக்கிளைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட பொம்மைகளையும் கொண்டுதான் விளையாடினார்.

மண்டேலாவின் தந்தைக்குத் தன்னுடைய மகன் பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டும் என்று ஆசை. புதிதாக முளைத்திருந்த தேவாலயம், வெள்ளைக்காரக் குழந்தைகள் பயில ஒரு பள்ளியையும் நடத்தியது. பலத்த பரிந்துரையின் பேரில் அங்கு சேர்க்கப்பட்டார் மண்டேலா.

ரோலிஹ்லஹ்லா என்கிற பெயர், ஆசிரியர்களின் வாயில் நுழையாததால் அவரது பெயர் நெல்சன் மண்டேலா என்று பள்ளிப் பதிவேட்டில் பதியப்பட்டது. அவரது பரம்பரையிலேயே பலகையும், பல்பமும் எடுத்துக்கொண்டு முதன்முதலாக கல்வி கற்க பள்ளிக்குச் சென்றவர் மண்டேலாதான்.

அவருக்கு ஒன்பது வயதாக இருக்கும்போது அப்பா, நுரையீரல் நோய் காரணமாக காலமானார். தேம்பு என்கிற பழங்குடியினத்தவரின் தலைவராக இருந்த ஜோகிந்தபா, மண்டேலாவின் அப்பாவுக்கு நெருங்கிய நண்பர். ஜோகிந்தபாவை அந்த இனத்துக்குத் தலைவராகப் பரிந்துரைத்தவரே இவர்தான்.

தந்தையை இழந்த தனயனான மண்டேலாவை அவர் பொறுப்பேற்றுக் கொண்டு வளர்க்க முடிவெடுத்தார். கூனு கிராமத்திலிருந்து மோட்டார் காரில் தேம்பு மக்களின் தலைநகரான ம்கேஸ்வேனிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஜோகிந்தபா தன்னுடைய மற்ற குழந்தைகளைப் போலவே மண்டேலாவையும் வேறுபாடு காட்டாமல் தன்னுடைய மகனாக வளர்த்தார்.

அவர்களது தாய்மொழியான க்ஸோஸாவைத் தவிர்த்து ஆங்கிலத்தையும் பயின்றார் மண்டேலா. வரலாறு மற்றும் புவியியல் படிப்பதில் கில்லாடி. ஆப்பிரிக்காவின் வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் அவருக்கு அதிகமானது.

ஜோகிந்தபாவை சந்திக்க நிறைய ஆப்பிரிக்க இனத்தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் தொடர்ச்சியாக உரையாடி தம்முடைய இன வரலாற்றை உள்வாங்கிக் கொண்டார்.

வெள்ளையர்கள் வருவதற்கு முன்பாக ஆப்பிரிக்க மக்கள், தமக்கென தனித்த கலாச்சாரத்தோடு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்கள் என்பதை அறிந்ததுமே, தம் இனம் அடிமைத்தளையில் சிக்கிக் கொண்ட அவலத்தை உணர்ந்தார். தங்கள் மண், நிலம், காற்று அனைத்தையுமே வெள்ளையர்கள் வசமாக்கிக் கொண்டார்கள் என்று அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

மண்டேலாவுக்கு பதினாறு வயது. அவர்கள் வழக்கப்படி குழந்தை ஆணாக மாறும் சடங்கு ஒன்று குடும்ப விழாவாக்க் கொண்டாடப்படும். உடலில் ஒரு அறுவைச் சிகிச்சையும் நடக்கும். இந்த சடங்கை செய்து கொண்டால்தான் தந்தை வழி பாரம்பரியத்தின் அந்தஸ்து கிடைக்கும். சொத்துரிமையும் உண்டு. அதற்குப் பின்னால்தான் திருமணம் செய்துக்கொள்ளக் கூடிய தகுதியும் உண்டு என்பது ஆப்பிரிக்க நம்பிக்கை. மண்டேலாவோடு இருபத்தைந்து பேருக்கு இச்சடங்கு பெரிய விழாவாக நடந்தது.

