வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான பொறுப்பாளர்களாக 209 பேரை நியமித்துள்ளது அதிமுக தலைமை.

இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பணிக்குழு பொறுப்பாளர்கள் மற்றும் பணிகுழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரும் முக்கிய நிர்வாகிகளாக நியமிக்கப்பட்ட நிலையில், இந்தக் குழுக்களில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இடம்பெற்றுள்ளனர். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வெற்றியை உறுதி செய்யப் பாடுபடுமாறு அந்த அறிவிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்கள் வரும் 22ஆம் தேதி முதல் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் தங்கித் தேர்தல் பணியாற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளது. வேலூர் தொகுதி தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணி இணைந்து பணியாற்றும் என்றும் தற்போது இது அரசியல் ரீதியிலான உறவு என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.