ரஷ்யா-உக்ரேன் போர் இன்றுடன் (டிசம்பர் 1, 2022), 312 நாட்களைக் கடந்து விட்டது. அமெரிக்கா கடந்த சில தசாப்தங்களில் முதல் முறையாகப் போருக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சூழ்நிலையில் உள்ளது. ரஷ்யா சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று சொல்கிறது. உக்ரேனோ திணிக்கப்பட்ட போர் என்கிறது. இரு பக்கமும் இழப்புகள் அதிகம் என்றாலும், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுதங்களும் பணமும் தரவில்லையென்றால், இந்தப்போர் ஜூன் மாதமே முடிந்திருக்கலாம். இப்போதைய சூழலில் இந்தப்போர் விரைவில் முடிவுக்குவரும் என அமெரிக்கா, உக்ரேன், ரஷ்யா, ஐநா என யாருக்குமே நம்பிக்கையில்லை.

அமெரிக்கா நடத்திய ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியாத் தாக்குதல்களுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு போன்ற கேள்விகளுக்கு மத்தியில், ரஷ்யா ஏன் இப்படி ஒரு தாக்குதலை திடீரென உக்ரேன் மீது நடத்தியது? அதன் பின்னணிக் காரணங்கள் என்னென்ன என்பதைப் பற்றி ஊடகக் கூச்சல்களிலிருந்து ஒதுங்கி இருந்து அலசிப் பார்க்கலாம்.

ரஷ்யா, உக்ரேன், நேர்டோ (NATO – North Atlantic Treaty Organization) இவர்களின் அன்பு-வெறுப்பு உறவுகளைப் பற்றிப் புரிந்து கொண்டால்தான் இந்தப் போரைப் பற்றிய சரியான புரிதல் நமக்குக் கிடைக்கும். அதற்கு, முதலில், இரண்டாம் உலகப்போருக்குப் பின் நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்ட வரலாறு, 1991இல் சோவியத் ரஷ்யக் கூட்டமைப்பின் நிர்மூலம், 2014இல் உக்ரேனில் நடந்த யூரோமைதான் போராட்டம் இவை மூன்றையும் நாம் தெரிந்து கொண்டாக வேண்டும்.

Ukraine’s President Volodymyr Zelenskiy, Prime Minister Denys Shmyhal and Parliament Speaker Ruslan Stefanchuk pose with a request for fast-track membership in the NATO military alliance, amid Russia’s attack on Ukraine, after Russia held what it called referendums – votes that were denounced by Kyiv and Western governments as illegal and coercive – in Kyiv, Ukraine September 30, 2022. Ukrainian Presidential Press Service/Handout via REUTERS
நேட்டோ (NATO) வரலாறு

இரண்டாம் உலகப்போர் 1939இல் ஆரம்பித்து 6 ஆண்டுகள் பெரும் சேதங்களை உண்டாக்கியபின் 1945இல் முடிவுற்றது. அதுவரை ஒதுங்கிநின்று கவனித்துவந்த அமெரிக்கா, தொடர்ந்த போரால் ஃப்ரான்ஸும் இங்கிலாந்தும் களைத்திருந்த வேளையில் புத்துணர்ச்சி ஊட்டும் வகையில், 1944 ஜூனில் முதன் முறையாக நார்மண்டியில் படைகளுடன் இறங்கி இரண்டாம் உலகப்போரில் நேரடியாகப் பங்குபெற்றது. இன்றைக்குள்ள ஃப்ரான்ஸ் நாடு அன்று ஜெர்மனியிடம் தான் இழந்திருந்த பகுதிகளைத் திரும்பப் பெற்றது.

ஃப்ரான்ஸும் இங்கிலாந்தும் (ஐக்கிய அரசகம்) மார்ச்  4, 1947இல் இணைந்து ஜெர்மனி, சோவியத் ரஷ்யக் கூட்டமைப்பு ஆகியவற்றின் இராணுவத் தாக்குதல்களிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள ஓர் இராணுவக் கூட்டமைப்பு உருவாக்கலாம் என்று முடிவு செய்தன.

ஏப்ரல் 4, 1949இல் கனடாவைச் சேர்ந்த மைக் பியர்ஸன் என்கிற வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் நேட்டோ கூட்டமைப்பின் அமைப்புச் சாத்தினை உருவாக்கினார். நேட்டோ அமைப்பில் அப்போது 12 உறுப்பு நாடுகள் கையெழுத்திட்டன.அவை – ஃப்ரான்ஸ், இங்கிலாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, லக்ஸம்பெர்க், அமெரிக்கா, கனடா, போர்ச்சுகல், இத்தாலி, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து. இதில் ஜெர்மனி இல்லை என்பதைக் கவனிக்கலாம்.

அமைப்புச் சாத்தின் முக்கிய விவரணைகளின்படி, உறுப்பு நாடுகளில் யார்மீது தாக்குதல் நடந்தாலும், மற்ற அனைத்து நாடுகளும் தமது ராணுவத்தை உதவிக்கு அனுப்ப வேண்டும். சோவியத் ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்குமிடையேயான பனிப்போர் ஆரம்பமான காலமும் அதுதான். பனிப்போர் என்றால், மறைமுகமான எதிர்ச் செயல்பாடுகளைச் செய்வது. பனிப்போரைப் பற்றிய சாகசச் செய்திகள் நாள்தோறும் வெளிவந்த வேளையில், சோவியத் ரஷ்யாவைப் பற்றிய அச்சம் அதிகரித்ததனால், பல ஐரோப்பிய நாடுகளும் நேட்டோவில் சேர ஆர்வமும் அவசரமும் காட்டின.

