வடக்கிலும் தெற்கிலும் விடுதலைக் கொண்டாட்டங்கள் நடந்தன. கிழக்கில் அந்தக் கிழவன் பாதயாத்திரை போய் கொண்டிருந்தார். மேற்கில் புனே நகரில் 200 பேர் கூடினர். தேசியக் கொடியை ஏற்றிய கொண்டாட்டங்களுக்கு நடுவில், அவர்கள் ஸ்வஸ்திக் கொடியை ஏற்றினர். அக்கூட்டத்தில் அந்த தையல் தொழிலாளி பேசினான்.

“தேசம் இரண்டாகப் பிளவுபடுமானால், அது என் பிணத்தின் மீதே நடைபெறும் என்றார் காந்தி. தேசம் இப்போது இரண்டாகப் பிளவுபட்டுவிட்டது. ஆனால் அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்றான்”.

அவர் கொலை செய்யப்பட வேண்டுமென்ற பலரின் திட்டத்திற்கு அவன் கருவியாக பயன்படுத்தப்பட்டான்.துப்பாக்கி, விமானப் பயணம் என்பதெல்லாம் அந்த தையல்காரனுக்கு அன்று அவ்வளவு எளிதாகக் கிடைத்தது. சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலை கொடூரமாக நிகழ்த்தி முடிக்கப்பட்டது. காந்தி என்ற இந்துவை, நாதுராம் விநாயக் என்ற இந்துத்வா கொலை செய்தான். சுதந்திர இந்தி
யாவில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்ட முதல் உடலும் காந்தியினுடையதே. கோட்சே என்பது அவனது பெயரல்ல. அது புனைப்பெயர் தான். கோட்சே என்றால் அறிவுசார் செயல்பாட்டாளர் என்று பொருள்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அறிவுசார் பிரிவைச் சேர்ந்தவன் நாதுராம் விநாயக். ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும், நாதுராமுக்கும் தொடர்
பில்லை என்பார்கள். அதற்கான வரலாற்று ஆவணங்களையெல்லாம் தேட வேண்டிய அவசியமே இல்லை. அவனுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்போடு தொடர்பிருக்கிறது என்பதற்கு இன்றளவும் உள்ள ஒரே சாட்சி, அவனது கரைக்கப்படாத அஸ்திக் கலசம்தான். மற்றொன்று, அவ்வமைப்பில் யாருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்படாது.

வெற்றி என்றால் பிராமணர் என்பதும், பிரச்சனை என்றால் இந்து என்று ஒளிந்து கொள்வதுமான மூளை வலிமையுள்ளவர்கள் தலைமை தாங்கும் அமைப்பு அது. நேருவுக்கும் படேலுக்கும் கருத்து வேறுபாடு கடுமையாக உள்ளது என்றனர். 1948 ஜனவரி 30 மாலை, காந்தியைப் பிர்லா மாளிகையில் சந்தித்தார் படேல். அப்போது மணி மாலை 4.30. படேலுக்கு காந்தி அறிவுரை வழங்கினார்.

அவர் எப்போதும் 5 மணிக்கு பிரார்த்தனைக்கு சென்றுவிடுவார். படேலோடு பேசியதில் தாமதம் ஆனது. 5.10 க்கு பிரார்த்தனைக்கு கிளம்பினார். படேலும் வெளியே வருத்தத்தோடு கிளம்பினார். பிரார்த்தனைக்குப் படேலை அழைக்கிறார் காந்தி. அங்கே கோட்சே நிற்கிறான் என்பதை, தனது முன் அறிவால் படேல் அறிந்திருப்பாரோ என்னவோ, நான் வரவில்லை காந்தி என்கிறார்.

பிரார்த்தனை நடக்கும் இடத்திற்கு சற்றுத் தாமதமாக 5.13 க்கு வருகிறார் காந்தி. வழக்கம் போல் அவ்விடத்தில் கூட்டம் கூடியிருந்தது. திடீரென கூட்டத்திற்குள் வேகமாக முன்னேறி, மூன்று முறை அவர் மார்பில் சுடுகிறான் நாதுராம் விநாயக் கோட்சே. ஹேராம் என்று கூறிக்கொண்டே கீழே சாய்கிறார்.

