ஒவ்வொரு வருடமும் மே மாதம் 24 ஆம் தேதி சர்வதேச “மனச்சிதைவு நோய் நாளாக” (World Schizophrenia Day) உலக சுகாதார நிறுவனத்தினால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் மனச்சிதைவு நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி அதன் வழியாக இந்த நோய் மீதிருக்கும் களங்கமான பார்வையை மாற்றி, சிகிச்சை முறைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த நாளினுடைய நோக்கம். அதையொட்டி இந்த நோய் தொடர்பான சில அடிப்படை தகவல்களைப் பார்க்கலாம்.

தீவிர நோய்களில் (Severe Mental Illness) முதன்மையானது மனச்சிதைவு நோய், மேலும் சிகிச்சையளிப்பதில் மற்ற மனநோய்களை விட மிக சவாலானதும் இந்த மனச்சிதைவு நோயே. மனநோய் என நாம் நினைத்துக்கொண்டிருக்கும் தனியாகப் பேசுவது, சிரிப்பது போன்ற தன்மைகளெல்லாம் இந்த நோயின் குணாதிசயங்களே.

எமில் கிரெப்பலின் என்ற ஃபிரெஞ்ச் நரம்பியல் நோய் நிபுணர் 1800 களிலேயே இந்த நோய் தொடர்பான குறிப்பொன்றை எழுதியிருக்கிறார். ‘Dementia Precox’ என்று அவர் இந்த நோயைக் குறிப்பிடுகிறார். அதாவது இளமையில் ஏற்படும் டிமென்சியா என்கிறார். வழக்கமாக டிமென்சியா நோய் முதுமையிலேயே ஏற்படும். மறதி உட்பட மூளையின் நுண்ணறிவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மந்தமடைவதே டிமென்சியா நோயின் தன்மை. இதே தன்மை இளைமையிலேயே அதாவது 15 முதல் 20 வயதுக்குள்ளாகவே ஏற்பட்டால் அதுதான் ‘Dementia Precox’ என்கி
றார். வளரிளம் பருவம் முதல் மூளையின் நுண்ணறிவுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ந்து மந்தமடையும் நிலையே இந்த நோயின் அடிப்படை பண்பு என்கிறார்.

ஈஜின் பிளாய்லர் என்னும் நரம்பியல் நிபுணர், முதன்முதலில் இந்த நோயை ஸ்கீசோஃபிரெனியா என அழைக்கிறார். அதில் அவர் ஸ்கீசோஃபிரெனியாவின் நான்கு அடிப்படை பண்புகளைச் சொல்கிறார்:
Autism (சமூகவிலகல்)
Affective flattening (உணர்ச்சியற்ற நிலை)
Ambivalence (தீர்க்கமான முடிவெடுக்கமுடியாமை)
Association disturbances (சிந்தனை, உணர்வுகள், அறி
வாற்றல் போன்றவற்றிற்கிடையேயான பிணைப்பு குறைதல்)
அதாவது ஸ்கீசோஃபிரெனியா நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சமூகத்திலிருந்து விலகியே இருப்பார், அவரால் யாரிடமும் ஓர் உறவை உருவாக்கவோ அல்லது தொடரவோ முடியாது. பெரும்பாலும் தனிமையையே விரும்புவார், மற்றவர்கள் இருக்கும் நேரத்தில் மிகவும் அசெளகரியமாக உணருவார், மற்றவர்களுக்காக எதையும் விட்டுத்தரவோ அல்லது மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள் ளவோ முடியாது. எளிமையாக சொன்னால் தனக்கான தனிப்பட்ட உலகில், தனக்காகவே, தனக்குத்தானே வாழ்ந்து கொண்டிருப்பார்.

மேலும் இந்த நோயில் பாதிக்கப்படும்போது உணர்வுகளைக் கையாளும் திறன் குறைந்து விடும். அதனால் உணர்வுகளை வெளிப்படுத்துவதோ அல்லது மற்றவர்களின் உணர்வுகளை சரியாகப் புரிந்து கொள்வதோ இயலாது. இந்த நோயினால் பாதிக்கப்படுபவரின் முகவசைவுகளில் எந்த வித உணர்வையும் வெளிப்படுத்த மாட்டார்கள். மொத்தத்தில் உணர்வுகள் பெருமளவு மட்டுப்பட்டே இருக்கும்.

பிளாய்ளரின் கருத்துப்படி இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அடுத்த முக்கியமான பண்பு எந்த ஒரு விஷயத்திலும் அவர்களால் தெளிவாகவும், தீர்க்கமாகவும் முடிவெடுக்க முடியாது. எப்போதும் இதுவா அதுவா என ஊசலாடிக்கொண்டேயிருப்பார்கள். இறுதியாக
சிந்தனை, உணர்வுகள், அறிவாற்றல் போன்றவற்றிற்கிடையே எந்த இசைவும் இல்லாமல் ஒவ்வொன்றும் தன்னிச்சையாக செயல்படும். உதாரணத்திற்கு உணர்வுகள் பதட்டமாக இருந்தால் அந்தப் பதட்டம் எண்ணங்களில் வெளிப்படாது, எண்ணங்கள் வேறுவிதமாக இருக்கும். அதே போல அறிவாற்றல் வேறு ஒரு மாதிரி இருக்கும். மனதின் மூன்று பரிமாணங்களும் இலக்கற்ற, இசைவற்று, தன்னிச்சையாக செயல்பட்டு அந்த நபரை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும். இந்த நான்கு பண்புகள் கொண்டவையே ஸ்கீசோஃபிரெனியா என்கிறார் பிளாய்லர்.