1952இல் துருக்கி, கிரீஸ் நாடுகள் இணைந்தன. (14)

1955இல் மேற்கு ஜெர்மனி சேர்ந்தது. (15)

1966இல் அதிசயமாக ஃப்ரான்ஸ் நேட்டோவிலிருந்து விலகியது. (14)

1982இல் ஸ்பெயின் சேர்ந்தது. (15)

1990இல் கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனியுடன் இணைந்ததால், ஒருங்கிணைந்த ஜெர்மனியாக நேட்டோவில் சேர்ந்தது. (15)

1989இல் நேட்டோ நாடுகளின் சார்பாக, ரஷ்ய அதிபர் கோர்ப்பசேவிடம் இனிமேல் கிழக்கு முகமாக, அதாவது ரஷ்யாவின் எல்லையை நெருங்கிய நாடுகளில் நேட்டோவை விரிவுபடுத்துவதில்லை என்று வாய்மொழி உறுதி கொடுத்தனர். இதற்காக ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை.

1999இல் ஹங்கேரி, போலந்து, செக் குடியரசு இணைந்தன. (18)

2004இல் பல்கேரியா, எஸ்டோனியா, லாட்வியா, லித்துவேனியா, ரொமானியா, ஸ்லோவேகியா, ஸ்லோவேனியா ஆகிய சின்னஞ்சிறு நாடுகள் இணைந்தன. (25). இவை யாவும் ரஷ்யாவின் எல்லையை ஒட்டிய நாடுகள்.

2009இல் அல்பேனியாவும், க்ரோஷியாவும் இணைந்தன. (27)

2009இல் மீண்டும் ஃப்ரான்ஸ் தன்னை நேட்டோவில் இணைத்து கொண்டது. (28)

2017இல் மான்டி நீக்ரோவும், (29)

2020இல் வடக்கு மாசிடோனியாவும் இணைந்தன (30)

1966இல் ஐரோப்பா முழுவதும் ஏறக்குறைய 400,000 அமெரிக்கத் துருப்புகள் பல்வேறு இராணுவ முகாம்களில் இருந்தன.

1991 டிசம்பரில் சோவியத் ரஷ்யா சிதறுண்டு பல நாடுகளாகப் பிரிந்த காலம்வரை, நேட்டோ அமைப்பு எந்த வெளிப்படையான இராணுவ நடவடிக்கைகளிலும் இறங்கவில்லை. நேட்டோ அமைப்பை சோவியத் ரஷ்யாவிற்கு எதிரான பனிப்போர் நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தி வந்தது அமெரிக்கா.

கம்யூனிசத்திற்கு எதிராக 1992 முதல் 1995 வரை போஸ்னியாவிலும், 1999இல் யூகோஸ்லாவியாவிலும் நேட்டோ அமைப்பு இராணுவ நடவடிக்கையில் இறங்கியது. ஐநா விதிமுறைகளை மீறி, பெல்கிரேடில் இருந்த சீனத் தூதரகத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. நேட்டோ இராணுவக் கூட்டமைப்பின் பலத்தை உணர்ந்த அமெரிக்கா நேட்டோவைத் தனக்குச் சாதகமாக எங்கெல்லாம் பயன்படுத்தலாம் என்றும் யோசிக்க ஆரம்பித்தது.

நேட்டோ அமைப்பின் செலவுகளுக்காக ஒவ்வோர் உறுப்புநாடும் தன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product, GDP) 2 விழுக்காடு தரவேண்டும் என்பது ஒப்பந்தம். ஆனால், பெரும்பாலான நாடுகள் அவற்றைத் தரமுடியவில்லை. இதனால், அமெரிக்காவே பொருளாதார ரீதியாக நேட்டோவைத்  தாங்கியது. நேட்டோவின் செலவான 1.2 ட்ரில்லியன் டாலரில் (2021இல்) 69 விழுக்காட்டை அமெரிக்காவே கொடுக்கிறது. மீதமுள்ள நாடுகள் எல்லாம் அவரவர் தகுதிக்குத் தக்க அளிக்கிறார்கள். ஆகவே, நேட்டோ அமைப்பில் அமெரிக்கா வைத்ததுதான் சட்டம்.

செப்டம்பர் 2001இல் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க தனது நேட்டோ கூட்டாளிகளை நேட்டோவின் விதிமுறைகளைக் குறிப்பிட்டு தனக்கு இராணுவ உதவி கோரியது. நேட்டோவும் 2001இல் ஆப்கானிஸ்தானில் கூட்டாகத் தாக்குதல் நடத்தியது. இருபது வருடங்களுக்குப் பிறகு 2021இல் வெளியேறும்வரை, அவர்கள் சாதித்திருந்தது அருகிலிருந்த பாகிஸ்தானில் ஒசாமா பின் லேடனைச் சுட்டுக்கொன்றது மட்டும்தான்.நேட்டோ நாடுகள், 1949 முதல் 1991வரை, அதாவது நேட்டோவின் ஒரே எதிரியான சோவியத் ரஷ்யக் கூட்டமைப்பு பல நாடுகளாகச் சிதறுண்டு உருக்குலையும் வரையில், ஒரு துப்பாக்கிக் குண்டுகூடச் சுட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரேன் தன்னை நேட்டோ அமைப்பில் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை விட்டிருக்கிறது. நேட்டோ விதிமுறைகளின் படி, உள்ளூரில் போர் நடந்துகொண்டிருக்கும் நாட்டை நேட்டோவில் இணைக்க முடியாது. மேலும், ஒரு நாட்டை உறுப்பினராக்க மீதமுள்ள அனைத்து நாடுகளும் இசைவு தெரிவுக்க வேண்டும். ஹங்கேரி உக்ரேனைச் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஆகவே, போர் நடப்பதாலும் உறுப்பினர் எதிர்ப்பு நீடிப்பதாலும் உக்ரேனை நேட்டோ அமைப்பிற்குள் இணைக்கும் சாத்தியமும் இப்போது இல்லை.

இனி சோவியத் ரஷ்யக் கூட்டமைப்பு அல்லது சோவியத் ரஷ்யா என்னும் கம்யூனிசப் பேரரசு வீழ்ந்த கதையில் நமக்குத் தேவையான பகுதியைப் பற்றி மட்டும் பார்க்கலாம்.

