இருளா

அட்டப்பாடி பகுதியில் வசிக்கும் இருளர் மக்களின் மொழியில் எடுக்கப்பட்ட ஒரு படம் பிரியநந்தனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது. “ பாராக்குருவி ”: அதன் தலைப்பு .அட்டப்பாடி பழங்குடி மக்கள் மற்றும் தமிழருடைய வாழ்க்கையை சொல்கிறது அப்படம். பெரும்பாலும் தமிழர் குடும்பங்களையும், அவர்களின் பயன்பாட்டு கொச்சை தமிழ் வசனங்களையும் இந்தப் படம் கொண்டிருக்கிறது. நம்முள் தமிழ் மழை பொழிந்து கொண்டே இருக்கிறது முடிவில்லாமல்..ஆனால் தமிழ்க் குடும்பங்களின் வேதனையும் நதியாக ஓடிக் கொண்டு இருக்கிறது.

தமிழ் மருத்துவம் பார்க்கும் குடும்பங்கள் சில.. அங்கு நடக்கும் ராமாயாண நாடக நிகழ்ச்சியினைப் பார்த்து அதே போல சீதா வேடம் போட ஆசைப்படும் பெண் பாப்பா . ஆனால் காலம் காலமாக ஆண்கள் தான் அந்த வேடம் போடுகிறார்கள். பெண்ணுக்கு இது நடக்காது
என்று அவள் அம்மா சொல்கிறார். அவள் அம்மாவுக்கு சாராயம் காய்ச்சும் வேலை. தமிழ் குடும்பம். அப்பா ஐந்தாவது மனைவியாக ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு எங்கோ வாழ்கிறார். இந்தப் பெண்ணுக்கு படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அம்மாவின் சாராயம் காய்ச்சும் தொழிலை செய்துவிடக்கூடாது என்ற பயம் இருக்கிறது. அவள் பாப்பா 15 வயது. அவளுடைய தோழி லிங்கே பாப்பாவின் அம்மா லக்கி சாராயம் வாங்க வருபவர்களின் சீண்டலுக்கும் பலாத்காரத்திற்கும் ஆளாகிறாள். இதிலிருந்து தப்பிக்க ஆசைப்படுகிறாள். ஆனால் மகள் எப்படியோ பலியாகிவிடுகிறாள். பாப்பா அவள் கர்ப்பமாக இருக்கிறாள். பாப்பாவின் கர்ப்பத்தைக் கலைக்க ராமி அவளை சில இடங்களுக்கு வைத்திய முறைக்காக கூட்டிக்கொண்டு போகிறாள். ஜோசியர்கள், மந்திரவாதிகள் இவளிடமெல்லாம் கூட்டிக்கொண்டு போகிறாள். கடைசியில் சாமியாடி ஒருவன் அவளிடம் உள்ள பேயை விரட்டுவதாகச் சொல்லி அடித்து துவம்சம் செய்கிற போது அவள் அபார்ஷன் செய்து விட வேண்டும் என்று நினைக்கிற முயற்சிகளைத் தாண்டி அப்படியே ஆகிறது. அவள் தனக்காகப் புதுப்பித்துக் கொள்கிறாள். அவளது இந்த நிலைக்குக் காரணம் யார் என்று சொல்லப்படுவதில்லை. . இருளர் மற்றும் பழந்தமிழருடைய உண்மையான முகங்கள், அவருடைய இசை, நடனம், நாட்டியம், நாடகம் முதல் கொண்டு பல விஷயங்களை ஆட்டப்பாடியின் பின்னணியில் சொல்லி இருப்பதில் இந்தப் படம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அட்டப்பாடியில் வசிக்கும் கூலித் தமிழர்களுடைய வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே சரியாகச் சொல்லி இருக்கிறார்கள்.

அட்டப்பாடி என்றதும் நமக்கு அது அட்டப்பாடி பகுதி பழங்குடியினர் மீதான காவல்துறையினர் அத்து மீறல் என்பதுதான் ஞாபகம் வரும். அங்கு முன்னூறு ஏக்கர் பரப்பில் அடர்ந்த காடு. ஒரு சதுர கிலோ மீட்டரில் நுண்ணுயிர்கள் வாழக்கூடிய பகுதி அங்குள்ள அமைதிப் பள்ளத்தாக்கு. .
அந்தப் பகுதியில் 70 களில் ஒரு நீர் மின்நிலையம் கட்ட ஆரம்பிக்கப்பட்டபோது அதன் காரணமாக அமைதி பள்ளத்தாக்கு அழிந்துவிடும் என்று சுகுத குமாரி போன்ற எழுத்தாளர்கள் முன்னின்று போராட்டம் நடத்தி அந்த அணைகட்டும் திட்டத்தைக் கைவிடச் செய்தனர்.

