திரைப் படங்களிலிருந்து பிரித்தே பார்க்க முடியாத வகையில் இன்றுவரைக்கும் இந்தியாவில் பாடல்கள் இருந்து வருகின்றன. மௌனப்படக் காலகட்டத்தில்கூட படங்கள் ஓடும் திரைக்கு முன்னால் இசைக்குழுவினர் அமர்ந்து அக்காட்சிகளுக்கு ஏற்ப பாடல்களைப் பாடிவந்தார்கள். 95 ஆண்டுகளுக்கு முnபு உலக சினிமா பேச ஆரம்பித்து நான்கே வருடங்களில் இந்திய சினிமாவிலும் ஒலி வந்தது. முதல் பேசும்படமான ‘ஆலம் ஆரா’வில் உரையாடல்களுடன் ஏழு பாடல்களும் இருந்தன. அதில் டபிள்யூ எம். கான் பாடி நடித்த ‘தே தே குதா கே  நாம் பர்’ என்ற பாடல்தான் முதன்முதல் இந்தியத் திரைப்பாடல்.

தொடர்ந்து வெளிவந்த ‘காளிதாஸ்’ என்ற தமிழ் படத்தில் பேச்சு தமிழில் இருந்தாலும் பாடல்கள் தெலுங்கில் இருந்தன. மகாகவி காளிதாசனின் கதையைச் சொன்ன அப்படத்தில் தியாகராஜ கீர்த்தனைகள் பாடப்பட்டதோடு காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரப் பாடல்களும் இருந்தது இன்று வேடிக்கையாகத் தோன்றக்கூடும். அக்காலத்தில் வெளிவந்த ‘இந்திரசபை’ என்ற படத்தில் 72 பாடல்கள் இருந்தன! உரையாடல்கள் எல்லாமே பாடல்களே. இன்றுவரைக்கும் உலக அளவில் அதிகமான பாடல்கள் கொண்ட படமாக ‘இந்திரசபை’  இருந்து வருகிறது. அதன்பின் வந்த ‘ஸ்ரீகிருஷ்ண லீலா’ படத்தில் 62 பாடல்கள். மேடையில் புகழ்பெற்ற இசைநாடகங்களை அப்படியே படமாக்கியதன் விளைவுதான் இத்தகைய பாடல் படங்கள்.

திரைப்படங்களின் ஆரம்ப காலத்தில் நல்ல குரல்வளமும் செவ்விசைப் பயிற்சியும்தாம் திரைநடிப்புக்கான தகுதிகளாகக் கருதப்பட்டன. ஆகவே பாடகர்களான ‘பாகவதர்’களே திரையில் அதிகமும் தோன்றினர். அவர்களில் நல்ல முகவசீகரமும் கொண்டவராக இருந்த எம்.கே.தியாகராஜ பாகவதரே தமிழ் மனங்களைக் கொள்ளை கொண்ட முதல் திரைநட்சத்திரம். அவரது ‘பவளக்கொடி’ படத்தில் 50 பாடல்கள் இருந்தன.

இவ்வாறாக அன்றைய இந்திய சினிமா என்பது பாடல்களைத் திரையில் காண்பதாக மட்டுமே இருந்தது. இந்நிலையைக் கண்டு வருத்தமடைந்த ஜே.பி.எச். வாடியா என்பவர் தான் எடுத்த ‘நௌஜவான்’ என்ற இந்திப் படத்தில் ஒரு பாடலைக் கூட வைக்கவில்லை. ஆனால் இத்தகைய முயற்சிகள் எந்தப் பயனும் தரவில்லை. தமிழ் சினிமா உலகமானது எம்.கே.தியாகராஜ பாகவதரின் ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்து’ கிடந்தது! அவரது ‘வதனமே சந்திர பிம்பமோ’, பி.யு.சின்னப்பா பாகவதரின் ‘காதல் கனிரசமே’, ‘அன்பில் விளைந்த அமுதமே’ முதலிய புகழ்பெற்ற பாடல்கள் மக்களை மயக்கியே வைத்திருந்தது. இப்பாடல்கள் அன்றைய கேரளத்திலும் புகழ்பெற்று எங்கும் ஒலித்தன. அப்போதெல்லாம் மலையாளத் திரைப்பாடல் என்று ஒன்று இருக்கவே இல்லை.