நேருவுக்குத் தகவல் செல்கிறது. அதிர்ச்சியில் உறைகிறார். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நல்வாழ்வின் விளக்கு அணைந்தது எனக்கூறுகிறார். காந்தியின் உடல் அஞ்சலிக்காக பிர்லா மாளிகையின் முதல்மாடி கைப்பிடிச் சுவர்மீது வைக்கப்பட்டது. குண்டு பாய்ந்த மார்பை மக்கள் பார்க்கட்டும் என்று அவரது மகன் தேவதாஸ் உடலின் மார்புப் பகுதியை மூடவில்லை. தீவிரவாதச் செயலின் கோழைத்தனத்தை உலகம் அறியட்டும் என்றுதான். தீவிரவாதங்கள் நிலைத்த தன்மை கொண்டதுமல்ல.

காந்தியின் இரங்கல் கூட்டத்தில் மவுண்ட்பேட்டன் பேசினார்.

“200 ஆண்டு அடிமை இந்தியாவில் காந்தியை உயிரோடு வைத்திருந்தோம். சுதந்திர இந்தியாவில் உங்களால் ஒரு வருடம் கூட அவரை உயிரோடு வைத்திருக்க முடியவில்லை” என்றார். ஒவ்வொரு இந்தியரின் முகத்திலும், மவுண்ட் பேட்டனின் ஒவ்வொரு சொல்லும் பட்டுத் தெறித்தது. காந்தி தகனம் செய்யப்பட்டார். அவரது எரியூட்டப்பட்ட சாம்பல் நதிகளிலும்,கடல்களிலும் கரைக்கப்பட்டது. மலைகள் மேல் விமானம் மூலம் தூவப்பட்டது.

சாவர்க்கர் உள்ளிட்ட ஒன்பது பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டதில் கோட்சே முதல் குற்றவாளி. சாவர்க்கருக்குப் போதிய ஆதாரமில்லாமல் செய்த வல்லமையே இன்று வானுயர சிலையாக எழும்பி நிற்கிறது. மற்ற குற்றவாளிகள் எட்டுப் பேரும், விடுதலை செய்யப்பட்டவனின் காலில், நீதிமன்ற அறையில், நீதிபதியின் கண்ணெதிரேயே விழுந்து வணங்கினர். அன்றைய இந்தியா திகைத்து நின்றது.

1949 நவம்பர் 8 கோட்சேக்குத் தூக்கு உறுதி செய்யப்பட்டது. தூக்கு உறுதி செய்யப்பட்ட ஒரே வாரத்திற்குள் 1949 நவம்பர் 15 அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவன் தூக்கிலிடப்பட்ட பிறகு எந்தப் பார்ப்பனரும் கோட்சே என இன்று வரை பெயர் வைத்துக் கொள்ளவில்லை. காந்தி இந்துவாக இருந்தார். கோட்சே இந்துத்வாவாக இருந்தான். இந்துவுக்கும் இந்துத்வாவுக்குமான வித்தியாசத்தை இந்தியாவுக்கு உணர்த்தியவன் அவன். அகண்ட பாரதம் என்று அமைகிறதோ அன்றே எனது அஸ்தி கரைக்கப்பட வேண்டுமென்று சொல்லிவிட்டான்.

1922 மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சித்பவனப் பார்ப்பனரான விநாயக் தாமோதர் சாவர்க்கர் எழுதிய நூலின் தலைப்பு இந்துத்வா என்பது. அதற்கு முன் அச்சொல் புழக்கத்தில் இல்லை. இந்தியாவில் இரண்டே தேசிய இனங்கள் உள்ளன. ஒன்று இந்து, மற்றொன்று முஸ்லிம் என்ற பாகுபாட்டை அந்நூல் கூறியது.