சமீபத்தில் நான் அங்கு சென்று இருந்த போது உலகம் வெப்பமாய் கொண்டிருக்கிற சூழலில் பாதிக்கப்பட்ட பகுதியாக அதன் ஒரு பகுதி வறட்சியாக மாறி இருந்தது. மரங்களும், அபூர்வமான தாவரங்களும் கருகி மறைந்து போய் கிடந்தன. அந்தப் பகுதியைப் பற்றி பல மலையாளச் சித்திரங்கள் (நாவல்கள்., திரைப்படங்கள் ) இருந்தாலும் காசு வேலாயுதம் தன் நாவலில் குறிப்பிடுவது தனித்தன்மை வாய்ந்தவை.

அட்டப்பாடி பகுதி சார்ந்து வாழும் பழங்குடி மக்களுடைய வாழ்வியலைப் பிரதிபலிக்கும் அவர்களுடைய மொழியிலேயே சொல்லப்பட்ட கவிதைகளை “ஆதிவாசிகள் கவிதைகள்’’ என்ற தலைப்பில் சுதேசமித்திரனை ஆசிரியராகக் கொண்ட ‘‘அகநாழிகை” மின்னிதழ் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

அதை நிர்மால்யா மணி அவர்கள் மொழி பெயர்த்து வெளியிடுகிறார். அட்டப்பாடி சார்ந்து ஒரு முழு நாவலை காசு வேலாயுதம் இதன் மூலம் தந்திருக்கிறார்.

‘‘பாராக்குருவி”. இது இருளர் மொழியில் எடுக்கப்பட்ட படம். இருளர் மொழியில் மொழி வந்திருக்கிற முதல். படம் அது என்ற வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் சாராயம் காய்ச்சும் ஒரு தமிழ்ப் பெண்மணிதான் கதாநாயகி.. கணவன் கைவிட்டுப் போய்விட்டான். மகள் ஒருத்தி இருக்கிறாள். அவளின் வாழ்க்கையும் அவளைச் சுற்றியுள்ள தமிழருடைய வாழ்க்கையையும் மற்றும் பழங்குடியினர் வாழ்க்கையும்தான் அந்த திரைப்படம் சொன்னது.

”பாராக்குருவி என்பது தந்தையில்லாதக் குருவியாம். அதுபோல் அந்த இளம்பெண் கர்ப்பமாகிவிடுகிறாள். தந்தையில்லாத குழந்தையாக அதனை வளர்க்க விரும்பவில்லை. கல்வி என்பது பெண்ணுடைய வாழ்வில் மிக முக்கியமாக இருக்கிறது திருமணம் என்பதைத் தாண்டி அவள் வெளிவர கல்வி முக்கிய பாதையாக இருக்கிறது என்பதை அந்தப் படம் சொன்னது. இந்த அம்சத்தை தான் சாராயம் மற்றும் கல்வி சார்ந்த முக்கிய கூறுகளைக் கொண்ட நாவலாக காசு வேலாயுதம் நாவல் அமைந்திருக்கிறது. இதையும் ஒரு சிறந்த படமாக்க முடியும். சாட்சரதா- கா.சு வேலாயுதன் நாவலில் வருகிற இரண்டு குறிப்பிடத்தக்க விஷயங்கள். மதுவும் அதனால் பாதிக்கப்பட்ட பெண்களும் அவர்களுக்கான கல்வியை மீட்போம் என்ற நடவடிக்கைகளும் முக்கியமானவை. தமிழர்கள் சாராயம் காய்ச்சுகிறார்கள் அந்தப் பகுதியில் மதுவிலக்கு அமலில் உள்ள போது கூட தமிழகத்தினுடைய எல்லையில் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளால் அந்தக் கேரளப் பகுதி மக்கள் நாசமாகிறார்கள்.

அந்த ஆண்கள் மீது அந்தப் பகுதி பெண்களுக்கு பெரும் வெறுப்பு இருக்கிறது. மதுவைக் குடித்துச் சாகிறார்கள். அவர்கள் இருந்து என்ன பயன், சாகட்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். ஆண்கள் இல்லாமல் விதவையாகவே வாழ அவர்கள் விரும்புகிறார்கள்.