ஸ்னைடரின் பத்து அறிகுறிகள்:

கார்ட் ஸ்னைடர் என்ற மனநல மருத்துவர் ஸ்கீசோஃபிரெனியாவிற்கான பத்து அறிகுறிகளைப் பட்டியலிட்டார், பின்னாளில் இந்த நோயை சர்வதேச மருத்துவ அமைப்புகள் அட்டவணைப்படுத்திய போது ஸ்னைடரின் இந்தப் பத்து அறிகுறிகளையே முதன்மையாகக்கொண்டது.

ஸ்கீசோஃபிரெனியா நோயைக் கண்டறிய ஸ்னைடரின் இந்தப் பத்து அறிகுறிகளையே இன்றும் கூட பெரும்பாலான மனநல மருத்துவர்கள் பின்பற்றுகிறார்கள்.

ஸ்னைடரின் அந்தப் பத்து அறிகுறிகள்

1. ஒருவருடைய எண்ணங்களே குரலாக அவருக்குள் ஒலிப்பது:
“நான் நினைக்கிறதெல்லாம் சத்தமாக எனக்கே கேட்குது டாக்டர்” என நோயர்கள் சொல்வார்கள். அதனால் எந்த நேரமும் அந்த எண்ணங்கள் மேலேயே கவனமாக இருப்பார்கள், இதன் விளைவாக தங்களைச் சுற்றியுள்ள அனைத்திலிருந்தும் விலகி தனிமையில் இருப்பார்கள். தனிமையில் சத்தமாக கேட்கும் தங்களது எண்ணங்களுடன் பேசிக்கொண்டோ, விவாதித்துக்கொண்டோ இருப்பார்கள். உங்க எண்ணமே உங்ககிட்ட பேசுறது போல இருந்தா எவ்வளவு கஷ்டமாக இருக்கும்? அதே கஷ்டம் தான் நோயர்களும் படுவார்கள்.