சோவியத் ரஷ்யக் கூட்டமைப்பின் (USSR) சிதறல்

சோவியத் ரஷ்யக் கூட்டமைப்பு 1922இல் உதயமானது. விளாடிமிர் லெனின் தலைமையில் உருவான கூட்டமைப்பு கம்யூனிச சோசலிசத்தைப் பின்பற்றி தனது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியது. லெனினுக்குப் பின்னர் 1924இல் ஜோசஃப் ஸ்டாலின் தலைமைக்கு வந்தார். அவர் பல புதிய பொருளாதாரச் செயல்பாடுகளைக் கொண்டுவந்தார். தொழிற்சாலைகள் பெருகின. அதேசமயம் தன் எதிரிகளைத் தயவு தாட்சணியமின்றி ஒழித்துக் கட்டினார். அதனால் அவருக்கு எதிரிகள் பெருகினர். பரபரப்பான அரசியல் சூழலில் 1953இல் ஸ்டாலின் மறைந்தார்.

ஜோசஃப் ஸ்டாலினின் மறைவிற்குப் பிறகு பதவியேற்ற நிகிதா குருசேவ், ஸ்டாலின் கொண்டுவந்த அரசியல் திருத்தங்களையெல்லாம் மாற்ற ஆரம்பித்தார். குழப்பம், பொருளாதாரச் சிக்கல்கள் என்று பொருளாதார அரசியல் சூறாவளிக்குள் சிக்க ஆரம்பித்தது, சோவியத் கூட்டமைப்பு.

இதற்கிடையில், பனிப்போரின் ஒரு செயல்பாடாக, ஆப்கானிஸ்தானில் உள்ள அரசுக்குத் தனது ஆதரவையும் பொருளாதார உதவிகளையும் செய்ய ஆரம்பித்தது அமெரிக்கா. இதன் வழியாக ரஷ்யாவுக்குத் தெற்கிலிருந்து தொல்லைகொடுக்க முடிவுசெய்தது. தெற்குப் பகுதியிலும், ஆப்கானிஸ்தானிலும் முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களுக்கிடையே பிரிவினை ஏற்படுத்தி உள்நாட்டுக் கலவரம் மூட்டுவது திட்டம். இதனை முறியடிக்க 1979இல் சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தது. அமெரிக்கர்களால், கொரில்லா முறைத் தாக்குதலில் பயிற்சி பெற்றிருந்த ஆப்கானியர்களை ரஷ்யப் படைகளால் சமாளிக்க முடியவில்லை. அப்படி ஒரு படையை ஆப்கானிஸ்தானில் உருவாக்க அரபு மொழியும் ஆங்கிலமும் தெரிந்த செல்வந்தரான ஒரு பிரபலம் தேவைப்பட்டார். அப்படி அடையாளம் காணப்பட்டவர்தான் ஒசாமா பின் லேடன்.

சவுதி அரேபியாவை 1985இல் உற்பத்தியைக் கூட்டி பெட்ரோல் விலையைக் குறைத்து விற்கச் சொல்லி அமெரிக்கா உத்தரவு போட, எண்ணெய் விலை $10க்கு குறைந்தது. சந்தையில் குறைந்த விலையில் விற்பதால் நட்டத்திற்கு உள்ளானது ரஷ்யா. ஒரு பக்கம் போர்ச் செலவு, மறுபக்கம் வருமானம் குறைவு.  இதனால் ரஷ்யாவிற்குப் பொருளாதார நெருக்கடி அதிகமானது. சோவியத் தனது படைகளை 1988இல் ஆப்கானிஸ்தானில் இருந்து விலக்கிக் கொண்டது. அப்போது அமெரிக்கா ஒசாமா பின் லேடனைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியது.

பின்னர் 1985இல் நடந்த தேர்தலில் மிக்கேல் கோர்பசேவ் சோவியத் ரஷ்யாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டைப் பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து மீட்பதாகக் கூறித்தான் ஆட்சியைப் பிடித்தார். க்ளாஸ்னாஸ்ட், பெரெஸ்த்ரோய்கா என்கிற இரு மாற்றங்களைக் கொண்டுவந்தார். அவை முறையே பொருளாதார, அரசியலமைப்பு மாற்றங்கள். மாநிலங்களிலிருந்து தொடர்ந்து அதிகரித்துவரும் நிதிக் கோரிக்கைகளைச் சமாளிக்கும் பொருட்டு அவற்றுக்குத் தாங்களே தம் பகுதிக்குத் தன்னிச்சையான முடிவெடுக்கும்படியான கூடுதல் அதிகாரம் கொடுப்பது என்று 1989இல் முடிவெடுத்தார். இது ஃப்ராங்க் சினாட்ராவின் My Way என்கிற பாட்டில் வரும் கருத்தை ஒட்டிய கொள்கை என்பதால், அப்போதைய ரஷ்ய வெளியுறவுத்துறை பேச்சாளர் சினாட்ரன் கொள்கை என்று குறிப்பிட்டார். .

‘சினாட்ரன்’ கொள்கையின்படி மாநிலங்கள் விரும்பினால் அம்மாநில மக்களிடம் பெரும்பான்மை கோரித் தன்னிச்சையாக முடிவெடுக்கலாம். அதாவது கம்யூனிசத்திற்குள் ஜனநாயகம்.  இதுதான் சோவியத் ரஷ்யாவிற்கு இறுதிமணி அடிக்கப் போகிறது என்று தெரியாமல் இப்படி ஒரு கொள்கை அமல்படுத்தப்பட்டது. இது அன்னிய நாடுகளின் தூண்டுதலால் வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது தவறான கொள்கை முடிவா என்பதில் இன்றுவரை கருத்து மாச்சரியங்கள் உள்ளன. இதில் குறிப்பாக, வறுமையில் உழன்ற கிழக்கு ஜெர்மனி மக்களை, ‘நீங்களே உங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று சொன்னதுபோல் ஆகிவிட்டது. நவம்பர் 1989இல் கிழக்கு ஜெர்மனியில் மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள், பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது. தொடர்ந்து அக்டோபர் 1990இல் மேற்கு ஜெர்மனியுடன் கிழக்கு ஜெர்மனி அதிகாரப்பூர்வமாக இணைந்தது. இதற்கிடையில் மார்ச் 1990இல் லித்துவேனியா சுதந்திர நாடாக விரும்புவதாக அறிவித்து மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தி, தன்னை சோவியத் ரஷ்யாவின் தன்னாட்சிப் பகுதியாக அறிவித்துக் கொண்டது.