ஆனால் அதிலிருந்து மீள்வதற்காகத் தங்களை பல அமைப்பு மூலமாக வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அதிலொன்று சாட்சரதா.

சமூக அநீதிகளை சொல்லிக் கொள்கிறார்கள். தங்கள் குழந்தைகள் அதிலிருந்து மீட்க கல்விதான் முக்கியம் என்று உணர்கிறார்கள்.

அப்படித்தான் அந்த இயக்கம் அங்கு ஒளிர் விடுகிறது, பெண்கள் மீதான பாலியல், வன்முறை ஆண்களின் அதிகாரம், காவல்துறை அதிகாரம், கூட்டு களவாணித்தனங்களால் இவர்களின் போக்குகள் நிறைந்திருப்பது இவற்றையெல்லாம் நாவல் சொல்கிறது.

கல்வி சார்ந்த இயக்கம் வெற்றி பெறுகிற போது ‘‘அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் அது சார்ந்த ஒரு கூட்டத்திற்கு வருவது என்பது ஒரு பெரிய அங்கீகாரமாக இருக்கிறது. அதில் போராடிய பெண்களை முன்னிலைப்படுத்துகிறார்.

அவர்கள் கண்ணகி, மாதவி என்ற இலக்கிய கதாபாத்திரங்கள்- காவியத்தன்மை கொண்டவை. அதேபோல இந்த நாவலில் வருகின்ற அந்த இரண்டு மாதிரி என்ற பாத்திரங்களும் அப்படித்தான். ஒரு காவியத் தன்மையில் நிலை பெற்றவர்கள்.

அவர்களை அப்துல் கலாம் அவர்கள் அங்கீகரிக்கிறார். ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் அவரின் வருகையை விவரிக்கிற விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது. சமீபத்தில் வெற்றி பெற்ற அட்டப்பாடியை மையமாக வைத்த மலையாளப் படம் “கோசியும் ஐயப்பனும் ” அதில் காவல்துறை அதிகாரிகள் சாராய உலகத்தில் இருப்பவர்களோடு எப்படி இறங்கி இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள்,

அவர்களுடைய வன்முறை உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி சொல்வது. அந்தப் படத்தில் வருகிற நஞ்சம்மாவின் ஆதிவாசிப் பாடல் மனதை உருக்கும் பாடலாகும். அப்படி சாராயமும் பண உலகமும் கொண்ட தளத்தில் காவல்துறை அதிகாரிகளும் எந்தளவில் இருக்கிறார்கள் என்பதை இன்னொரு பார்வையாய் காசு வேலாயுதன் இந்த நாவலில் சொல்கிறார்.

கல்வி இல்லாமல் வளரும் ஒரு சமூகம், ஆண்களின் பாதுகாப்பு இல்லாமல் வளரும் சமூகம், இவர்கள் மத்தியில் பெண்களுடைய நிலையை உயர்த்தும் போக்கு என்பது மிக முக்கியமாக இருக்கிறது. இந்த தற்போதைய சமூக உலகத்தில் இருந்து இன்னொரு நல்ல சமூகம் வர வேண்டும் என்ற கனவு வேலாயுதத்திடம் இருக்கிறது.