அதன் அடிப்படையில் சித்பவனப் பார்ப்பனர்களால் இந்துத்வா எனும் சங்கத்துவ மதவெறித் தத்துவம் தோற்றுவிக்கப்பட்டது. 1925 ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் எனப்படும் அமைப்பு உருவாக்கப்பட்டது. ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் என்ற பெயர் முழுக்க முழுக்க சமஸ்கிருதம் தான். இதை உருவாக்கியவர் சித்பவனப் பார்ப்பனரான கேசவராம் பலிராம் ஹெட்கேவர். இவரது நினைவு தினம் ஜூலை-21. அதைத்தான் யோகா தினம் என இங்கு உருட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதிருக்கும் இந்துஸ்தானம் எனும் நாட்டுடன் பழைய நாடுகளையும் இணைத்து ஒரே நாடாக ஆக்கப்பட வேண்டும், அது அகண்ட பாரதமாகக் காட்சியளிக்கும் என்பது அந்த இயக்கத்தின் குறிக்கோளாக சொல்லப்பட்டது. அகண்ட பாரதத்தில் சிந்துநதி பாயும். அதில் தான் தனது பிணம் எரித்த சாம்பலைக் கரைக்க வேண்டும் என்பது காந்தியைக் கொன்ற கொலைகாரன் நாதுராம் விநாயக் கோட்சேவின் இறுதி வேண்டுகோள். அதனாலேயே சாம்பல் செம்பு ஒன்றில் வைத்துப் பாதுகாக்கப்படுகிறது. அகண்ட பாரத மாதா தேசப்படத்தின் முன்பாக ஆண்டுதோறும் வைத்து வணங்கப்படுகிறது. கோட்சேயின் குடும்பத்தினருடன் பார்ப்பன வெறிக்கும்பலும் கூடி நின்று கும்பிடுகின்றனர். அகண்ட பாரதத்தை அமைக்கச் சபதம் ஏற்கின்றனர். 1949 முதல் இக்கூத்து நடைபெறுகிறது. அகண்ட பாரதம் சாத்தியமா? அகண்ட பாரதம் எது?

இந்தியத் துணைக்கண்டத்திற்கு பாரதவர்ஷம் என்று பெயராம். இதன் உள்பிரிவு பரத கண்டமாம். இதன் வடக்கே இமயமலை, கிழக்கே மகோததி எனும் கடல், தெற்கே ரத்னாகரம் எனும் கடல், மேற்கே பாச்சாத்ய எனும் கடல் ஆகியவை இன்றைய இந்தியாவின் நான்கு எல்லைகளாம். இப் பரத கண்டத்தில் 56 தேசங்கள் இருந்தனவாம். இவற்றைத் தனித்தனி அரசர்கள் ஆண்டனராம். அவர்கள் சூரிய வம்சத்தையும் சந்திர வம்சத்தையும் சேர்ந்தவர்களாம். ஆக, இந்தியா எனும் நாடு என்றுமே ஒரே நாடாக இருந்ததில்லை என அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள். 56 தேசங்களும் மூன்று பெரும் பிரிவுகளில் அடங்குமாம். பிரம்மா வர்த்தம், ஆர்யா வர்த்தம், தட்சிணபதம் என வைக்கப்பட்டிருந்தனவாம்.

பிரம்மா வர்த்தம் எனப்படுவது காஷ்மீரம், மத்ரம், காந்தாரம், பர்பரம், வநாயு, சிந்து, சவ்வீரம், மாளவம், கூர்ஜரம், அவந்தி, தகார்ணம், விதர்ப்பம், ஆபீரம், சால்வம், திரி கர்த்தம், கேகயம், விராடம் ஆகிய 17 தேசங்கள் அடங்கிய பகுதி. ஆரிய வர்த்தம் எனப்படுவது பாஹ்லிகம், குரு, சூரசேனம், குந்தலம், மத்ஸ்யம், குந்தி, நிஷதம், சேதி, நிஷாதம், கோசலம், பாஞ்சாலம், நேபாளம், ஆரட்டம், பார்வதம், ப்ராக்ஜோதிஷம், காமரூபம், அங்கம், விதேகம், வங்கம், மத்ரம், ஹேஹயம் ஆகிய 21 தேசங்கள் ஆர்யா வர்த்தப் பகுதியில் அடங்கும்.

