கலவிக்கும் முன்பான முஸ்தீபுகள் அனைத்தையும் ஸ்டெல்லாவுக்கு அரங்கேற்றிக் கொண்டிருந்தான் மிதுன். அப்படி அந்த நிகழ்வு ரயில் பெட்டிக்குள் அரங்கேறியிருக்க வேண்டியதில்லைதான். ஸ்டெல்லா பாசஞ்சர் ரயிலில் கடந்த இரண்டு வருடங்களாகத்தான் நகரில் பள்ளி ஒன்றிற்கு ஆசிரியைப் பணிக்காக வந்து கொண்டிருந்தாள். இவனுக்கு உன்னதமான தோழியாகவும் இருந்தாள் இந்த இரண்டு வருடங்களிலும்.

அந்தப் பாசஞ்சர் ரயில் அப்போது தான் சிற்றூர் ஒன்றின் ஸ்டேசனில் மூன்று நிமிடம் நின்று விட்டு பிரயாணத்தை துவங்கியிருந்தது. தினமும் அரைப்போதையிலேயே இரவில் பாசஞ்சர் ஏறும் மிதுன் அன்று போதையை ஏற்றிக் கொள்ளவில்லை. அதற்கான சமயமும் வாய்க்கவில்லை. அவனது பணிமனையில் இருசக்கர வாகனமொன்றை பழுது பார்க்கத் தாமதமாகிவிட்டது. இருந்தும் பாசஞ்சருக்கு தாமதமாகி விட்டது என்று தன் சொந்தக்கார முதலாளியிடம் கூவிக் கொண்டே தனது பேக்கைத் தூக்கிக் கொண்டு இரண்டு கிலோ மீட்டர் தூரம் ஓடோடி நகரின் ரயில்நிலையத்திற்கு வந்து சேர்ந்திருந்தான்.

அவன் வந்த சமயம் இவனது சிற்றூர் வழியாகச் செல்லும் பாசஞ்சர் ரயில் ப்ளாட்பாரத்திலிருந்து சப்தமெழுப்பாமல் நகர்ந்து கொண்டிருந்தது. அந்த வண்டி ஏதாவது தூரநகருக்குச் செல்லும் விரைவு வண்டியாக இருக்கலாமென நினைத்து ரிலாக்ஸ் ஆனவனுக்கு, ப்ளாட்பாரத்தில் இவன் ஊர்ச்சனம் ஏதுமில்லாமல் காலியாக இருந்தது தெரிய வரவே மீண்டும் ஓட்டமாய் ப்ளாட்பாரத்தில் ஓடி கடைசிக்கும் முந்தின பெட்டியில் தொத்திக் கொண்டான். முன்பாக பல சந்தர்ப்பங்களில் இவன் பாசஞ்சரைத் தவற விட்டிருக்கிறான். அப்போதெல்லாம் சீமெண்ணெய் வாடையும் கிரீஷ் வாடையுமடிக்கும் பணிமனையிலேயே கொசுக்கடியில் கிடந்து உறங்கியுமிருக்கிறான். அது மிகத் துயரம் சார்ந்த, உடல் வேதனையான விசயம்.

பிடிகம்பியைப் பற்றி உடும்பைப்போல தொற்றிக் கொண்டவன் பெட்டியினுள் மெதுவாக மூச்சு வாங்கியபடி நடந்தான். தன் ஊர்க்கார நண்பர்களோ, பெண்களோ இருந்தால் அருகில் அமர்ந்து பயணிப்பது அவன் வாடிக்கை. பொழுது போக்கிற்காக ஏதாவது பேசுவார்கள் அவர்கள். பெட்டியினுள் மஞ்சள் வர்ணத்தில் விளக்கொளி ஒளிர்ந்து கொண்டு இருந்தது. பாசஞ்சரில் விளக்கொளி இல்லாமல் இருளடைந்த பெட்டிகளும் அவ்வப்போது வரும். நீள் இருக்கையொன்றின் தெற்குக் கடைசியில் நகரின் பரபரப்பான சாலையையும் விளக்கொளிகளையும் ரசித்தபடி ஜன்னலோரமாய் அமர்ந்திருந்த ஸ்டெல்லா டீச்சர் இவன் கண்ணில் பட மூச்சு வாங்கியபடி அவள் அருகில் சென்றமர்ந்தான் மிதுன்.

‘என்னாச்சு? இன்னிக்கிம் லேட்டா ஓடி வந்து வண்டியப் பிடிச்சீங்களா?’ என்றாள் ஸ்டெல்லா. இவன் ‘ஆமாம்’ என்று மண்டையை ஆட்டி விட்டு நீள் இருக்கையில் சாய்ந்தான். அவனுக்கு ஏனோ உடல் சோம்பலும் தலைவலியுமாக அன்றிருந்தது. எப்போதும் கலகலப்பாகப் பேசுபவன் இன்று ஏனோ சோர்ந்து போய் அமர்ந்திருக்கிறானே! என்று நினைத்த ஸ்டெல்லா, ‘என்னாச்சுங்க மிதுன்? உடம்புக்கு முடியலையா? என்று கேட்டாள். ‘அவசரமா ஓடி வந்தப்பக்கூட இப்படியில்ல, ஆனா ஏனோ திடீர்னு தலைவலிக்கிறாப்ல இருக்கு ஸ்டெல்லா! சித்த நேரம் உன் மடியில தலை வச்சு படுத்துக்கவா?’ என்று சோர்வாய்க் கேட்டவனைப் பார்த்தவள், தன் மடியில் கிடந்த பேக்கை எடுத்து இடது புற ஓரத்தில் வைத்தாள்.

ஸ்டெல்லா இவனது உள்ளூரிலிருந்து ஒன்னரை கிலோமீட்டர் தள்ளித்தான் இருக்கிறாள். அவளது அம்மாவுடனும் தங்கையுடனும் எப்போதேனும் விழுந்து விடலாமென்ற வீட்டினுள் வசிக்கிறாள். அவளது ஊருக்குள் பல வீடுகள் அப்படி சாய்ந்திருக்கின்றன. எல்லா வீடுகளும் மனிதர்கள் நிரம்பியிருந்த ஒரு காலம் இருந்தது முன்பாக. அவர்களுக்கென ஒரு சிறிய தேவாலயம் கூட இருந்தது. கால மாற்றத்தில் பலர் நகர்ப்புறங்களுக்குச் சென்று விட வீடுகள் காலியாகின. இப்போது நான்கு வீடுகளில் மட்டுமே குடும்பங்கள் வாழ்கின்றன. பல வீடுகள் சாய்ந்து குட்டிச் சுவர்களாக காட்சியளிக்கின்றன.

ஸ்டெல்லாவின் வீடும் பழைய ஓட்டு வீடுதான். பெரிய திண்ணை. கிழக்கு தெற்காக ட வடிவில் நான்கைந்து பந்தக்கால்கள் தாங்கிய திண்ணை. வடகிழக்கில் இருந்த பகுதி சாய்ந்து விட்டது. அங்கு தான் முன்பாக அவர்களது சமையல் அறை இருந்ததாக இவளது தங்கை எஸ்தர் இவனுக்கு சொல்லியிருக்கிறாள். எஸ்தர் இந்த நகரின் பள்ளியொன்றில் பத்தாவது வகுப்பிலிருக்கிறாள். அக்காவும் தங்கையும் எப்போதும் ஒன்றாகவே தான் இந்த ரயில் பெட்டியில் அமர்ந்து பயணிப்பார்கள். இன்று சனிக்கிழமை என்பதால் எஸ்தர் வரவில்லை. ஸ்டெல்லாவின் அம்மா துவக்கப்பள்ளியில் ஆசிரியையாக இருந்து பணி ஓய்வு பெற்றவள். அவளுக்குப் பென்சன் வந்து கொண்டிருந்தது. இவன் விசாரிக்கவே விசாரிக்காத ஒரு விசயம் ஸ்டெல்லாவிடம் இருந்தது. ’அப்பா எங்கே?’ என்பதே அது.
ஸ்டெல்லாவின் மடியில் தலைவைத்து கால்களை நீட்டிப் படுத்திருந்த மிதுனுக்கு உடம்பு வலி தனியாகத் தெரிந்தது. நாளை ஏதாவது காய்ச்சல் என்று வந்து படுத்து விடுவோமோ? என்றும் பயமாய் இருந்தது. அன்னார்ந்து பார்த்துப் படுத்திருந்தவன் கண் திறந்து ஸ்டெல்லாவின் முகம் பார்த்தான். அவளது இடது நெற்றியில் ஒரு சிறு கொத்து முடி காற்றுக்கு ஆடியபடி அவள் மூக்கிலும் முட்டிக்கொண்டிருந்தது. ஸ்டெல்லா ஒல்லியான உடல்வாகு கொண்டவள். ஆனால் இவள் தங்கை எஸ்தர் இவளுக்கும் நேர் எதிர். அவள் உடம்பு பூசினது போலிருக்கும். நிறத்திலும் அவள் கூடுதல் சிகப்பு. இவள் கறுத்தவள். மிக மோசமான கறுப்புமல்ல.

