இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையவுள்ளதால், அரசியல் கட்சி தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் மாலை 6 மணிக்கு மேல் பரப்புரை பயணம் மேற்கொள்ளக் கூடாது என்றும் பேட்டியில் தேர்தல்பற்றி பேசக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ.

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. கடந்த 11ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் இன்று இறுதிகட்ட அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இறுதிக்கட்ட பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு அரசியல் கட்சித் தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் உள்ளிட்டோர் தேர்தல்பற்றி பேசக் கூடாது என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார். இன்று 6 மணிக்கு மேல் ஊடகங்களைச் சந்திக்கும்போது, பேட்டியில் தேர்தல்பற்றி எதுவும் கூறக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.