விழாவில் பேசிய பழங்குடி இனத்தலைவர்களில் ஒருவர், “நம்முடைய அடுத்த தலைமுறையை நினைத்தால் கவலையாக இருக்கிறது. சொந்த மண்ணிலேயே அடிமைகளாக வாழ்ந்து மறைய விதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களை அவர்களே நிர்வகித்துக்கொள்ள அனுமதிக்கப்படாதவர்களாக ஆகிவிட்டார்கள். வெள்ளையர்களை அனுசரித்து, அவர்களது கால் நிழலில்தான் வாழ்வை முடிக்க விதிப்பட்டவர்களாக இருக்கிறார்கள்” என்று பேசினார்.

மண்டேலா உள்ளிட்டவர்களுக்கு இந்தப் பேச்சைக் கேட்டதுமே ‘ஜிவ்’வென்றிருந்தது.

ஜோகிந்தபாவின் மகன்களில் ஒருவராக வளர்ந்ததால், அப்பகுதியில் ஓர் இளவரசனுக்குரிய மரியாதையோடு மண்டேலா நடத்தப்பட்டார்.

வெஸ்லேயான் பள்ளியில் படித்தார். கடினமான உழைப்பின் காரணமாக கல்வியில் சிறந்து விளங்கினார். பள்ளிப் பருவத்தில் தடகள வீரராகவும், குத்துச்சண்டையில் வல்லவராகவும் இருந்தார்.

படிப்பில் படு சுட்டி என்பதால், வெள்ளைக்கார மாணவர்களிடையேயும் மண்டேலா ‘ஸ்டார்’.

மதோனா என்கிற அவரது முதல் பெண் நண்பரை அங்கேதான் அடையாளம் கண்டுகொண்டார்.

1939 இல் ஃபோர்ட் ஹரே பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அக்காலத்தில் ஆக்ஸ்போர்டுக்கும், ஹார்வர்டுக்கும் இணையாக ஆப்பிரிக்காவில் பேசப்பட்ட பல்கலைக்கழகம் அது.

ரோமன் டச்சு சட்டம் பயின்றார். இதைப் பயிலுவதன் மூலமாக சிவில் சர்வீஸ் பணியில் சேரமுடியும். ஒரு கருப்பினத்தவர் அதிகபட்சமாக அப்போதைய தென்னாப்பிரிக்காவில் சேரக்கூடிய வேலை இதுதான்.

இரண்டாம் ஆண்டு படிக்கும்போது பல்கலைக்கழகத்தின் மாணவப் பிரதிநிதி கவுன்சிலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். உணவு உள்ளிட்ட ஏராளமான பிரச்சினைகள் மாணவர்களுக்கு இருந்தது. இதைக் கண்டித்து, சில கோரிக்கைகளை முன்வைத்து தன்னுடைய பதவியிலிருந்து விலகினார். இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும், மண்டேலா தரப்புக்கும் மோதல் வந்தது. அவரை சஸ்பெண்ட் செய்தார்கள். மீண்டும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் சஸ்பெண்ட் ரத்து செய்யப்படும் என்று மண்டேலாவை வலியுறுத்தினார்கள்.

ஒப்புக்கொள்ளாத மண்டேலா வீட்டுக்குச் சென்றுவிட்டார். அவருடைய வளர்ப்புத் தந்தை ஜோகிந்தபாவுக்கு இது பிடிக்கவில்லை. மண்டேலா பொறுப்பற்றவராக இருக்கிறார் என்று கருதி, அவருக்குத் திருமணம் செய்துவைக்க திட்டமிட்டார்.

ஒரு போராளியாக உருவெடுத்துவரும் நேரத்தில் திருமணமா என்று ஆவேசமான மண்டேலா, வீட்டை விட்டும் வெளியேறினார்.

ஜோகன்னஸ்பர்க் நகருக்கு இடம்பெயர்ந்து பகுதிநேர செக்யூரிட்டியாகவும், கிளெர்க்காகவும் பணிபுரிந்தார். இளங்கலை பட்டத்தை தபால் வாயிலாகப் படித்துத் தேறினார்.

ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் 1942ஆம் ஆண்டு மண்டேலா இணைந்தார். இனவெறி பாகுபாடுக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாகப் பங்குகொண்டார். கட்சியில் புதியதாக நிறைய இளைஞர்கள் சேர்ந்ததால், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் இளைஞரணி உருவானது. மிகக்குறுகிய காலத்திலேயே இவர்களுக்கு தென்னாப்பிரிக்காவில் ஆதரவு பெருகி, கட்சியை விட செல்வாக்கான இடத்தைப் பெற்றார்கள். வெள்ளை அதிகாரிகளிடம் மனுகொடுத்து நீதியைக் கெஞ்சிக் கேட்டு பெறுவது மாதிரியான கட்சியின் அரதப்பழசான போராட்ட முறைகள் வேலைக்காகாது என்று இந்த இளைஞர்கள் உணர்ந்தார்கள்.

புறக்கணிப்பு, வேலைநிறுத்தம், ஒத்துழையாமை, தொழிலாளர் நலன், நிலச்சீர்த்திருத்தம், அனைத்து கருப்பினக் குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி என்று இவர்கள் முன்னெடுத்த பிரச்சினைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்தது. வேறு வழியின்றி கட்சியும் இளைஞர்களின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் ஏற்றுக்கொண்டது. கட்சியின் எல்லா நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டு அறவழிப் போராட்டங்களில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார் மண்டேலா.

போர்ட் ஹரே பல்கலைக்கழகத்தில் மண்டேலாவுக்கு அறிமுகமானவர் ஆலிவர் டாம்பூ. அவரோடு இணைந்து ஒரு சட்ட ஆலோசனை நிறுவனத்தை தொடங்கினார்.

மண்டேலா & டாம்பூ என்கிற நிறுவனம் பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளும் கருப்பின மக்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்திலும், பல நேரங்களில் இலவசமாகவும் சட்ட ஆலோசனை சேவை வழங்கியது.

1956இல் மண்டேலா கைது செய்யப்பட்டார். அரசியல் தொடர்பாக அவரோடு சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டார்கள். ஆனாலும் நீதிமன்றத்தில் இவர்கள் அத்தனை பேரும் விடுதலை ஆனார்கள்.

இதற்கிடையே ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் ‘கருப்புப் போராளிகள்’ என்று புது போராளிகள் சிலர் புரட்சி செய்ய கிளம்பினார்கள். நீக்கு போக்கான கட்சியின் போராட்ட முறைகள்மீது அவர்களுக்கு கடுமையான அதிருப்தி இருந்தது. இவர்கள் விலகி புதியதாக கண்ட இயக்கம், ஆயுதவழியாக மட்டுமே தீர்வு காணமுடியும் என்கிற நம்பிக்கையைக் கொண்டிருந்தது.

1961இல் அதுவரை அகிம்சைப் போராட்டங்கள் வாயிலாகத் தீர்வு காணலாம் என்று நம்பிக்கொண்டிருந்த மண்டேலாவுக்கும் வன்முறை அரசியல் மீது ஈர்ப்பு தோன்றியது.

கொரில்லா முறை போர்களால் வெள்ளையர்களை வென்றுவிடலாம் என்று நம்பிக்கை கொண்டு, கட்சியின் கிளையாக ஓர் அமைப்பை நிறுவினார். அதே ஆண்டு நடந்த மூன்று நாள் தேசிய வேலைநிறுத்தத்தையும் தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தினார். இதையடுத்து அவரைக் கைது செய்த வெள்ளையர் அரசு, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

இவ்வழக்கில் மீண்டும் 1963இல் நீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டார். இம்முறை அவருக்கும், மேலும் பத்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்களுக்கும் ஆயுள்சிறை விதிக்கப்பட்டது. அரசியல் சதி, வன்முறை என்று சகட்டுமேனிக்கு அவர்கள்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த தண்டனை வழங்கப்பட்டது.

தன்னுடைய இருபத்தேழு ஆண்டு சிறைவாழ்வில் பதினெட்டு ஆண்டுகளை ரோபன் என்கிற தீவிலிருந்த சிறைச்சாலையில் கழித்தார் மண்டேலா. சிறையில் இருந்தபோது காசநோயால் கடுமையாகத் துன்பப்பட்டார். கருப்பர் இன அரசியல் கைதி என்பதால் அவருக்கு முறையான சிகிச்சை கூட வழங்கப்படவில்லை. இம்மாதிரி துன்பங்களுக்கு இடையேயும் மண்டேலா லண்டன் பல்கலைக்கழகத்தில் தபால் வாயிலாகப் படித்து சட்டத்தில் பட்டம் பெற்றார்.