2. ஒருவருடைய எண்னங்கள் மற்றவர்களுக்கும் தெரிவது, ஒலிபரப்பு செய்யப்படுவது:
“நான் என்ன நினைச்சாலும் அது மத்தவங்களுக்குத் தெரிய வந்துடுது டாக்டர், என்னால மனசுல எதையுமே ரகசியமா வச்சுக்க முடியல, நான் நினைச்ச அடுத்த நிமிசமே மத்தவங்களுக்கு தெரிஞ்சிடுது, சில நேரம் டிவில கூட நான் நினைக்கிறத சொல்றாங்க, நேத்து ஒரு நாடகம் பார்த்தேன், அதுல வர ஒருத்தன் என் மனசுல நான் நினைக்கிறதயெல்லாம் வரிசையா சொல்லிட்டு இருந்தான்” என நோயர்கள் சொல்வார்கள். அவர்களின் எண்ணங்கள் பலருக்கும் தெரிவதாகவும், அது இப்படி ஊடகங்களின் வாயிலாக ஒலிபரப்பு செய்யப்படுவதாகவும் நம்புவார்கள்.
3. வேறு யாருடைய எண்ணங்களோ தனது மனதில் புகுத்தப்படுவது:
திட்டமிட்டு மற்றவர்களுடைய எண்ணங்கள் தனது மனதில் சொறுகப்படுவதாக நம்புவது. அதன் விளைவாக தனது சிந்தனைகள், எண்ணங்கள் என அனைத்துமே வேறு யாரோ ஒருவருடையது என்பதைத் தீவிரமாக நம்புவது.
4. தனது எண்ணங்கள் திருடப்படுவது:
தனது எண்ணங்கள் அனைத்தும் உடனடியாக மனதில் இருந்து வெளியேறிவிடுகிறது, வேறு யாரோ சிலர் தொடர்ச்சியாக அபகரிக்கிறார்கள், உடனுக்குடன் தனது மனதிலிருந்து பறித்துக்கொள்கிறார்கள், அந்த எண்ணங்களைக் கொண்டு ஏதோ திட்டமிடுகிறார்கள் என நோயர்கள் நம்புவார்கள்.
5. தனிமையில் கேட்கும் குரல்கள்:
யாருமே இல்லாத நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் குரல்கள் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருப்பதும் அல்லது பாதிக்கப்பட்ட நபரின் செயல்களை வர்ணனை செய்துகொண்டிருப்பதும் கேட்டுக்கொண்டேயிருக்கும். “யாரோ ரெண்டு பேர் நான் பண்ற எல்லாத்த பத்தியும் சொல்லிட்டே இருக்காங்க டாக்டர், நானும் சுத்தி சுத்தி தேடறேன், ஆனால் யாருமேயில்லை. ‘இவன் தலை சீவறான்’, ‘சாப்பிடப் போறான்’, ‘குண்டா இருந்துகிட்டு எவ்வளவு சாப்படறான் பாரு’ அப்படினு ஒவ்வொண்ணைத்தையும் சொல்லிட்டே இருக்காங்க” என நோயர்கள் சொல்வார்கள்.
6. தனது செயல்களை யாரோ கட்டுப்படுத்தவதாக உணர்வது:
“நான் தான் செய்றேன், ஆனால் என்ன யாரோ செய்ய வைக்கிறாங்க, எனது கை அசைத்தாலும் சரி, இல்ல அமைதியா உட்கார்ந்திருந்தாலும் சரி எதுவுமே நானா செய்வதில்லை, என்னை யாரோ செய்ய வைக்கிறார்கள்” என நோயர்கள் கூறுவார்கள்.
7. தனது எண்ணங்களை யாரோ கட்டுப்படுத்துவதாக உணர்வது:
செயல்களைக் கட்டுப்படுத்துவது போல தங்களது உணர்வுகளும் வேறு யாரோ ஒருவரால் கட்டுப்
படுத்தப்படுவதாக நோயர்கள் நம்புவார்கள்.
8. தனது உணர்வுகளை யாரோ கட்டுப்படுத்துவதாக உணர்வது
கவலையோ, வருத்தமோ, சந்தோசமோ எந்த உணர்வும் தன்னிசையாக வராமல் வேறு யாரோலோ திட்டமிட்டு உருவாக்கப்படுவதாக நினைப்பார்கள். மனதிற்கென்று அசலான எந்த உணர்வும் இல்லை என்ற அவர்களின் நம்பிக்கை அத்தனையிலிருந்தும் அவர்களை விலக்கி வைத்திருக்கும். தனது உடலையும், எண்ணங்களையும், உணர்வுகளையும் வேறு யாரோ எந்த நேரமும் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதாக நினைப்பதன் விளைவாக அதீத மனவுளைச்சலுக்கும், மனப்பதட்டத்திற்கும் ஆளாவார்கள்.
9. சிந்தனைகளும், உணர்வுகளும் ஒன்றுக்கொன்று தொடர்
பில்லாமல் இருக்கும், அதே போல பேச்சும், சிந்தனையும் சீரற்றும், தொடர்பற்றும் இருக்கும். இதனால் அவர்களின் செயல்கள் இலக்கற்றும், விசித்திரமாகவும், வினோதமாகவும் இருக்கும். பார்க்கும் நமக்கு தான் அப்படி இருக்குமே தவிர பாதிக்கப்பட்டவர்கள் தங்களது ஒவ்வொரு செய
லுக்கும் தனிப்பட்ட விளக்கங்கள் வைத்திருப்பார்கள். (சூதுகவ்வும் படத்தில் வரும் விஜய் சேதுபதியின் நடவடிக்கைகளை ஓரளவு உதாரணமாக கொள்ளலாம்)
10. பிறழ்நம்பிக்கை:
பொதுவாக நமது நம்பிக்கைகள் எப்படி உருவாகின்றன? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக கருத்துகள் இருக்கும், இந்தக் கருத்துகள் எல்லாம் எப்படி நம்பிக்கையாக மாறுகின்றன? உதாரணத்திற்கு ஒருவருடன் பழகத் தொடங்குகிறோம், அந்த நபர் நம் மீது உண்மையான அன்புடன் இருக்கிறார் என நினைக்கிறோம், இன்னும் சில காலங்கள் கழித்து அன்புடன் இருக்கிறார் என நம்புகிறோம், இன்னும் சில நாட்கள் கழித்து அவருக்கு நம்மீது அன்பில்லை என உணருகிறோம், இன்னும் சில நாட்கள் கழித்து அவருக்கு சுத்தமாக நம் மீது அன்பில்லை என நம்புகிறோம். ஒருவரைப் பற்றியான நமது நம்பிக்கை எதன் அடிப்படையில் இப்படி மாறிக்கொண்டேயிருக்கின்றன?
நம்பிக்கைகள் மூன்று விஷயங்களின் அடிப்படையில் உருவாகின்றன. அனுபவத்தின் அடிப்படையில். தர்க்க ரீதியான விளக்கங்களின் அடிப்படையில். பெரும்பாலான மக்கள் நம்புவதன் அடிப்படையில். ஒருவரை நமக்கு ஆரம்பத்தில் பிடித்திருக்கிறது அதனால் அவரை நல்ல விதமாக நம்புகிறோம். அந்த நம்பிக்கைக்கு எந்த அடிப்படையுமில்லை, அதனால் அந்த நம்பிக்கை நிரந்தரமில்லை. அதே நேரத்தில் நமது அனுபவங்களின் அடிப்படையில் அவருக்கு நம் மீது அன்பில்லை என்று பின்னாளில் நாம் நம்புகிறோம் இல்லையா? அந்த நம்பிக்கை நிரந்தரமானது. உலகில் நடக்கும் எல்லாவற்றையும் நாம் அனுபவித்து அனுபவித்து நம்ப முடியாதல்லவா? அதனால் சில விஷயங்களை தர்க்க ரீதியான விளக்கங்களின் அடிப்படையில் நம்புகிறோம். சில கணித சமன்பாடுகளின் வழியாக நாளைக்கு மழை வரும் என நம்புகிறோம் அல்லவா? அது தர்க்கத்தின் அடிப்படையிலான நம்பிக்கை. அறிவியல் எப்போதும் தர்க்கரீதியான விளக்கங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டவை, தனிநபரின் அனுபவங்கள் அறிவியலுக்கு முக்கியமல்ல. உதாரணத்திற்கு ஒரு மருந்து ஒரு வியாதியைக் குணப்படுத்தும் என்பதை அறிவியல் தர்க்க ரீதியிலான விளக்கங்களின் அடிப்படை இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளும். ‘நான் சில நோயாளிகளுக்கு கொடுத்தேன் அது பலனளித்தது’ என்று ஒரு மருத்துவர் சொல்லுவதை மட்டும் வைத்துக் கொண்டு அறிவியல் நம்பாது. தர்க்க ரீதியிலான விளக்கங்களின் அடிப்படையில் அமைந்த நம்பிக்கைகளே உறுதியானவை, அறிவியல் பூர்வமானவை மற்றும் நிரந்தரமானவை.

வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் தர்க்க ரீதியானவிளக்கங்களையே தேட முடியாதல்லவா, அதனால் பெரும்பாலான மக்கள் ஒன்றை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்றால் அதன் அடிப்படையிலும் கூட நமது நம்பிக்கைகள் உருவாகும். கடவுள் இருக்கிறார் என்ற ஒருவரின் நம்பிக்கை எதன் அடிப்படையில் உருவாகிறது? அனுபவத்தின் அடிப்படையிலா? தர்க்க ரீதியாகவா? இரண்டும் இல்லை. பெரும்பாலான மக்களின் நம்புவதன் அடிப்படையில். இந்த நம்பிக்கைகளுக்குப் பெரும்பாலும் நிலைத்தன்மை இல்லையென்றாலும் கூட இவை உணர்வுபூர்வமானவை. ஏதோ ஒரு வகையில் இந்த உணர்வுபூர்வமான நம்பிக்கைகள் மனிதர்களுக்கு தேவைப்படுகின்றன.
ஒரு எண்ணம் இந்த மூன்றின் அடிப்படையிலேயே நம்பிக்கையாக மாறுகிறது. இப்படி உருவாகும் நம்பிக்கையே ஆக்க பூர்வமான நம்பிக்கை. இப்படியில்லாமல் எந்த ஒரு அடிப்படையுமில்லாமல் ஒரு எண்ணம் திடீரென நம்பிக்கையாக மாறுகிறதென்றால் அந்த நம்பிக்கை பிறழ் நம்பிக்கையாக (Delusion) கருதப்படும்.

திடீரென ஒருவர் வந்து இன்று பெரும் பூகம்பம் வரப்போகிறது என்று சொல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவரிடம் “எதன் அடிப்படையில் அப்படி சொல்கிறீர்கள்?” என கேட்க செய்கிறீர்கள். அதற்கு அவர் ‘தெரியவில்லை, ஆனால் திடீரென என் உள்ளுணர்வு அப்படி சொல்கிறது’ என்று சொன்னாலோ அல்லது “எங்கள் வீட்டில் இன்று பால் திருகி வந்தது, அதை வைத்துதான் சொல்கிறேன்” என்று சொன்னாலோ அவரின் நம்பிக்கை பிறழ்வான நம்பிக்கை.

ஒரு அசலான நம்பிக்கையைப் போலவே பிறழ்வான நம்பிக்கையும் முழுமையானதாக இருக்கும். “எனக்கு என் மனைவி துரோகம் செய்கிறாள்” என ஒருவர் நம்பினால் அந்த நம்பிக்கையின் விளைவாக அவரின் மனைவியை என்னவெல்லாம் பாடுபடுத்துவாரோ பிறழ்வான நம்பிக்கையை கொண்டவரும் அதே அளவிற்கு பாடுபடுத்துவார்.

சமீபத்தில் ஒரு 60 வயது முதியவரை அவரது மனைவியும், மகனும் என்னிடம் அழைத்து வந்தார்கள். இரவில் தூங்காமல் அவரது மனைவியை எட்டி எட்டிப் பார்ப்பதும், பகல் முழுவதும் மனைவியைத் தொடர்ந்து கண்காணிப்பதுமாக இருக்கிறார், மனைவியின் சின்னச் சின்ன அசைவுகளைக் கூட ‘யாருக்கோ சிக்னல் கொடுக்குறா’ என குற்றம் சொல்கிறார். “சின்ன சின்ன பசங்ககூட ராத்திரி விடிய விடிய செல்போன்ல பேசுறா, ஜாக்கெட்ட கழட்டி போட்டோ எடுத்து அனுப்புறா” என ரகசியமாக அந்த முதியவர் சொல்லும்போது “உங்களுக்கு எப்படித் தெரியும்?” என கேட்டேன்.

‘என்கிட்ட ரகசியமா கண்காணிக்கிற கேமரா இருக்கு’ என தனது வேட்டியில் முடிந்து வைத்திருந்த பழைய ஓடாத வாட்ச் ஒன்றை எடுத்து டேபிள் மீது வைத்தார்.

அவரைப் பொறுத்த வரை அவரின் எண்ணவோட்டம் நோய்மையடைந்திருக்கிறது. ஒரு எண்ணம் மனதில் ஓடினாலே சட்டென அதை நம்பிவிடுகிறார். அந்த நம்பிக்கைக்கு அவர் எந்த ஆதாரத்தையும், அடிப்படையையும் எதிர்பார்ப்பதில்லை. அந்த நம்பிக்கையின் விளை
வாக அவரின் நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன, அதனால் அவரை சுற்றியிருப்பவர்களும் பாதிக்கப் படுகிறார்கள். இந்த நம்பிக்கை தான் பிறழ் நம்பிக்கை. இப்படிப்பட்ட சட்டென உருவான பிறழ் நம்பிக்கைகள் மனச்சிதைவு நோயின் முக்கியமான அறிகுறி.

