கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில், “சபாநாயகர் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதை நாங்கள் உத்தரவிட முடியாது” என கருத்து தெரிவித்துள்ளார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்.

கர்நாடக மாநிலத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவைச் சபாநாயகர் இன்னும் ஏற்கவில்லை. இதற்கிடையே தங்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க உத்தரடவிடக் கோரி அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கர்நாடக எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்றும் இது அரசியல் சாசன விவகாரம் என்பதால், விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்திருந்தனர். அதனால், கர்நாடகாவில் நிலவிவரும் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை இன்றைய (ஜூலை 16) தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

அதன்படி, இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, “சபாநாயகர் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதை நாங்கள் உத்தரவிட முடியாது” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கடந்த 12ஆம் தேதி கூடிய மழைக்கால கூட்டத்தொடரில், பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று முதல்வர் குமாரசாமி கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.