ஒருத்தருக்கு கால் உடைந்து போகுதுன்னு வச்சுக்குவோம். நம் முன்னோர்கள் என்ன பண்ணிட்டிருந்தாங்கன்னா கால் உடைந்தவரை படுக்க வைத்து இரண்டு பக்கமும் 4 பேர் உக்காந்து கையையும் காலையும் அமுக்கி பிடிச்சுக்குவாங்க. ஒருத்தர் மேலே இருந்து கொஞ்சம் கொஞ்சமா கையை வச்சு அமுக்கி பார்த்தே அவரோட அனுபவத்தை வச்சு குத்து மதிப்பா எத்தனை இடத்தில, என்ன டிசைன்ல உடைந்திருக்கும்னு கணக்கு போட்டு ஒரு தர்ப்பையை வச்சு கால சுத்தி இறுக்கி கட்டிவிட்டுருவார். எலும்புக்கு தானாகவே வளர்ந்து ஒட்டிக் கொள்ளும் தன்மை இருப்பதால சரியான இடத்தில் பொருந்தி இருந்தால் ஒட்டிக்கும், இல்லேன்னா ஒட்டிக்காது.

10 நாளைக்கு ஒரு தடவை திறந்து பாத்து, சரி ஆச்சுன்னா பெருமையை அவர் எடுத்துக்குவார். ஆகலைன்னா சாமி மேலயும், விதி மேலயும் பழியை போட்டு முடிச்சுக்குவார். அவன் ஊனமாகவே அலைய வேண்டியது தான். இப்படி குத்துமதிப்பா சிகிச்சை செய்துட்டிருந்த அனைத்துலக முன்னோர்களுக்கும் 1895’ல ஒரு இன்ப அதிர்ச்சி கிடைச்சுது. ஆமா, இனிமே அப்படி செய்ய வேணாம். உடலை ஊடுருவும் ஒரு கதிரை நான் கண்டு பிடிச்சுட்டேன்னு ஜெர்மனியை சேர்ந்த Wilhelm Rontgen அறிவிச்சிருந்தார்.

அதுவரைக்கும் போரில் குண்டடி பட்டு வந்தவங்களை, குண்டு எங்கே இருக்குன்னு தெரியாம, பல படங்களில் ஹீரோக்கள் குச்சிய விட்டு நோண்டி எடுக்கிறா மாதிரி குத்துமதிப்பா எடுத்திட்டிருந்த வைத்தியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டாங்க. கண்டுபிடிக்கப்பட்ட வெகு சில நாட்களிலேயே பயங்கர ஃபேமஸ் ஆனது Rontgen’ன்னால் என்ன பெயர் வைப்பதுன்னு தெரியாமல் X-ray என்று பெயர் சூட்டப்பட்ட அந்தக் கதிர்…!

Rontgen ஒரு பிஸிக்ஸ் ஆராய்ச்சியாளர். வேற ஏதோ ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தவர், தன்னுடைய அறையின் ஒரு மூளையில் ஏதோ வெளிச்சம் தெரிய,அது எங்க இருந்து வருதுன்னு தெரிஞ்சிக்க தேடியிருக்கார். வெளிச்சம் வருவதற்கான வழியே இல்லாத அந்த அறையின் பல்வேறு தடுப்புகளைக் கடந்து, பக்கத்து அறையில் இருந்து வருவதை அறிந்து, அடர்த்தியான கருப்புத் துணியைப் போட்டு மூடி பார்த்தும் அந்த வெளிச்சம் வர, இரும்பு போன்ற பொருள்களைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் துளைக்கும் கதிர் அது எனத் தெரிந்து கொண்டார்…!

இந்தக் கண்டுபிடிப்புக்கு நடுவில ஒரு காமெடி நடந்தது… எக்ஸ்ரே கண்டுபிடிச்ச ஆர்வத்துல Rontgen பொண்டாட்டியை வாம்மா போட்டோ எடுக்கலாம்னு கூப்பிட்டிருக்கார். அந்தம்மா மேக்கப் எல்லாம் போட்டு, ‘ஏங்க மோதிரம் போட்டோல நல்லா வரணும் பாத்துக்கோங்க’ன்னு சொல்லி போஸ் குடுத்திருக்கு. இவர் எடுத்த படத்துல கை எலும்பும், மோதிரமும் மட்டுமே தெரிய. ‘என்னைய பேய் மாதிரியா எடுத்து வச்சிருக்க’ன்னு அந்தம்மா கொலை வெறியானதாக ஒரு வரலாறு உண்டு. ஆனால் உலகின் முதல் எக்ஸ்ரே மாடல் என்ற பெருமை அந்தம்மாவிற்குக் கிடைத்தது…!

