இந்தியாவின் மாபெரும் ஊழல்களைப் பற்றி ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு கேள்வி எழுந்தது – ஏன் மக்கள் எல்லா ஊழல்வாதிகளையும் ஒரே போல மதிப்பிடுவதில்லை? 55 அங்குல விரிமார்பு கொண்ட நமது ஜியின் ஆடம்பர மோகத்தை நாம் அறிவோம். தில்லியில் அவரது பங்களா பன்னிரெண்டு ஏக்கரில் ஐந்து பெரும் வீடுகளுடன் அமைந்துள்ளது; ஐம்பதுக்கு மேலான தோட்டக்காரர்கள், காரோட்டிகள், சமையற்காரர்கள் மற்றும் எலக்டிரீஷியன்கள் அங்கு வேலை செய்கிறார்கள்; வீட்டு செலவு மட்டுமே கோடிக்கணக்கில் ஆகிறது என சொல்கிறார்கள். ஜி வெளிநாட்டுக்கு பறந்ததற்கு ஏர் இந்தியா நிறுவனம் போட்ட பில் மட்டுமே 443.4 கோடிகள் வருகிறது. கடந்த ஐந்து வருடங்களில் அவரது பயண செலவோ ரெண்டாயிரம் கோடிகளுக்கு மேலே வருகிறது. தன்னுடைய (மற்றும் தன் அரசின் திட்டங்கள் குறித்த) விளம்பரத்துக்கு 2018 வரை அவர் 4,400 கோடிகள் செலவழித்தார்.  அவர் எங்கு போக வேண்டுமென்றால் தனியார் ஜெட்டில்தான் பறக்கிறார். அவர் அணியும் தன் பெயரை வரிவரியாய் நுணுக்கமாய் பொறித்த மோனோகிராம் சூட் பத்து லட்சம் மதிப்புள்ளது, அவரது குர்தா, பயன்படுத்தும் மோண்ட் பிளாங்க் பேனா, Bvlgari கண்ணாடி கூட, பல லட்சம் மதிப்பிலானவை. ஜி அளவுக்கு தோற்றத்தில் மிதமிஞ்சிய அக்கறை கொண்ட ஒரு தேசியத் தலைவர் நம் வரலாற்றிலேயே இல்லை – இந்த வயோதிக காலத்தில் ரஜினியே வழுக்கையுடன் தோன்றும் போது ஜி தலைமுடி மாற்று (hair transplant) அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்; வாரம் ஒருமுறை டயமண்ட் பேஷியல் கட்டாயம் அவருக்கு. தன்னுடைய சருமத்தை பளபளவென வைத்துக் கொள்ள விலைமதிப்பான காளான்களை உண்கிறாராம்.மோடியின் கண்ணசைவை எதிர்பார்த்து எப்போதும் அவரைச் சுற்றி அழகுக்கலை நிபுணர்கள், எலைட் தையல்காரர்கள், முடிதிருத்துநர்கள் காத்திருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் எளிய மத்திய வர்க்க ஆரம்ப நிலை வியாபாரியாக இருந்த அதானி குஜராத்தில் எப்படி எஸ்.பி.ஐ போன்ற வங்கிகளிடம் இருந்து கடன் என்ற பெயரில் பல லட்சம் கோடிகளை சுருட்டி பெரும் முதலீடுகளை செய்து 1350 கோடி டாலர்கள் மதிப்புள்ள மிகப்பெரிய தொழிலதிபர் ஆனார், அந்த கடன்களை ஜி தள்ளுபடி செய்து தன் நண்பருக்கு உதவினார், எப்படி ஒவ்வொரு முறையும் வெளிநாட்டுப் பயணம் சென்று திரும்பும் போது ஜி தன் நண்பருக்கு பிரம்மாண்டமான தொழில் உடன்படிக்கைகளுக்கு வழிவகுக்கிறார், எப்படி ஜி பிரதமர் ஆன பின்னர் அதானி வரலாறு காணாத வளர்ச்சி கண்டுள்ளார், அவர் இன்று எப்படி முகேஷ் அம்பானிக்கு அடுத்த பெரும் பணக்காரராக, இந்தியாவின் நிழல் பிரதமராக செயல்படுகிறார் என நாம் அறிவோம். ஆனால் ஜியை ஊழல்வாதி என்றால் எந்த இந்திய குடிமகனும் நம்ப மாட்டான். ரபேல் ஊழல் குற்றச்சாட்டை அவர் கொசுவைப் போல ஊதி விட்டு ஜாலியாக “மித்ரோ” என உரையாற்ற கிளம்பினார். மக்களும் கைதட்டினார்கள். பால்கனியில் நின்று ஒளியேற்றினார்கள், பாத்திரங்களைத் தட்டி ஒலியெழுப்பினார்கள். ஏன்?