மிதுன் வழுவழுப்பான ஒட்டிப்போயிருந்த அவளின் கன்னங்களைப் பார்த்தான். அவனுக்குள் திடீரென சின்னதாய் பொறி ஒன்று பற்றிக் கொண்டது போலிருந்தது. ஸ்டெல்லாவிடம் பெண்மைக்கான வாசமெதுவுமில்லை. இருக்கலாமோ? என்று நினைத்து முகர்ந்து பார்த்தான். அப்படியெதுவும் வாசமின்றி இருந்தாள் ஸ்டெல்லா. அடுத்த சிற்றூர் ஒன்றின் ப்ளாட்பாரத்தில் பாசஞ்சர் வந்து ஓய்ந்து நின்றது.

“ஏங்க எந்திரிங்க மிதுன். நம்ம ஊர் ஆளுங்க பார்த்தாங்கன்னா எதாச்சிம் நினைச்சுப்பாங்க.” ப்ளாட்பாரத்தில் எரிந்த டியூப் லைட் வெளிச்சம் இப்போது பளிச்சென பெட்டிக்குள்ளும் அடித்தது. ‘கொய்யா கொய்யா பத்து ரூபாய்க்கு ரெண்டு கொய்யா!’ கூடை வைத்திருந்த வியாபாரி ப்ளாட்பாரத்தில் சப்தமிட்டுக் கொண்டே சென்றான்.

மிதுன் வேண்டாவெறுப்பாய் எழுந்து அமர்ந்தான். சீக்கிரம் இந்த சிற்றூரிலிருந்து வண்டியை எடுத்தால் நல்லதென நினைத்தான். பலமுறை இந்த சிற்றூரில் கிராஸிங் போட்டு விடுவார்கள். பெருநகரம் செல்லும் விரைவு வண்டி சென்ற பிறகு தான் பாசஞ்சர் கிளம்பும். இவனுக்குப் பசியாகவுமிருந்தது. இவனிடமிருந்து சீமெண்ணெய் வாடை வீசிற்று. இவனுக்கே அது பிடிக்கவில்லை. ஸ்டெல்லாவுக்கும் அது பிடித்திருக்காது தானென நினைத்தான். இவன் கைகள் சுத்தமின்றி சிறு சிறு காயங்கள் காய்ந்து முரட்டுத்தனமாய் இருந்தது. ஸ்டெல்லாவின் கைகளைப் பார்த்தான். மிருதுவாக இருக்க வேண்டுமென நினைத்தான்.

ஸ்டெல்லா இவனது நண்பர்கள் எல்லோரிடமும் மகிழ்வாய் பேசுவாள். மனதில் எந்த தப்பான எண்ணங்களும் இல்லாதவள். கள்ளம் கபடமில்லாத வளர்ப்பு என்று சொல்வார்கள் அதை. உள்ளூரிலிருந்து பணிக்காகப் பெண்கள் பலர் நகருக்கு வருகிறார்கள் தான். ஆனால் அவர்கள் எல்லோர் மனதிலும் திருட்டுத்தனம் இருக்கிறது. அவர்கள் இயல்பாகப் பேசுவது போலிருந்தாலும் வினை வைத்திருப்பார்கள். அதை அவர்கள் முகமே காட்டிக் கொடுத்து விடும். மிதுன் அண்ணா, என்று இவனிடம் பேசுபவர்களிடம் கூட இவன் பயந்தே பேசினான். அவர்களது அடுத்த வார்த்தை, ‘ஒரு இருவது ரூவா இருந்தாக் குடுங்கண்ணா!’ என்றே இருக்கும்.

இவனுக்குப் பெண்களிடம் அதீதமான ஈடுபாடுகள் எதுவுமில்லை. படிப்பு பத்தாவதோடு முடிந்து ஆறு வருடங்களாயிற்று. சின்ன வயதிலேயே இவனது அப்பாவும் அம்மாவும் பேருந்து விபத்தில் போய் விட்டார்கள் இவனைத் தனியே விட்டு விட்டு. சித்தப்பா தான் தன் பாதுகாப்பில் வளர்த்தார். இவன் மேலே படிக்க முடியாமல் போக சித்தி காரணமாயிருந்தாள். அவளது செல்ல மகள் இப்போது நகருக்கு டிகிரி படிக்க வந்திருக்கிறாள். சித்தியின் சொந்தத்தில் நகரில் இருசக்கர வாகன பணிமனை வைத்திருந்தவரிடம் பத்தாவது முடித்த கையோடு ஒட்டவைத்து விட்டாள். மிதுன் இப்போது தொழிலை முழுதாகக் கற்றுக் கொண்டுவிட்டான். தனியாக வொர்க்​ஷாப் துவங்க வேண்டுமானால் சித்தப்பாவிடம் தான் இவன் பேச வேண்டும். அதற்கு சித்தியின் கருணையும் இவன் மீது இருக்க வேண்டும்.
ரயில் ப்ளாட்பாரத்திலிருந்து பூனை நழுவுவது போல சப்தமின்றி நழுவத் துவங்கியது. நல்லவேளையாக அவர்கள் அமர்ந்திருந்த பெட்டியில் இருந்தவர்களின் நடமாட்டமும் இவர்கள் பக்கமாக இல்லை. நண்பர்கள் யாரேனும் ப்ளாட்பாரத்தில் ஜாலியாய் நடையிட்டு வந்து இவனைப் பார்த்திருந்தால், ‘மிதுனு நீ இங்கியா உக்கோந்திருக்கே?’ என்று கூடவே வந்து அமர்ந்து கொள்வார்கள். துன் ஸ்டெல்லாவைத் திரும்பிப் பார்த்தான். அவள் இவன் பார்வையைப் பார்த்துப் புன்னகைத்தாள். முன்பற்களில் நான்கு வெளியில் தெரிந்தது. இந்த நாள் வரை ஸ்டெல்லாவை இப்படி ரசித்துப் பார்க்கவே இவனுக்குத் தோன்றவில்லை.

மீண்டும் மடியில் படுத்துக் கொண்டவன் இப்போது அவளது வயிற்றின் தாப்புள் குழியில் மூக்கு படும் விதமாக படுத்தான். தன் இரு கைகளையும் அவளது பின்புறமாக விட்டு கட்டிக் கொண்டான். ஸ்டெல்லாவுக்கு அது அதிர்வாய் இருந்தது. பிடித்து விலக்கவேண்டுமெனத் தோன்றிற்று. ‘ஓ ஜீசஸ்’ என முனகினாள். அவளின் முனகல் காதில் விழுந்ததும் இவனுக்குள் அந்தப் பொறி மீண்டும் பற்றிக் கொண்டது.