 

பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்த செங்கோட்டையில் பிறந்த எஸ்.ஜி.கிட்டப்பா நாடகப் பாடல்கள் வழியாக பெரும்புகழ் பெற்று சினிமா வாய்பேச  ஆரம்பிக்கும் முன்னரே தன் 29ஆவது வயதில் மறைந்தவர். அவரது ‘எல்லோரையும்போலே என்னை எண்ணலாகுமோடி போடி’, ‘காயாத கானகத்தே’ போன்ற பாடல்கள் கேரளப் பகுதிகளிலும் இசை ரசிகர்களைப் பித்து பிடிக்க வைத்தன. அவரது பாடல்களைக் கேட்கவே கேரளத்து இசை ரசிகர்களும் பாடகர்களும் எல்லைதாண்டி தமிழ் நாட்டுக்கு வந்தார்கள்.

நடிப்பவர்களுக்குப் பாடகர்கள் பின்னணி பாடும் முறையானது முன்னரே சிறிதளவில் தொடங்கிவிட்டிருந்தது. ‘தூப் ச்சாவோம்’ (1935) என்ற இந்திப் படத்தில் ஆர்.ஸி. பொராலின் இசையமைப்பில் பாருல் கோஷ் குழுவினர் பாடிய ‘மே குஷ் ஹோனா சாஹூம்’ என்ற பாடலே இந்தியாவின் முதல் பின்னணிப் பாடலாகும்.

மலையாள சினிமா 1929இல் ‘பாலன்’ என்ற படம் வழியாகப் பேச ஆரம்பித்தது. அன்று பிரபலமாக இருந்த தமிழ் சினிமாக்களின் பாணியில் அமைந்த அப்படத்தில் தமிழ் பாடல் மெட்டுக்களில் அமைக்கப்பட்ட 23 பாடல்கள் இருந்தன. அடுத்த மலையாளப்படமான ‘ஞானாம்பிகா’வில் தமிழரான ஜெயராமைய்யர் இசையமைத்த பல பாடல்கள் இருந்தன. இதில் செபாஸ்டியன் குஞ்ஞு குஞ்ஞு பாகவதர் பாடிய ‘கதையிது கேள்க்கான்’ என்ற பாடலே மலையாளத்தின் முதல் ‘ஹிட்’ திரைப் பாடல். தொடர்ந்து முதல் மலையாளப் புராணப்படமான ‘பிரஹளாதன்’ வெளிவந்தது. அதில் 25 பாடல்கள். தமிழில் 400 பாடல்களுக்கு மேல் எழுதிய பாபநாசம் சிவன் இப்படத்தில் பாடி நடித்தார்.

தொடர்ந்து ஆறுவருடம் மலையாளத்தில் படங்கள் ஏதும் வெளிவரவில்லை. இக்காலகட்டத்தில்தான் தமிழில் தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிவகவி’, ‘ஹரிதாஸ்’, பி.யு.சின்னப்பாவின் ‘ஆரியமாலா’, ‘ஹரிச்சந்திரா’ முதலிய படங்கள் வெளிவந்தன. கிட்டப்பாவின் பாணியைப் பின்தொடர்ந்த டி.ஆர்.மகாலிங்கம் நடித்துப் பாடிய ‘ஸ்ரீவள்ளி’, ‘நாம் இருவர்’ போன்ற படங்களும் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றன. இப்படங்களும் இவற்றில் இருந்த பாடல்களும் கேரளத்தையும் முழுமையாக ஆக்ரமித்திருந்தன.

