நாடு முழுவதிலும் உள்ள ஏழை எளியவர்களுக்கு 1.95 கோடி வீடுகள் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மத்திய பட்ஜெட் 2019ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (ஜூலை 5) தாக்கல் செய்தார். அதில், தண்ணீர் பற்றாக்குறையை போக்குவது மிகவும் முக்கியமான குறிக்கோள். தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க தான் புதிதாக ஜல்சக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு இல்லத்திற்கும் குழாய் மூலமாக குடிநீர் அளிப்பதற்கு 2020ஆம் ஆண்டுக்குள் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

2024ஆம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஹர் கர் ஜல் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டிற்குள் குழாய் மூலமாக நாட்டிலுள்ள எல்லா வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு அனைத்து ஊரக பகுதியில் வசிக்கும் குடும்பங்களும் வீடு பெற்றிருப்பார்கள். அடுத்த கட்டமாக நாடு முழுவதிலும் உள்ள ஏழை எளியவர்களுக்கு 1.95 கோடி வீடுகள் வழங்கப்படும் என்றார் நிதியமைச்சர்.

2022 அதாவது 75 ஆவது சுதந்திர தின விழா ஆண்டின் பொழுது நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊரக குடும்பங்களும் முழுமையான மின்சாரம் மற்றும் எரிபொருள் இணைப்பை பெற்றிருப்பார்கள். ஒரு நாடு ஒரு மின்சார விநியோக அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் சம அளவில் மின்சார விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் நிர்மலா சீதாராமன்.