இவன் சும்மாயிராமல் அவள் தொப்புளில் முகம் வைத்துத் தேய்த்து தலையை உயர்த்தி அவளது மார்புகள் பக்கமாக உரசினான். ‘வேண்டாங்க! வேண்டாங்க! ஏசுவே!’ என்று குரல் கம்மலாய்ச் சொன்னாள். அவளுக்குள்ளும் அந்தப் பொறி அப்போது சூடாய்ப் பற்றிக் கொண்டது. அவளுக்குப் பேச்சு சரியாய் வரவில்லை. அவன் தலையைப் பிடித்துத் தள்ளிவிட முடியவில்லை. ஸ்டெல்லா கசியத் துவங்கிய சமயத்தில், ‘நீங்க மாட்டிக்குவீங்க! வேண்டாம்’ என்றாள். மிதுன் அவள் பேசுவனவற்றை கேட்டானில்லை.
அவள் அப்படிப் பேசவும் அழுத்தமாகவே அவளது முலைகளில் முகத்தைப் புதைத்து அழுத்தினான். மிதுன் தைரியம் பெற்று மடியிலேயே தலை வைத்து அவளது அடிவயிற்றுக்கும் கீழாக தன் முகத்தைப் புதைத்துக் கொள்பவன் போல முயற்சித்தான். தன் கைகளை அவளின் பின்புறத்தில் முடிந்த மட்டிலும் கசக்கி தன் முகம் பக்கமாகத் தள்ளினான். ஸ்டெல்லா தன் நாவிலிருந்து உமிழ்நீர் சுரப்பதை அறியாதவளாய் இருந்தாள். அவள் கைகள் தானியங்கி போல மிதுனின் தலைமுடியைக் கோதிவிடத் துவங்கிற்று. நாவினோரத்திலிருந்து வழிந்த உமிழ்நீர் கோதிக் கொண்டிருந்த அவள் கைகளிலேயே வடிந்தது. ‘ப்ளீஸ்! வேண்டாங்க!’ அவள் முனகினாள்.

ஒருகட்டத்தில் மிதுன் மிக அதிகமாய்ப் போவதை உணர்ந்தவள், ‘நம்ம ஊர் கிட்ட வந்துட்டோம்ங்க மிதுன்’ என்று அவன் தலையைப் பிடித்து தூரம் நகர்த்தினாள். கோபம் வந்தவன் போன்று திடீரென எழுந்தவன் அவள் அருகாமையிலேயே மூச்சு வாங்கியபடி அமர்ந்தான். யாரோ உயரப்பறந்து கொண்டிருந்தவனைப் பிடித்துக் கீழே தள்ளியது போலிருந்தது அவனுக்கு.

திடீரென அமர்ந்திருந்தபடியே அவளை நோக்கித் திரும்பி தன் நெஞ்சுக்குள் அவளைப் புதைத்துக் கொள்பவன் போல கட்டி இறுக்கினான். பின் அவள் உதடுகள் நோக்கி தன் உதடுகளைக் கொண்டு சென்றான். அவள் முகத்தை திருப்ப முயற்சிக்க, ஒரு கையால் அவள் கழுத்தைப் பற்றித்திருப்பி உதட்டைக் கவ்விக் கொண்டான். அவள் தன் முகத்தைப் பின்னுக்கு இழுக்க முயற்சித்தாள். விடுவேனா என்று அவளது கீழுதட்டை சின்னதாய் ஒரு கடி கடித்து சப்பினான். ஸ்டெல்லா அமைதியானாள்.
என்னமோ பண்ணட்டும் இவன் என்று அமைதியடைந்தாள். வண்டி இன்னும் மூன்று நிமிடத்தில் இவர்கள் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் நின்று விடும். மிதுனுக்கு அவசரமாயிருந்தது. அவனது வலது கையை தைரியமாய் அவளது இடது மார்பின்மீது வைத்து அழுத்தினான். எந்த மறுப்புமில்லாமல் இருந்த ஸ்டெல்லா அவனை ஆச்சரியப்படுத்தினாள். அது அவனுக்கு சந்தோசத்தை ஒருசேரக் கொடுத்தது. மகிழ்வாய் தன் கைகளை எடுத்துக் கொண்டவன் அவளின் கன்னத்தின் இருபுறமும் எண்ணவே முடியாபடி பச் பச்சென பல முத்தங்களைக் கொடுத்தான்.

வண்டி உள்ளூர் ஸ்டேசனில் அமைதியாய் நின்றது. மிதுன் அவளது பேக்கையும் தன் பேக்கையும் கையில் எடுத்துக் கொண்டு அவளை அணைத்தாற் போல் கூட்டி வந்து முதலாக இறங்க வைத்தான். ப்ளாட்பாரத்தில் இறங்கியவள் கண்களில் கண்ணீர்த் துளிகளைக் கண்டதும் இவனுக்கு பதைபதைப்பு கூடிக் கொண்டது. ‘ப்ளீஸ் இப்ப எதுக்கு நீ அழறே? அழாதடா ப்ளீஸ்’ என்றான். அவளது பேக்கை அவள் கையில் கொடுத்தான். உள்ளூர் ஆட்கள் ப்ளாட்பாரத்தில் முன்பாக நடந்து கொண்டிருந்தார்கள். இனி அவளிடம் பேச முடியாது என்றுணர்ந்தவன் மிக மெதுவாக நடந்து பின் தங்கி விட்டான். அப்போதைக்கு யாரிடமும் பேச அவன் விருப்பப்படவில்லை. கடைசியாக ப்ளாட்பாரத்திலிருந்த இருக்கையொன்றில் அமர்ந்து பீடி ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டான்.
அவனுக்குள் பல யோசனைகள் ஓடிக் கொண்டேயிருந்தது. அவனது சித்தி மனதில் வந்து வந்து போனாள். சித்தி இரண்டு வருடம் முன்பாக இவனை மிரட்டிய நாள் ஞாபகத்தில் வந்தது. பின்பாக திடீர் திடீரென அவள் அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறாள். இவன் சித்தப்பாவிடம் இதுபற்றி எப்படிச் சொல்வது என்று தடுமாறி விட்டு விட்டான்.

சித்தி அன்று வீடு மெழுகினாள். சித்தப்பா தோட்டத்திற்கு சென்றிருந்தார் அப்போது. பின்பாக குளியல் அறைக்கு எப்போது சென்றாள் என்றெல்லாம் இவனுக்குத் தெரியவில்லை. வீட்டினுள் சாணி ஈரத்தில் நடந்தால் கால்த்தாரை அப்படியே பதிந்து விடுமென்பதால் வெளியில் சென்றிருந்தவன் வீடு வந்து பார்த்து கொடுக்காப்புளி மரத்தடியில் கிடந்த கட்டிலில் விழுந்தான். அப்படி அவன் விழுவதைப் பார்த்தபடி தான் சித்தி குளியலறைக்குச் சென்றாள். வீட்டின் வடக்குச் சுவற்றையொட்டி ஒரு வருடம் முன்பாகத்தான் குளியல் அறை கட்டியிருந்தார்கள். அதற்கும் முன்பாகத் தென்னை ஓலையால் வேய்ந்த மறைப்பு தான் குளியல் அறை.

சித்தி அவனை பாத்ரூமிலிருந்து அழைத்தாள். இவன் படுத்திருந்தபடியே ‘என்னங்க சித்தி?’ என்றான். ‘இங்க வா’ என்ற சொல்கேட்டு பாத்ரூம் பக்கம் சென்றான் மிதுன். பாத்ரும் கதவு திறந்தே கிடந்தது. சித்தி பாவாடையை உயர்த்திக் கட்டியிருந்தாள். வெள்ளைநிற பாவாடை அது. அவள் முழுக்க நனைந்திருந்ததால் மெலிதான துணி அவள் உடலோடு ஒட்டி பசை போல அப்பியிருந்தது. ‘வந்துட்டியா? உள்ளார வந்து என் முதுகுக்கு சோப்பைப் போட்டுத் தேய்ச்சி விடு!’ சொன்னவள் தரையோடு அமர்ந்து இவனுக்கு முதுகு காட்டினாள்.

