மத்தியில் இரண்டாவது முறையாக மோடியின் பாசிச ஆட்சி அமைந்ததிலிருந்து காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து ரத்து, முத்தலாக் பிரச்சினை, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு, மாநில சுய ஆட்சி பரிக்கும் முயற்சி என்று நாளுக்கு நாள் பல மாற்றங்களை கடந்து வந்திருக்கிறது. இந்த ஆட்சியில் எப்ப என்ன முடிவெடுத்து மக்களை அல்லோல கதியில் தவிக்க விடுவார்களோ என்று பயந்து பயந்து வாழ்வை கழிக்கவேண்டியுள்ளது. மேலும் இவர்கள் இந்தியாவில் மாற்றங்கள் என்ற பெயரில் இன்னும் என்ன என்ன முடிவுகளை எடுத்து மக்களுக்கு இன்னல்களை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கிறார்களோ என்று தெரியவில்லை.

இந்திய நாட்டின் பன்முகத்தன்மை என்ற ஒன்றை அழித்து முழுக்க முழுக்க இந்துக்களின் தேசமாக உருமாற்றவே மோடியின் இந்த ஆட்சி வழிவகை செய்துவருகிறது.

இந்நிலையில்தான் இன்று (14.09.2019) இந்தி தினத்தையொட்டி உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தி குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ‘ இந்தியாவில் பல மொழிகள் இருக்கிறது. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. ஆனால் இந்தியாவை அடையாளப்படுத்த ஒரு பொது மொழி தேவை. அதிகம் பேரால் பேசப்படுவதால் இந்தி நாட்டின் பொது மொழியாக இருக்க வேண்டும். ஒரே மொழியாக இந்தி இருந்தால் உலக அளவில் இந்தியாவை அடையாளப்படுத்த முடியும். இந்திய மொழியை மக்கள் அடிக்கடி பயன்படுத்த வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தி தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தங்களுடைய தாய்மொழியை அதிகமாக பயன்படுத்த வேண்டும். அதேபோல் இந்தியையும் பயன்படுத்த வேண்டும். காந்தி, வல்லபாய் படேல் கண்ட ’ஒரு நாடு ஒரே மொழி’ கனவை மக்கள் நனவாக்க வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.

அமித்ஷா இவ்வாறு கூறுவதில் புதிதொன்றுமில்லை ஆனால் மக்களை மேலும் மேலும் தங்களின் சுய அடையாளங்களை அழித்து ஒரேமொழி, ஒரே நாடு, ஒரே அதார் கார்டும், ஒரே இனம் என்று ஒற்றை பன்பை வளர்த்தெடுக்க பலமுயற்சிகளை இவர்கள் எடுத்துவருகிறார்கள். இதனால் சமூக வலைதளங்களில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்துவருகிறார்கள். இந்த கண்டனங்களையெல்லாம் அவர்கள் எப்போது பொருட்படுத்தியதே இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.