ஜியின் இந்த பளபள நட்சத்திர வாழ்க்கை, ஜெட்டில் பறக்கும் செல்வச்செழிப்பு, அதை அவர் கூச்சமில்லாமல் உலகுக்கு பறைசாற்றும் விதம் ஏன் எதிர்மறையாக பார்க்கப்படுவதில்லை? ஜி தன்னை எளிய பின்னணியில் இருந்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஒரு டீக்கடைக்காரர் என சொல்லிக் கொண்ட போது ஏன் அவரது பகட்டான படோபமான வாழ்க்கையுடன் அது முரண்படுகிறது என மக்கள் எண்ணவில்லை? கோடிக்கணக்கான மத்திய வர்க்கத்தினர் தாம் வாழ முடியாத வாழ்வை, அனுபவிக்க இயலாத வசதிகளை ஜி அனுபவிப்பதை உள்ளூர ரசிக்கிறார்கள், அவரது இந்த மேற்தட்டு லைப் ஸ்டைல் பிரஸ்தாபம் இன்றைய ஜெனரேஷன் Y என சொல்லப்படுகிற நவதாராளவாத இளந்தலைமுறையிருக்கு மனதளவில் நெருக்கமாக தோன்றுகிறது, அவரைத் தமது பிரதிநிதியாக இரு தட்டினரும் கருதுகிறார்கள் என ஒரு புறம் விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது உண்மையெனில் ஜியைப் போன்றே எளிய பின்னணியில் இருந்து வந்து பெரும் பணம், அதிகாரத்தைப் பெற்ற பிற தலைவர்களுக்கு (கலைஞர்?) ஏன் இந்த அனுகூலம் கிடைப்பதில்லை? அவர்களின் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு மக்கள் ஏன் பெருமிதம் கொள்வதில்லை?

 தொண்ணூறுகளுக்குப் பிறகு நூறு கோடி, ஆயிரம் கோடி, லட்சம் மற்றும் கோடானு கோடி என கணக்கிடவே முடியாத அளவுக்கு ஊழல் இங்கு வளர்ந்து கொண்டே போனது. சில அரசியல் குடும்பங்கள் சரியான நிர்வாகம் வழங்கினாலும் ஊழல் கறையினால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு நிழலோடு நிழலானானார்கள். சில ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட போதும் மக்கள் அத்தலைவர்களை மீண்டும் வாக்களித்து முதல்வர் பதவிக்கு கொண்டு வந்ததுண்டு. சில நேரங்களில் மக்கள் இந்த ஊழல் பெருச்சாளிகளை மன்னித்து பேரன்போடு ஏற்றதும் உண்டு. தமிழகத்தில் ஜெயலலிதாவும் கலைஞரும் ஒரே சமயம் இந்த ஊழல் குற்றச்சாட்டில் காணாமல் போயிருக்கிறார்கள். ஆனால் இதன் பொருள் மக்கள் அளவுக்கு அதிகமாய் அநீதியாய் சொத்து சேர்க்கிறவர்களை எதிர்க்கிறார்கள், கண்டிக்கிறார்கள் என்பதல்ல. ஊழல் என்பதை சட்டத்தை ஏமாற்றி ஒரு ஆட்சியாளர் சொத்து சேர்க்கும் குற்றம் என நாம் பொதுவாகப் பார்த்தோமானால் அனைத்து திருடர்களையும் மக்கள் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பதில்லை என்பதையும் காணலாம். நீங்கள் தனியாகக் கொள்ளையடிக்கிறீர்களா அல்லது குடும்பமாக சேர்ந்து அடிக்கிறீர்களா என்பதே இந்த வித்தியாசம்.

