ஸ்டீபன் அவசர அவசரமாகக் குளித்துவிட்டு வந்தான். அவன் போட்டுக் குளித்திருந்த சோப்பின் வாசனையையும் மீறிக் குழந்தைத் துணியின் நாற்றமடித்தது. ஜூலியின் பக்கத்தில் குழந்தை அசைவில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. ஜூலியின் கைகள், முகத்திலெல்லாம் சாம்பல் பூத்தது போலிருந்தது. அவள் பக்கத்தில் சென்றால் பூண்டு, இஞ்சியின் வாசனையெல்லாம் வீசும். உள் அறையில் போய்ச் சட்டையையும் கரை வேட்டியையும் தேடினான். அத்தைதான் – ஜூலியுடைய அம்மா – குழந்தை பிறந்ததிலிருந்தே அவனுடைய துணிமணிகளையும் துவைக்கிறாள். குளோரிந்தா அத்தை அடுப்படியில் வேலையாக இருந்தாள். அத்தை அருகில் வந்தாலும் குழந்தைத் துணியின் வாசனைதான் வீசுகிறது. வீட்டின் எல்லா அறைகளிலும், சுவர்களிலும் கூட வீசுகிறது. வீடு பூராவும் குழந்தை பிறந்த வீட்டு மணம்.

வேட்டி, சட்டையைத் தேடி எடுத்து அணிந்து கொண்டான். நல்ல வேளையாக அவனுடைய உடைகளில் அந்த வாசனை இல்லை. சட்டைப் பித்தான்களை அவசர அவசரமாக மாட்டிக் கொண்டே “அத்தை….. காப்பி தாரீங்களா?…” என்று கேட்டான். மணிக்கட்டில்  வாட்சைக் கட்டிக் கொண்டான். மணி ஏழு பத்து. டேனியல் வீட்டுக்குப் போக பத்து நிமிஷமாவது ஆகும். ஏழரை மணிக்கெல்லாம் ஓட்டுக் கேட்கப் போக வேண்டும்.

சமையல் கட்டிலிருந்தே குளோரிந்தா, “உப்புமா ரெடியா இருக்கு…. அதை சாப்பிட்டுட்டே காபியக் குடியுங்களேன்…” என்றாள்.

“அதெல்லாம் வேண்டாம் அத்தை…. டிபனெல்லாம் போற வழியில பாத்துக்கிடுவோம். காப்பி மட்டும் தாங்க.”

“இன்னும் எத்தனை நாளைக்கித்தான் பெரச்சாரத்துக்குப் போவியோ?… அன்னைக்கு புள்ளயப் பாக்க வந்த கணவதியண்ணன் கூட ரெண்டு மூணு எடத்துல கம்பி கட்டுததுக்கு ஆளு தேவைப்படுதம்மா… இவன் இந்த நேரத்துல போயி தேர்தல், பெரச்சாரம்ன்னு அலைஞ்சுக்கிட்டு இருக்கானேன்னு சொன்னாவ…” என்றாள் ஜூலி.

அவளுடைய அம்மா காபி கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள். காபி உறிஞ்சிக் குடித்துக் கொண்டே, “அவனுக்கு என்ன தெரியும்?…. அண்ணன் செயிச்சு எம்.எல்.ஏ.வா ஆயிட்டாருன்னா, நமக்கு எப்படியும் கெவர்மெண்டு வூடு வாங்கித் தந்துருவாரு…. என்னும் நாலே நாலு நாள்தான் பெறச்சாரம். அப்புறம் வேலைக்கிப் போனாப் போவுது….” என்றான் ஸ்டீபன். அவனுடைய காதுக்குள் ‘போடுங்கம்மா ஓட்டு இரும்புப் பொட்டியில ஓட்டு’ என்ற குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.

வேட்பாளர் டேனியல் அவனுடன் மேட்டுத் தெரு பள்ளிக்கூடத்தில் படித்தவன். பிறகு காலேஜெல்லாம் படித்து, கட்சியில் சேர்ந்து பெரிய புள்ளியாகிவிட்டான். இருந்தாலும் இவனிடம் அந்தக் காலத்தைப் போல் நல்ல ஸ்நேகமாகத்தானிருக்கிறான். போன எலெக்ஷனில் கூட முப்பது ஓட்டு வித்தியாசத்தில்தானே தோற்றுப் போனான். இந்த முறை டேனியல் ஜெயிப்பது நிச்சயம். ஸ்டீபனுக்கு கவர்மெண்டு வீடும் நிச்சயம். போடுங்கய்யா ஓட்டு இரும்புப் பொட்டியில ஓட்டு….

“ஒனக்கென்ன?…. சும்மயா பெறச்சாரத்துக்குப் போறேன்?…. சாப்பாடு எல்லாம் போக தெனசரி ஐநூறு ரூவா தாராவோ… கம்பி கட்டப் போனாலும் இதுதான கெடைக்கும்?….”

“அதுக்காவப் பதிவா கெடக்ய வேலய உட்டுட்டு இப்படித் தெருத் தெருவா கத்திக்கிட்டு அலையணுமா?…” என்று கேட்டாள் ஜூலி.