தட்சிணபதம் எனப்படுவது உத்கலம், கலிங்கம், யவனம், கொங்கணம், மகாராஷ்டிரம், குளிந்தம், ஆந்த்ரம், கர்நாடகம், த்ராவிடம், சோழம், பாண்டியம், கேரளம் ஆகிய 12 தேசங்களும் தட்சிணபதம் பகுதியாம்.

இம்மூன்று பகுதிகளிலும் பிரம்மா வர்த்தம், ஆரியா வர்த்தம் ஆகிய இரண்டு பகுதிகளும் புண்யபூமி என்ற பொதுப் பெயரால் வழங்கப்பட்டதாம். தட்சிண பதத்தில் இருந்தோர் ஆரியர் அல்லாதோர். அநாரியர். ஆகவே, அவர்கள் இருக்கும் பூமி புண்யபூமி ஆகாது. ஆரியர் இருக்கும் பூமிதான் புண்யபூமியாம்! இப்படிக் கூறுவது மனுஸ்மிருதி, விஷ்ணு புராணம், பாகவதம் முதலிய புராணங்கள்.

தட்சிணபதம் பகுதிக்கு வடக்கு எல்லை விந்திய மலை. தெற்குப் பகுதியில் சூரிய ஒளிபட முடியாத அளவுக்கு மிகவும் உயரமாக அமைந்து விட்டதாம். இதனால், தெற்கே ஆரோக்கியம் கெட்டதாம். பயிர்கள் வளரமுடியாமல் போய் விட்டதாம். ஆகவே, மக்கள் எல்லாம் அகத்தியமுனியிடம் முறையிட்டனராம். அகத்தியர் விந்திய மலையின் உயரத்தை மட்டுப்படுத்தினாராம். அகத்தியரைக் கண்டதும் விந்திய மலை குனிந்து வணங்கியதாம். அந்த அளவு உயரமே இருக்கும்படியாக அகத்தியர் ஆக்கிவிட்டாராம்! 56 தேசங்கள் உண்டு எனப் புராணங்களில் இருந்தாலும், இந்தியா எனக் குறிக்கப்படும் தற்போதைய நாட்டில் 39 தேசங்கள்தான் அடங்கியிருக்கின்றன.

சீனா மிகப்பெரிய பொதுவுடமை நாடாகவும், சிம்மளம் (சிங்களம்) தனியாக சிங்களப் பேரினவாத நாடாகவும் உள்ளது. பாரசீகம் என்பது இன்றைய ஈரான், ஈராக் முதலிய பல நாடுகளாக உள்ளது. காம்போஜம் என்பது ஆப்கானிஸ்தான் நாடாகவும், இசுலாமியர்களின் நாடுகள் எனப்படும் பகுதியாகவும் விளங்குகின்றன. மதமற்ற, பவுத்தம் சார்ந்த, இசுலாம் பரவியுள்ள இந்த நாடுகள் எப்படி பரத கண்டத்தில் சேரும்? சேர முடியும்? சேர்க்க முடியும்?

ஆபீர தேசம், சால்வ தேசம், ஸிந்து தேசம், சவ்வீர தேசம், வநாயு தேசம், பர்பர தேசம், கிராத தேசம், காந்தார தேசம், மத்ர தேசம் ஆகியவை இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அடங்கியுள்ளன. இவற்றை அகண்ட பாரதத்தில் எப்படிக் கொண்டுவர முடியும்? இந்து எனும் தன்னுணர்வு கொண்ட மக்களை ஏமாற்றத்தான் அகண்டபாரதம் எனும் கதை பயன்படுமே தவிர, நடைமுறைக்கு வரவே வராது!

காம்போஜம் இன்றைய திபெத். இதற்கும் சீனாவுக்குமான தகராறு தீர்ந்தபாடில்லை. திபெத்தின் தலாய்லாமா இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். அவரை ஒப்படைக்க கோரியே இந்திய-சீன யுத்தமே நடைபெற்றது. திபெத் எப்படி அகண்டபாரதத்தில் அடைபடும்?