 ஜெயலலிதாவை எடுத்துக் கொள்ளுங்கள் – வளர்ப்பு மகன் திருமணத்தில் அவர் காட்டிய படோடாபம், மக்களின் உணர்ச்சிகள் மீது காட்டிய அலட்சியம் தான் அவர் அடுத்த தேர்தலில் தோற்க காரணமாகியது.  ஒருவேளை சசிகலா என ஒருவர் இல்லையெனில் மக்கள் ஜெயலலிதாவின் சொத்து சேர்க்கும் ஆவேசத்தை, அதைக் கொண்டு தன் பேராசைகளை நிறைவேற்றும் ஆசையை, கட்சியை பணரீதியாக வலுப்படுத்தும் நோக்கத்தை மன்னித்திருப்பார்கள். ஜெயலலிதா அதை உணர்ந்து கொண்டே சசிகலாவை தள்ளி வைத்தார். உடனே மக்கள் அதற்கு அடுத்த தேர்தலில் அவரை மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வைத்து ‘அழகு’ பார்த்தார்கள். ஜெயலலிதா தாமாக ஊழல் செய்திருக்க மாட்டார், தவறான சேர்க்கையே அவரை சீரழிய வைத்தது என மக்கள் நம்பினர்.

நமது சமூகத்தில் குடும்ப அமைப்புக்கு மிகுந்த மரியாதை உள்ளது, ஆனால் அரசியலில் இது தலைகீழ். சட்டவிரோதமாக சொத்து சேர்ப்பதை அல்ல, அச்சொத்தை குடும்பமாக ஒருவர் ஆள்வதை மக்கள் கடுமையாக வெறுக்கிறார்கள்.  இங்கு ஒருவர் அரசியல் வாரிசாக இருப்பதை மக்கள் எதிர்ப்பதில்லை, ஆதரிப்பார்கள். ஆனால் அதே வாரிசு தன் குடும்பத்துக்காக கொள்ளையடிக்கிறார் எனத் தெரிந்தால் அதை சாடுவார்கள். அவர் தனியாக கொள்ளையடித்து தனியாக செல்வாக்கோடு வாழ்ந்தால் அந்தளவுக்கு பொருட்படுத்த மாட்டார்கள். இந்த முரணான உளவியல் நமக்குத் தெளிவாக விளங்க வேண்டுமெனில் நாம் இந்தியர்கள் பணத்தை செலவழிக்கிற ஒன்றாக (நவதாராளவாத பொருளாதாரம் கேட்பதைப் போல) அல்ல எதிர்கால சந்ததிக்கு சேர்த்து வைக்கிற ஒன்றாக (நிலப்பிரபுத்துவ மதிப்பீட்டின் படி) பார்க்கிறார்கள் எனப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது என்னிடம் நிறைய பணமிருக்கிறது, ஆனால் எனக்கு குடும்பம் இல்லை என்றால் அதை ஒரு சொத்தாகவே மக்கள் பார்ப்பதில்லை. இந்த குடும்பம் என்பது என்னுடைய நெருங்கிய நண்பர் / தோழி, அவரது குடும்பம் என்றும் இருக்கலாம். இப்படி எந்த பந்தமும் இல்லாதவராக காட்டிக் கொள்கிறவர்களை இந்த நாடு தெய்வமாக வணங்குகிறது, அவர் நாட்டின் மொத்த வளத்தையும் சுருட்டிக் கொண்டாலும் அதை ஒரு தற்காலிகப் பிரச்சனையாகப் பார்க்கிறோம் – எங்கே கொண்டு போய் விடுவார் இந்த சொத்தையெல்லாம் என இந்திய மனம் சிந்திக்கிறது.

