மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகுறித்து அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5ஆம் தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பல்வேறு தரப்பிலிருந்து புகார் தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு.

ஆறுமுகசாமி ஆணையமும் இதுதொடர்பாக விசாரணை நடத்திவந்த நிலையில், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஆஜராக சம்மன் அனுப்பியது. ஆனால், ஆணையத்தில் மருத்துவர்கள் விசாரணைக்கு ஆஜராக மறுப்பு தெரிவித்தது அப்போலோ நிர்வாகம்.

இதைதொடர்ந்து, விசாரணை ஆணையத்தில் 21 பேர் கொண்ட மருத்துவக் குழு ஒன்றை அமைத்து மருத்துவர்களை விசாரிக்க வேண்டும் என்றும் அதுவரை ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகுறித்து விசாரிக்கத் தடைவிதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது அப்போலோ நிர்வாகம். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 90 சதவீதம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரணையை முடித்தவிட்ட நிலையில், தற்போது, புதிய மருத்துவர் குழுவை அமைக்க உத்தரவிட முடியாது எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அப்போலோ மருத்துவமனையின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ஆறுமுகசாமியின் விசாரணை ஆணையத்திற்க்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், 21 பேர் கொண்ட மருத்துவர் குழுவை அமைக்க வேண்டும் என்ற அப்போலோவின் கோரிக்கையைத் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது நீதிமனறம்.

அப்போலோ மருத்துவமனை மருத்துவர் இன்று மதியம் 2 மணிக்கு ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடதக்கது.