நேபாளம் தனி நாடு. இந்நாட்டின் மீது யார் செல்வாக்கு செலுத்துவது என்பதில் இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டு வருகின்றன. நேபாளியர்களில் இந்து மதத்தினரும் உண்டு. பவுத்த மதத்தினரும் உண்டு. எனவே, மக்களும் இப்படியும் அப்படியுமாக உள்ளனர்! இது எப்படி இந்தியா வுடன் இணையும்?

பார்வத தேசம் என்பது இன்றைய பூட்டான். பவுத்தர்கள் நிறைந்த தனி நாடு. மன்னர் உண்டு. நாடாளுமன்றமும் உண்டு. பாதுகாப்புக்கும் அயல் உறவுக்கும் இந்தியா உத்திரவாதம். ஆனால், இந்திய நாட்டுடன் இணையும் பேச்சே இல்லை. ஸிம்மதேசம் என்பது தற்போதைய வங்கதேசத்தில் அடங்கியது. முதலில் பாகிஸ்தானில் (மத அடிப்படையில்) இருந்தது. பிறகு வங்கதேசமாக மொழி அடிப்படையில் மாறியுள்ளது. எப்படி இந்தியாவுடன் சேரும்?

வங்கதேசம் என்ற பெயரில் இருந்த 56 தேசங்களில் ஒன்று பிரிட்டிஷ் ஆட்சியில் மேற்கு, கிழக்கு எனப் பிரிக்கப்பட்டது. மேற்கு வங்கம் இந்தியாவிலும்,கிழக்கு வங்கம் பாகிஸ்தானிலுமாக ஆனது. அதுவே பாகிஸ்தானிடமிருந்து பிரிந்து வங்கதேசமாக உள்ளது. எப்படி இந்தியாவுடன் இணையும்?

மேற்கண்ட உண்மை நிலவரங்கள் ஆர்.எஸ்.எஸ். அகண்ட பாரதக் கனவு நனவாகவே முடியாத ஒன்று என்பதைத் தெளிவாக்கிட உதவும். இவை அவர்களுக்கும் தெரியும். ஆனாலும், ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில், அவர்கள் சநாதனிகள். அப்படி என்றால் மாறாதவர்கள், மாற்றத்தை விரும்பாதவர்கள், மாறுவதுதான் மாறாதது என்ற உலகப் பேருண்மையையோ உலக இயற்கை நியதியையோ ஏற்க மறுப்பவர்கள். ஆனால், தந்தை பெரியார் கூறியவாறு, சுயமரியாதை என்பது மாறுதலுக்கு ஆளாகும் தத்துவம். மெய்மை நிலையைப் புரிந்து பேசுவதும் செயல்படுவதும் சுயமரியாதைக்காரர்களின் பண்பு.

விந்தியத்திற்கு வடக்கே இருக்கும் பண்பாடும், விந்தியத்திற்குத் தெற்கே தட்சிணபதம் என இவர்கள் சொல்லும் மக்களின் பண்பாடும் வெவ்வேறு வகையில் அமைந்தன.

தமிழ்நாட்டுச் சுமங்கலிகள் வெண்மை வஸ்திரத்தை அணியமாட்டார்கள். தெலுகு, மராட்டியம், குஜராத் மகளிர் அந்தப் பழக்கம் கொண்டிருக்கின்றனர். தென்னாட்டுப் பார்ப்பனர்கள் மீசை வைத்துக்கொள்ள மாட்டார்கள். மகளிருடன் அமர்ந்து சாப்பிட மாட்
டார்கள். ஆனால், வட தேசங்களில் இது நியாயமென்று ஒப்புக்கொண்டு அதுபோல நடத்தப்பட்டு வருகின்றது.