நெஞ்சில் கட்டியிருந்த முடிச்சை அவிழ்த்து கீழிறக்கி விட்டாள். இவனுக்கு அதிர்ச்சியாயிருந்தது. ஒரு பெண்ணுடலை இப்படி அவன் கண்டதேயில்லை. ’அதா தொட்டி மேல சோப்பு இருக்கு பாரு!’ என்றாள். ’பாப்பா எங்க போயிட்டா? இங்க தான இருந்தா?’ என்றான் இவன். ‘பாப்பா ஊருக்குள்ள மயிலா வீட்டுக்குப் போயிருக்கா! சோப்பை எடுத்து தேயி!’ என்றாள். இவன் நடுக்கமாய் சோப்பை எடுத்து சித்தியின் முதுகில் பட்டும் படாமல் தேய்த்தான். ‘என்னடா தேய்க்கிறே? நல்லா அழுத்தி சோப்பை போட்டுட்டு முதுகைத் தேயி!’ என்றதும் சோப்பை மீண்டும் அதன் டப்பாவில் போட்டு விட்டு சித்தியின் முதுகில் இரண்டு கைகளையும் வைத்து அழுத்தித் தேய்த்தான். பிரி பிரியாக வந்தது.

‘இந்தா இந்தக் கல்லு வச்சு தேயி’ அவள் கையில் சோப்புக் கட்டி போன்றே வெங்கச்சாங்கல் இருந்தது. அதை வாங்கித் தேய்த்தான். பலகாலமாய் முதுகில் மேலும் கீழும் போய் வந்த கல் போலிருக்கிறது. இவன் குளிக்க வருகையிலெல்லாம் ஓரமாய் அது கிடக்கும். அதன் பயன்பாடு பற்றியெல்லாம் யோசித்ததேயில்லை இவன். இப்போது தான் தெரிகிறது. பின்பாக சித்தியின் முதுகில் மூன்று போசி தண்ணீர் மோர்ந்து ஊற்றி விட்டுக் கிளம்ப எத்தனித்தவனை இரு போலாமெனச் சொன்னாள்.
’அப்படியே கைகளை விட்டு இதுங்களை கசக்கி விடு!’ என்றாள். இன்று ஏதோ பிரச்சனையாகப் போகிறதென இவன் பயந்தான். ‘என்னால முடியாது சித்தி!’ என்றான். ‘எல்லாம் முடியும்! உன் சித்தப்பங்காரன் வந்தா இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஊட்டை உட்டு முடுக்கியுட்டுருவேன் பாத்துக்க!’ என்றாள். இவனுக்கு நெஞ்சு திக்கு திக்கென அடித்துக் கொண்டது. ‘வேண்டாம் சித்தி இதெல்லாம் தப்பு!’ என்றான்.

சித்தி அப்படியே எழுந்தாள். இவன் புறமாய்த் திரும்பி நின்று இவனது கைகளைப் பிடித்து இரண்டு மார்களிலும் வைத்துக் கொண்டாள். ‘ம்’ என்றாள். இவனுக்குள் முதலாக அந்தப் பொறி உடலுக்குள் கிளம்பிற்று. அது வேகமாய் வடிவெடுத்து உயர்ந்தது. திடீரென தீயின் மீது தண்ணீரும் ஊற்றப்பட்டது. சித்தி, ’போதும் போ!’ என்று சொல்லி இவனை வெளியே தள்ளி விட்டுக் கதவை அடைத்துக் கொண்டாள்.

இரண்டு மாதத்திற்குள் ஒருமுறையேனும் இவன் சித்தியிடம் வீட்டினுள் கூட யாருமில்லா சமயத்தில் மாட்டிக் கொள்கிறான். எல்லா சமயமும் இவனுள் தீயைப் பற்ற வைத்து விட்டு அவளே திடீரென தண்ணீர் ஊற்றி அணைத்து அனுப்பி விட்டு குரூரமாய் புன்னகைக்கிறாள். அவள் யாரையோ வெற்றி கொண்ட களிப்பில் வீட்டினுள் நடமாடுகிறாள். சித்தப்பாவுக்கும் இப்படித்தான் நடக்கிறதோ என்னவோ! என்றே நினைப்பான். வீட்டினுள் இருக்கும் சமயங்களில் பயந்து பயந்து திரிந்தான்.
ஒரு மனிதனுக்குண்டான பாலுணர்வு அடக்கப்படும்போது அதன் மீது மிகவும் ஆர்வமுள்ளவனாக அவன் மாறி விடுகிறான். அதை அடக்குபவர்கள் மீதான பயம் அவனைத் துன்புறுத்துகிறது. பாலுணர்வை அடக்கிக் கொள்ள முயற்சிக்கையில் அதீத ஆர்வமுடன் அது உடலுக்குள்ளும் மனசுக்குள்ளுமாக சுழல ஆரம்பித்து விடுகிறது.

பாலுணர்வு என்பது இந்த உலகத்தின் மிக அழகான தன்மைகளில் முதலானது. ஆனால் அது எப்போதும் கீழான நிலையிலேயே தான் இருக்கிறது. கீழான நிலையிலிருந்து மேலான நிலைக்குச் செல்ல அது முயற்சிப்பதேயில்லை.
பிறரைச் சார்ந்திருப்பது எப்போதுமே ஒருவனுக்கு துன்பத்தைத்தான் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. எப்போதும் பிறரைச் சார்திருக்கையில் எல்லாம் துன்பத்தையே உணர ஆரம்பிக்கிறான். சார்ந்திருப்பது அடிமைத்தனமன்றி வேறென்ன? முடியாமல் போகையில் அப்படியானவரை வஞ்சம் தீர்க்க முயலுகிறான். அதற்கான வழி வகைகள் கிட்டுமாவெனப் பார்க்கிறான். தன்னை அதிகாரம் செய்பவரை யாருமே விரும்புவதில்லை. சார்ந்திருப்பது சுதந்திரத்தைக் கொல்கிறது. அங்கு அன்பு என்பதே இல்லை. சுதந்திரத்தில் குறுக்கிட யாருக்கும் அதிகாரமுமில்லை. சுதந்திரம் மென்மையானது. உன்னதமானதுவும் கூட.

***
ஸ்டெல்லா எந்த நேரமும் ஜீசஸை நினைத்துக் கொண்டேயிருக்கும்படியாயிற்று. மிதுனைப் பார்க்கையிலெல்லாம் படபடப்புக்கு உள்ளானாள். அவனிடமிருந்து தூரமாய் விலகி இருக்க விரும்பினாள். அதற்காக ஜீசஸ் உதவி செய்வாரென எதிர்பார்த்தாள். தன்னை அவன் பார்வையில் படாவண்ணமாக மாயத்தை ஏற்படுத்தி விடுவாரெனவும் நம்பினாள்.

அவளுக்குள் ஆண்கள் மீதான பயம் புதிய ஒரு உணர்வாய் உள்ளுக்குள் குடி கொண்டு விட்டது. பள்ளியில் சக ஆசிரியர்களுடன் சகஜமாய் பேசத் தோன்றவில்லை. சாலையில் தன்னைக் கடந்து செல்லும் ஆண்கள் அனைவரும் கையை நீட்டி தன் மார்பகங்களைத் கசக்கிச் செல்வதாகவே நினைத்துப் பயந்தாள். பைக்கில் செல்பவர்கள் தன் பின்புறத்தை அழுத்தமாய் பிசைந்து விட்டு செல்வதாய் உணர்ந்தாள்.

