அறிமுகக் கட்டுரையும் மற்றும் கட்டுரை, கடிதம், கவிதைகளின் மொழியாக்கமும்

1. இன்னும் ஓயாத போராட்டக் குணம் கொண்ட மனிதன்

“உலகின் மிக முக்கியமான நாவலாசிரியர் வாழும் காலங்களில் நானும் வாழ்ந்தேன் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்” என்று புகழ்பெற்ற பின்நவீனத்துவ விமர்சகரான ஹெரால்ட் ப்ளூம் குறிப்பிட்ட ஜோஸ் ஸரமாகோ, (José Saramago: 1922 – 2010), ஒரு போர்த்துக்கீசிய கவிஞர், சிறுகதை மற்றும் நாவலாசிரியர் ஆவார். அவர், 1998ஆம் ஆண்டு இலக்கிய நோபல் பரிசைப் பெற்றவர். அவரது படைப்புகள் 30க்கும் மேற்பட்ட உலகின் பிரதான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

போர்ச்சுக்கலின், சிறிய கிராமத்தில் ஒரு சிறு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவரான ஸரமாகோவின் வாழ்வியல் ஏராளமான எதிர்ப்புகளும் போராட்டங்களும் நிரம்பியது. அடிப்படைக் காரணம், அவரிடமிருந்த நாத்திகத் தன்மையும், கம்யூனிஸ ஆதரவுப் பார்வையும். தமிழ்ச் சூழலில் மிகவும் தூய இலக்கியவாதியாக, மிகவும் புதிரான பின் நவீனத்துவ பாணி கொண்டவராக அறிமுகப்பட்டிருப்பது பெரும் துயரம். அவரது பின் நவீனத்துவ பாணி கொண்ட எழுத்து என்பது, முழுக்க முழுக்க நவீனம் சார்ந்த முற்போக்குத்தன்மை கொண்ட மனித வாழ்வியலின் பல்வேறு பரிமாணங்களை ஒரு தீவிரமான தேடலுக்கு ஆட்படுத்தும் அபாரமான கலைத்துவம் கொண்டது.

அவர் தனது எழுத்து பாணியை நீண்டுகொண்டே போகும் வாக்கியங்களைக் கொண்ட ஒரு புதிய பாணியாக உருவாக்கி உலக இலக்கியப் போக்கின் கவனத்திற்கு அறிமுகப்படுத்தினார். இந்த நீளும் வாக்கியங்கள், சில நேரங்களில் ஒரு பக்கத்தைவிட அதிகமாக இருக்கும். அவர் பத்திகள் பிரிப்பதை மிகக்குறைவாகப் பயன்படுத்தினார், அதற்குப் பதிலாக காற்புள்ளிகளுடன் இணைந்த உட்பிரிவுகளின் தளர்வான ஓட்டத்தைத் தேர்ந்தெடுத்தார். அவரது பல பத்திகள் உரையாடலுக்கு இடைநிறுத்தப்படாமல் பக்கங்களில் நீண்டு செல்கின்றன, அவரது  ‘பார்வையற்றவர்கள்’ நாவலில், ஸரமாகோ சரியான பெயர்ச்சொற்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக கைவிடுகிறார், அதற்குப் பதிலாக சில தனித்துவமான குணாதிசயங்களால் கதாபாத்திரங்களைக் குறிப்பிடுகிறார், அவரது பாணியின் எடுத்துக்காட்டு அவரது படைப்பு முழுவதும் காணப்படும் அடையாளம் மற்றும் பொருளின் தொடர்ச்சியான கருப்பொருள்களைப் பிரதிபலிக்கிறது.

அவர் எழுதுவதோடு மட்டும் நின்றுவிடாமல், பல்வேறு முற்போக்கான போராட்டங்களுக்கும், போருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கும் குரல்கொடுத்தார். அரசியல் மற்றும் சமூகவியல் பற்றிய மாநாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவரிடம், “ஒரு கலைஞன், அரசியல் பாத்திரத்தை ஏற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” என்று கேட்கப்பட்டபோது. ‘இது ஒரு பாத்திரம் அல்ல’ என்று அவர் கூறினார்.

அரசியல் பார்வை என்பது என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். அதை, இலக்கியப் பணிகளுக்காக மட்டுப்படுத்தாமல், மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்; என்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான ஸரமாகோ உலகமயமாக்கலின் எதிர்ப்பாளர் மற்றும் அவரது சிறந்த நாவல்கள் பல அரசியல் உருவக வடிவத்தை எடுத்துள்ளன.