மண்டேலா சிறைக்குள்ளேயே இருந்தது தென்னாப்பிரிக்க அரசுக்கு சர்வதேச தளத்தில் கடுமையான சிக்கல்களை உருவாக்கியது. அவரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்ட தகவல்கள் பிற்பாடு வெளியாயின.

1981இல் அவரை சிறையில் இருந்து தப்பிக்கவிட்டு, திரும்பப் பிடிப்பதற்குப் பதிலாக சுட்டுக் கொல்லலாம் என்றுகூட ஒரு திட்டம் இருந்தது. மண்டேலாவின் சிறைவாழ்க்கைதான் தென்னாப்பிரிக்க காலனிய அட்டூழியங்களையும், அடக்குமுறைகளையும் உலகம் உற்றுக் கவனிக்க காரணமாக அமைந்தது.

1982இல் மண்டேலாவையும், அவரோடு சிறைப்பட்டிருந்த மற்ற தலைவர்களையும் பால்ஸ்மூர் சிறைச்சாலைக்கு கொண்டு சென்றார்கள்.

1985இல் தென்னாப்பிரிக்க அதிபராக இருந்த பி.டபிள்யூ போத்தா, கிளர்ச்சியாளர்கள் போராட்டங்களை விலக்கிக் கொண்டால் மண்டேலாவை விடுதலை செய்துவிடலாம் என்று ‘பண்டமாற்று’ பேச்சைத் தொடங்கினார். இது இரு தரப்பிலும் கடுமையான எதிர்ப்பைத் தோற்றுவித்தது.

நாளுக்கு நாள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ‘மண்டேலாவை விடுதலை செய்’ குரல் வலுவாக ஒலிக்கத் தொடங்கியது. எனவே அவ்வப்போது மண்டேலாவோடு அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஏகப்பட்ட முறை நடந்த பேச்சுகளிலும் பலன் ஏதுமில்லை.

அதிபர் போத்தா உடல்நலம் குன்றிய நிலையில் பதவிக்கு வந்தவர் பிரெடரிக் வில்லியம். கடும் நெருக்கடியான சூழலில் பதவிக்கு வந்த இவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கினார். அரசியல் அமைப்புகளுக்கு இருந்த கெடுபிடிகளைத் தளர்த்தினார். பிப்ரவரி 11, 1990 அன்று மண்டேலாவின் விடுதலையையும் உறுதி செய்தார்.

சிறையில் இருந்து வெளியான மண்டேலா இதுவரை தென்னாப்பிரிக்காவுக்கு சர்வதேச அளவில் தரப்பட்டுக் கொண்டிருந்த அழுத்தம் தன்னுடைய விடுதலையால் குறைந்துவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

1991இல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராக மண்டேலா ஆனார். அதிபர் க்ளார்க்குடன் இணைந்து, தென்னாப்பிரிக்காவின் அனைத்து மக்களும் பங்குபெறும் வகையிலான தேர்தலை நடத்த ஆர்வம் காட்டினார்.

இச்சூழலில் வெள்ளையர்கள் அதிகாரத்தைக் கருப்பின மக்களோடு பகிர்ந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்கிற முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஆனால் கருப்பின மக்கள் எதிர்ப்பார்த்ததோ அதிகார மாற்றம். இதனால் இரு தரப்பு பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே போனது. கடுமையான அரசியல் அழுத்தம் மண்டேலாவுக்கு ஏற்பட்டது.

1993ஆம் ஆண்டு மண்டேலாவை விடுதலை செய்த அதிபர் கிளார்க்குக்கும், விடுதலை ஆனபிறகு நாட்டை அமைதிவழியில் வழிநடத்த உத்தேசித்த மண்டேலாவுக்கும் இணைத்து அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இரு தரப்பும் கவுரவப்படுத்தப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த மக்களின் மனமும் அமைதியை நாடியது.