கடவுள் மீது நம்பிக்கை வைக்கும்படியாக வளர்க்கப்பட்டவள் ஸ்டெல்லா. அவளும் நம்பிக்கையோடு தான் இருக்கிறாள். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதற்கும் அவளது நம்பிக்கைக்கும் சம்பந்தமுமில்லைதான். உண்மைக்கும் நம்பிக்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதைப் போன்றே.
மிதுன் மீது அவளுக்கு இருப்பது கோபமா, எரிச்சலா என்றே அவளால் உணர முடியவில்லை. மிதுன் ரயில் சம்பவத்திற்குப் பிறகு இவளைத் தேடி வருகையிலெல்லாம் இவள் ஒதுங்கிக் கொள்வதைத் தெரிந்து கொண்டான். மற்ற நபர்களிடமும் அவள் அதிகம் பேசுவதில்லை என்பதையும் கண்டான். இயல்பாய் அவளிடம் பேசிக் கொண்டிருந்தவன் அவள் அருகில் சென்று, என்ன வார்த்தை பேசி வார்த்தையைத் துவக்குவது? என்றே தெரியாமல் தடுமரினான்.
தனக்குள் எதுவோ நிகழ்ந்து விட்டதை உணர்ந்தான். அது வலியாய் இருந்தது. துன்பமாய் இருந்தது. இதையெல்லாம் சரிப்படுத்தவே முடியாமல் போய் விடுமோவெனப் பயந்தான். ஸ்டெல்லா எந்த நேரமும் மனதில் இருந்தாள். தூங்குகையில் கூட ஸ்டெல்லா இவன் வீட்டு வாசல் வழியாக கனவில் நடந்தாள். இவன் அவள் பின்னே மௌனமாய் நடந்தான். கனவிலும் கூட அவளிடம் பேசப் பயப்பட்டான்.

யாரிடமும் இதைப்பற்றிப் பேச தயக்கமாய் இருந்தது. இவனாக உருவாக்கிக் கொண்ட துன்பம் இது. ஸ்டெல்லா இவனைக் கண்டபோதெல்லாம் விரைந்து இடத்தைக் கடப்பதும், தலையைக் குத்திக் கொண்டே செல்வதும் துன்பமாய் இருந்தது. நல்லபெண்ணை நாறடித்த நாய்! என தன்னையே திட்டிக் கொண்டான்.
கிட்டே சென்று, ‘அப்படியெல்லாம் இல்ல ஸ்டெல்லா நான். என்னைப் பார்த்துப் பயப்படாதே!’ என்று சொல்லலாம். ‘தெரியும் போடா உன் லட்சண மசுரு, வந்துட்டான் சீமெண்ணெ நாத்தத்தோட முத்தங் குடுக்க!’ என்று எடுத்தெறிந்து பேசிவிட்டால் இவனால் என்ன செய்ய முடியும்?

இவனுக்கு இவன் மீதே எரிச்சலாய் இருந்தது. யாரிடமேனும் இதுபற்றிப் பேசலாம். யாரிடம் பேசினாலும் சிரிப்பார்கள். ’அவங்கெல்லாம் யாரு நாம யாரு! புத்தியிருக்கா உனக்கு?’ என்பார்கள். இத்தனை நாள் ஸ்டெல்லா யார் என்றெல்லாம் தெரிந்தா பழகினான். யார் மடியில் படுக்கிறோம்? என்று தெரிந்தா படுத்தான். இயல்பாயிருந்த ஒரு பழக்கம் சிறு பொறியால் சீரழிந்த பிறகுதான் வேறொரு வேதனையை அவனுக்குத் தரத்துவங்கி விட்டது.

இது மிக விசித்திரமான நிலை. இந்த நிலையில் ஒரு நாள் கூட அவன் வாழ்ந்து பழகியிருக்கவில்லை. யார் ஒருவன் காதலில் விழுகிறானோ அவனிடம் அன்பு என்பதே இல்லை. ஆகவே தான் காதலில் விழுகிறான். அவனிடம் அன்பு என்ற ஒன்று இல்லாததினால் இப்படி நடந்து விடுகிறது. அவனால் அன்பைக் கொடுக்க முடியாது. முதிர்ச்சியே இல்லாத ஒருவன் எப்போதும் முதிர்ச்சியே இல்லாத பெண்ணிடம் தான் காதலில் விழுவான். இந்த மொத்த வாழ்க்கையிலும் இப்படித்தான் நடக்கிறது. முதிர்ச்சியில்லாத மனிதர்கள் முதிர்ச்சியில்லாத மனிதர்களையே விரும்புகிறார்கள்.

தங்கள் வாழ்க்கை முழுதும் பலர் குழந்தைத்தனமாகவே இருக்கிறார்கள். மனதளவில் அவர்கள் வளர்வதேயில்லை. வயதில் தான் வளர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எப்போதும் பிறருடைய அன்பு தேவையாக இருக்கிறது. எப்போதும் அதன் பின்னாலேயே ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நகரில் ஆயிரக்கணக்கான அழகழகான பெண்கள் இருக்க ஒருத்தி மட்டும் எப்படி இவன் மனதில் நுழைந்து இவனை வேரோடு சேர்த்து அசைக்கிறாள்? மனதிற்குப் பிடித்தபடி இந்த உலகம் இயங்க வேண்டுமென்று எல்லோரும் நினைக்கிறார்கள். தனக்குப் பிடிக்காதனவற்றையெல்லாம் மாற்ற நினைக்கிறார்கள். அதற்காகக் கடுமையாக போராடுகிறார்கள். ஆனாலும் அவர்கள் நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லை. இயற்கையே அப்படித்தான் அதை வடிவமைத்திருக்கிறது. காதலும் அப்படித்தான். மகிழ்ச்சியையும் துக்கத்தையும் ஒருங்கே அது கொடுக்கிறது. மகிழ்ச்சியை விட துயரத்தை அதிகம் கொடுக்கும்.

மனம் எப்போதும் விசித்திரத்தன்மையுடையது. அதற்கு நிலையாக இருக்கத் தெரியாது. சில சமயம் மகிழ்ச்சியாகவும், சில சமயம் துக்கமாயும் என மாறிக் கொண்டேயிருக்கும். மனதோடு சம்பந்தப்பட்ட அனைத்தும் அப்படித்தான். இப்படித்தான் அவரவர் மனதோடு ஒவ்வொருவரும் வாழ்ந்தே ஆக வேண்டும்.
உன்னிடமிருந்து ஒதுங்கிச் செல்லும் பெண்ணைப் பற்றி எப்படி நீ அறிந்து கொள்ள முடியும்? அவளது கனவுகளிலும், எண்ணங்களிலும், ஆசைகளிலும் நுழையவே முடியாது. அவளைப்பற்றிய உண்மை நிலையை எப்படி அறிவது? நீ காணும் கனவினாலும் கூட அது முடியாது. நீ அவளோடு நெருங்கிப் பழகியவனாகவும் இருக்கலாம். ஆனாலும் அவளது கனவுகள் வேறு, உன்னுடையதும் வேறு. இருவருடைய தன்னிலையும் இந்த உலகில் வேறு வேறு இடங்களில்தான் இருக்கும்.
மிதுனுக்கு ஸ்டெல்லாவின் நிலை பற்றி எதுவும் தெரியவில்லை. இவனிடமும் எந்தத் தீர்வும் இல்லை. எப்போதுமில்லாமல் அன்று அவள் பள்ளியிலிருந்து மாலையில் வெளிவருகையில் அவன் அவளுக்காக காத்திருந்தான். அவளைப் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் இப்போது புதிதாக அவன் மனதில் நுழைந்திருந்தது. அது அவனுக்கு நிம்மதியைக் கொடுக்குமென நம்பி வந்திருந்தான். புதிய ஆடைகள் சில கடந்த வாரத்தில் எடுத்திருந்தான். தன்னிடமிருக்கும் சீமெண்ணெய் வாடையை அகற்றுவதற்காக வாசனைத் திரவியம் வாங்கியிருந்தான். அவனுக்கு அவனையே பிடித்திருந்தது.
ஸ்டெல்லாவிடம் இருந்திருந்தால் நான்கைந்து சேலைகள்தான் இருக்க வேண்டும். மாற்றி மாற்றி அவைகளையே தான் கட்டிக் கொண்டு வருகிறாள். ஸ்டெல்லாவுக்கு நான்கைந்து சேலைகள் எடுத்துப் பரிசளிக்கும் எண்ணமெல்லாம் கூட அவனுக்குள் உதித்திருந்தது. ஸ்டெல்லா தன்னுடையவள் என்றே நம்பத்துவங்கி விட்டான்.