ஐந்துவருடம் கழித்து மலையாளத்தில் வெளிவந்த ‘நிர்மலா’ என்ற படத்தில் தமிழ் பாடல்களின் ஆதிக்கத்திலிருந்து மீள்வதற்கான முயற்சி இருந்தது. பின்னணிப் பாடகர்கள் பாடும் முறையானது இப்படம் வழியாகத்தான் மலையாளத்தில் அறிமுகமாகியது. தியாகராஜ பாகவதர், சின்னப்பா போன்று பாடிநடிக்கும் பிரபல நடிகர்கள் இல்லாததே மலையாளத்தின் குறை என்று கண்டுகொண்டதன் விளைவு இது. முதல் ஞானபீடப் பரிசை பெற்ற கேரளப் பெருங்கவிஞர் ஜி.சங்கரக்குறுப்பு பாடல்களை எழுதினார். பி.எஸ்.திவாகர், இ.கே.வாரியர் ஆகியோரின் இசையில் டி.கே.கோவிந்தராவ், சரோஜினி ஆகியோர் பாடினர். இவர்களே கேரளத்தின் முதல் பின்னணிப் பாடகர்கள். இப்படத்தில் ‘கேரளமே லோக நந்தனம்’ என்ற பாடலைப்பாடிய பாலக்காட்டைச் சேர்ந்த ‘பொறாயத்து லீலா’ என்ற பி.லீலா அதற்கு முன்னரே தமிழில் பலபாடல்களைப் பாடி புகழ்பெற்ற பாடகியாக மாறியிருந்தார். பின்னர் தமிழிலும் தெலுங்கிலும் மலையாளத்திலுமாக நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடினார். மலையாளத்திலிருந்து பிறமொழிகளில் பாடி வெற்றிபெற்ற முதல் பாடகி பி.லீலா தான்.

அடுத்தவருடம் தமிழ்நாட்டிலிருந்து பி.ஏ.சிதம்பரநாத் என்ற இசையமைப்பாளர் ‘வெள்ளி நட்சத்திரம்’ படம் வழியாக மலையாளத்திற்கு அறிமுகமானார். மறக்க முடியாத சில பாடல்களை கேரளத்திற்கு அளித்த சிதம்பரநாத் 2007இல் சென்னையில் காலமாகும் வரை அவரிடம் எனக்குத் தொடர்பு இருந்தது. மலையாளத் திரையிசையின் கடந்த காலங்களைப்பற்றியும் தனது இசை வாழ்க்கையின் அனுபவங்களைப்பற்றியும் ஆர்வத்துடன் பேசிக்கொண்டிருப்பார்.

கேரளப் பகுதியில் பிறந்து வளர்ந்த தமிழரான தட்சிணாமூர்த்தி ‘நல்ல தங்க’ என்ற படம் வழியாக மலையாளத்தின் முக்கியமான இசையமைப்பாளராக அறிமுகமானார். முன்பே சில தமிழ்ப் படங்களில் பாடிநடித்த வைக்கம் மணி என்பவரும் பாடகர் ஜேசுதாஸின் தந்தையான அகஸ்டின் ஜோசப்பும் இப்படத்தில் பாடி நடித்தனர்.

இந்தக் காலகட்டத்தில் இந்தி மற்றும் தமிழ்ப் பாடல்களின் மெட்டுகளை அப்படியே மலையாளப் பாடல்களுக்கு அமைப்பதையே பொதுவாக இசையமைப்பாளர்கள் செய்துவந்தார்கள். தமிழ்மெட்டுகள் மலையாளவரிகளுடன் இருந்தன. பாடியவர்களும் தமிழ் உச்சரிப்புடனேயே பாடினர். புகழ்பெற்ற மலையாளப் படமான ‘ஜீவிதநௌகா’வின் இசையமைப்பு தட்சிணாமூர்த்தி. ஆனால் பாடல்கள் அனைத்துமே இந்தி மெட்டுக்களில் அமைந்தவை. மந்திரிகுமாரி தமிழ்ப்படத்தில் ‘வாராய் நீ வாராய்’ என்ற பாடலைப்பாடிய திருச்சி லோகநாதன் ‘ஜீவித நௌகா’வில் தமிழ் உச்சரிப்புடன் பாடியிருக்கிறார். இப்படிப்பட்ட மெட்டுமாற்றப் பாடல்கள் வழியாக ஞானமணி, எஸ்.என்.சாமி, டி.ஆர்.பாப்பா, பிரதர் லட்சுமணன் ஆகியோர் மலையாளத்தில் இசையமைப்பாளர்களாக அறிமுகமானார்கள்.