இருளா மொழி கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு எல்லையில் உள்ள பழங்குடி மக்கள் பேசக்கூடிய மொழியாகும். இதற்குத் தனியாக எழுத்து வடிவம் இல்லை. பலர் இருளா படைப்புகளைத் தமிழ் எழுத்துக்கள் மூலமாகவே வெளியிடுகிறார்கள் இந்த வகையில் ஒடியன் அவர்கள் இருளா பழங்குடி மக்களுடைய அனுபவங்களை இரண்டு தொகுப்புகளாக- கவிதை, பாடல் போல் வெளியிட்டு இருக்கிறார். இருளா என்பது ஒரு சுதந்திரமான திராவிட மொழியாகும் இது தமிழுடன் குறிப்பாக பழைய தமிழ், கொஞ்சம் கன்னடம் போன்ற அம்சங்களை எல்லாம் கொண்டிருக்கிறது. பழங்காலத்திற்கு முந்திய அல்லது பழமையான தமிழ் பேச்சு வழக்கில் பேசத் தொடங்கியது. இந்த மொழி அவர்களின் பேச்சு கிட்டத்தட்ட ஒரு முழுமை இருக்கும். முன்பு இப்படித்தான் ஒரு படம் “நேதாஜி’’ என்ற பெயரில் இருளா மொழியில் எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் சொல்கின்றன ஆனால் அந்தப் படம் வெளிவந்ததா என்பது தெரியவில்லை அந்தப் படத்தை விஜயஸ் மணி அவர்கள் இயக்கியிருந்தார். திடீரென காணாமல் போகிற சுபாஷ் சந்திர போஸ், அவருக்கும், மகாத்மா காந்திக்கும் இடையில் இருக்கிற முரண்பாடுகள் பற்றிப் படம் சொன்னது. இந்த மையத்தை அவர்கள் ஏன் எடுத்துக் கொண்டார்கள் என்பது தெரியவில்லை. இருளா மொழியிலேயே எடுக்கப்பட்ட அப் படம் அட்டப்பாடி பகுதியில் ராதாகிருஷ்ணன் அவர்களுடைய ஒளிப்பதிவில் சுமார் 15 நாட்களுக்குள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் அந்தப் படம் வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை. அந்த வகையில் “பாராக் குருவி” என்ற படம்தான் இருளா மொழியில் எடுக்கப்பட்ட முதல் படம் என்று சொல்லலாம்.

இந்தப் படத்தில் நடித்திருக்கிற நடிகைகள் அனைவரும் அட்டப்பாடி மலைப் பகுதியைச் சேர்ந்த சாதாரண மக்கள். அந்த மக்களுக்காக நடிப்பு சார்ந்த ஒரு பயிற்சியை அளித்து அவர்களைத் தேர்வு செய்து இந்தப் படத்தைப் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர் . அந்த மக்களுடைய வாழ்வியலைத் திரைப்படத்தில் தந்ததில் ஒரு முக்கியமான முத்திரையைப் பதித்திருக்கிறார். பிரிய நந்தன் அவர்கள் ஆதிவாசிப் பெண்களின் குரலைத் தன்னுடைய பாடல்களில் வெளிப்படுத்தும் நஞ்சமா போன்றவர்கள் கூட இந்தப் படத்தில் நடித்
திருக்கிறார்கள் நஞ்சமா பாடிய பாடல்கள் “அய்யப்பனும் கோஷியும்” என்ற படத்தில் மூலம் பிரபலமானவை. இந்தச் சூழலில் அட்டப்பாடி மக்களின் வாழ்வியலை சொல்லி இருக்கிற காசு வேலாயுதன் அவர்களுடைய சாட்சரதா நாவல் பற்றி மேலே சொன்ன சில குறிப்பு
களையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.

சந்தாலி

பாலிவுட், கோலிவுட் என்று சொல்லப்படுவது போல சாலி வுட்டு என்பது சந்தாலி திரைப்படத்துறை சார்ந்த உலகம். இந்தியாவின் ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், அசாம், ஒடிசா, நேபாளத்தின் ஒரு பகுதி ஆகிய சந்தா மக்கள் வாழும் இடங்களில் சந்தாலி திரைப்படங்களுக்கு வரவேற்பிருக்கிறது. சந்தாலி மொழியில் முதல் திரைப்படம் 2001 இல் தான் வெளிவந்திருக்கிறது. நேபாளத்தில் தயாரான முதல் சந்தாலி படம் இருக்கிறது. தனித்த திரைத்துறையை அங்குள்ளவர்கள் உருவாக்க இயலவில்லை.. மக்கள் தொகை குறைவு மற்றும் லாபம் இல்லை… சொல் வழக்கில் சந்தார் என்று புழங்குகிற சந்தாலி மொழி முண்டா இன உபக்குழு மக்களால் பரவலாகப் பேசப்படுகிறது. .ஆஸ்திரியா ஆசியா மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது இந்த மொழி .1925 ஆம் ஆண்டு வரை ஒரு பேச்சு மொழியாக மட்டும் இருந்தது. பண்டிட் ரகுநாத் பிரபு என்ற மொழியியல் மேதை சந்தாலி மொழிக்கு ஒரு எழுத்து முறை ஒன்றை உருவாக்கினார். சந்தாலியின் உயிர்மெய் குறியீடுகளை உருவாக்கி அந்த மொழியின் தரம் உயர்த்தப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டு வரையில் சந்தாலி சிந்தனையை வடிவங்கள் முதலில் பதிவு செய்ய வங்கம் ஒடிய மற்றும் ரோமானிய எழுத்து வடிவங்களே பயன்பட்டன. ஐரோப்பிய மொழியில் அறிஞர்களும் கிறிஸ்துவ மிஷனரிகளும் பயன்படுத்தி வந்தார்கள். அதுவரையில் சந்தால் மக்கள் தம் தாய்மொழியில் எழுதும் பழக்கம் இல்லாமல் இருந்தார்கள். சந்தாலியின் உருவவியல், தொடரியல் அமைப்பு போன்ற பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பண்பாட்டு அடையாளத்திலேயே தரப்பட்டது. முண்டாமொழிகள் இந்தோனேசியப் பகுதியிலிருந்து இந்தியாவின் ஒடிசா கடற்கரை பகுதிக்கு 4000 ஆண்டுகளுக்கு முன் வந்து சேர்ந்திருக்க வேண்டும் என்பது மொழியியல் அறிஞர்களின் கருத்தாகும்.