காதல் எப்போதும் ஒருவனை அடியோடு மாற்றி விடும் தன்மையுடையது. காதலில் ஒருவன் புதிய பிறவியை எடுக்கிறான். அவன் அதற்கும் முன்பு இருந்த நிலையில் இருக்க ஆசை கொள்வதில்லை. அவன் கடலின் அடியாழத்திற்கு சென்று வருகிறான். அதனால் சுத்தப்படுத்தப்படுகிறான். அதற்கான தைரியத்தைக் காதலே வழங்குகிறது அவனுக்கு. காதலில் விழுந்துவிட்டால் ஒவ்வொருவனும் தியாகங்கள் செய்ய வேண்டி நிகழ்ந்து விடுகிறது. எதிர்பார்ப்புகள், அகங்காரம், விருப்பம், ரகசியங்கள் என்று பலவற்றைத் தியாகம் செய்ய வேண்டி வருகிறது. தியாகம் இல்லாமல் காதலில் அன்பு ஒரு நாளும் வந்து சேராது.
ஸ்டெல்லா பெட்டிக்கடையோரமாய் நின்றிருக்கும் மிதுனைக் கண்டுகொண்டாள். அவளுக்குள் படபடப்பு கூடிக் கொண்டது. இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது? என்றே அவளுக்கு விளங்கவில்லை. இவளுக்குள்ளும் மிதுன் நினைவுகள் நுழைந்து இம்சையைக் கொடுத்துக் கொண்டே தான் இருந்தது. ஏதாவது கூடவே வந்து பேசினான் என்றால், ‘இங்க பாருங்க, இதெல்லாம் எனக்குப் பிடிக்காது!’ என்று சொல்லி விட வேண்டும் என்று நினைத்தாள். ஆனால் அவன் கூடவே நடந்துவர ஆசைப்படாமல் இவளை முன்பாகச் செல்லவிட்டு பின்னே தொலைவில் வந்தான்.

தனக்குரியவளுக்கான பாதுகாப்புக்காக வந்த பூனைப்படை காவல் தலைவன் போன்றே வந்தான். அவனுக்கு அது போதுமானதாக இருந்தது. அவளிடம் விளக்கம் பேசவும், நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்கவும் இப்போது அவனுக்கு விருப்பமில்லாமல் இருந்தது. உன்னைக் காக்க நான் இருப்பேன் என்பதை அவள் உணர்ந்து கொண்டால் போதுமானதுதான். அதைச் செய்து காட்டவே அவன் வந்திருந்தான்.

ஒருவளை தன் இஷ்டப்படி நடக்க வைக்க ஒரே வழி அவளிடம் ஒருவித பயத்தை உண்டு பண்ணுவதுதான். அவள் பயந்து விட்டாள் என்றால் அதற்குத் தயாராக இருக்கிறாள் என்றே அர்த்தம். பயம்தான் ஆரம்பகட்டம். பாலியல் என்பது பாவமான செயல் என்ற பயத்தை நம்மிடம் உருவாக்கியிருக்கிறார்கள். இப்போதும் ஒரு பெண்ணும் ஆணும் காதல் செய்வதை யாராலும் பார்க்க முடிவதில்லை. அதைத் தவிர்க்கவே பலரும் முயலுகிறார்கள். உண்மைகள் எப்போதும் சுடும் என்று தெரிந்திருக்கிறார்கள்.

காதல் பயத்தையே எதிர்த்து அழித்து விடும் ஆற்றல் மிகுந்தது. காதலில் ஒருவர் இருக்கையில் இந்த உலகமானது எதிர்க்க வேண்டிய பொருளாகத் தெரியும். எதையும் செய்துவிடலாமென்ற நம்பிக்கையும் இருக்கும். காதலில் ஒருவன் இல்லாதபோது கரப்பான்பூச்சிகளுக்குக் கூடப் பயந்து குதிப்பான்.
காதலில் ஒருவன் இருக்கையில் அவனது செயல்கள் அனைத்தும் உச்சமாய் இருக்கும். அதை அனுமதிக்காவிட்டால் மிகவும் கீழான நிலைக்கு இறங்கி விடுவான். காதலில் பீடிக்கப்பட்டவன் முட்டாளாகவும், அறியாமையுடனும் இருப்பான். எதையும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் குன்றி இருப்பான். எப்போது மக்கள் பாலுணர்வில் அடக்கப்படுகிறார்களோ, காதல் உறவில் அடக்கப்படுகிறார்களோ அப்போது அவர்கள் வேறு வாழ்க்கை பற்றி கனவு காண்கிறார்கள். அவர்கள் மறுவாழ்க்கை பற்றி நினைத்து ஏங்குகிறார்கள்.

தேவாலயங்களில் பாதிரியார் அன்பைப் பற்றியும், காதலைப்பற்றியும் முதலாகப் பேசுவார். கடவுளுக்கு அடுத்ததாக அதைப் புகழ்வார். ஆனால் அது நிகழ்வதற்கான சூழ்நிலையை மறுப்பார். மறைமுகமாக அதன் வேரை வெட்டி விடுவார். பாம்பு அழகானது என்று சொல்லி எடுத்து நீவி விட்டு, பின்பாக அதன் பல்லை உடைத்து விடுவது போலத்தான்.

மேலான அன்பைப்பற்றியும் பேசுவார். கீழான அன்பை அழிப்பார். உடலைச் சார்ந்த அன்பு தவறானதென்றும், உள்ளத்து அன்பு தான் சரியானது என்றும் கூறுவார். யாரேனும் உடலில்லாமல் வெறும் உயிரை மட்டும் பார்க்க இயலுமா? குழாய் இல்லாமல் தண்ணீர் தொட்டிக்குள் வந்து விடுமா?

குற்ற உணர்வோடு யாரும் காதலில் முழுமையாக ஈடுபடமுடியாது. குற்ற உணர்வு காதலைப் பின்னுக்கு இழுக்கும்.
மிதுன் ஸ்டெல்லாவைப் பின்தொடர மட்டுமே செய்து மகிழ்ந்தான். ஒரு கட்டத்தில் அவளது சார்பாக இவனிடம் பேச ஒருத்தி வந்து சேர்ந்தாள். இவனை அண்ணா என்று அழைக்கும் உள்ளூர்க்காரி அவள்.

“ஏன்ணா அந்தக்கா பின்னாடியே போயிப் போயி சங்கடப்படுத்துறீங்களாமா நீங்க? அந்தக்கா அழுகுதுண்ணா! பாவமா இருக்குது! உனக்கென்ன பொண்ணா இல்ல!” என்று இவனிடம் பேச ஆரம்பித்தவள் பேச்சை சைகை செய்து நிப்பாட்டினான் மிதுன்.

“இந்த விசயமெல்லாம் என்கிட்ட நீ பேசக்கூடாதுடி! நான் என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும்.” இவன் முகத்தைப் பார்த்தவள் சற்றுப் பயந்து பின்வாங்கிச் சென்றாள். அவள் இடத்தை விட்டுப் போனதும் இவனுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. எப்படியோ என்னைப் பற்றி இன்னொருத்தியிடம் ஸ்டெல்லா வாய் திறந்து பேசி விட்டாள். இது நல்ல அறிகுறியாக நினைத்தான்.

யாராவது ஒருத்தி உங்கள் மீது சங்கடப்பட்டுக் கொண்டோ, கோபப்பட்டுக் கொண்டோ இருப்பதும் நல்லதுதான். குறைந்தபட்சம் அந்தக் கவனிப்பாவது இருக்கிறதே! யாருமே உங்களைச் சீந்தவே இல்லை என்றால் உங்கள் அகந்தையை எப்படி வளர்த்துக் கொள்ள முடியும் நீங்கள் மட்டும் தனியாளாக?