மலையாளத்தில் அதிகமான பாடல்கள் கொண்ட படம் டி.ஆர்.பாப்பா இசையமைத்த ‘தேவசுந்தரி’. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து கேரளத்துக்கு வந்து பெரிய வெற்றி பெற்ற முதல் இசையமைப்பாளர் பிரதர் லட்சுமணன்தான். அங்கே இருபதுக்கு மேல் படங்களுக்கு இசையமைத்தார். இவரது ‘அஞ்சன ஸ்ரீதரா’, ‘ஆத்ம வித்யாலயமே’, ‘ஈஸ்வர சிந்தயிதொந்நே’, ‘சங்கீதமே ஜீவிதம்’ போன்ற பல பாடல்கள் கேரளப் பண்பாட்டின் பிரிக்கமுடியாத பகுதிகள்.

இதே காலத்தில் தமிழிலும் மலையாளத்திலும் ஒரே சமயம் தயாரான ‘ஜெனோவா’ என்ற படம் வழியாக கேரளத்தின் பாலக்காடு பக்கத்தில் எலப்புள்ளி என்ற ஊரில் பிறந்து கண்ணூரில் வளர்ந்த மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் என்ற எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பாளராக அறிமுகமானார். சிலவருடங்களிலேயே அவர் தமிழ் திரையிசையின் போக்கையே மாற்றியமைத்து தமிழின் இசை மன்னராக ஆனார். தமிழிலும் பிற இந்திய மொழிகளிலுமாக ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசையமைத்த விஸ்வநாதன் மலையாளத்திலும்  மட்டும் 60 படங்களுக்கு இசையமைத்தார். அவற்றில் கேரளம் என்றுமே மறக்காத பல பாடல்கள் உண்டு. தமிழ் திரையிசைக்கு கேரளம் வழங்கிய முக்கியமான கொடை எம்.எஸ்.விஸ்வநாதன் தான் என்றாலும் அவரது இசையில் கேரளப் பண்பாட்டின் அடையாளங்கள் எதுவுமே இருக்கவில்லை.

தமிழ்நாட்டில் இருந்து கேரளத்திற்கு வந்து ஏராளமான இனிய பாடல்களை அமைத்து மறக்க முடியாதவராக ஆனவர் எம். பி. ஸ்ரீனிவாசன். 54 மலையாளப்படங்களுக்கு இசையமைத்தார். ஐந்துமுறை கேரள அரசின் விருதைப் பெற்றார். ஜேசுதாஸைப் பாடகராக அறிமுகம் செய்தது அவரே. அடூர் கோபாலகிருஷ்ணனின் உலகப்புகழ்பெற்ற ‘கொடியேற்றம்’, ‘சுயம்வரம்’, கே ஜி ஜார்ஜின் ‘யவனிகா’ முதலிய படங்களுக்கு அவரே இசையமைப்பாளர். தவிர்க்கமுடியாத பல மலையாளப் பாடல்களுக்கு இசையமைத்தார்.

தட்சிணாமூர்த்தியின் மாணவராக கேரளத் திரைக்கு வந்த ஆ.கே.சேகர் மலையாளத்தில்  பல இன்னிசைமெட்டுகளை அமைத்தவர். ஓர் இசைக்கோர்ப்பாளராக பல மேதைகளிடம் பணியாற்றியவர். அவரது மகன் ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் படமும் மலையாளத்தில்தான் வெளிவந்தது. சலில் சௌதுரியின் உதவியாளராக மலையாளத் திரையுலகுக்கு வந்து 250 படங்களுக்குமேல் இசையமைத்த ஷ்யாம் கேரளத்தில் அதிகமான படங்களுக்கு இசையமைத்தவர். நூற்றுக்கணக்கான மிகச்சிறந்த பாடல்களை அமைத்திருக்கிறார். தமிழிலும் ‘மழைதருமோ என் மேகம்’ போன்ற இனிமையான பாடல்களைத் தந்திருக்கிறார்.