மற்றொரு முரண்: நமக்கு தனிமனிதரும் குடும்பமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இதனாலே நாம் ஒரு தனிமனிதரான ‘காட்டில் தனித்தலையும் ஒற்றை யானை’ போன்ற தலைவரை சுயநலமான ஒரு தனியாளாகப் பார்ப்பதில்லை. இங்கு அப்படி ஒரு தனித்த இருப்பே சாத்தியமில்லை. ஆக, அப்படி ஒருவர் தனியாக பணத்தை மலைமலையாகக் குவித்தாலும் அவர் தன் சொத்துக்களின் வாரிசாக சமூகத்தை, தனக்கு வாக்களிக்கும் ஜனங்கள் அனைவரையும் கருதுகிறார் என மக்களின் பொது உளவியல் பார்க்கிறது. ஆனால் எதார்த்தத்தில் இது உண்மையல்ல – ஜெயலலிதா முறைகேடாக சம்பாதித்த சொத்து இப்போது அவர் வாழும் போது பொருட்படுத்தாத உறவினர் வசம். கணக்குக்கு வராத பணம் மன்னார்குடி மாபியாவின் வசம். மோடிக்கும் இதுவே நிகழும். ஆனால் மக்கள் இதை சொத்து நேரடியான குடும்பத்துக்கு வழிவழியாக கைமாற்றப்படுவதாகப் பார்ப்பதில்லை.

ஓஷோ, சத்யசாய் பாபா, அமிர்தானந்த மயி துவங்கி நித்தியானதா, ஜக்கி வாசுதேவ், ஶ்ரீஶ்ரீ வரை இந்தியாவின் மிகப்பெரும் செல்வந்தர்களாக மாறிய சாமியார்கள், ஆனால் எந்த பக்தனும் இந்த பணம் எப்படி உங்களிடம் வந்தது, ஒரு துறவிக்கு எதற்கு இவ்வளவு சொத்து என வினவவில்லை. இவர்களுக்கு குடும்பமில்லை, இந்த சொத்து முழுக்க ஒரு ஆன்மீக அமைப்புக்கு சொந்தமானது, இந்த அமைப்பு இந்துமதத்தின் பொது சொத்து, இந்துக்களாக தாம் அனைவருக்கும் பொதுவானது, சாமியார் காலமானதும் அது இந்து மதத்துக்குத் திரும்பி விடும் என பக்தர்கள் கற்பனை பண்ணுகிறார்கள். ஜக்கி வாசுதேவ் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து ஜெயமோகன் எழுதியிருந்த கட்டுரையிலும் இதே மனநிலையைத் தான் வெளிப்படுத்தியிருந்தார்; பெரும்படிப்பாளரான, அறிவாளியான ஜெயமோகனாலே கார்ப்பரேட் மதத்தலைவர்களின் பெருஞ்செல்வம் தனிச்சொத்தே அன்றி சமூகத்துக்குப் பொதுவானதல்ல எனும் இந்த எளிய உண்மையை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் எளிய பாமர மக்களின் கதியை கற்பனை செய்து பாருங்கள். இந்த மேம்போக்கான மரபான பொது உளவியலே தமது பணத்தை, நகைகளை சாமியார்களின் காலடியில் கொண்டு போய் வைக்க இந்த பக்தர்களைத் தூண்டுகிறது. கங்கையில் அஸ்தியைக் கரைப்பதைப் போல அல்லது மூழ்கி தம் பாவங்களைக் கரைப்பதைப் போல இந்த நன்கொடையை அவர்கள் பார்க்கிறார்கள். இந்திய தொல்மனம் குறியீடுகளால் சிந்திக்கக் கூடியது. சாமியார்களின் சொத்துமதிப்பை பகுத்தறிவாளர்கள் விமர்சிக்கும் போது பக்தர்களுக்கு கொலைவெறி வருவதும் இதனாலே.