***

அன்று ஞாயிறு விடுமுறை தினமாகையால் மிதுன் உள்ளூரில்தான் இருந்தான். மதியப் பேருந்திற்கு ஸ்டெல்லாவின் தங்கையும் அவள் அம்மாவும் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருப்பதைக் கண்டதும் தான் அவனுக்குள் அந்த எண்ணம் உதித்தது. ஆக ஸ்டெல்லா வீட்டில் தனியாகத்தான் இருப்பாள். ஒரு நிமிடம் கிறிஸ்துவை மனதில் கொண்டு வந்து நிறுத்தினான். அவரும் இவனது இடது மார்போரமாக வந்து நின்றார். தன்னை ஆசீர்வதிக்கும்படி தலைகுனிந்து நின்றான். அவர் இவனை ‘மகனே!’ என்று உச்சரித்து ஆசீவதித்தார். மனதில் உள்ளன எல்லாமையும் ஸ்டெல்லாவிடம் இன்று சொல்லி விடலாம். ஆனால் கொஞ்சம் சரக்கு அடித்துக் கொண்டால் வார்த்தைகள் சரளமாக வந்து விழும். இரண்டு கோட்டராக வாங்கிக் கொண்டான். ஒரு கோட்டரைக் காலி செய்தவன் மற்றொன்றை பத்திரப்படுத்திக் கொண்டான் தன் ஜட்டிப் பாக்கெட்டில். அது இவனோடு ஒத்து வந்து ஸ்டெல்லா பேசிய பிறகு மகிழ்ச்சிக்காக குடிப்பதற்கு. இந்த ஞாயிறு இவ்வளவு அழகாக மாறும் என்று அவனுக்கு முன்பாகத் தெரியாதுதான். சைக்கிளில் கிளம்பினான். ஸ்டெல்லா வீட்டின் இடிந்த முகப்பு சுவரோரமாக சைக்கிளை நிறுத்தியவன் பாட்டிலை கிழக்கு முக்கில் பொந்து மாதிரியிருந்த சந்தில் மறைத்து விட்டு வாயருகே கையை வைத்து ஊதிப் பார்த்தான். கோல்கேட் போட்டு வாயை சுத்தப்படுத்திக் கொண்டு வந்திருந்தான். கிறுகிறுப்பு இருந்தாலும் சுத்தமானவனாக வந்திருந்தான்.

நிதானமாக அவள் வீட்டு வாசலில் நடந்து சென்று எப்போதேனும் வந்தால் அமரும் அகன்ற வாசல்படி திண்ணையில் அமர்ந்தான். கதவு திறந்திருந்தது. அவளை இவன் கூப்பிடவுமில்லை. அவளாக வெளிவந்த போது திண்ணையில் அமர்ந்திருந்த இவனைப் பார்த்து அதிர்ந்தாள்.

“எப்ப வந்தீங்க? ஏன் என்னைக் கூப்பிடலை? நான் பயந்துட்டேன்!’ என்றாள். இவன் வாசல் பார்த்து அமர்ந்திருந்தான் திண்ணையில்.

“நான் இப்பத்தான் வந்தேன் ஸ்டெல்லா, எங்கே தங்கச்சியும் அம்மாவும்?”

“அவங்க துணியெடுத்துட்டு வரப் போயிருக்காங்க! வந்துருவாங்க!” நின்று கொண்டே பேசிக் கொண்டிருந்தாள். எப்போதும் படியில் இவன் அருகாமையில் அமர்ந்து பேசுபவள் தான் ஸ்டெல்லா. திடீரென ஞாபகம் வந்தவள் போல ‘உங்களுக்கு டீ வைக்கிறேன்’ என்று வீட்டினுள் திரும்பச் சென்றாள். மிதுன் டீயை மறுக்கலாமென நினைத்தான். இருந்தும் அதைச் சொன்னால் சங்கடப்படுவாளோ? என நினைத்து விட்டு விட்டான். கேஸ் அடுப்பை பற்ற வைத்து தண்ணீருடன் போசியை வைத்து விட்டு வெளியில் வந்தாள் ஸ்டெல்லா. மிதுனுடன் உடனடியாகப் பேசிவிட வேண்டுமென்ற எண்ணத்துடன் அவள் ஒரு வார காலமாகவே இருந்தாள்.

“நான் உங்ககிட்ட இப்ப பேசவா? நீங்க தப்பா நினைச்சிக்கக் கூடாது! உங்க ஊரு பொண்ணு கிட்டக் கூட சொல்லி விட்டேன். அதை உடனே முடுக்கி உட்டுட்டீங்களாம் நீங்க! ஏன் இப்படி எல்லாம் பண்றீங்க நீங்க?”

“நீ எதாச்சும் சொல்வேன்னுதான் நான் இங்கே வந்ததே! உட்கார்ந்து பேசு ஸ்டெல்லா. உன்னைக் கடிச்சுத் தின்னுட மாட்டேன். ஒருக்கா தப்பாயிடுச்சுன்னா எல்லா நேரமும் அதே நடக்குமா? நீ அதனால தான என் கிட்ட இருந்து தள்ளித் தள்ளிப் போறே?” ஸ்டெல்லா இவன் முகத்தில் தெரிந்த பாவத்தைப் பார்த்தாள். எப்போதும் போல வீட்டிலிருக்கையில் மேல்சட்டையும், கலர்ப்பாவடையும் அணிந்திருந்தாள். முடியை அவள் அள்ளியெடுத்து பின்னுக்காக கொண்டை போட்டிருந்தாள். அவளாக இவனுக்கும் எதிர் திண்ணையில் அமர்ந்தாள்.

“ஏன் என் பின்னாடியே ஸ்கூல்ல இருந்து வர்றீங்க? ஏன் நான் இருக்குற பெட்டியிலயே நடந்துட்டே இருக்கீங்க?”

“நீ தான் என்கிட்ட பேச மாட்டீங்கறியே, பேசாத பொண்ணு கிட்ட எப்படி நான் வந்து பேசுவேன்? என்னை மன்னிச்சுக்கோ ஸ்டெல்லா. அந்தன்னைக்கி நடந்தது தப்புத்தான். ஆனா அதுக்கும் பின்னால நான் கொழம்பிப் போயிட்டேன்.”

“நானும்தான். நான் பேசுனா நீங்க எனக்கு மறுபடியும் முத்தம் குடுப்பீங்க, கசக்கப் பார்ப்பீங்க!”
இவன் பதில் சொல்லாமல் சும்மா இருந்தான்.

“அப்ப என்னைப் பிடிக்கலையா உனக்கு?” போதையில் மிகச் சரியாய் கேட்டு விட்டதை உணர்ந்தான்.

“உங்களை பிடிக்கலைன்னு நான் சொன்னனா? இதெல்லாம் நமக்குள்ள ஒத்து வராதுங்க மிதுன். நீங்க வேற நாங்க வேற! எப்படிப் பார்த்தாலும் இது ஒத்து வராது!”

“என்னைப் பிடிக்கும்ல உனக்கு? அது போதும்!” எழுந்தான் மிதுன். திருப்தியாய் இருந்தது அவள் பதில். இனி கிளம்பி விட வேண்டும் இங்கிருந்து. ஆனாலும் என்னைப் பிடிக்கும்னு சொன்னவளுக்கு ஒரு முத்தா கொடுத்து விட்டுப் போகலாமே! கிளம்ப எத்தனித்தவன் திரும்பி இரு கைகளாலும் அவள் தோள்பட்டையைப் பிடித்து தூக்கி நிறுத்தி அணைத்துக் கொண்டான்.

அவள் நெளிந்தபடி பின் வாங்க எத்தனித்தாள். ‘என்னாச்சு செல்லம்?’ என்று முத்தம் கொடுக்க அவள் கழுத்தைக் கையினால் பிடித்து இழுத்தான். ‘இருங்க, ப்ளீஸ் ப்ளீஸ்! தண்ணி கொதிச்சிருக்கும். தூள் போட்டு இறக்கிட்டு வந்துடறேன்!’ என்றாள். இவன் அவளை விட்டான். படியேறியவள் வீட்டினுள் சென்றதும் கதவை அடித்துச் சாத்தி உள்புறமாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள்.

“என்னைப் பிடிக்கும்னு சொன்னில்ல ஸ்டெல்ல! ஏன் இப்படி பண்ணுறே? நான் உன் நாய்க்குட்டி மாதிரிடா! நீயின்னா உசுரு எனக்கு! ஸ்டெல்லா!’ இவன் கதவின் அருகாமை சென்று நின்று அழைத்தான்.