‘‘டார்டாயிஸ் அண்டர் தெ எர்த்’’ என்று சந்தாலி மொழி படம் ஜார்க்கண்ட் கனிம வளம் உள்ள பகுதியில் அந்தப் பகுதி மக்கள் கார்ப்பரேட்டுகளால் வெளியேற்றப்படுவது பற்றி ஒரு படம். குயில், கிளி சப்தம் முன்பு. இப்போது சாலைகளில் கனரக வாகனங்கள் போகும் சப்தம். மேலே ஹெலிகாப்டர்கள்.. அப்புறம் கொஞ்ச நாள் கழித்து வெடிகுண்டு சப்தம். பாறைகளைப் பிளக்கும் சப்தம். அந்த உலகில் வாழ்கிறோம் என்கிறார்கள். உத்தரகாண்டில் வாழ்கிறோம் என்கிறார்கள்..

உலகைப் பார்த்ததில்லை என்று ஒரு கதாபாத்திரம் ஆரம்பத்தில் சொல்கிறது. வீடுகளைக் காலி செய்யும்படி அறிவிப்பு வருகிறது. பூமி எப்படி உண்டானது, உலகம் முழுக்கத் தண்ணீர் சூழ்ந்து இருக்கிறது. ஆமைகளும், புழுக்களும் உற்பத்தி ஆகின்றன. கடவுள் பின்னால் மனிதர்களை உற்பத்தி செய்கிறான் ஆமை பூமியைக் காத்துக் கொண்டிருக்கிறது. பறவை முட்டையிலிருந்து ஆண், பெண் வருகிறார்கள் என்று குடும்பத்து தலைவன் தலைவிக்குக் கதை சொல்கிறார். கனிமப் பணி காரணமாக ஆக்கிரமிப்பு செய்கிறார்கள். கடைசி திருவிழா இன்று. தாம் அதைப் பார்க்கப் போகலாம் என்று கணவன் மனைவியை அழைத்துப் போகிறார்.. இயற்கையே.. நீ இல்லாமல் நாங்கள் அதிகாரம் அற்றவர்கள், பயனவற்றவர்கள். நிலத்தை அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் நாங்கள் பண்டிகைக்காக அழைக்கிறோம். பண்டிகையில் மூழ்கி இருக்கிறோம். திருவிழாக்களில் மூழ்கி இருக்கிறோம். என்கிறார்கள். பிறந்த எங்கள் இடத்தை விட்டுப் போக கண்ணீர் எங்கள் ஆன்மாவை தொலைக்கிறது என்று அழுகிறார்கள்.

புது துணி இந்த ஆண்டு எடுத்து தருவேன், அடுத்த ஆண்டு உலகம் சுற்றிக் காண்பிப்பேன். அடுத்து ஒரு மருமகளையும் கொண்டு வருவேன் என்று சாதாரண மனிதன் மனைவியிடம் சொல்கிறான்.