மேலே சொன்னவையெல்லாம் வெவ்வேறு நரம்பியல் நிபுணர்களும், மனநல மருத்துவர்களும் மனச்சிதைவு நோயைப் பற்றி வரையறை செய்தவைகள். இன்றைய மனநல மருத்துவம் சர்வதேச அளவில் மனநோய்களுக்கான ஒருங்கிணைந்த அட்டவணையை உருவாக்கியிருக்கிறது. அதில் ஒவ்வொரு மனநோய்களுக்கான தன்மைகளையும், நோய்க்குறிகளையும் வரையறை செய்திருக்கிறது. இந்த அட்டவணை தான் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படு வருகிறது. ICD (International Classification of Diseases) என சொல்லக் கூடிய அட்டவணை காலத்திற்கு ஏற்றாற் போல நோயின் தன்மைகளை மாற்றிக்கொண்டும் வருகிறது. இதே போன்ற அட்டவணையை அமெரிக்காவும் உருவாக்கியிருக்கிறது DSM (Diagnostic and Statistical Manual of Mental disorder). இந்த அட்டவணையும் கூட பெரும்பாலான நாடுகளால் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த அட்டவணைகளின்படி ஒவ்வொரு நோய்க்கும் குறைந்தபட்சம் இருக்க வேண்டிய அளவுகோல்கள் வரையறை செய்யப்பட்டிருக்கின்றன. அவை இருந்தால் மட்டுமே அந்த நோயைக் கண்டறிய உறுதி செய்ய முடியும்.

மனச்சிதைவு நோய்க்கு இருக்க வேண்டிய அளவு கோல்களும் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.

அவை: கீழ்க்கண்ட நோய் அறிகுறிகளில் இரண்டிற்கும் மேற்பட்ட அறிகுறிகள் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ச்சியாக இருக்க வேண்டும், ஒன்றிலிருந்து மூன்றாவது வரை இருக்கக்கூடிய அறிகுறிகளில் குறைந்தபட்சம் ஒன்றாவது இருக்க வேண்டும்:
பிறழ் நம்பிக்கை

மாயக்குரல்கள்

சீரற்ற, ஒழுங்கற்ற மற்றும் இலக்கற்ற பேச்சு

விசித்திரமான ஒழுங்கற்ற நடவடிக்கைகள்

சமூகவிலகல், தனித்திருத்தல், பேச்சிலும், செயலிலும் முழுமையான மந்த நிலை.

இந்த அறிகுறிகளின் விளைவாக ஒருவரின் தனிப்பட்ட வேலையோ அல்லது படிப்போ, சக மனித உறவுகளோ, அன்றாடச் செயல்களோ ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டால் அதை மனச்சிதைவு நோய் என வரையறை செய்யலாம்.

மனச்சிதைவு நோய் ஏன் வருகிறது?

பெரும்பாலான நேரங்களில் நாம் மனநோய் வருவதற்கு குடும்பச் சூழலையும், பெற்றோர்களின் வளர்ப்பையும், வறுமையையுமே காரணங்களாக நினைக்கிறோம். அதுவும் மனச்சிதைவு நோய் போன்ற தீவிர மனநோய் பெற்றோர் வளர்ப்பு சரியில்லை என்றால் தான் வரும் என தமிழ் திரைப்படங்கள் தீர்ப்பே எழுதிவிட்டன.

உண்மையில் ஒரு மிதமான மனநலப் பிரச்சினைகள் வருவதற்கு தான் சுற்றுப்புறம் காரணமாக இருக்கலாம், தீவிரமான மனநோய்களுக்கு உடலியல் காரணங்களே பிரதானமானவை.

மனச்சிதைவு நோய் என்பது மரபணுக்கள் பாதிப்பால் வரக்கூடிய நோய் என்கிறது மருத்துவ அறிவியல். மரபணுக்கள் வழியாக வருவதென்றால் குடும்பத்தில் யாரிடமாவது இருந்து வருமா என கேட்டால், அப்படியும் வரலாம். ஆனால் அது அவசியம் இல்லை, தன்னிச்சையாக ஏற்படும் மரபணு குறைபாடால் கூட மனச்சிதைவு நோய் வரலாம். அதாவது கர்ப்பகாலத்தில் மரபணுக்குள் முழுமையாகும் காலகட்டத்தில் ஏற்படும் பாதிப்புகளினால் மரபணுக்கள் தன்னிச்சையாகவே பாதிக்கப்பட்டலாம். இந்த பாதிக்கப்பட்ட மரபணுக்களின் விளைவாக மூளையில் உருவாகக்கூடிய நரம்பிணைப்புகளில் கோளாறுகள் ஏற்படும். இந்தக் கோளாறான நரம்பிணைப்புகளினால் உருவாகும் சமிக்ஞைகள் தவறான தகவல்களைக் கடத்துவதால் சிந்தனைகளும், உணர்வுகளும் பாதிக்கப்படுகின்றன என்கின்றன நரம்பியல் ஆய்வுகள். இதுவே இன்றைய தேதியில் மனச்சிதைவு நோய்க்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணம்.

எந்த வயதில் வரலாம்?

