“அணை பாதுகாப்பு மசோதா கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது; இதனைத் தமிழகம் எதிர்க்க வேண்டும்” என்று சட்டப்பேரவையில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இதுதொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

அணை பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து சட்டமாக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. ஒரு மாநிலத்தின் சார்பில் வேறொரு மாநிலத்தில் அணை ஏதுமிருந்தால் அதை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த மசோதாவிற்குத் தமிழகத்திலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஜூலை 20) கூடிய சட்டப்பேரவையில் அணை பாதுகாப்பு மசோதா குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினார் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின். அப்போது அவர் பேசியதாவது, “அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் அணைகளைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் மத்திய அரசு அபகரிக்க முயற்சி செய்கிறது.

அணைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசினுடையது. அணை பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமெனில், மாநிலங்களுக்குத் தேவையான நிதியினை மத்திய அரசு கொடுக்கலாம். மாநில சட்டமன்றங்களின் தீர்மானங்களை மதிக்காமல் நடந்து கொள்கிறது மத்திய அரசு. இதனால், அணை பாதுகாப்பு மசோதாவை தமிழகம் எதிர்க்க வேண்டும்.” என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்து பேசிய முதல்வர் பழனிசாமி, அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளும்வரை இதை ஏற்கக்கூடாது என ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளோம். அதுமட்டுமில்லாமல் மசோதா தமிழகத்திற்கு ஏற்றது அல்ல; எனக்கூறி அதனை திரும்பப் பெறக் கடிதம் எழுதியுள்ளேன்.” என்று தெரிவித்தார்.

மேலும், பேசிய அவர், “தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாகப் பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்குச் சொந்தமான 4 அணைகள் கேரளாவில் இருந்தாலும் அவை தமிழகத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. அணை பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெறத் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்.