சுரங்கங்கள் தோண்டப்படுகின்றன. உலகப் பருவநிலை மாநாடு பிரேசிலில் நடக்கிறது. பெரும் வெள்ளம் வந்து எல்லாவற்றையும் அடித்துக் கொண்டு போகிறது.சுரங்கம் தோண்டும் சில அதிகாரிகள் வந்து அங்குள்ள குளம், ஏரிகளில் உள்ள நீரைக் குடிக்க வேண்டாம் என்கிறார்கள், காலம்காலமாக அவர்கள் குடித்த நீர்தான். கடவுள் மரங்களிலும் கிளைகளிலும் மலையிலும் வாழ்கிறார். ஆனால் மரங்களை, இலைகளைப் பிரிக்கிறார்கள், வெட்டுகிறார்கள். வேறு இடத்திற்குப் போகத் துரத்துகிறார்கள். நம் கையில் இருந்து நம் நிலம் நழுவுகிறது, வெளியேற்றம் நடக்கிறது என்று புலம்புகிறார்கள்.

இந்த துயரமான காட்சிகள் பல படிமங்களாக இங்கே தரப்படுகிறது. வேறு தாய் நாடு எங்கு கிடைக்கும், வேறு தாய் நாடு இனி எங்கே கிடைக்கும், எப்போது கிடைக்கும், இதிலிருந்து வெளியேறிவிட்டால் என்ன செய்வது என்று கவலைப்படுகிறார்கள். கணவன் குரல் விளித்து பறவைகளை அழைக்கிறான். அதனுடன் பேசுகிறான். செத்துப்போன மகளின் கல்லறையில் மகளே, உனக்கு நாங்கள் தரும் தாகம் தீர்க்கும் தண்ணீர் இதோ. பெற்றுக் கொள் கடைசியாக என்று தண்ணீரைத் தருகிறார்கள். இறந்தவர்களுக்கெல்லாம் அதுதான் செய்ய வேண்டி இருக்கிறது கிராமத்தில் இருந்து எல்லோரும் வெளியேறி விட்டார்கள். நாம் எங்கே செல்ல.. நான் போக மாட்டேன். கணவர் இல்லாமல் நான் தனித்திருக்க முடியாது, சேர்ந்திருப்போம். உயர்ந்த மலை, உயர்ந்த மரங்கள். மூத்த சகோதரர்களாக இருக்கிறார்கள். துன்பங்களுக்கு வெளிச்சம் தரவும் செய்கிறார்கள் என்று மனைவியும் சொல்கிறாள். கணவன் மனைவி உரையாடல் போல இந்தப் படத்தில் பல விளக்கங்கள் அமைந்திருக்கிறது.

ஒரு பக்கம் ஆவணப்படம் போல சில விவரங்கள் இருந்தாலும் ஒரு புது மொழியில் இந்தப் படம் சொல்லப்பட்டிருக்கிறது.புதிய திரைமொழி. தரவுகளும் நிகழ்வுகளுமான கற்பனையும் கலந்த மொழி. பொது மொழியில் என்றால் தனிமை அடையும் துயரம். சந்தால் மொழியில் படங்கள் எடுக்கப்படுவது மிக அபூர்வம். அதைத் தாண்டி இந்தப் படம் சொல்லப்பட்டிருக்கிற விதம் கூட புது முறையாகவும் புது திரை மொழியாகவும் அமைகிறது.

சமஸ்கிருதம்

சமஸ்கிருதம் இந்தியாவின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகும். இது இந்து ஆரிய குடும்பத்தைச் சேர்ந்தது. பேச்சு வழக்கில் இல்லாத மொழியாக இருக்கிறது. இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலம் வடமொழியை இரண்டாவது அலுவலக மொழியாகக் கொண்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஷிமோகா அருகே இரண்டு ஊர்களில் அலுவலக மொழியாக உள்ளது. இந்து சமயத்தின் நான்கு வேதங்களான உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை, ராமாயணம், மகாபாரதம், புராணங்கள் போன்ற பல நூல்கள், ஏராளமான தொன்மையான இந்திய இலக்கியங்கள் இந்த மொழியிலேயே எழுதப்பட்டிருக்கின்றன. காளிதாசர் சமஸ்கிருத மொழியில் பல இலக்கியங்களைப் படைத்தார். இந்தியாவின் அலுவல் மொழிகள் பதினைந்தில் இது ஒன்றாக இருக்கிறது. இந்தி, வங்காளம், குஜராத்தி, மராத்தி, காஷ்மீரி, நேபாளி, ஒரியா, கொங்கணி, மைதிலி, பஞ்சாபி, உருது முதலிய வடமொழிகள் பலவற்றிற்கும் இதுவே மூல முறையாக கருதப்படுகிறது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவற்றிலும் சமஸ்கிருத வடமொழிச் சொற்கள் உள்ளன