மருத்துவ உலகில் எக்ஸ்ரே மிகப்பெரிய மாறுதலைக் கொண்டு வந்தது. ஏற்கனவே வளைத்து வளைத்து போரில் ஈடுபட்டு கொண்டிருந்த ஜெர்மனி 1897’லேயே போரில் எக்ஸ்ரேவை பயன்படுத்தி குண்டு எங்க இருக்கு எனத் தெரிந்து அறுவை சிகிச்சை மூலமாக அகற்றி மருத்துவ சிகிச்சையில் 8 கால் பாய்ச்சலைப் புகுத்தியது.. Rontgen பேடண்ட் வாங்க மறுத்து விட்டதால் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் என்று உலகம் முழுதும் பரவியது எக்ஸ்ரே..!

எக்ஸ்ரேயின் அரிய ஆற்றலைத் தெரிந்து கொண்ட உலகம் பல்வேறு வரலாற்று காமெடிகளை இன்னொரு பக்கம் அரங்கேற்றிக் கொண்டிருந்தது. மருத்துவப் பயன்பாடு தவிர்த்து செருப்புக் கடைகளில், ‘உங்கள் கால் எலும்புக்கு பொருத்தமான செருப்பை, எக்ஸ்ரே உதவியுடன் கண்டுபிடித்து தருகிறோம். தரம் நிரந்தரம்’ன்னு பிஸி
னஸுக்கும் பயன்பட்டது. கொஞ்சம் முத்தின கேஸ்கள், புதையலை எக்ஸ்ரே வைத்துக் கண்டுபிடிக்கப் போகிறோம்ன்னு கிளம்பிப் போனது கதையும் நடந்தது. சில சூதுகவ்வும் பார்ட்டிகள் எக்ஸ்ரே கண்ணாடி வந்திருக்கு. பொண்ணுங்களை ட்ரெஸ் இல்லாம பார்த்து ரசிக்கலாம்னு சில பேராசை பெரியப்பாக்களிடம் பல லட்சத்தை ஆட்டைய போட்டதாகவும் கேள்வி..!

இத்தனை காமடிகளுக்கு நடுவில் கண்டுபிடிக்கப்பட்ட 10 ஆண்டுகளுக்குள். Rontgen’க்கு 1901’இல் நோபல் பரிசு கிடைத்தது. ஆனால், தாமஸ் ஆல்வா எடிசன், டெஸ்லோ மாதிரியான பிரபலங்கள் எக்ஸ்ரேல வேலை பாத்து கண்ல ஏதோ எரிச்சல் வருதுன்னு புகார் சொல்ல ஆரம்பித்திருந்தனர். ஒரு படி மேலே போய் எடிசனின் அஸிஸ்டண்ட் dally, 1904இல் தோல் புற்றுநோயால் மரணமடைந்தார். அவ்ளோ தான்… அதுவரைக்கும் எக்ஸ்ரே வைத்து விளையாடிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓட, மருத்துவ உலகம் விழித்துக்கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.

இன்னிக்கு CT Scan, MRI Scan, X-ray, என மருத்துவத்தில் துல்லியமாக நோயைக் கண்டறியவும், விமானம், கப்பல் போக்குவரத்துகளில், ஆபத்தான பொருள்களைக் கண்டறியவும். தீவிரவாதிகளை, கடத்தல்காரர்களை, வெடிப் பொருள்களைக் கண்டறியவும்… உலகம் முழுக்க எக்ஸ்ரே பயன்படுகிறது. எக்ஸ்ரே இல்லாத உலகத்தை இதே வசதிகளுடன் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது…! விமானம் கிளம்பும் முன் ஒவ்வொருத்தர் சூட்கேஸையும் ஆட்களை வைத்து சோதனை செய்து அதன் பின் விமானத்தைக் கிளப்புவதை கற்பனை செய்து பாருங்கள். உலகம் 100 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடும். இது வெறும் சாம்பிள்தான் எக்ஸ்ரேக்குப் பின் லேசர் வரை பல்வேறு கண்டுபிடிப்புகள் எக்ஸ்ரேவை மையமாகக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன அதன் மூலமாக உலகம் படு வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது.

கட்டுப்பாடுகளை சரிவர கடைபிடிக்காமல் இன்றும் பலரை கேன்சருக்குப் பலி கொடுக்கிறோம். இன்றும் பேராசை பெரியப்பாக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். எக்ஸ்ரே போல இன்னும் பல விஷயங்கள், பல்வேறு அதிசயங்கள் ஏதோ ஒரு நொடியில் கண்டுபிடிக்கப்பட காத்துக் கொண்டிருக்கின்றன. அவைகளை ஒளித்து வைத்து இயற்கை பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறது. இவ்வளவுக்கு பிறகும் ஒரு கூட்டம் மாட்டு மூத்திரத்தில் புதையல் தேடிக் கொண்டிருக்கிறது.

 

sarav.dr2@gmail.com