தன்னுடைய கருத்துக்கு மதிப்பில்லை எனத் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா புகார் தெரிவித்திருந்த நிலையில், தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று (மே 21) நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா உடனான ஆலோசனையில் பங்கேற்கிறார் அசோக் லவாசா. தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இனி ஆணையக் கூட்டங்களில் பங்கேற்பதில்லை என்று தெரிவித்திருந்த அசோக் லவாசா, இன்றைய கூட்டத்தில் பங்கேற்றார்.

தேர்தல் ஆணையத்துக்கு ஒரு தலைமை தேர்தல் ஆணையர், இரண்டு ஆணையர்கள் இருப்பது வழக்கம். அதன்படி தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவும் ஆணையர்களாக அசோக் லவாசா, சுசில் சந்திரா ஆகியோர் இருக்கின்றனர். தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகளை இவர்கள்தான் எடுப்பார்கள்.

இதனிடையே தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான முடிவுகளில் தன்னுடைய கருத்துகள் ஏற்கப்படவில்லை என தேர்தல் ஆணையர் அசோக் லவாசா சமீபத்தில் புகார் தெரிவித்தார். அத்துடன் தேர்தல் ஆணையம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை எனவும் கடிதம் ஒன்றை அனில் அரோராருக்கு அனுப்பியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் கருத்து ஏற்கப்படும் எனத் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அசோக் லவாசாவின் எதிர் கருத்துகள் பதிவுசெய்யப்படவில்லை என்ற சர்ச்சையை அடுத்து, ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் என இன்று நடந்த தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.