திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ.

மக்களவை தேர்தலுடன்,  தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளிலும் வழக்கு நிலுவையில் இருப்பதால், தேர்தல் தற்போது நடைபெறாது என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதைதொடர்ந்து, அந்த 3 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சூலூர் தொகுதி

இந்நிலையில், கோவை மாவட்டம், சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் கடந்த 21ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுடன், சூலூர் தொகுதியும் சேர்த்து 22 தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் தேர்தலுடன், இந்த தொகுதியிலும் இடைத்தேர்தல் நடத்தப்படுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் நடத்த தயார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஒட்டப்பிடாரம் தொகுதி

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தொகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் சுந்தர்ராஜனும், புதிய தமிழகம் சார்பில் கிருஷ்ணசாமியும் போட்டியிட்டனர்.  அதிமுகவைச் சேர்ந்த ஆர்.சுந்தர்ராஜ் அரசு ஒப்பந்ததாரர் என்பதை மறைத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக கிருஷ்ணசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுவந்ததால், ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் நடத்துவதற்கு முகாந்திரம் இல்லை என தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை. இதற்கிடையில் சுந்தராஜ் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில், ஒட்டப்பிடாரம் தொகுதி காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் செல்லாது என தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 19ஆம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், கிருஷ்ணசாமி மனு அடிப்படையில் ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கை முடித்து வைப்பதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், தேர்தல் தொடர்பான வழக்கு எதுவும் இல்லாததால் தேர்தல் ஆணையம் அதன் நடைமுறைப்படி முடிவெடுக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி. ஒட்டப்பிடாரம் தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால், தற்போது அங்கு தேர்தல் நடத்த தடையில்லை.

திருப்பரங்குன்றம் தொகுதி

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். சுயநினைவு இல்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கிவந்ததாகவும், அதனால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட ஏ.கே.போஸீன் வெற்றி செல்லாது எனவும் அறிவிக்க கோரி திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டதால், அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் சூழல் உருவாகியுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தநிலையில், ஏ.கே.போஸின் வெற்றி செல்லாது நேற்று (மார்ச் 22) தீர்ப்பு வழங்கப்பட்டது.

3 தொகுதிகளுக்கும் தேர்தல்

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான வழக்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டநிலையில், அங்கு தேர்தல் நடத்த எந்தத் தடையும் இல்லை. இந்நிலையில், இன்று (மார்ச் 23) செய்தியாளர்களை சந்தித்தார் சத்யபிரதா சாஹு. அப்போது, “ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தயார்.  ஓட்டப்பிடாரம் தொகுதி காலியாக உள்ளது குறித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டோம்.  திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கின் உத்தரவு நகல் கிடைத்துவிட்டது, சூலூர் தொகுதி குறித்தும் விரைவில் அறிக்கை அனுப்புவோம்” என்று அவர் தெரிவித்தார்.

அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும் தேர்தல் தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால், அங்கு தற்போது தேர்தல் நடைபெறுமா என்பது தேர்தல் ஆணையம்தான் முடிவுசெய்யும்.