சிந்து, மாளவம், கொங்கணம் முதலிய தேசங்களில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை திருமணம் போன்ற நற்காரியங்கள் நடைபெறுவதில்லை. ஆனால், தெலுகு, தமிழ் போன்ற பகுதிகளில் இம்மாதங்களில்தான் சுபகாரியங்கள் நடைபெறுகின்றன. வங்கம், கோசலம் அகிய தேசங்களிலும் இதே மாதிரிதான் சுபகாரியங்களை நடத்திக் கொள்கிறார்கள். 56 தேசங்களில் யவனம் (ஐதராபாத்) கிராதம், பாரசீகம், காம்போஜம், சீனம் முதலிய சில தேசங்களில் வேறு ஜாதி ஜனங்கள் நெடுநாளாய் வசிக்கிறபடியால் அவர்
களுடைய மதமும் ஆசாரமும் உணவும் உடுப்பும் விரோதமாகவே காணப்படும். இவ்வாறெல்லாம் பி.வி. ஜெகதீச அய்யர் என்பவர் 1918 இல் எழுதிய புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் எனும் நூலில் எழுதியுள்ளார். அவர்களே ஒத்துக் கொண்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். தொடங்குவதற்கு முன்பே ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், இந்தியா ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி எனப் பேசுகிறார்கள். இந்தியா பல மொழிகள், பல கலாச்சாரங்களைக் கொண்ட நாடுமட்டுமலல, பல இனங்களைக் கொண்ட நாடும் கூட. இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். வடகிழக்கு மாநிலங்களில் பள்ளிகளில் இந்தி சொல்லித் தரப்படும் திட்டத்திற்கு எதிர்ப்பு வந்தது ஏன்? அவர்களுக்கு அது அந்நியமொழி. அவர்களின் இனமே வேறு. இனத்தால், மொழியால், நடைமுறையால், கலாச்சாரத்தால் தனித்துவமானவர்கள். இந்தியன் எனும் ஒட்டு வேலைக்கு அவர்கள் ஒத்துவரவே மாட்டார்கள். இதைப் போலவே திராவிடர்களும் ஒத்துவரமாட்டார்கள்.

பல மொழிகள், பல மதங்கள்,பல பண்பாடுகள் இணைந்திருக்கும் இந்தியா உருவானதன் அடிப்படைக் காரணிகளில் ஒன்று யாதெனில், அது இனம், மொழி,நிர்வாகம் வேறு வேறு என்பதால் தான். அதை மதமாக இணைக்க முயல்கிறார்கள் மதவெறியர்கள். பாகிஸ்தான் பிரிந்து வங்கதேசம் உருவான வரலாறுக்குள் இருக்கிறது இந்தியாவிற்கான பாடம். தங்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் நிரந்தரமான பகையை உருவாக்கி தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டே இங்கிருந்து வெளியேறியது வெள்ளை ஏகாதிபத்தியம். அச் சூழ்ச்சிக்கு முதல் விதை விதைத்தவர் சாவர்க்கர். அடுத்து அதை அமலாக்கியவர் முகமது அலி ஜின்னா. இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.

ஆனால் இவர்கள் இருவரது மத நோக்கமும் முழுமையாக நிறைவேறவில்லை. ஏனெனில் மக்களின் வாழ்நிலையே அனைத்தையும் தீர்மானிக்கிறது.

மதச்சார்பற்ற இந்தியாவும் மதச்சார்பு கொண்ட பாகிஸ்தானும் உதயமானது. பாகிஸ்தானால் மத ஒற்று
மையுடன் நீடிக்க இயலவில்லை. மேற்கு பாகிஸ்தானின் உருது பேசுபவர்களால் கிழக்குப் பாகிஸ்தானின் (வங்காளம்) வங்க மொழி பேசுவோர் புறக்கணிக்கப்படுகின்றனர் என்ற குரலில் இருந்தே வங்கதேசம் உருவாக காரணமாயிருந்தது.

மொழியால், பண்பாட்டால் பிரிந்திருந்தவர்களை மதம் இணைத்து வைத்திருக்க இயலவில்லை. வங்கத்து முஜிபுர் ரஹ்மானின் அவாமிலீக் கட்சி தனது கட்சி சின்னமாகப் படகையே தேர்ந்தெடுத்தது. ஏனெனில் வங்கத்தின் வாழ்நிலை படகும்,கடலும் சார்ந்ததே. வங்கம் என்ற சொல் கூட வைகையின் அழிந்து போன அழகன்குளம் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்ச் சொல் தான். வங்கம் என்றால் துணிகளைக் கட்டி கடலில் சென்ற படகு தான். அந்த வங்கம் சென்றகடல் என்பதால், அதற்கு வங்கக்கடல் என்று பெயர்.