தமிழ் மொழிக்கு அடுத்து 2015 ஆம் ஆண்டு சமஸ்கிருத மொழிக்கு செம்மொழி தகுதி கிடைத்தது. பல கட்டங்களில் வரலாற்று நோக்கில் சமஸ்கிருதத்துக்கு ஒரு எழுத்துமுறை இருந்ததில்லை. பண்டைய பிராமண எழுத்துக்கள் அசோக சக்கரவர்த்தியின் தூண் கல்வெட்டுகளின் காலம் வரை கூட புழக்கத்திலிருந்து பின்னர் கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டதுடன் வடக்கே வங்காளம் போன்ற ஏனைய இந்திய எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டன. எனினும் பல ஆண்டுகளாக சிறப்பாக, அண்மைக் காலங்களில் தேவநாகரி எழுத்துக்கள் பரவலாக சமஸ்கிருதத்துடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய கீதமாகக் கருதப்படும் ஜன கன மன என்ற பாடல் பெருமளவில் சமஸ்கிருதப்படுத்தப்பட்ட வங்காள மொழியின் உயர்நிலை வடிவத்தில் எழுதப்பட்டது .வந்தே மாதரம் என்ற சுதந்திரப் பாடல் முழுமையாக சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டதாகும். சில மொழியிலும் பண்பாட்டிலும் கூட சமஸ்கிருத மொழியில் தாக்கங்கள் உள்ளன, பௌத்த சமயம் சீனாவிற்குப் பரவிய போது சமஸ்கிருதம் கலந்த பிராகிருத மொழி நூல்களுடன் பரவியது. பௌத்த நூல்கள் சில எழுதப்பட்ட போது சமஸ்கிருத சொற்களையும் ஒலிமாற்றம் செய்து எழுதினார்கள். இதனால் பல சமஸ்கிருத சொற்கள் சில மொழியிலும் கலந்தது. மலையாள மொழியிலும், ஜப்பான மொழியிலும் வேறு மொழிகளிலும் பல சமஸ்கிருத சொற்கள் உள்ளன.

அந்த வகையில் சமஸ்கிருத திரைப்பட முயற்சிகள் சிறிய அளவில் தொடர்ச்சியாக உள்ளன.

கடந்த 40 ஆண்டுகளில் சமஸ்கிருதத்தில் சுமார் 15 படங்கள் வந்துள்ளன. 1983 ஆம் ஆண்டு ஜிவி ஐயர் இயக்கிய ஆதிசங்கராச்சாரியார்தான் சமஸ்கிருதத்தில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம். இரண்டாவது படம் 1992 இல் பகவத் கீதை . ஜிவி ஐயர்தான் இயக்குனர். கேரளாவில் நாலு சமஸ்கிருத திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. பிரிய மானசம் மூன்றாவது சமஸ்கிருதப்படம் மற்றும் கேரளாவின் முதல் சமஸ்கிருதப் படம். இந்தப் படம் பல தேசிய விருதுகளை பெற்றது. சூரியகாந் என்ற மூன்றாவது சமஸ்கிருத படம் கேரளாவில் தயாரிக்கப்பட்டது. இது சமகால வாழ்க்கை பற்றிய முதல் சமஸ்கிருத திரைப்படம். சமஸ்கிருதத்தின் முதல் வணிகப்படம். அனுரக்தி. அனிமேஷன் படம் கூட எடுக்கப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதப் படத்தின் ஆக்கத்திற்கு மத்திய அரசு நிதிஉதவி செய்து ஊக்குவிக்கிறது. கேரளத்தில் எடுக்கப்பட்ட தயா என்ற சமஸ்கிருதப் படம் 195 இல் கேரளத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. ஆணாதிக்கத்திற்கு எதிராகப் போராடிய குறியடத்து தாத்திரி என்ற நம்பூதிரி பெண்ணின் கதை சொல்லும் இந்தப் படத்தில் பல முக்கிய கேரள நடிகர்கள் நடித்திருந்தார்கள் நமோ என்ற திரைப்படம் நிகழ்காலத்தில் தொடங்கி கிருஷ்ணனுக்கும் சுதாமாவுக்கும் இடையிலான உறவைக் காட்டுகிறது. கிருஷ்ணர் குசேலரின் கதை கடவுள் மக்களை அவர்களின் நிதி நிலையின் அடிப்படையில் வேறுபடுத்துவது இல்லை என்பது சொல்லப்பட்டது. பாகவத புராணத்தின்படி பகவான்  கிருஷ்ணர் ஏழை பிராமணப் பையனான குசேலனுடன் சுதாமா குரு சந்தீபனின் ஆசிரமத்தில் படித்ததால் மிக விரைவில் இருவரும் நெருங்கிய நண்பராகி விட்டார்கள். ஆனால் படிப்பை முடித்த பிறகு பிரிந்து விடுகிறார்கள். பின்னர் கிருஷ்ணர் துவாரகா ஆட்சியைப் பரிபாலம் செய்தார். அதே நேரத்தில் அவர் உண்மையான நண்பர் குசேலன் ஏழையாக இருந்தார் (சுதாமா). ஸ்ரீ கிருஷ்ணர் பஜனை பாடி தனது உணவை சம்பாதித்தார். இந்தக் கதையை நமோ படம் சொன்னது.