கோர்ப்பசேவ் கொண்டுவந்த மாற்றங்களில் இன்னொன்று, மேலவை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த மேலவை அரசின் முக்கியமான கொள்கை முடிவுகளை எடுப்பதான பொறுப்புகளை வைத்திருந்தது. அதன் தலைவராக கோர்ப்பசேவ் இருந்து வந்தார். பொருளாதாரக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் கோர்ப்பசேவின் மேல் கோபமாக இருந்தனர். ஜனவரி 1990இல் அந்தப் பதவிக்கு போரிஸ் எல்ட்சின் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெர்மனி, லித்துவேனியாவைப் பின்பற்றி ஜூன் 1991இல் பல மாநிலங்களும் யூனியனுக்குள் இருப்பதா வேண்டாமா என்று வாக்கு கோர வேண்டும் என்று கோரிக்கை விட்டனர். எல்ட்சினுக்கு இதை அனுமதிப்பதா வேண்டாமா என்று தெரியவில்லை. 

நிலைமை மோசமாகப் போவதைக் கண்டு, ஆகஸ்ட் 1991இல் கோர்ப்பசேவுக்கு எதிராக கேஜிபி உட்பட்ட சில அமைப்புகள்  ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் இறங்கின. ஆனால், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.25 டிசம்பர் 1991இல்ஒரு வழியாக கோர்பசேவ் பதவி விலகினார். அதே சமயம்1922இல் உருவான சோவியத் ரஷ்யக்கூட்டமைப்பு அன்றுடன் ஒரு முடிவுக்கு வந்தது.கூட்டமைப்பில் இருந்த 15 உறுப்பு நாடுகளும் தனித்தனி நாடாகின. அந்த நாடுகளாவன: ரஷ்யா, உக்ரேன், பெலாருஸ், உஸ்பெகிஸ்தான், கசகஸ்தான், ஜார்ஜியா, அஸெர்பைஜான், லித்துவேனியா, மால்டோவா, லாட்வியா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், ஆர்மீனியா, துர்க்மெனிஸ்தான், எஸ்டோனியா.

அடுத்ததாக, உக்ரேனில் 2014இல் நடந்த யூரோமைதான் போராட்டத்தைப் பற்றிப் பார்க்கலாம். இது உக்ரேன் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனை.

யூரோமைதான் போராட்டங்கள்

டிசம்பர் 1991இல் சோவியத் ரஷ்யக் கூட்டமைப்பு உதிர்ந்ததும் தனி நாடாய் மாறிய உக்ரேனுக்கு அப்போதே கிரைமியா பிரச்னையாக இருந்தது. உக்ரேனின் ஆட்சிக்குள் வரவிரும்பாத கிரைமியா தனிநாடாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டது. அது மட்டுமின்றி அப்போது பிரிந்த 15 நாடுகளில் ஆறு பகுதிகள் தனி நாடுகளாகத் தம்மை அறிவித்துக்கொண்டன. அவை: ஜார்ஜியாவில் அப்காஸியா மற்றும் தெற்கு ஒசேடியா, அசர்பைஜானில் அர்ட்ஸாக், உக்ரேனில் டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க், மால்டோவாவில் ட்ரான்ஸிட்ரியா. இவற்றில் அதிர்ஷ்டம் கிட்டியது கிரைமியாவிற்கு மட்டும்தான். உக்ரேன் சுதந்திர கிரைமியாவின் தன்னாட்சியை ஏற்றுக்கொண்டது, ஆனால் அது உக்ரேனின் பகுதி என்று சாத்திட்டது.

அப்போது கிரைமியாவின் ஸ்வெஸ்டபோல் துறைமுகத்தில் ரஷ்யாவின் கடற்படை முகமை இருந்தது. உக்ரேனுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி அந்த ரஷ்யக் கடற்படை முகாம் தொடர்ந்து இருந்து வந்தது. உக்ரேன் அரசு, 1995இல், கிரைமியாவின் “சுதந்திர கிரைமியா (Republic of Crimea)” என்கிற அந்தஸ்தைத் “தன்னாட்சிக்குட்பட்ட சுதந்திர கிரைமியா (Autonomous Republic of Crimea)” என்று மாற்றியது. ஆக உக்ரேன் தனி நாடாக ஆனதிலிருந்தே கிரைமியா தன்னாட்சிப் பகுதியாக இருந்து வருகிறது.  கிரைமியா 2014இல் ஒரு நேரடி வாக்கெடுப்பை (referendum) நடத்தி உக்ரேனில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் தன்னை இணைத்துக் கொண்டது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது யூரோமைதான் போராட்டங்கள்.

அப்படி என்னதான் யூரோ மைதானில் நடந்தது?

உக்ரேனில் மூன்றில் ஒரு பகுதியினர் ரஷ்யமொழி பேசும் ரஷ்யர்கள், மீதமுள்ளவர்கள் உக்ரேனியன் மற்றும் போலிஷ் மொழி பேசுபவர்கள். ரஷ்யமொழி பேசும் ரஷ்யர்கள் உக்ரேனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் குறிப்பாக, டோனெட்ஸ்க், லுகான்ஸ்க், கெர்ஸான் மற்றும் தெற்கு ஒசேடியா வரை பரவியிருக்கிறார்கள்.  உக்ரேனியனும் ரஷ்யனும் அரசு மொழிகள். உக்ரேனிய அல்லது ரஷ்ய மொழியைப் பூர்வாங்கமாகக் கொண்ட ஒருவரே உக்ரேனின் அதிபராக மாறி மாறிப் பதவியிலிருப்பார். 2010இல் நடந்த தேர்தலில் ரஷ்யமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட விக்டர் யுவானிச்கோவ் அதிபரானார்.