நான் தந்துள்ள பட்டியலில் ஒரு பெயர் பொருந்தாமல் பிதுங்கி நிற்கும். ஏற்கனவே கவனித்திருப்பீர்கள் – நமது “அத்தனைக்கும் ஆசைப்படு” ஜக்கி தான். அவர் மணமானவர். நானறிந்து அவரது மகள் (அவரும் மணமானவரே) ஆசிரமத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருக்கிறார். பூஜ்யத்தில் இருந்து இன்று ஜக்கி சொந்தமாய் ஹெலிகாப்டரில் வந்திறங்கும், வெளிநாட்டுக் கார்களில் பறக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார். அவரது சொத்து மதிப்பு 1100 கோடி. ஆனால் பக்தர்கள் (நமது தமிழ் எழுத்தாளர்களில் சிலரையும் சேர்த்தே) இதை ஜக்கியின் பணமாகப் பார்ப்பதில்லை. இத்தனைக்கும் அவர் தன்னை மரபான சாமியாராகக் காட்டிக் கொள்வதில்லை. வாழ்க்கையைக் கொண்டாடினால் தப்பில்லை என்பதே அவரது கொள்கை (ஆனால் அவரது ஆசிமரத்தில் துறவிகள் மணமுடிக்கவோ செல்வச்செழிப்புடன் இருக்கவோ கூடாது). ஜக்கியின் வெற்றி ஒன்றைக் காட்டுகிறது – நீங்கள் சாமியாராக இருக்கும்பட்சத்தில் அனைத்தையும் துறக்காவிடிலும், மலைமலையாக பணத்தைக் குவித்து அதன் உச்சியில் கால்மேல் காலிட்டு அமர்ந்து கொண்டாலும் இந்திய மனம் உங்களை ஒரு துறவியாகவே புரிந்து கொள்ளும். ஜக்கியைப் போன்றே சாமியாருக்கும் லௌகீகவாதிக்கும் இடைப்பட்ட வெளியை ஆக்கிரமிக்கும் மற்றொரு பெருந்தலைவர் நமது ஜி.

ஜிக்கும் அதானிக்கும் உள்ள பினாமி தொடர்பு வெளிப்படையானது, ஆனால் மக்கள் (1) அவர் திருமணமானாலும் பிரம்மச்சாரி (ஜக்கியைப் போன்றே) என்பதால் அவரது பினாமி சொத்துக்களை, அவரது செல்வசெழிப்பான தோற்றத்தை அவருடைய ஊழலாகப் பார்ப்பதில்லை. (2) அடுத்து ஜக்கியைப் போன்றே ஜி ஒரு இடைநிலை துறவியாகத் தோன்றுகிறார் – அவர் வசம் கோடானுகோடிக்கு சொத்தும் இந்தியாவை நினைத்த போது திகைக்க வைக்கும் சர்வாதிகாரமும் உள்ளது, ஆனால் அவரது பிம்பத்தில் இந்த வளமும் அதிகாரமும் ஒட்டுவதில்லை; அதே போலத்தான், தாமரை இலை நீர்த்துளிகளாக, வழக்கமான அரசியல்வாதி / தலைவர் / பிரதமர் பிம்பம் அவர் மீது ஒட்டியும் ஒட்டாமல் இருக்கிறது. நான் அவரது பினாமி சொத்துக்குவிப்பு பற்றி பேசும் போதே அதை சுலபத்தில் நிரூபிக்க முடியாது என்றும் புரிந்து கொள்கிறேன் – அவர் தனக்கென மாடமாளிகளைகளை எழுப்புவதில்லை, அவர் தன் நண்பர்களின் மாடமாளிகளைகளில் குடியிருப்பார் (காந்தியைப் போன்று); அவர் சொந்தமாக ஜெட் விமானம் வைத்துக் கொள்வதில்லை, தன் நண்பர்களில் ஜெட் விமானங்களை பயன்படுத்துவார். அவரது மனைவி, சகோதர சகோதரியருடன் அவர் தன் சொத்து, அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதில்லை. அவரது தாய் இன்னமும் ஒரு எளிய இல்லத்தில்தான் வசிக்கிறார். இது சற்று வினோதம் ஆனால் உண்மை – ஒரு கலைஞனோ, நடிகனோ, ஏன் ஒரு அரசியல் தலைவரோ கூட ஜி செய்ததைப் போல தன் மனைவியை விலக்கி வைத்து அதற்கு தகுந்த காரணத்தை வழங்காமல் இப்படி தனித்து அனாதையாக வாழ விட்டிருந்தால் அதை மக்கள் மன்னித்திருக்க மாட்டார்கள். ஆனால் ஜி மனைவியை தான் விட்டு விலகி வாழ்ந்த காலம் முழுக்க தான் ஒரு துறவியாக “தவம்” புரிந்து வந்ததாகக் கூறுவதால் மக்கள் உடனே மனம் கனிந்து, நெகிழ்ந்து அவரை வணங்குகிறார்கள். இதுவே ஒருவர் கணவராகவும் சாமியாராகவும் ஒரே சமயம் இருப்பதன் சிறப்பு – நீங்கள் இரண்டிலுமே சீரியஸாக இருக்க வேண்டாம், அவப்பெயர் வராது. ஒரு படத்தில் கவுண்டமணி இப்படி சாமியார் வேடத்தில் ஊர் திரும்பும் ஒரு குடும்பஸ்தன் பாத்திரத்தில் நடித்திருப்பார். அந்தக் காட்சியைப் பார்த்தால் சிரித்து சிரித்து புரையேறும். நிஜவாழ்வில் இது வேடிக்கை அல்ல மிக சீரியஸான ஒரு விசயம். ஊரில் நான் இத்தகையை மனிதர்களைப் பார்த்திருக்கிறேன் – மக்கள் இவர்களை விழுந்து வணங்குவார்கள். ஒரு பணக்காரன் தனது தாயை குடிசையில் வாழ விடுகிறான் என்றால் மக்களை அதை மிகப்பெரிய குரூரம் என நினைப்பார்கள். ஆனால் ஜி அதை செய்யும் போது “எவ்வளவு அற்புதமான மக்கள் தலைவர் இவர்” என நாம் பெருமிதம் கொள்கிறோம், வாழ்த்துகிறோம்.