தமிழின் அசாத்திய இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் மலையாளத்தில் 10 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ‘காயலும் கயறும்’ படத்தில் இடம்பெற்ற ‘சர ராந்தல் திரி தாணு’ போன்ற அவரது பாடல்கள் மலையாளிகளின் மனதில் நீங்கா இடம்பெற்றவை. மகாதேவனின் பெரும்பாலான பாடல்களுக்கு இசைகோர்ப்பாளராகப் பணியாற்றிய புகழேந்தியும் ஒரு மலையாளி. தனித்து ஓர் இசையமைப்பாளராகவும் இயங்கியிருக்கிறார்.
சங்கர் கணேஷ், எஸ்.டி.சேகர், ரங்கநாதன் போன்ற தமிழர்களும் மலையாளத்தில் பல வெற்றிப்பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள். சங்கீதராஜன் என்ற எஸ்.பி.வெங்கடேஷ் 90களில் ஏராளமான ஹிட் பாடல்களை அங்கே அமைத்திருக்கிறார். கங்கை அமரனும் மலையாளத்தில் இனிமையான பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

1978இல் மாமேதை கே.ஜி.ஜார்ஜின் இயக்கத்தில் வெளியான ‘வியாமோகம்’ என்ற படம் தொடங்கி மலையாளத்திற்கு மொழிமாற்றிய படங்களும் சேர்த்து 89 மலையாளப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா. கேரளப்பண்பாட்டை நெருங்கி அறிந்த இளையராஜாவின் பல மலையாளப் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றவை. தனது சில திரைப்பாடல்களில் கேரள நாட்டுப்புற இசையை நுணுக்கமாக்க் கொண்டுவர இளையராஜாவால் முடிந்திருக்கிறது. தமிழில் அமைத்ததை விடவும் நுட்பமான பல இன்னிசை மெட்டுக்களை மலையாளத்தில் அமைத்திருக்கிறார் இளையராஜா. கண்ணூர் ராஜன் இசையமைத்த ‘பாற’ என்ற மலையாளப் படத்திற்காக இளையராஜா பாடிய ‘அருவிகள் ஓளம் துள்ளும்’ அவர் பாடிய பாடல்களில் மிகச்சிறந்த ஒன்று என்று சொல்லலாம். மலையாளத்தில் மொத்தம் 14 பாடல்களைப் பாடவும் செய்திருக்கிறார் இளையராஜா.

கேரளம் தமிழ் இசையமைப்பாளர்களைப் பிரியத்துடன் வரவேற்றது. ஆனால் கேரளத்திலிருருந்து வந்த இசையமைப்பாளர்களில் எம்.எஸ்.விஸ்வநாதனைத் தவிர யாருமே தமிழில் பெரிதாக சோபிக்கவில்லை. மலையாள இசையமைப்பாளரான ரவீந்திரன் சில பாடல்கள் வழியாகத் தமிழில் சிறிதுகாலம் கவனத்தைப் பெற்றார். மலையாளமெட்டை தமிழில் அமைத்த ‘ஏழிசை கீதமே’ உதாரணம். கேரளத்தின் பெரும்புகழ்பெற்ற இசையமைப்பாளரான தேவராஜன் தமிழில் சில படங்களுக்கு இசையமைத்தார். ‘அந்தரங்கம்’ என்ற படத்தில் கமலஹாசனை ‘ஞாயிறு ஒளிமழையில்’ என்ற பாடல் வழியாகப் பாடகராக அறிமுகம் செய்தார் என்பதைத் தவிர அவரது சாதனை என்று தமிழில் ஏதுமில்லை.

தமிழ்ப் பாடகிகளான எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம் ஆகியோர் மலையாளத்தில் பல பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். தமிழ்ப் பெண்ணான மாதுரி மலையாளத்தில் தேவராஜனின் ஆஸ்தானப் பாடகியாக பல வருடங்கள் விளங்கி அவரது ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார். பிரபலமடையாவில்லை என்றாலும் டி.எம்.சௌந்தர ராஜன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோரும் மலையாளத்தில் ஒரு சில பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட ஸ்ரீநிவாஸ் வெற்றிபெற்று விருதுகளையும் வென்ற சில மலையாளப் பாடல்களைப் பாடியிருக்கிறார்.

 

ஆனால் இதைவிடவெல்லாம் பெரிய வெற்றியை மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பாடகர்களும் பாடகிகளும் தமிழில் பெற்றிருக்கிறார்கள். பி.லீலாவுக்குப் பின்னர் ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், சித்ரா, சுஜாதா, உண்ணி மேனன், உண்ணிகிருஷ்ணன் போன்றவர்கள் தமிழில் தங்கள் இடத்தை அழுத்தமாக நிறுவியவர்கள். விஜய் ஜேசுதாஸ், மது பாலகிருஷ்ணன் வரைக்கும் அந்த வரிசை நீள்கிறது.