2013இல் ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார ஒப்பந்தம் ஒன்றைப் போட உக்ரேனின் அதிபரை அணுகியது. அதன் வழியாகத் தடையற்ற வர்த்தகம் மற்றும் தாராளமான குடி நுழைவு அனுமதி மற்றும் 3பில்லியன் டாலர்கள் கடன் பெறுவது என்பது ஒப்பந்தத்தின் சாரம். விக்டர்.யு-விற்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதும் அத்துடன் தொடர்ந்து ரஷ்யாவுடனான தொடர்புடனும் இருப்பதும் விருப்பமாக இருந்தது. அவர் இருபக்கமும் நட்பாக இருக்க விரும்பினார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அதில் மாற்றுக் கருத்து இருக்கவில்லை. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்த ஷரத்துக்கள் தொடர்ந்து மாறின. சில குறிப்புகள் ரஷ்யாவுடனான உறவுக்குப் பங்கம் விளைவிப்பதாக இருந்தன. இதனால் அதில் கையெழுத்திடத் தயங்கினார் விக்டர்.யு.

2013 ஆகஸ்டில் கையெழுத்தாக வேண்டிய ஒப்பந்தம் தள்ளிப் போனது. அதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. ரஷ்ய அதிபர் புடின், கிழக்கு ஐரோப்பிய ஆசியப் பொருளாதாரக் குழுமத்துடன் (Eurasian Economic Union – EAEU) தடையற்ற வர்த்தகம் செய்து கொள்ளும்படி சொன்னதாகவும், 15 பில்லியன் டாலர் கடன் தருவதாகச் சொன்னதாகவும், அதனால் விக்டர்.யு. கையெழுத்திடுவதைத் தள்ளிப்போட்டார் என்றும் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில், நவம்பர் 2013இல் எங்கிருந்தோ வந்த பெரும் திரளான உக்ரேனியப் போராட்டக்காரர்கள், கியவ் நகரின் மையத்தில் இருந்த மைதானத்தில் கூடாரங்கள் போட்டு உக்ரேனின் அதிபர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் போடாததைக் கண்டித்துக் குரலெழுப்பினர். அவர்கள் ஏறக்குறைய அங்கேயே வசிக்கத் தொடங்கிவிட்டனர். சிறிது நாட்களில் மைதானத்தைச் சுற்றியிருந்த அரசு அலுவலகங்களை ஆக்கிரமித்துக் கொண்டனர். காவலர்களுடன் போராடுவதற்காகத் தற்காப்புப் படை ஒன்றும் ஏற்படுத்தி ஆயுதங்களுடன் சுற்றத் தொடங்கினர். சாப்பாட்டிற்கோ, உடைகளுக்கோ, ஏனைய வசதிகளுக்கோ எந்தப் பஞ்சமும் இல்லை. அவர்களுக்கு யாரோ பண உதவி செய்தார்கள்.

இந்தப் போராட்டத்திற்குப் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகக் கருதினார் விக்டர்.யு. அப்போது அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பைடன், அவரின் தேசியப்பாதுகாப்புச் செயலர் ஜேக் சல்லிவன். அப்போதைய ராஜாங்கத் துணைச் செயலாளர் விக்டோரியா நூலன்ட். நூலன்ட் அப்போது உக்ரேனுக்கான அமெரிக்கத்தூதர் ஜியோப்ரியுடன் பேசிய தொலைபேசி உரையாடல் கசிந்தது. அதில் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பற்றி அசிங்கமாகச் சொல்லியிருந்தார். அதற்காகப் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டியிருந்தது. அந்த உரையாடல் மேலும் போராட்டத்தைப் பற்றியும், ஆட்சியில் யாரை அமர்த்துவது பற்றியும் பேசியது அமெரிக்காவின் தொடர்பைக் கோடிட்டுக் காட்டியது.

டிசம்பரில் நூலன்ட் போராட்டக்கார்கள் மத்தியில் போய் பிஸ்கட்களைக் கொடுத்து அவர்களின் போராட்டத்திற்கான அமெரிக்க அரசின் ஆதரவை வெளிப்படையாகவே தெரிவித்தார். காவலர்களின் மீதான தாக்குதல், நெருப்பு வைத்தல், கண்ணாடிகளை உடைத்தல் என ஹாங்காங்கில் நீங்கள் கண்டிருந்த அனைத்து காட்சிகளும் அங்கு நடந்தேறின. ரஷ்ய செய்தித்தாள்கள் அமெரிக்கத் தூதரகம் ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் டாலர் செலவு செய்து அந்தப் போராட்டத்தை நடத்துவதாகக் குற்றம் சாட்டியது.