ஆனால் ஜி இதை திட்டமிட்டு செய்வதாய் நான் நம்பவில்லை. இயல்பிலேயே அவருக்கு இது அமைந்து விட்டது. ஜி பிற இந்தியர்களைப் போல அன்றி தன் குடும்ப உறவினர்களுடன் ஒட்டி உறவாடுவதில் என்றுமே ஆர்வம் காட்டியதில்லை; ஆரம்பத்தில் தன்னை கரசேவக்காகக் காட்டிக் கொண்டார், பின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பு கிடைத்ததும் அதுவாக மட்டுமே தன்னை காட்டிக் கொண்டார். மேடையில் தன் குடும்பத்தினர் அலங்கரிக்கத் தோன்றுவது அவர் வாழ்வில் என்றுமே இருந்ததில்லை. அவர் குஜராத் முதல்வர் ஆன பின்னர், இந்திய பிரதமர் ஆன பின்னர் இதை தன் லௌகீகத் துறவி பிம்பத்தை வளர்க்க மிக சாமர்த்தியமாக பயன்படுத்தினார்; கிடைக்கும் வாய்ப்பிலெல்லாம் அவர் பதின்வயதிலேயே துறவு மேற்கொண்டு இமயமலையில் ஞானம் தேடித் திரிந்து பின்னர் தேசப்பற்றின் காரணமாக அரசியல் எனும் மற்றொரு துறவுக்கு வந்த கதையை சொல்லாமல் விடுவதில்லை. ஆரம்பத்தில் இருந்தே குடும்பத்துடன், உறவுகளுடன் அவருக்கு உளவியல் ரீதியாக ஒரு ஒவ்வாமை இருந்துள்ளது என நினைக்கிறேன். திருமணமான நிலையில் அவர் தன் மனைவியை கைவிட்டது, எங்குமே அவரைக் குறிப்பிடாமல் இருப்பது ஒருவிதத்தில் அநியாயமே. ஆனால் இந்த அநீதி கூட அவருக்கு அனுகூலமாக மாறியுள்ளது.