“ப்ளீஸ் ஸ்டெல்லா, நான் உன்னை எப்பவும் ஏமாத்த மாட்டேன்டி! உன்னை ஏமாத்தினா நான் மனுசனே இல்லடி. என்னைப் புரிஞ்சிக்கோடி. நான் உனக்காகவே பொறந்தவன் ஸ்டெல்லா. யாரு என்ன சொன்னாலும் நான் உன்னைக் கைவிட மாட்டேன். நான் உன்னைக் கூட்டிட்டு போறேன்டி! நம்புடி, என் தங்கம்ல! ஒரே ஒருக்கா உன்னை கட்டிப் பிடிச்சி ஒரு முத்தா குடுத்துட்டுப் போயிடுறேன்டி! கதவை நீக்கிட்டு வாடி!”

உள்ளே அரவம் ஏதாவது கேட்கிறதாவென மௌனமாய் நின்றான். சின்னதாய் விசும்பல் ஒலி இவன் காதை வந்தடைந்தது.

“ப்ளீஸ் அழாதேடி! எதுக்கு இப்ப அழறே? நான் இருக்கப்ப நீ அழலாமாடி? கதவை நீக்குடி! எனக்குப் பைத்தியம் பிடிச்சுடும் போல இருக்கேடி. ஏன் என்னை நம்ப மாட்டீங்கறே நீ? உன்னோட ஆள்டி நானு! நீ என்னை என்ன வேணாலும் பண்ணலாம்டி! அழாதேடி ப்ளீஸ்!”

ஆண்களுக்குப் பெண்கள் எப்போதுமே புதிர்கள் நிரம்பியவர்களாகவே இருக்கிறார்கள். ஆண் என்றுமே மண்டைக்கனம் மிகுந்தவன். அவன் எப்போதும் தலையில் வாழ்வதாய் நம்புபவன். பெண் எப்போதும் இதயத்தால் வாழ்பவள். அவளோடு தொடர்பு கொள்ள ஆண் தலையிலிருந்து இதயத்திற்கு வந்தாக வேண்டும். அது எல்லா சந்தர்ப்பத்திலும் நடப்பதேயில்லை. திடீரென மிதுன் கோபப்பட்டான். குடித்திருந்த மது அவனைக் கோபப்படுத்திற்று. இவ்ளோதூரம் இறங்கி வந்து பேசுகிறவனை மதியாமல் வீட்டுக்குள் சென்று கதவடைத்துக் கொண்டால் என்ன அர்த்தமிருக்கிறது இவன் காதலில்? கதவை நங்கென எட்டி உதைத்தான் மிதுன்.
“வெளிய வாடி கருமம் பிடிச்சவளே! எனை என்ன லூசு மசுராண்டின்னு நினைச்சியாடி? எவ்ளோ தூரம் கெஞ்சிட்டு நிக்கேன் கூதிமவொ கொலுப்பெடுத்துப் போயி கதவைச் சாத்தீட்டு உக்கோந்துட்டா! லூசுக் கருமம். இது மேல போயி உசுரையே வெச்சேம் பாரு நானு! இசி தின்னி நாயி தான்டி நானு! ஏண்டி இந்த மாதிரி பண்ணுறே? எனக்குப் பைத்தியம் பிடிச்சுடும்டி இப்போ. இப்பவே செத்துருவேன்டி! எனக்கு அப்படித்தான் இருக்குதுடி! ப்ளீஸ்டி, சத்தீமா சாவணும்னே இருக்குடி!” என்ற போது உள்ளிருந்து வீறிட்ட அலறல் ஒன்று கேட்டது இவனுக்கு.

“ஐயோ! அழாதேடி செல்லம்! நீ அழுதா நான் என்னதான்டி பண்ணுவேன்?” இவன் கதவினருகாமையிலேயே அமர்ந்தான். உள்ளே ஸ்டெல்லா அமைதியடையட்டுமென காத்திருந்தான். ஸ்டெல்லா அமைதியடைய நேரம் பிடித்தது.

“நாம எங்காச்சிம் தூரமாப் போயிடுவோம்! நான் உன்னை பத்திரமா பார்த்துக்குவேன்டி. அனாதைப் பையனா இத்தனை நாள் வாழ்ந்தேன் நானு. எங்கம்மா அப்பன் மூஞ்சி கூட ஞாவகமில்ல எனக்கு. சித்திக்காரிய நெனச்சா ஊட்டுக்குப் போகக்கூட எப்பயும் பயமாவே இருக்கு! இத்தனை நாள்ல ஒரு நாள்கூட நான் எங்கூட்டப்பத்தி உன்கிட்ட பேசியிருக்கனா? எத்தனை நாளைக்கித்தான் நானு பயந்து பயந்தே என் வீட்டுக்குப் போறது? எனக்குன்னு நீ கூட வந்துட்டா நான் அனாதையில்ல தான? எதாச்சிம் சொல்லு ஸ்டெல்லா. இப்படி சும்மாவே இருந்தா நான் என்ன நினைக்கிறது? ஸ்டெல்லா! எந்திரிச்சிப் போடான்னு இப்ப சொல்லு ஸ்டெல்லா, நான் போயிடறேன். என்னைப் பிடிக்கும்னு இப்பத்தானே சொன்னே நீயி! ஒரு நிமிசத்துல புடிக்காத ஆளாப் போயிட்டனா? டீச்சரா இருந்துட்டு மாத்தி மாத்தித்தான் பேசுவியா?” உள்ளிருந்து ஏதேனும் சொல்வாள் ஸ்டெல்லா என்று எதிர்பார்த்தான் மிதுன். உள்ளேயிருந்து இப்போது விசும்பல் ஒலி கூட கேட்கவில்லை.

“யாரையோ ஒருத்தனை நீ கட்டிக்கத்தானே செய்வே! அவனோட வாழத்தான செய்வே! அது ஏன்டி அந்த ஒருத்தனா நானாவே இருக்கக் கூடாது? என்னை வேணா உன்னோட சாமியக் கும்பிடுற ஆளா உங்க கோயில்ல கூட்டிக் கொண்டி உக்காத்தி வெச்சு மாத்திக்கோடி. என்னை என்ன வேணா பண்ணிக்கோ. ஆனா நீ எப்பயும் என்னோட ஸ்டெல்லாவா இருக்கணும். அதுக்காக நான் என்னடி பண்ணனும்? சொல்லு! அப்புறம் எங்க சாமிக இருக்குற கோயிலுப்பக்கம் நாம போகாமயே உட்டுடலாம். நெஞ்சுல வலது கை வெரலுகள வச்சி இப்டி இப்டினு தொட்டு வாயில வெச்சிக்கிறாப்ல வெச்சுக்கறேன் நானும். உன்னியாட்டமே ‘யேசுவே! யேசுவே’ன்னு அடிக்கடி சொல்லுறேன். சொல்லு ஸ்டெல்லா. எதாச்சிம் சொல்லு. உன் வாசப்படியில தான உக்காந்திருக்கேன் நானு, இப்படி பேசாமயே வீட்டுக்குள்ள உக்காந்திருந்தீன்னா எனக்கு என்னான்னு தெரியும்? சர்ச்சுல நம்ம கல்யாணம் முடிஞ்ச பொறவு தான் முத்தம் குடுக்கணும்னு நீயின்னு சொன்னா சேரீனுட்டு போறேன். கலியாணமும் வேண்டாம் ஒரு மண்ணும் வேண்டாம் போடான்னாச்சிம் சொல்லு ஸ்டெல்லா.” மீண்டும் எதாவது அவள் சொல்வாளென காத்திருந்தான் மிதுன். ’சொச் சொச்’ என வீட்டின் கிழக்குப்பக்கத்தில் இருந்து பல்லி கத்தும் ஒலி கேட்டது.

எந்தப் பதிலும் உள்ளிருந்து அவனுக்கு வரவில்லை.