கட்சித் தலைமை அங்கீகரிக்காதவர்களிடம் அதிமுகவின் கருத்தைக் கேட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை தேவை என்று சமீபத்தில் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், செய்தி தொடர்பாளர்கள் தலைமை கழகத்திலிருந்து அடுத்த அறிவிப்பு வரும்வரை எந்த ஊடகத்திலும் பத்திரிகையிலும் சமூகத் தொடர்பு சாதனங்களிலும் எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் அதிமுக தலைமை நேற்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கட்சித் தலைமை அங்கீகரிக்காதவர்களிடம் அதிமுகவின் கருத்தைக் கேட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு இன்று (ஜூன் 13) அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது அதிமுக. அதில்,  “அதிமுகவின் பிரதிநிதிகள் என்றோ, அதிமுகவின் பெயரை வேறு எந்தவகையிலோ பிரதிபலிக்கும் யாரையும் ஊடக வழியாகக் கருத்துகளைத் தெரிவிக்க அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம். அவ்வாறு மீறும்பட்சத்தில் அந்த நபர்கள் கொடுக்கும் பேட்டிகளுக்கும் செய்திகளுக்கும் அதிமுக எந்தவகையிலும் பொறுப்பேற்காது. இதுசம்பந்தமாக சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு எங்களை ஆட்படுத்தமாட்டீர்கள் என நம்புகின்றோம்” எனத் தெரிவித்துள்ளது.