“இன்னும் ஓயாத போராட்டக் குணம் கொண்ட மனிதன்” என்கிற தலைப்பில் கார்டியன் பத்திரிகைக்கு, 2010இல் அளித்த அவரது நேர்காணல், அவரது புகழ்பெற்ற போராட்டக் குணம் குறையவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. அதிலிருந்து சுருக்கமாக:

‘எனது புத்தகங்களைப் பற்றி சில நிமிடங்கள் மட்டுமேதான் பேசுவேன். பின்னர் நாம் நம்மைக் கண்டுபிடிக்கும் உலகத்தைப்பற்றிப் பேச நேரத்தைச் செலவிட விரும்புகிறேன், இது ஒரு பேரழிவு உலகம், பொதுவாக, ஜனநாயகம் என்னும் பிரச்சினையைப் பற்றிப் பேசலாம், எங்களுக்கு உண்மையிலேயே ஒரு ஜனநாயக அமைப்பு இருக்கிறதா, இல்லை என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், உண்மையில், உலகம் ஜனநாயகமற்ற நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகிறது – உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு… இப்படியாக. எங்களிடம் ஒரு ஜனநாயக அமைப்பு இருக்கிறது என்ற மாயையுடன் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் அது ஒன்றின் வெளிப்புற வடிவம் மட்டுமே. உண்மையில் நாம் செல்வந்தர்களின் அரசாங்கமான ஒரு பிரபுத்துவத்தில் வாழ்கிறோம்.

குடிமக்களாகிய எங்களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் உள்ளது என்பதைத் தவிர, எங்களிடம் வேறு தீர்வு இல்லை, ஆனால் நாங்கள் எப்போதும் அதை மற்ற கட்சிகளுக்கு வாக்களிக்கப் பயன்படுத்துகிறோம். ஆனால் இன்னொரு வாய்ப்பு உள்ளது, அது வெற்று வாக்களிப்பதாகும்… இது வாக்களிப்புக்கு சமமானதல்ல. விலகியிருப்பது. அதாவது, நீங்கள் வீட்டில் தங்கியிருந்தீர்கள் அல்லது கடற்கரைக்குச் சென்றீர்கள். வெற்று வாக்களிப்பதன் மூலம், உங்கள் பொறுப்பை நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்று சொல்கிறீர்கள், உங்களுக்கு அரசியல் மனசாட்சி இருக்கிறது.

வெற்று வாக்குகள் 50 அல்லது அதற்கு மேற்பட்ட சதவீதம் வரை சென்றால் என்ன நடக்கும் என்று யோசியுங்கள். சமூகம் மாற வேண்டும் என்று சொல்வதற்கான ஒரு வழியாக இது இருக்கும், ஆனால் இந்த மாற்றத்தை செயல்படுத்த தற்போது நம்மிடம் உள்ள அரசியல் சக்திகள் போதுமானதாக இல்லை. ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்பையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்… ஆமாம், இது எல்லாம் மோசமாக முடிவடைகிறது, ஏனென்றால் விஷயங்கள் முதிர்ச்சியடையவில்லை. இங்கே ஸ்பெயினில், 90 சதவீத மக்கள் போருக்கு எதிரானவர்கள் ஆனால், அதிகாரத்தில் உள்ள எவரும் அக்கறை காட்டவில்லை. ஆனால் பிரான்சில், தவறான வேலைவாய்ப்புச் சட்டம் குறித்து என்ன நடந்தது என்று பாருங்கள். – மக்கள் வீதிகளில் அணிவகுத்துச் சென்றதால் சட்டம் திரும்பப் பெறப்பட்டது. வீதிகளில் இறங்குகின்ற மக்களின் உலகளாவிய எதிர்ப்பு இயக்கம் நமக்குத் தேவை என்று நான் நினைக்கிறேன்.

போர்கள், சமத்துவமின்மை, அநீதி போன்ற ஒரு உலகில் நாம் வாழ விரும்பவில்லை என்று சொல்வதைத் தவிர வேறு தீர்வு இல்லை. வாழ்க்கை எதற்கும் மதிப்புள்ளது என்ற நம்பிக்கை இல்லாத மில்லியன் கணக்கான மக்களின் தினசரி வாழ்வியல் மகிழ்ச்சியாக இல்லை என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் அங்கீகரிக்கும் வரை, நாம் அதை கடுமையாக வெளிப்படுத்த வேண்டும், தெருவில் நாட்களைச் செலவிட வேண்டும்.’

இந்த நேர்காணல் முழுக்கவும் ஒரு இடதுசாரி அரசியலுக்கான அவரது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்பைத் தூண்டிய ஒரு உணர்ச்சிபூர்வமான கோபம் கொப்பளித்து எழுவதை நாம் உணரலாம்.