போராட்ட வன்முறைகள் உச்சம் தொட்டுக்கொண்டிருந்தன. 2014 பிப்ரவரி 18 முதல் 24 நாட்களில் யாரும் எதிர்பாராத உச்சகட்டம் வந்தது. அரசுக் கட்டிடங்களின் மாடியிலிருந்து அடையாளம் தெரியாத குழு  குறிபார்த்து சுடும் துப்பாக்கிகளைக் (Sniper Rifles) கொண்டு போராட்டக்காரர்கள் மற்றும் காவலர்கள் மீது சராமாரியாகச் சுட ஆரம்பித்தனர். 80 பேர் சம்பவ இடத்திலும், 20 பேர் மருத்துவமனையிலும் பலியாயினர். நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர். போராட்டக்காரர்களையும் காவலர்களையும் ஒருசேரச் சுட்டது யார் என இன்றுவரை தெரியவில்லை. எதிர்க்கட்சியினர்தான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அரசுக்கட்டிடங்களும் அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. உக்ரேனிய ராணுவத்தின் சிறப்புக் கமாண்டோ படை அந்த அலுவலகத்தில் உடைத்துக்கொண்டு நுழைய அனுமதி கேட்டபோது மறுக்கப்பட்டது. இன்று வரை சுட்டவர்கள் யார் எனத்தெரியாமலேயே விசாரணை தொக்கி நிற்கிறது. இந்தத் துப்பாக்கிச் சூடு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உக்ரேன் அதிபர் விக்டர்.யு அதிர்ச்சியில் வருத்தம் தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தச் சம்பவத்தில் அதிர்ச்சியான கிரைமியா, மார்ச் 18, 2014இல் தனி நாடு கோரி மக்களிடையே வாக்கெடுப்பு நடத்தியது. அதில் பெரும்பான்மை பெற்று அந்த வாக்கெடுப்பு வெற்றி பெற்றது. மற்றுமொரு வாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் இணைய முடிவெடுத்து அதிலும் வெற்றி பெற்றது. ரஷ்ய நாடாளுமன்றம் டூமா இதற்கு ஒப்புதல் தெரிவிக்க, கிரைமியா ரஷ்யாவின் அங்கமானது.  இதற்கு மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ரஷ்யா அதற்கு ஐ.நா சபை ஏற்படுத்தியிருக்கும் சட்ட திட்டங்களின்படியே, செர்பியாவிலிருந்து 2008இல் கொசோவா தனி நாடானது போலத்தான் கிரைமியாவும் தனி நாடானது என்று சொன்னது. கிரைமியாவை இன்னமும் பல உலக நாடுகள் ரஷ்யாவின் பகுதி என்று ஏற்கவில்லை.

இதனைத் தொடர்ந்து 2014 மே 2இல் ஒடெசா பகுதியில் ஒரு கால்பந்து விளையாட்டின் போது உக்ரேனிய மொழி பேசுவோருக்கும், ரஷ்ய மொழி பேசுவோருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் கலவரமாக மாறி ஏராளாமானோர் பலியாயினர். உக்ரேனுக்குள் ரஷ்ய மொழி பேசுவோருக்கும், உக்ரேனிய மொழி பேசுவோருக்குமான வெறுப்பு அதிகமாகிக் கொண்டு வந்தது. அது அவ்வப்போது கலவரங்களாக மாறியது. ஏற்கனவே தன்னாட்சி கேட்டு சலித்துப் போயிருந்த டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதியில் நிலைமை மோசமானது.

இதனிடையில் 2014 மே மாதத்தில் பெட்ரோ ப்ரோசன்கோ அதிபராகப் பதவியேற்றார். இவர் மூலம்தான் போராட்டக்காரர்களுக்குப் பண உதவி அளிக்கப்பட்டது என்று உறுதி செய்யப்படாத குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. ஒர் அமைதியற்ற சூழலில் பதவியேற்ற பெட்ரோ, அமைதியைக் கொணரும் பொருட்டு OSCE என்கிற ஐரோப்பிய அமைப்பை மத்தியஸ்தம் செய்யக் கூப்பிட்டார்.  OSCE அமைப்பில் ஜெர்மனியும் ஃப்ரான்ஸும் இருந்தன. ஜெர்மனிக்காக ஏஞ்சலா மெர்க்கல் (சமீபத்தில் ஓய்வு பெற்றார்) இருந்தார். அவர்களின் முன்னிலையில், டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதியில் யாரும் அமைதியைக் குலைக்கும் வண்ணமாகச் செயல்படக் கூடாது என்றும், அப்படி அமைதியைக் கண்காணிப்பது OSCE அமைப்பின் பொறுப்பு எனவும் கையெழுத்தானது. பெலாரஸின் மின்ஸ்க் நகரில் கையெழுத்தானதால் இதற்கு மின்ஸ்க் ஒப்பந்தம் என்று பெயர். அதற்குப் பின், தொடர்ந்து இந்த ஒப்பந்தம் மீறப்பட்டு வந்தது. ரஷ்ய மொழி அதிகாரப்பூர்வ மொழி இல்லை என்று ஆரம்பித்து, நிதி ஒதுக்காமை, ராணுவ அட்டூழியம் என்று தொடர்ந்து கொடுமை நடந்து வந்தது. கண்காணித்துக் கட்டுப் படுத்த வேண்டிய ஜெர்மனியும் ஃப்ரான்ஸும் அறிக்கை மட்டும் விட்டுக்கொண்டு அமைதியாக இருந்தன. இது அப்பகுதி மக்களை மிகுந்த கொதிப்பில் வைத்திருந்தது.

கிழக்கு உக்ரேனில் மின்ஸ்க் ஒப்பந்தத்திற்குப் பின்னரும் பல ஆயிரம்பேர் டோனெட்ஸ்க் பகுதியில் பலியாகி வரும் பதற்றமான சூழலில், தொடர்ந்து 2014 முதல் உக்ரேனுடனான ராணுவப் பயிற்சியை அமெரிக்கா நேட்டோ படைகளுடன் நடத்தி வந்தது. செப்டம்பர் 2014இல் மேற்கு உக்ரேனில் லிவிவ் நகரில் 15 நாடுகளுடன் ( நேட்டோ உட்பட) உக்ரேன் போர்ப்பயிற்சி மேற்கொண்டது. ஜூன் 2015இல் போலந்து உக்ரேன் எல்லையில் அமெரிக்க ராணுவம் உக்ரேனிய ராணுவ வீரர்களுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்தது.

2016இல் அமெரிக்க ராணுவப் பயிற்சியாளர்கள் பலர் நேட்டோ நாடுகளில் உக்ரேன் ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளித்து வந்தார்கள். அவர்களின் நோக்கம் 2020க்குள் இந்த உக்ரேனிய ராணுவ வீரர்கள் ஊர் திரும்பி தமது சக வீரர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். நேட்டோவின் ஆயுதங்களில் பயிற்சிகள் மற்றும் நேட்டோவின் போர் வழிமுறைகள் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டன.

இந்த கூட்டு இராணுவப் பயிற்சி, பிற்பாடு நேட்டோவில் உக்ரேன் சேரும்போது உடனடியாகப் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என்று உக்ரேனிய இராணுவத்திடம் ஆசை காட்டப்பட்டது.