15 வயதிலிருந்து 20 வயதுக்குள்ளான வயதில் தான் பெரும்பாலும் மனச்சிதைவு நோய் வருகிறது. ஆனாலும் அதற்கு முன்பான சிறு வயதிலிருந்தே மனச்சிதைவு நோய்க்கான அறிகுறிகள் தென்படலாம். ஆண்-பெண் என எல்லா பாலினத்திலும் மனச்சிதைவு நோய் வரும். முப்பது வயதுக்கு மேலானவர்களுக்கு இந்த நோய் வருவது பெரும்பாலும் அரிதானது.

மனச்சிதைவு நோய்க்கு சிகிச்சை இருக்கிறதா? என்ன விதமான சிகிச்சை? எவ்வளவு நாட்கள் எடுக்க வேண்டும்?
நவீன மனநல மருத்துவத்தில் அனைத்து மனநோய்களுக்கும் சிகிச்சை இருக்கின்றன.

சிகிச்சைகளின் தன்மையும், அதற்கான கால அளவும் நோய்க்கு நோய்க்கு மாறுபடும். மனச்சிதைவு நோய்க்கும் முழுமையான சிகிச்சை உண்டு. இந்த நோய் முழுக்க முழுக்க உடலியல் காரணங்களினால் வரக்கூடிய நோயாதலால் சிகிச்சையும் மருத்துவ சிகிச்சையே! மாத்திரை,

மருந்துகளின் வழியாக நோயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். நோய் கட்டுக்குள் இருக்கும் போது மாத்திரைகளின் அளவைக் குறைத்துக்கொள்ளலாம், ஆனால் சிகிச்சை வாழ்நாள் முழுதும் தேவைப்படும். இடையில் மாத்திரைகளை நிறுத்தினால் உடனடியாக நோய் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். அப்போதும் சிகிச்சை செய்யவில்லையென்றால் நோயறிகுறிகள் தீவிரத்தன்மையடையும், அப்போது நோயாளிகளின் நடவடிக்கைகள் கட்டுப்பாடில்லாமல் இருக்கும், அந்த நிலையை வராமல் பார்த்துக்கொள்ள தொடர்ச்சியாக சிகிச்சை செய்து கொள்வது அவசியம்.

மனச்சிதைவு நோயைப் பொறுத்தவரை சிகிச்சை வாழ்நாள் முழுவதும் தேவைப்படும். ஆனால் நிறைய நேரங்களில் மனச்சிதைவு நோயுடன் மற்ற சாதாரண நோய்களுடன் போட்டுக் குழப்பிக்கொள்வோம். சில சாதாரண மன நோய்களின் அறிகுறிகளும் மனச்சிதைவு நோய் அறிகுறிகளுடன் ஒத்திருக்கும்போது அதையும் மனச்சிதைவு நோயாக நாம் நினைத்துக்கொள்வோம். மனச்சிதைவு நோய்க்குத்தான் வாழ்நாள் சிகிச்சை தேவைப்படும். மற்ற சாதாரண மனநோய்களுக்கு மிகக் குறுகிய கால சிகிச்சையே போதுமானது.
மனச்சிதைவு நோய் யாருக்கு வரலாம்?

“அவன் நல்லா படிக்கக்கூடியவன், நல்ல அறிவாளி, அவனுக்கெல்லாம் எப்படி சார் மனச்சிதைவு வரும்?”

“நல்ல குடும்பம், நல்ல வசதி, வாழ்க்கைல ஒரு பிரச்சினையுமில்லை, அவனுக்கு இப்படி வந்துருக்கிறதுதான் நம்ப முடியல சார்?”
இப்படி நிறைய பேர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

மனச்சிதைவு நோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்!

படிப்பு, அறிவு, பொருளாதார நிலை, குடும்பச் சூழ்நிலை என எதுவும் மனச்சிதைவு நோயைத் தடுக்காது. வறுமை, நெருக்கமான வாழிடம், போதைப் பொருட்கள் பழக்க வழக்கம் போன்றவை மனச்சிதைவு வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துமே தவிர, வசதியான
வர்களுக்கோ, நல்ல அறிவாளிக்கோ மனச்சிதைவு நோய் வராது என சொல்ல முடியாது.

எல்லாவித பொருளாதாரப் பின்னணியில் இருப்பவர்களுக்கும், எல்லாவித சீதோஷ்ண நிலையில் இருப்பவர்களுக்கும் மனச்சிதைவு நோய் வரலாம். உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் மனச்சிதைவு நோயின் வீதம் ஒன்றே. அதன் தீவிரத்தன்மைகள் தான் நாடுகளுக்கு நாடு வேறுபடுகிறது.

விரைவிலேயே கண்டறிதல், தடைகளில்லா மனநல சேவைகள், நவீன சிகிச்சைக்கான வசதிகள், தொடர் சிகிச்சையை உறுதிபடுத்துவதற்கான வழிமுறைகள், குடும்ப பாதுகாப்பு, சமூக நல்வாழ்வு திட்டங்கள் என பல காரணங்களைப் பொறுத்து இந்நோயின் தீவிரத்தன்மை மாறுபடும்.

பெரும்பாலான வளர்ச்சியடைந்த நாடுகளை ஒப்பிடும்போது வளரும் நாடுகளில் தான் இந்நோயின் தீவிரத்தன்மை குறைவாக இருக்கிறது என ஆய்வுகள் சொல்கின்றன. அதற்கு நமது குடும்ப அமைப்பும், குடும்பத்தினரின் கவனிப்பும் முக்கியமான காரணம் என கண்டறியப்பட்டிருக்கிறது.
விரைவான சிகிச்சையும், தொடர் சிகிச்சையும் மற்ற குடும்ப உறுப்பினர்களின் கவனிப்பும், பாதுகாப்பும் இந்நோயைத் தீவிரமடையாமல் தடுக்கும் வழிமுறைகள் என்பதை உணர்ந்துகொண்டு சிகிச்சை செய்தால் மனச்சிதைவு நோயும் மற்ற நோய்களைப் போல ஒரு சாதாரண நோயே என்பது தெரியும்.