ஸரமாகோ 1969இல் போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர், அவரது வாழ்க்கையின் இறுதி வரை அதில் உறுப்பினராக செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவரது முற்போக்குக் கருத்துக்கள் போர்ச்சுக்கலில் கணிசமான சர்ச்சையைத் தூண்டின, குறிப்பாக 1991இல் வெளியிடப்பட்ட “The Gospel According to Jesus Christ” என்னும் நாவல். இதில் இருந்த இயேசு கிறிஸ்து மற்றும் கிறித்துவ மதம் குறித்த கருத்துக்கள், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. பழமைவாத போர்ச்சுக்கல் இயேசுவை ஒரு மனிதனாக சித்தரிக்கும் நாவலால் திகைத்துப்போனது, நாட்டின் கத்தோலிக்க சமூகத்தின் உறுப்பினர்கள் பெரும் கோபத்துடன் கண்டனம் எழுப்பினர். அந்தக்கட்டத்தில் ஐரோப்பாவின் மிக உயரிய இலக்கிய விருதான கிக்ஷீவீstமீவீஷீஸீ றிக்ஷீவீக்ஷ்மீ விருதுக்கு ஸரமாகோவின் எழுத்துக்களை அனுமதிக்க மறுத்து அப்போதைய பிரதம மந்திரி அனிபால் கவாக்கோ சில்வா தலைமையிலான போர்ச்சுக்கலின் பழமைவாத அரசாங்கம், தடை செய்தது. இதன் கசப்புணர்வுகளுடன், ஸரமாகோவும் அவரது மனைவியும் ஸ்பெயினின் ஆளுகையில் உள்ள லான்சரோட் என்ற தீவுக்குக் குடிபெயர்ந்தனர். தனது ரத்த புற்றுநோயால் அவதிப்பட்ட அவர், 2010 இல் இறக்கும் வரை அங்கு வாழ்ந்தார்.

ஸரமாகோவின் இறுதிச் சடங்குகள் லிஸ்பனில் 20 ஜூன் 2010 அன்று, 20,000க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் நடைபெற்றது. அவர்களில் பல முக்கிய பிரமுகர்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து வந்திருந்தனர். ஆனால் குறிப்பாக அரிஸ்டியன் பரிசின் இறுதிப்பட்டியலில் இருந்து ஸரமாகோவின் படைப்புகளை நீக்கிய போர்ச்சுக்கல் பிரதமர் கவாக்கோ சில்வா, இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை, அவர் கலந்து கொள்ளாதது குறித்துக் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களிடம், “அவரை ஒருபோதும் அறியும் பாக்கியம் தனக்குக் கிடைக்கவில்லை” என்று கூறினார் அவர்.

இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட அனைவரும், போர்ச்சுக்கல்லின் ஜனநாயகப் புரட்சியின் அடையாளமாக சிவப்பு மலர்களை வைத்திருந்தனர். ஸரமாகோவின் தகனம் முடிந்து அவரது அஸ்தி ஜோஸ் ஸரமாகோ அறக்கட்டளையின் முன் சதுக்கத்தில் நூறு வயது பழமையான ஆலிவ் மரத்தின் அடியில் புதைக்கப்பட்டது.

II தனியார்மயம் எழுதும் வரலாறுகள்.

இந்தக் கட்டுரையின் தலைப்புக் கவிதை குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

இக்கவிதை போர்த்துக்கீஸில் மிக மிகப் பிரபலம் பெற்றது. ஏராளமான இதழ்களில் தொடர்ச்சியாகப் பிரசுரம் செய்யப்பட்ட அரசியல் சார்ந்த வெகுமக்கள் பிரகடனமாக இன்றும் விளங்குகிறது. இணையதளங்களில், சாமான்ய மக்களின் முகநூல் பக்கங்களில், முற்போக்கு அரசியல் மேடைகளில், விளம்பர துண்டுப் பிரசுரங்களில், விளம்பரத் தட்டிகளில், மக்களின் அன்றாடப் பேச்சுவழக்குகளில் பெரிதும் போற்றப்படும் இக்கவிதை உலகம் முழுக்க பெரும் கவனம் பெற்றது. இந்தக் கவிதை லான்ஸரோட் டயரிக் குறிப்புகள் – 3 (“Notebooks of Lanzarote – Diary III” (Cadernos de Lanzarote – Diário III) என்னும் அவரது நூலில் வெளிவந்துள்ளது.