ஏப்ரல் 1994இல் தென்னாப்பிரிக்காவின் முதல் ஜனநாயகத் தேர்தல் நடந்தது. நெல்சன் மண்டேலா நாட்டின் முதல் கருப்பின அதிபராகப் பொறுப்பேற்றார். தான் சிறையில் ரகசியமாக எழுதிய ‘சுதந்திரத்துக்கான நீண்ட பயணம்’ நூலை மண்டேலா வெளியிட்டார்.

தன்னுடைய முதல் ஆட்சிக்கால பொறுப்பில் வெள்ளையர்களின் மைனாரிட்டி அதிகாரத்தை மிக சாதுர்யமாக மெஜாரிட்டி கருப்பினத்தவருக்கு மடைமாற்றிக் காட்டினார் மண்டேலா. இரு தரப்பு மக்களும் ஒற்றுமையாக வசிக்க, விளையாட்டை ஆயுதமாகப் பயன்படுத்தினார். நாட்டின் மறுசீராக்கத்திலும், வளர்ச்சியிலும் வேகம் காட்டினார். புதிய வேலைகளை உருவாக்குவது, வீடு மற்றும் மருத்துவம் என்று மக்களின் அடிப்படை வசதிகளைக் கட்டமைத்துத் தந்தார்.

1996இல் புதிய சட்ட அமைப்பினை அறிமுகப்படுத்தினார். தனிப்பெரும்பான்மையோடு கூடிய வலுவான மத்திய அமைப்பு, மைனாரிட்டி மக்களின் உரிமைகளையும் உறுதி செய்யும் சட்டம், கருத்துரிமை என்று மண்டேலா வடிவமைத்த சட்டம், கிட்டத்தட்ட இந்தியாவை ஒத்திருந்தது.

1999 பொதுத்தேர்தலின் போது தன்னை அரசியல் வாழ்விலிருந்து தாமாகவே விலக்கிக் கொண்டார் மண்டேலா. ஆனாலும் மக்களுக்கான அவரது பணி தொடர்ந்துகொண்டே இருந்தது. மண்டேலா அறக்கட்டளை மூலமாக பள்ளி, மருத்துவமனைகளை உருவாக்க நிதி திரட்டிக் கொடுத்தார்.

2001இல் அவருக்கு கேன்சர் நோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. 2004இல் தன்னுடைய எண்பத்திஐந்தாவது வயதில் பொதுவாழ்வில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக சொன்னார்.

“இனி என்னை அழைக்காதீர்கள். நானே உங்களை அழைப்பேன்” என்று மண்டேலா அறிவித்தபோது தென்னாப்பிரிக்கர்கள் மட்டுமல்ல. உலகமெங்கும் வாழும் கோடிக்கணக்கான மனிதர்களின் கண்களிலும் ஈரம் கசிந்தது. சிறுவயதில் தான் களிமண் பொம்மை செய்து விளையாடிய கூனு கிராமத்தில் தன்னுடைய இறுதிக்காலத்தை செலவழிக்க விரும்புவதாக மண்டேலா கூறினார்.

2010இல் தென்னாப்பிரிக்காவில் உலகக்கோப்பை கால்பந்து நடைபெற்றபோது மீண்டும் மக்கள் மத்தியில் பெருத்த ஆரவாரத்துக்கு இடையில் தோன்றினார் மண்டேலா. பின்னர் அமெரிக்க அதிபரின் மனைவி மிச்செல் ஒபாமாவின் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போதும் அவரோடு தோன்றினார்.

2011இல் தொடங்கி அவரது உடல்நலம் தொடர்ச்சியாக மோசமாகிக்கொண்டே போனது. மருத்துவமனைக்கும், வீட்டுக்குமாக அல்லாடி 2013ஆம் ஆண்டு டிசம்பர் 5 அன்று தன்னுடைய 95ஆவது வயதில் காலமானார்.

மண்டேலா மறைந்தார். ஆனால் அவர் உயர எழுப்பிய வெள்ளைக்கொடி தென்னாப்பிரிக்காவில் பட்டொளி வீசிப் பறக்கிறது.