“நீ எதுக்குச் சடச்சுக்கிடுத?…. எல்லாம் எனக்குத் தெரியும்…” என்று சொல்லி விட்டுக் காபி குடித்த தம்ளரைக் கீழே வைத்தான். வீட்டைவிட்டு வெளியே வந்து, முடுக்கில் சுவரோரமாகச் சாத்திவைத்திருந்த சைக்கிளை உருட்டிக்கொண்டு தெருவாசலுக்கு வந்தான். சைக்கிளில் ஏறி வேகமாக மிதித்தான்.

குளோரிந்தா மகளுக்குச் சமாதானம் சொன்னாள். “அவியளுக்குத் தெரியாதா ஜூலி. டேனியலு அவிய பெரண்டுதான? செயிச்சு வந்தா பாத்துச் செய்யாமையா போவாரு?….” என்றாள் குளோரிந்தா.

“ஆமா….. நீ ஒன் மருவனுக்குச் சப்போட் பண்ணு…..” என்று சலித்துக் கொண்டாள் ஜூலி.

“அவிய சொல்லுதாப்பல நமக்கு வூடு கெடச்சா நல்லதுதானள்ளா….. எத்தன நாளைக்கித் தான் வாடவ வூட்டுல இருந்து கயிஸ்டப் படுதது?….” என்றாள் குளோரிந்தா.

ஆமா….. நீதான் ஒன் மருமவன் பேச்ச நம்பணும்….” என்றாள் ஜுலி.  அம்மாவிடம் அவள் அப்படி விட்டேற்றியாகப் பேசினாலும் ‘ஒரு வேளை டேனியலு செயிச்சு வூடு வேண்டிக் குடுத்துட்டாருன்னா…..’ என்றொரு ஆசை ஜுலியின் மனத்தில் துளிர்க்கத்தான் செய்தது. அதற்காக ஸ்டிபன் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டு சும்மாவா இருக்க முடியும்? ஆம்பளைகளை அவ்வப்போது சத்தம் போட்டு அடக்கி வைத்தால்தானே குடும்பம் ஒழுங்காக ஓடும்? இதெல்லாம் ஜுலிக்குத் தெரியாதா என்ன?

ஸ்டீபன் நெஞ்சை முன்னால் தள்ளி சைக்கிளை வேகமாக மிதித்துப் போய்க் கொண்டிருந்தான். பெரிய தெருவில் திரும்பியபோது எதிர் வேட்பாளர் சங்கையாவின் ஆட்கள் கொடியைப் பிடித்துக்கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். எதிர்ப்பட்டவர்களிடமெல்லாம் நோட்டீஸ் கொடுத்தார்கள். ஸ்டீபனிடமும் கொடுத்தார்கள். சைக்கிளை நிறுத்தி, ஒரு காலைத் தரையில் ஊன்றிக்கொண்டே நோட்டீஸைப் படித்தான்.

சங்கையா படத்தில் கை கூப்பி நின்றிருந்தார். அவருடைய சின்னமான இஸ்திரிப்பெட்டியையும் பெரிசாக அச்சிட்டிருந்தார்கள்.  நல்ல வழுவழுப்பான தாளில் நோட்டீஸ் அச்சிடப்பட்டிருந்தது.  டேனியலின் நோட்டீஸெல்லாம் சாதாரணக் காகிதத்தில் அச்சிடப்பட்டிருந்தன. அப்படியனால் சங்கையா ஜெயித்து விடுவாரா?

உங்கள் ஓட்டு யாருக்கு?…

சங்கையாவுக்கு….

நமது வேட்பாளர் சங்கையா…

நமது சின்னம் இஸ்திரிப்பெட்டி…

சங்கையா ஜெயித்துவிட்டால் கவர்மெண்டு வீடு கிடைக்காதே. அந்த நோட்டீஸைக் கசக்கி எறிந்துவிட்டு சைக்கிளை மிதித்தான். தெருவில் போகிறவர்களின் கைகளில் சங்கையா ஆள்கள் கொடுத்த நோட்டீஸ் இருந்தது. அவர்கள் எல்லோரும் சங்கையாவின் ஆதரவாளர்களா? நோட்டீசைப் பத்திரமாகக் கையில் வைத்திருக்கிறார்களே? இஸ்திரிப் பெட்டிக்கு ஓட்டுப் போடப் போகிறவர்களா? அப்படியானால் கவர்மெண்ட் வீடு?…

அவ்வளவு லேசில் ஸ்டீபன், சங்கையாவைச் ஜெயிக்க விடுவானா? டேனியலிடம் சொல்லி நல்ல வழவழப்பான பேப்பரில் நோட்டீஸ் அடிக்கச் சொல்ல வேண்டும். வழவழப்பான பேப்பரில் நோட்டிஸ் அடித்தால் டேனியலின் வெற்றி நிச்சயம். அவனுக்கு வீடும் நிச்சயம். சைக்கிளை ஓங்கி மிதித்தான். அவனுக்கு ஒதுக்கப்பட்ட கவர்மெண்டு வீட்டை நோக்கிப் போவது போலிருந்தது அவனுக்கு. நமது வேட்பாளர் டேனியல். நமது சின்னம் இரும்புப் பெட்டி. இஸ்திரிப் பெட்டியை விட இரும்புப் பெட்டிதான் பெருசு. கனமானது.

