நீர்நிலைகளை பராமரிக்கத் தவறியதற்காகத் தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்குத் தடை கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னையில் உள்ள அடையாறு, கூவம், நதிகளையும், பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளையும் பராமரிக்கத் தமிழக அரசு தவறிவிட்டதாக ஜவஹர்லால் சண்முகம் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளைப் பராமரிக்காமல் விட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட காரணமான தமிழக அரசின் பொதுப்பணித் துறைக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. மேலும், அபராத தொகையை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஜூலை 12) விசாரணைக்கு வந்தது. அப்போது, கூவம் உள்ளிட்ட நதிகளைத் தூய்மைப்படுத்த ரூ.604 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதை கருத்தில்கொள்ளாமல் பசுமைத் தீர்ப்பாயம் இந்த அபராதத் தொகையை விதித்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசுக்கு அபராதம் விதித்தும் சென்னையில் நதிகள் இதுவரை தூய்மைப்படுத்தவில்லை என்று மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு ரூ.100 கோடி அபராதம் செலுத்துவதற்குத் தடை விதிக்க முடியாது என்று கூறி தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டனர். மேலும், தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தான் வழக்கு தொடரமுடியும் என்று கூறிய நீதிபதிகள், தமிழக அரசு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.