இதற்கிடையில், கோர்ப்பசேவ் அதிபராக இருக்கும்போது, நேட்டோவின் சார்பாக்க் கிழக்கு முகமாக ரஷ்யாவின் எல்லைகளை ஒட்டிய நாடுகளுக்கு நேட்டோவை விரிவாக்கம் செய்ய மாட்டோம் என்று வாய்மொழி உத்தரவை ரீகன் அரசு வழங்கியிருந்தது. ஆனால், நடந்ததோ வேறு. நேட்டோ பற்றிய பகுதியில் எப்படி சிறுகச் சிறுக ரஷ்ய எல்லையை நோக்கி நேட்டோ விரிவடைந்தது என்பது புரியும்.

செப்டம்பர் 2001இல் இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டபின் நேட்டோ அமைப்பைத் திரட்டிக்கொண்டு ஆப்கானிஸ்தானில் போய் இறங்கிய அமெரிக்காவை மிகக் கவனமாக கவனித்து வந்தார் புடின். அப்பொழுதுதான் அவருக்கு விளங்கியது, அடுத்த குறி ரஷ்யாதான். அதற்காகத்தான் கிழக்கு நோக்கி நேட்டோ விரிவாக்கம் காண்கிறது. உக்ரேன் ராணுவத்திற்கு தொடர்ந்து ராணுவப் பயிற்சிகளும் ஆயுதங்களும் குவிக்கப்படுவதையும் கவனிக்கிறது ரஷ்யா. அதில் கடைசி நாடு, உக்ரேன் என்பதும் புரிந்து விட்டது. இதனால் ரஷ்யா காத்திராமல் 2014இலேயே கிரைமியாவை ரஷ்யாவின் பகுதியாக்கி, கருங்கடலின் கடற்படைத் துறைமுகத்தை வலுப்படுத்த ஆரம்பித்தது.

2021 – பாதுகாப்பு ஒப்புறுதி

நேட்டோ என்கிற அமைப்பு சோவியத் ரஷ்யக் கூட்டமைப்பிலிருந்து உறுப்பு நாடுகளைப் பாதுகாப்பது என்கிற ஒற்றைக் கோட்பாட்டைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது எனினும், 1991இல் சோவியத் ரஷ்யக் கூட்டமைப்பு கலைக்கப்பட்ட பின்னரும் நேட்டோ அமைப்பு தொடர்வதும்,

அப்போதைய ரஷ்ய அதிபர் கோர்ப்பசேவிடம் ரஷ்யாவை நோக்கி நேட்டோ விரிவாக்கம் செய்யாது என்கிற உறுதிமொழியை மீறி விரிவாக்கம் தொடர்ந்து செய்வதும்,

கிழக்கு உக்ரேனின் ரஷ்யமொழி பேசும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியOSCE டொனெட்ஸ்க், லுகான்ஸ்க் பகுதியில் தினமும் நடக்கும் கொலைகளை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது

தன் நாட்டின் தேசியப் பாதுகாப்பில் நெடோ மற்றும் அமெரிக்கத் தரப்பின் எந்தச் செயலும், உறுதிமொழியும் நம்பகத்தன்மை வாய்ந்ததன்று என்று முடிவு செய்த ரஷ்யா, நேட்டோவின் தோட்டா நிரப்பிய துப்பாக்கி தம்மைத் தான் குறி பார்த்துக் கொண்டிருக்கிறது என்று புரிந்து கொண்டது.

அக்டோபர் 2021இல் கிழக்கு உக்ரேனை ஒட்டிய ரஷ்ய எல்லையில் திடீரென 100,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் குளிர்காலப் பயிற்சிக்காகக் கூடினர். ரஷ்யா தனது படைகளை உக்ரேன் எல்லையில் குவிப்பது உக்ரேனைத் தாக்கி ஊடுருவத்தான் என்று நேட்டோ மற்றும் அமெரிக்கா தரப்பு குற்றம் சாட்டியது. ரஷ்ய அரசு அதைத் தொடர்ந்து மறுத்து வந்தது. அது வழமையான குளிர்காலப் பயிற்சி என்றே சொன்னது.

நவம்பர் 2021இல் ரஷ்ய அதிபர் புடின், ஜோ பைடனிடமும், ஐரோப்பிய நாடுகளிடமும் தனித்தனியாகப் பாதுகாப்பு ஒப்புறுதி (Security Guarantees) கேட்கப்போவதாக அறிவித்தார். அதாவது, மின்ஸ்க் ஒப்பந்தம் நிறைவேற்றப்படாமலிருப்பதும், உக்ரேனில் நேட்டோ படையின் ஆதிக்கம் அதிகமாவதும், கருங்கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறான இராணுவ நடவடிக்கைகளும் ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக இருக்கிறது. எனவே, தாங்கள் ரஷ்யாவின் மீது தாக்குதல் எதுவும் செய்யப்போவதில்லை என்கிற பாதுகாப்பு ஒப்புறுதியை ஒவ்வோர் ஐரோப்பிய நாடும் தனித்தனியாகத் தரவேண்டும் என்று கோர தனது வெளியுறவுத்துறை அமைச்சகத்தைப் பணித்தார். முதல் கோரிக்கை நவம்பர் 2021இல் வெளியானது.

நவம்பர் 30, 2021இல் நேட்டோவின் தலைவர், நேட்டோ நாடுகளுக்காகத்தான் பாதுகாப்பு ஒப்புறுதி வழங்க முடியும். உக்ரேன் போன்ற நேட்டோ நட்பு நாடுகளின் செயல்பாடுகளுக்காகவெல்லாம் நேட்டோ பாதுகாப்பு ஒப்புறுதி வழங்க முடியாது என்று ரஷ்யாவின் கோரிக்கையை மறுத்தார்.

