2016 சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸின் வெற்றி செல்லாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 22) தீர்ப்பளித்துள்ளது.

மக்களவை தேர்தலுடன், தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்ட மன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும். திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளிலும் வழக்கு நிலுவையில் இருப்பதால், தேர்தல் தற்போது நடைபெறாது என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் நேரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னால் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவிடம் அதிமுக சார்பில் போட்டியிடப்போவதாக வேட்புமனுவில் கையொப்பம் வாங்கிய ஏ.கே.போஸ், தேர்தல் ஆணையத்திடம் அளித்தார். அதைதொடர்ந்து, திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் சரவணனைவிட அதிக வாக்குகள் பெற்று இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றிபெற்றார்.

சுயநினைவு இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கிவந்ததாகவும், அதனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஏ.கே.போஸீன் வெற்றி செல்லாது எனவும் அறிவிக்க கோரி மருத்துவர் சரவணன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டதால், அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் சூழல் உருவாகியுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஏ.கே.போஸின் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தார். ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என்பதால் இரண்டாவதாக வந்த தன்னை எம்.எல்.ஏவாக அறிவிக்க வேண்டும் என்கிற சரவணனின் கோரிக்கையும் நிராகரித்தார் நீதிபதி.