சங்கையாவை ஜெயிக்க விடக்கூடாது. சங்கையா மக்களின் எதிரி. சங்கையா ஜெயித்தால் இந்த ஊரை ஆண்டவராலும் காப்பாற்ற முடியாது.  சங்கையா ஒழிக. டேனியல் வாழ்க.

டேனியல் வீட்டின் முன் பிரசார வாகனம் நின்றிருந்தது. எல்லோரும் பிரசாரத்துக்குப் புறப்படுகிற நேரம்தான்.  வழக்கம் போல் சைக்கிளை நிறுத்திகிற இடத்தில் சைக்கிளை நிறுத்திப் பூட்டினான்.  டேனியலுடைய மேனேஜர் ஏசுவடியான் இட்லிப் பொட்டலங்களையும், கொடிக் கம்புகளையும் வழங்கிக் கொண்டிருந்தார்.

ஏசுவடியானிடம், “அண்ணாச்சி….. எதிர்க்கட்சிக்காரங்க நல்ல பளபளப்பான தாள்ல பெறச்சார நோட்டீஸ் கொடுக்கவே….நாமளும் அந்த மாதிரித் தாள்ல நோட்டீஸ் அடிச்சாத்தான் அண்ணாச்சி நல்லது…..” என்றான் ஸ்டீபன்.

“ஆருடே சொன்னது?…தேர்தல் நடத்துர ஆளுவோ எல்லாத்தையும் கங்காணிச்சுக்கிட்டுல்லா இருக்கானுவ…. நாமதான் சரியாட்டுச் செலவு பண்ணுதோம். அவனுக தேர்தல் கமுசன் கிட்ட மாட்டிக்கிடுவானுவோ…” என்றார் ஏசுவடியான்.

“சனம் பளபளப்பப் பாத்து மயங்கிரும்ல அண்ணாச்சி?….”

“ஆருடே சொன்னது?… இந்த நோட்டீசிலே ஒண்ணும் சமாச்சாரமில்ல மக்கா…. சனங்க கிட்ட எப்பிடி ஓட்டு வாங்கணும்னு அண்ணனுக்குத் தெரியாதா? எத்தன எலக்சன அண்ணன் பாத்துருக்காரு?…. சங்கய்யா இன்னைக்கில்லா எலக்சன்ல நிக்காரு. அவருக்கு எலக்சனப் பத்தி என்ன எழவுடே தெரியும்?….”

அதன் பிறகு ஸ்டீபனுக்குக் கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டது. டேனியல் எத்தனை எலக்ஷனப் பார்த்தவன். அவனுக்குத் தெரியாதா?

டேனியல் தோளில் போட்ட துண்டுடன் வீட்டுக்குள்ளிலிருந்து வந்தான். ஸ்டீபனைப் பார்த்த்தும், அவன் முதுகில் தட்டிச் சிரித்தான்.  எல்லோரும் கொடிக் கம்புகளைத் தோளில் சாய்த்துக்கொண்டு புறப்படத் தயாராக இருந்தார்கள்.  ஏசுவடியான் அவர்களைப் பார்த்து, “ஏடே… இரும்புப் பொட்டி, இரும்புப் பொட்டின்னு சொல்லாதீயடே… இரும்புப் பெட்டியின்னு திருத்தமாட்டுச் சொல்லுங்க…” என்றார்.

நமது சின்னம்

இரும்புப் பெட்டி.

நமது வேட்பாளர்

அண்ணன் டேனியல்

இரும்புப் பெட்டியை மறவாதீர்…

கூட்டம் நகர்ந்தது. டேனியல் பின்னால் பிரச்சார வேனில் நின்று வந்தான்.

தேர்தல் நெருங்க நெருங்க ஸ்டீபனின் நம்பிக்கை பெருகி வந்தது. டேனியலின் ஆள்கள் எல்லோரையும் போல அவனும் டேனியலின் வெற்றி நிச்சயம் என்று நம்பினான். புது கவர்மென்ட் வந்தால் காக்கா தோப்பில் அரசு ஏழைகளுக்கு வீடு கட்டித்தரப் போவது உறுதி. ஜுலி, குழந்தை, அத்தையுடன் அவன் அந்த வீட்டில் குடியேறி விடுவான். இஸ்திரிப் பெட்டியை விட வலுவான இரும்புப்பெட்டிதான் ஜெயிக்கும்.

ஜெயித்த பிறகு டேனியல் சென்னைக்குப் போய் எம்.எல்.ஏ. ஆகிவிடுவான். பதவியேற்ற பிறகு ஸ்டீபனுக்கு வீட்டுக்கு ஏற்பாடு செய்வான். வீட்டில் குடியேறும்போது மறக்காமல் டேனியலை அழைத்து விருந்தெல்லாம் வைப்பான். துரதிஷ்டவசமாக டேனியல்தான் ஜெயிக்கவில்லை.