இங்கு மற்றொரு கேள்வி எழுகிறது. என்னுடைய இந்த விளக்கத்துடன் பொருந்திப் போகாத ஒரு அரசியல் ஆளுமை, தலைவர் இருக்கிறார் – மாயாவதி? ஏன் மாயாவதிக்கு தன் படோபமான, சுயமுன்னெடுப்பு அரசியலுக்கு, சொத்து சேர்ப்புக்கு மாயாவதிக்குக் கிடைத்த அவப்பெயர், எதிர்மறை விமர்சனம் ஜிக்கு கிடைப்பதில்லை? ஜெயலலிதாவுக்கும் சசிகலா குடும்பத்துக்குமான தொடர்பே அவர் மீது ஏற்பட்ட மக்கள் கோபத்துக்குக் காரணம் என்றோம். மாயாவதிக்குத் தான் குடும்பமே இல்லையே. ஏன் அவரும் ஜியைப் போல மக்களால் கொஞ்சி சீராட்டப்படுவதில்லை? இங்கு தான் ஜி வெறுமனே ஒரு பிரம்மச்சாரி அல்ல அவர் கிட்டத்தட்ட ஒரு சாமியாராக பார்க்கப்படுகிற மதத்தலைவர் என்பதை கவனிக்க வேண்டும். மாயாவதி ஒருவேளை தன்னை அமிர்தானந்த மயியைப் போல வடிவமைத்திருந்தால் அவர் தன்னுடைய ஆயிரம் சிலைகளை உ.பி எங்கும் நிறுவினாலும், வைர மாலைகள் கழுத்தெங்கும் அணிந்து கொண்டாலும் மக்கள் அதை கேள்வின்றி, விமர்சனமின்றி ஏற்றுக் கொண்டிருப்பார்கள். (என்ன, அது தலித் அரசியலை சாக்கடையில் தள்ளியிருக்கும்!)

இதிலிருந்து எதிர்கால அரசியல் தலைவர்கள் பெற்றுக் கொள்ள ஒரு முக்கிய பாடம் உள்ளது –

1) ஊழல் செய்வது, அதிகாரத்தைக் குவிப்பது, பல்வேறு குற்றங்களுக்குத் துணை போவது இன்றைய கார்ப்பரேட்மய அரசியல் களத்தில் தவிர்க்க முடியாதது; ஆனால் திருமணம் செய்யாதீர்கள். கட்சிகள் தமது எதிர்காலத் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் போது அவர் பிரம்மச்சாரியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

2) மணமானவர் என்றால் குடும்பத்துடன் பொதுவெளியில் காட்சி அளிப்பது, தான் பெருக்கின சொத்தை, தனது செல்வாக்கை அவர்கள் பகிங்கரமாய் பயன்படுத்துவதை அனுமதிக்காதீர்கள் (நேருவில் இருந்து மன்மோகன் சிங், கேஜ்ரிவால் வரை பல உதாரணங்கள்).

3) அப்படியே ஒரு குடும்ப வாரிசாக நீங்கள் இருந்தால் நேரடி அரசியல் களத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் ஆட்சியில் இருக்க விரும்பும் காலம் வரை உங்கள் சொந்த நிறுவனங்கள், சொத்துக்களை வெளிப்படையாக நிர்வகிக்க உங்கள் மனைவி, குழந்தைகளை அனுமதிக்காதீர்கள்.

4) ஒரு கார்ப்பரேட் சாமியாருடன் கைகோர்த்து உங்களை ஒரு கடவுள் அவதாரமாக கட்டமையுங்கள். அதன் பின் நீங்கள் என்ன செய்தாலும் மக்கள் கைகொட்டி / கைவணங்கி ஏற்றுக் கொள்வார்கள்.

நம் மக்களுக்கு ஊழல் ஒரு பிரச்சனையே அல்ல, குடும்பம் மட்டுமே! கண்ணதாசன் ஏற்கனவே சொல்லியிருக்கிறார் – “மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்!” அவ்வாக்கை பின்பற்றி நீங்கள் தெய்வமாகி விட்டால் முறையற்ற சொத்து, தவறான நிர்வாகம், குடும்ப அரசியல் கூட மக்களுக்கு பொருட்டாக இருக்காது.