நாடு உருவாக மதம் தான் அடிப்படை என வாதிடுகிறார்கள். கிறிஸ்தவ ஐரோப்பாவும், இஸ்லாமிய அரேபியாவும்,பௌத்த ஆசியாவும் இன்றும் பல நாடுகளாகப் பிரிந்தே கிடப்பது ஏன்?

காட்டில் ஒரு கோழி இரையெடுத்துக் கொண்டிருந்தது. கோழியை உண்ண ஆசைப்பட்ட நரி பாய்ந்து வந்தது. கோழி பறந்து சென்று மரத்தில் அமர்ந்துவிட்டது. உன்னோடு சேர்ந்து விளையாட வந்தேன். என்னைத் தனியே விட்டுவிட்டு மரத்தில் ஏறி அமர்ந்திருப்பது சரியா? கீழே இறங்கி வா, சேர்ந்து விளையாடலாம் என்றது நரி. நரியின் தந்திரத்தை அறிந்த கோழி, நான் நீண்ட நேரம் விளையாடியதால் கால் வலிக்கிறது, நீயே விளையாடு என்றது. தனியாக விளையாடினால் நன்றாகவா இருக்கும். சேர்ந்து விளையாடுவோம் வா என்றது நரி.

கீழே இறங்கி வர இப்போதும் கோழி மறுத்தது. நான் உன்னைத் தின்று விடுவேன் என்ற பயத்தினால்தானே, பொய் சொல்கிறாய். நேற்று இரவு நடந்ததை அறிவாயா என்று கேட்டது நரி. அறியவில்லை. சொல் என்றது கோழி. நேற்று இரவு, காட்டிலுள்ள விலங்குகள், பறவை
கள் எல்லோரும் கூட்டம் நடத்தினோம். கூட்டத்தில் கடவுள் கலந்து கொண்டார் என்றது நரி.

அப்படியா? நான் அறியவில்லையே என்றது கோழி. இனிமேல் நமக்குள் ஒருவரை ஒருவர் கொன்று உண்ணக்
கூடாது என்று கடவுள் சொன்னார். எல்லோரும் அதை ஏற்றுக் கொண்டோம். எனவே தைரியமாக்க் கீழே இறங்கி வா, நான் உன்னைக் கடித்து உண்ணமாட்டேன் என்றது நரி.

கடவுள் முன்னிலையில் இப்படி முடிவாகிவிட்டதா! மிகவும் மகிழ்ச்சி. அப்படியென்றால், அதோ உனக்குப் பின்னால் ஒரு சிறுத்தை நிற்கிறது. அதனோடு சேர்ந்து விளையாடு. நான் பிறகு வந்து சேர்ந்து விளையாட வருகிறேன் என்றது கோழி. நரி உடனே அங்கிருந்து ஓடிவிட்டது. பிறரை அடித்துக் கொன்று, தான் மட்டும் வாழ வேண்டும் என்று நினைப்பவரெல்லாம், கடவுள் சொன்னதாகவே கதை சொல்
கிறார்கள். அப்படிப்பட்ட கதைகளில் ஒன்றுதான் அகண்டபாரதம். கோட்சே கும்பல் நரி போன்றே பேசிக் கொண்டிருக்கிறார்கள். கோழிக்கான அறிவு இருந்தால் போதுமானது. அகண்டபாரதம் என்ற முழக்கம்தான் சர்வதேச தீவிரவாதங்களில் முதன்மையானது.

இக்கரையில் புலியும், அக்கரையில் மானும் நீர் குடித்தால்தான், இரண்டும் காட்டில் வாழ முடியும். ஒரே குட்டையில் ஒன்றாக இரண்டும் நீர் குடிக்க வாய்ப்பேயில்லை.

xaviersuji@gmail.com