என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்?

பொதுவாக மனநலப் பிரச்சினைகள் என்றாலே அதற்கு சிகிச்சை என்பது கவுன்சிலிங் மட்டுமே என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கிறது. அந்த எண்ணம் முற்றிலும் தவறானது. மனநலப் பிரச்சினைகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன, பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சில தீவிர மனநோய்கள் உடல் ரீதியான காரணங்களினாலே உருவாகின்றன. மிதமான மற்றும் சாதாரண மனநலப் பிரச்சினைகள் உளவியல் மற்றும் சமூக காரணங்களினால் உருவாகக்கூடியவை. சில மனநோய்களுக்கு உடல், உளவியல் மற்றும் சமூகம் என்று
மூன்றும் காரணங்களாக இருக்கின்றன. இந்த காரணங்களுக்கு ஏற்றவாறு தான் சிகிச்சையும் இருக்கும். உடலியல் காரணங்களினால் உருவான மனநோய்கள் என்றால் மருந்து, மாத்திரைகள் மற்றும் உடலியல் சிகிச்சைகளே கொடுக்கப்படும், உளவியல் காரணங்க
ளென்றால் ஆலோசனை கொடுக்கப்படும், சமூக காரணங்களென்றால் அந்த அவலங்களைப் போக்கும் நடவடிக்கைகள் எடுக்க அரசாங்கத்திற்குப் பரிந்துரை செய்யப்படும்.

மனச்சிதைவு நோயைப் பொறுத்தவரை அது உடலியல் காரணங்களினால் உருவாகக்கூடிய நோய். சில மரபணுக்கள் குறைபாட்டின் விளைவாக மூளையின் சில முக்கியமான நரம்பியல் தொடர்பில் ஏற்படும் பாதிப்பினால் மூளையின் சமிக்ஞைகள் வெளிப்பாட்டில் கோளாறுகள் ஏற்படுகின்றன, அதன் விளைவாக எண்ணங்களில், உணர்வுகளில் ஏற்படும் நோய்மையே மனச்சிதைவு நோய். அதனால் அதற்கு சிகிச்சை என்பது பெரும்பாலும் மருந்து, மாத்திரைகளே!. மூளையின் தவறாக வெளிப்படும் சமிக்ஞையை சரி செய்வதற்காக மூளையின் ரசாயனங்களின் அளவை சமநிலை செய்வதே சிகிச்சையின் நோக்கம். அதற்காகவே மாத்திரை, மருந்துகள் உபயோகிப்படுகின்றன.

நோயைத் துரிதமாக கண்டறிந்து வெகு விரைவாக சிகிச்சையைத் தொடங்கினால் மருந்துகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும், அதே போலவே சிகிச்சையை விடாமல் தொடர்ச்சியாக மனநல மருத்துவர்களின் கண்காணிப்பில் எடுத்துக்கொண்டால் நோயின் பாதிப்புகளிலிருந்து முழுமையாக வெளிவர முடியும். எல்லோரையும் போல நார்மலான வாழ்க்கையை வாழமுடியும். ஒரு வேளை சிகிச்சையை தாமதமாகத் தொடங்கினாலோ அல்லது அடிக்கடி சிகிச்சையை நிறுத்தி விட்டாலோ நோயின் பாதிப்புகள் நிரந்தரமாகத் தங்கிவிடும். அதன் விளைவாக அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படலாம். அது அவர்களை சுற்றி உள்ளவர்களையும் பாதிக்கலாம்.

24 வயது இளைஞன் ஒருவனுடைய தந்தை வந்திருந்தார். தனது மகன் சில மாதங்களாக வீட்டை விட்டே வெளியே செல்வதில்லை, யாருடனும் பேசுவதில்லை, ஒரு அறையில் தனியாகவே எப்போதும் இருக்கிறார், ஒரு வேளை மட்டுமே சாப்பிடுகிறார் என்றும் அவருடைய இந்த நடவடிக்கைகள் நாளுக்கு நாள் தீவிரமாக செல்வதாகவும் அதை உணர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்தால் வர மறுக்கிறார் என்றும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புவதாகவும் சொன்னார். சில மாத்திரைகளைப் பரிந்துரை செய்து சில நாட்கள் கொடுக்கும்படி கூறி அவரை அனுப்பினேன். இரண்டு வாரங்கள் வற்புறுத்திக் கொடுத்ததற்குப் பிறகு நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் வந்தன, அந்த இளைஞனே நேரடியாக என்னிடம் வந்து பேசினான். அவரை முழுமையாகப் பரிசோதனை செய்ததில் அவருக்கு மனச்சிதைவு நோய் இருப்பது தெரியவந்தது. அவருக்கு சிகிச்சையைத் தொடங்கி மூன்று மாதத்தில் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து நன்றாக முன்னேறி வந்தார். ஒரு வேலைக்கும் செல்லத் தொடங்கி, எல்லோரிடமும் நன்றாகப் பழகி, ஓரளவிற்கு பழைய நிலைக்கே வந்திருந்தார். பெற்றோர் அவருக்குத் திருமண ஏற்பாட்டை தொடங்கினார்கள், மாத்திரை சாப்பிடுவது தெரிந்தால் பெண் கிடைப்பதில் சிக்கலாகிவிடும் என்றெண்ணியும், நன்றாகத் தானே இருக்கிறார். இனி மாத்திரைகள் தேவையில்லை என்று நினைத்தும் மாத்திரைகளை நிறுத்தினார்கள். அடுத்த இரண்டு மாதத்தில் தொடக்கத்தில் இருந்த அத்தனை பிரச்சினைகளும் வந்துவிட்டது. முன்பு இருந்தது போலவே தனிமைப்படுத்திக்கொண்டு, வேலைக்குப் போவதை விட்டுவிட்டார். அவரின் இந்த நிலையைப் பார்த்து திருமண ஏற்பாட்டையும் பெற்றோர் கைவிட்டனர். அந்த இளைஞனின் நிலைமை இன்னும் மோசமாகவே அந்த தந்தை என்னை வந்து பார்த்தார்.