டிசம்பர் 2021இல் மீண்டும் இரண்டாவது முறையாக, ரஷ்ய அதிபர் புடின், நீண்டகால பாதுகாப்பு ஒப்புறுதியின் அவசியத்தைப் பற்றியும், அதை உடனே நிறைவேற்றித் தரும்படியும் கோரிக்கை விடுத்தார். அதற்காக அவர் முன்வைத்த காரணங்கள் ; நேட்டோ அமைப்பு வாய்மொழி உறுதியாக அளித்த கிழக்கு நோக்கிய விரிவாக்க மறுப்பைப் பொய்யாக்கி, தொடர்ந்து விரிவாக்கம் செய்வதும், பொருளாதாரத் தடைகளை காரணமின்றி விதிப்பதும், ரஷ்ய எல்லைகளில் பிரச்னைகளை உண்டாக்குவதுமாக இருக்கிறது. பதற்றத்தைத் தணிக்க நீண்டகாலப் பாதுகாப்பு ஒப்புறுதியை எழுத்தில் கொடுங்கள் என்பதுதான் கோரிக்கை.  மறைமுகமாக, எங்கள் மீது தாக்குதல் நடத்தும் எண்ணம் இல்லையென்றால் அதை எழுத்தில் உறுதி கொடுங்கள் என்பதுதான் இந்தப் பாதுகாப்பு ஒப்புறுதியின் உள்ளர்த்தம்.

டிசம்பர் 9இல் புடினும் ஜோ பைடனும் பேசினார்கள். பாதுகாப்பு ஒப்புறுதியும் பேச்சில் ஒரு பகுதியாக இருந்தது. ரஷ்யா எதிர்பார்த்தது போலவே ஜோ பைடன் ஒப்புறுதி பற்றி உறுதியான பதில் கொடுக்க மறுத்து விட்டார். 2021 கிறிஸ்துமஸின் போது அதிகாரப்பூர்வமாகவே ஏற்பதில்லை என வெள்ளை மாளிகை அறிவித்து விட்டது. இது ரஷ்யாவின் மூன்றாவது முயற்சி.

ஜனவரி 12, 2022இல் அமெரிக்காவும் நேட்டோவும் கூடி ரஷ்யாவுடன் பேசுவது என்பது உறுதியானது. அந்தக் கூட்டத்தில் உறுதியான முடிவு எதுவும் எட்டவில்லை. ரஷ்யாவின் பாதுகாப்பு உறுதிசெய்ய ஒப்புறுதி எட்டவில்லையென்றால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் எச்சரித்தார். ஒரு வாரம் கழித்து பதில் கூறுவதாக நேட்டோ அமைப்பு கூறியது. இந்தக் கூட்டத்தில் ரஷ்ய எல்லைகளுக்குள் இருக்கும் ரஷ்ய வீரர்களை விலக்கிக் கொள்ளும்படி அமெரிக்காவும், நேட்டோவும் கோரிக்கை வைத்தன. ரஷ்ய ராணுவ வீரர்கள் ரஷ்ய எல்லைக்குள்தானே இருக்கிறார்கள், அவர்களை விலக்கிக் கொள்ளச் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது என்று ரஷ்ய இராணுவ அமைச்சர் நகைத்தார்.

தொடர்ந்து ஜனவரி 21ஆம் தேதி அமெரிக்கச் செயலாளர் ஜேக் சல்லிவனும், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவும் நேரில் பேசுவது என முடிவாயிற்று. ஜனவரி 27ஆம் தேதி எழுத்துப் பூர்வமாக அமெரிக்காவும், நேட்டோவும் தனித்தனியாகத்க் தமது பதிலைத் தெரிவித்தனர். எதிர்மறையான பதில் ரஷ்யாவிற்கு ஏமாற்றத்தை அளித்தது. 2022 பிப்ரவரி 2ஆம் தேதி புடின் அமெரிக்காவும், நேட்டோவும் தமது நீண்டகாலப் பாதுகாப்பு ஒப்புறுதிக் கோரிக்கையைத் தவிர்த்து விட்டனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நான்கு முறை திரும்பத் திரும்பக் கோரிக்கை விடுத்தும், அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யா மீது தாக்குதல் நடத்த நோக்கம் இல்லை என்கிற உறுதிமொழியைக் கொடுக்க மறுத்தது, அவர்களுக்கு அப்படியொரு எண்ணம் இருப்பது உலகிற்கே உறுதியாகத் தெரிந்து விட்டது.

ராணுவத்தலைவர்களுடனும், உயர்மட்ட அமைச்சரவையுடனும் கலந்தாலோசித்த பிறகு ரஷ்ய அரசு பூர்வாங்கமான சில அரச முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது.

பிப்ரவரி ஆரம்பத்தில் சீனாவில் ஒலிம்பிக்ஸ் ஆரம்ப விழாவில் கலந்துகொள்ளச் சென்றிருந்த புடின் தனது திட்டங்களைச் சீன அதிபரிடம் கலந்து ஆலோசித்திருப்பார் என்று உத்தேசிக்கப்படுகிறது.

பிப்ரவரி 22ஆம் நாளன்று ரஷ்ய நாடாளுமன்றம் டொனெட்ஸ்க், மற்றும் லுகான்ஸ்க் பிரதேசங்களைத் தன்னாட்சிக்குட்பட்ட பிரதேசம் என்று ஏற்றுக்கொள்வதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. அந்த தன்னாட்சிப் பகுதிகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தமும் கையெழுத்தானது. அந்தப் பகுதிகளின் ஆட்சியாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாதுகாப்பை ரஷ்யா பொறுப்பேற்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிப்ரவரி 24ஆம் நாள் ரஷ்ய அதிபர் புடின் ரஷ்யப் பாராளுமன்றத்தில் உதவி கேட்கும் தன்னாட்சி அமைப்புகளான டோனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, ரஷ்யா சிறப்பு இராணுவ நடவடிக்கையில் இறங்கும் என்று அறிவித்தார். அறிவித்த உடனேயே, உக்ரேனிய எல்லையில் ஐந்து மாதங்களாகக் காத்திருந்த ரஷ்ய இராணுவம் உக்ரேனுக்குள் நுழைந்தது.

(தொடரும்)