மலையாளத்தில் ஒருகட்டத்தில் வெவ்வேறு தனித்தன்மைகளும் இசை மனநிலைகளும் கொண்ட 25 இசையமைப்பாளர்கள் வரைக்கும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். முற்றிலும் வடகேரள நாட்டுப்புற இசையில் ஊன்றிய கே.ராகவனின் பாடல்கள் முதல் தமிழ்நாட்டுக்காரரான இளையராஜாவின் இசை வரை மலையாளத் திரையிசையானது பரவிக்கிடந்தது. இதனால் பலவகையான பாடல்களும் இசையமைப்பு முறைகளும் மலையாளத்தில் நிகழ்ந்தன. அத்துடன் இன்னிசைமெட்டுகளின் மேல் மலையாளிக்கு இருந்த மோகம் காரணமாகவும் அங்கே ஏராளமான நல்ல பாடல்கள் உருவாயின.

ஆனால் தமிழில் எப்போதும், ஒருகட்டத்தில் ஓர் இசையமைப்பாளரே முதன்மை கொண்டவராக இருந்தார். அவரது பாணியை ஒட்டியே அன்றிருந்த பிறரும் இசையமைத்தார்கள். ஜி.ராமநாதன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என தமிழ்த்திரையிசையின் காலகட்டங்கள் பெரும் இசையமைப்பாளர்களினால் அடையாளப்படுத்தப்படுபவை. இதற்கு ஒரே விதிவிலக்கு எம்.எஸ். விஸ்வநாதனின் சமகாலத்தில் இயங்கிய கே.வி. மகாதேவன் மட்டும்தான். இவர்களின் சாதனைகள் மிகப் பெரியவை என்றாலும் மேற்சொன்ன காரணத்தால் தமிழ் திரையிசையில் பன்மைத்தன்மை மலையாளத்தை விடக் குறைவாகவே காணக்கிடைத்தது.

மகிழ்ச்சிகளைக்கூட மெல்லிய சோகம் இழையோடப் பாடுவது மலையாளப்பாட்டின் இயல்பு. ஆனால் துயரம் உள்ளடங்கிய பீலு என்ற ராகத்தில்கூட ‘என்னடி ராக்கம்மா’ என்ற குத்துப்பாட்டை உருவாக்கும் மனநிலையே தமிழின் சிறப்பு.

கேரளத் திரையிசை ரசிகர்களிடம் அவர்களால் மறக்கமுடியாத பத்துப் பாடல்களை தேர்ந்தெடுக்கச் சொன்னால் அந்த பட்டியலில் ஐந்து பாடல்களாவது பிறமொழியினரான சலில் சௌதுரி, தட்சிணாமூர்த்தி, பிரதர் லட்சுமணன், ஆர்.கே.சேகர், எம். பி. ஸ்ரீனிவாஸன், ஷ்யாம், வித்யாசாகர் போன்றவர்கள் அமைத்தவையாக இருக்கும். இதேபோல் மலையாளியான எம்.எஸ்.விஸ்வநாதனைத் தமிழ்த் திரையிசையிலிருந்து பிரித்துப் பார்க்கவே முடியாது. இசையானது எல்லைகளைக் கடந்ததாகவும் தனக்குரிய தனி உலகம் கொண்டதாகவும் உள்ளது என்பதற்கு நம் திரையிசையே சான்றாகும்.

மொழியும் அதன் பண்பாட்டு அடையாளங்களும் இசைக்கு எப்போதும் இரண்டாம்பட்சமே என்பதையே மீண்டும் மீண்டும் இசைமேதைகள் நிறுவியிருக்கிறார்கள். இசை என்பது ஒரு தனிப் பண்பாடு. மொழி போன்ற வேலிகளால் மண்ணை எல்லைவகுத்துப் பிரித்துவைக்கலாம். ஆனால் இசையைப் பிரிக்கமுடியாது. அது வானத்தைப்போல் பிரிவற்ற ஒரு மாபெரும் வெளி.

 

shaajichennai@gmail.com