“என்ன செய்றதுனே தெரியல டாக்டர், இவன எப்படி சரி பண்றதுனு குழப்பமா இருக்கு, ஏன் வைத்தியம் செஞ்சா கூட சரியாக மாட்டேங்குறான்?” என விரக்தியாக கேட்டார்.

“வைத்தியம் செய்ததால் தான் அவன் தொடக்கத்தில் முன்னேறி வந்தான், எல்லோரிடமும் பேச ஆரம்பித்தான், வேலைக்குச் சென்று சம்பாரிக்கத் தொடங்கினான்.வைத்தியம் செய்து சரியாகவில்லை என்று எப்படி சொல்கிறீர்கள்?” எனக் கேட்டேன்

“ஆமா டாக்டர், மாத்திரைய நிறுத்தியவுடன் திரும்பவும் பழையபடிக்குப் போய்ட்டானே, அப்ப சரியாகலன்னுதானே அர்த்தம்?”

“அய்யா உங்கள் மகனுக்கு இருப்பது மனச்சிதைவு நோய். இதற்கான சிகிச்சையை நீங்கள் வாழ்நாள் முழுவதும் எடுக்க வேண்டும். பிபிக்கு மாத்திரை போடுவது போல, சுகருக்கு மாத்திரை போடுவது போல இந்த நோய்க்கும் மாத்திரைகள் போடவேண்டும். தொடர்ந்து சிகிச்சையளித்தால் அவன் இயல்பு நிலைக்கு வந்துவிடுவான். சிகிச்சையை இடையில் நிறுத்தினால் திரும்பவும் பழைய நிலைக்குச் சென்றுவிடுவான். இது தான் இந்த நோயின் தன்மை. சிகிச்சை செய்வதை நிறுத்திவிட்டு வேறு என்ன செய்தாலும் இந்த நோயைக் குணப்படுத்த முடியாது. நீங்கள் செய்ய வேண்டியது அவருக்கு சிகிச்சையளிப்பது மட்டும் தான்.

இதில் குழம்புவதற்கு என்ன இருக்கிறது. ஒழுங்காக சிகிச்சைக்கு அழைத்து வந்தால் அவர் நன்றாக இருப்பார். எல்லோரையும் போல அன்றாட வாழ்க்கையை வாழ அவரால் முடியும். அதனால் அதைச் செய்வதுதான் இந்த நோய்க்குத் தீர்வு. இதை நீங்கள் புரிந்து கொண்டால் குழப்பம் இருக்காது” என சொல்லி பழையபடி சிகிச்சையளிக்க தொடங்கினேன். அடுத்த சில வாரங்களிலேயே இயல்பு நிலைக்குத் திரும்பி வேலைக்குச் செல்லத் தொடங்கினார்.

அந்த தந்தைக்கு இருக்கும் எண்ணம் தான் பெரும் பாலானவர்களுக்கு இருக்கிறது. “ஏன் மாத்திரை போட்டு சரியாகவில்லை, அப்படியென்றால் மாத்திரை போடுவது வீண்தானே?” என்று கேட்பவர்கள் கூட இருக்கிறார்கள். இன்னும் சில பேர் “மாத்திரையைப் போட்டால் அடிமையாகிவிட மாட்டார்களா?” என்றெல்லாம் கூட கேட்டிருக்கிறார்கள்.

மனச்சிதைவு நோயைப் பொறுத்தவரை அது உடலியல் காரணங்களினால் வரக்கூடிய நோய். வாழ்நாள் முழுவதும் இருக்கக்கூடிய நோய். அதனால் அதற்கான சிகிச்சையும் வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டும். சிகிச்சை என்பது மருந்து, மாத்திரைகள் மட்டுமே. நோயாளிகளுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த நோயின் தன்மை குறித்தும், அதன் ஒவ்வொரு நிலையிலும் எப்படி எதிர்கொள்வது என்று ஆலோசனைகள் கொடுக்கலாமே தவிர, பிரதான சிகிச்சையென்பது மருந்தும், மாத்திரைகளுமே. அவை மட்டுமே நோயைக் கட்டுக்குள் வைக்கும், அவை மட்டுமே இழந்த வாழ்வை நோயருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மீட்டுக்கொடுக்கும்.

sivabalanela@gmail.com