இவ்வாண்டின் சமஸ்கிருதப் படம் பிரக்கிருதி. மலையாளத்தில் பல சமஸ்கிருத படங்களின் பிரதிகள், ஸ்கிரிப்டுகள் புத்தகங்களாக வந்திருக்கின்றன, தொடர்ந்து மலையாளிகள் சமஸ்கிருதம் சார்ந்த பல்வேறு புத்தக வடிவங்கள், திரைப்பட வடிவங்களில் அக்கறை கொண்டிருக்கிறார்கள், இந்தப் படத்தில் வருகிற ஒரு குடும்பம் சமஸ்கிருத மற்றும் பழமையான புத்தகங்களைப் பதிப்பிக்கும் விஷயங்களை செய்து வருகிறது. அதற்கென்று அவர்கள் சில திட்டங்களை வைத்திருக்கிறார்கள். நேர்மையாக அந்த தொழிலில் உள்ள வாத்தியார் பொறாமை காரணமாக அடிபடுகிறார். பழைய பிரதிகளை எல்லாம் எடுத்து அச்சாக்க வேண்டுமென்ற எண்ணத்தில் அவர்கள் செயல்படுகிறார்கள். ஆனால் அந்த திட்டத்தில் உள்ள மிக வயதானவருக்கு கண்பார்வை குறைவு ஏற்படுகிறது. பல பிரதிகளைப் பூச்சிகள் அரித்து எடுத்துக் கொள்ள அவை மோசமாகிவிட்டன. இந்த வகையில் அந்தக்குடும்பத்தின் பிதாமகராக இருந்த ஒருவர் இறந்து விடுகிறார். பழைய தரவுகளை எல்லாம் எடுத்து வைக்கும் முயற்சிகள் பற்றி மகன் தன் பணியைத்தொடர்கிறார். மலையாளச் சூழலில் மலையாள நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட படமாக இருந்தது. இதே சூழலில் அவற்றைப் பதிப்பிக்கும் முயற்சிகளும் சிலர் அவருடைய பிரதிகளைப் பெற்று தவறாகப் பயன்படுத்த, வணிக ரீதியில் பயன்படுத்த எண்ணுவது பற்றிய பல சதிகளும் இந்தப் படத்தில் காண்பிக்கப்படுகின்றன, மலையாளிகளுக்கு சமஸ்கிருத உலகத்தை மறு உற்பத்தி செய்வதில் அக்கறை இருக்கிறது என்பதை இது போன்ற படங்கள் எல்லாம் காட்டுகின்றன.

சமஸ்கிருதம் பலருக்கு ‘செத்த’ மொழியாக இருக்கலாம்.ஆனால் பல அறிஞர்களும் மொழியியலாளர்களும் அதன் மறுமலர்ச்சியை நாடுகின்றனர். தற்போதைய மத்திய அரசும் கூட.

உலகின் பழமையான மொழி எது என்பதில் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் நீண்ட காலமாகப் போட்டி இருந்து வந்தது. இதற்கு முடிவு என்பது போல் பிரதமர் நரேந்திர மோடி சமீபகாலமாக உலகின் மூத்த மொழி என்று தமிழைக் குறிப்பிட்டு வருகிறார். ஆனால் தமிழை விட சம்ஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.

(Tortosie under the earth (santhali), Dhabariqurvi
(irula language film ) Pratikrithi -sanskrit film
சமீபத்திய கேரளத் திரைப்பட விழாவில் இடம் பெற்றவை இப்படங்கள்).

subrabharathi@gmail.com