ஸ்பெயினில் உள்ள ஒரு ஸ்பானிஷ் தீவு நகரமான லான்ஸரோட் என்னும் இடத்தில், 2010இல் அவர் இறக்கும் வரையிலான, தனது வாழ்க்கையின் கடைசி பதினெட்டு ஆண்டுகளைக் கழித்தபோது எழுதப்பட்ட எழுத்துக்களின் தொகுப்பு நூல் இது. தீவுக்குச் சென்ற கொஞ்ச நாட்களிலேயே அவர் தனது நாட்குறிப்புகளை எழுதத் தொடங்கினார். அவை அவருடைய அன்றாட வாழ்க்கை, எண்ணங்கள், கருத்துக்கள், கேள்விகள் மற்றும் பதில்களைப் பிரதிபலிக்கின்றன.

அவரது பல நாவல்கள் ஒரு நுட்பமான வகையான அரசியல் நையாண்டி என்று ஒப்புக் கொள்ளப்பட்டாலும், இந்தப் புத்தகத்தில்தான் தனது அரசியல் நம்பிக்கைகளை மிகத் தெளிவாக முன்வைக்கிறார். ஒரு மார்க்சியக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட இந்த புத்தகம், செப்டம்பர் 2008 முதல் ஆகஸ்ட் 2009 வரையிலான அவரது வலைப்பதிவு கட்டுரைகளின் தொகுப்பாகும்.

இந்தக் கவிதையில் அவர் தனியார் மயமாக்கக் குறிப்பிடுபவை அனைத்தும் வரலாற்றுச் சின்னங்கள். ஆக, வரலாற்றையே தனியார்மயமாக்குவதன் உருவகம்தான் அது.

போர்த்துக்கீஸின் அரசியல் விமர்சகரான மரியோ மோனிஸ், “இது வலதுசாரிகளின் அடிப்படைவாதம்” (It is the fundamentalism of the right) என்னும் தனது கட்டுரையில் இந்தக்கவிதையை மேற்கோள்காட்டி “இலாபத்தை தனியார்மயமாக்குங்கள் மற்றும் இழப்பை சமூகமயமாக்குங் கள். இங்கே அதுதான் சரியானது, அதுதான் சிறந்தது. எல்லாவற்றிலும் நீங்கள் லாபம் பெறலாம்…” என்று தனது வலைப்பதிவில் காரசாரமான கட்டுரையாக எழுதியிருக்கிறார். (ஜனவரி – 2014)

அவரது கட்டுரையின் மொழி யாக்கம் : “இது வலதுசாரிகளின் அடிப்படைவாதம்”

தனியார்மயமாக்கல் அலை நடைமுறையில் உள்ளது. இந்த தீவிர வலதுசாரி அரசாங்கம் நாட்டைத் திவாலாக்க விரும்புகிறது. நமது சிறந்த வளங்களை கார்பொரேட் வணிகர்களின் கைகளுக்கு மாற்றுகிறது. சில பேராசை கொண்டவர்களின் கைகளில் செல்வம் அதிகரிக்கிறது, இலாபங்களைத் தனியார்மயமாக்குவதன் விளைவாக, இழப்புகளை சமூகமயமாக்குவது, துயரத்திற்கு வழிவகுக்கிறது, அவர்கள், போர்ச்சுக்கலின் வாழ்வியல் பிழைப்பைத் தீர்மானிக்கிறார்கள்.

பல நூற்றாண்டுகளாக இரத்தம் மற்றும் கண்ணீருடன் வெற்றிபெற்ற உரிமைகள் மீதான அதிக வரிகளும் தாக்குதல்களும் – வேலை செய்பவர்கள் மீது எப்போதும் அதே கட்டுப்பாட்டு செய்முறையைப் பயன்படுத்துகின்றன – உலகமயமாக்கப்பட்ட முதலாளித்துவத்தின் தொடர்ச்சியான நெருக்கடிகள் எப்போதும் ஒரே தீர்வுக்கு வழிவகுக்கும்: அதிக தியாகங்கள் மற்றும் அதிக வரி.

தனியார்மயமாக்கலுக்குப் பிறகு எங்கள் முதன்மை நிறுவனங்கள் எப்படி இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன – சி.டி.டி. போன்ற கூரியர் நிறுவனங்கள் – ஒரு கடிதம் றிஷீஸீtணீ ஞிமீறீரீணீபீணீவிலிருந்து லிணீரீஷீணீ போய்ச் சேர 12 நாட்கள் ஆனது, இது ஒரு மனுதாரர் பாராளுமன்றக் குழுவில் கேட்கப்படுவதற்கு முன்பு வெளியிட்ட செய்தி. ஒரு வெளிநாட்டிலிருந்தோ அல்லது பிற தீவுகளிலிருந்தோ கடிதப் பரிமாற்றத்திற்கு அதிக நேரம் எடுக்கும் கால வித்தியாசத்தை, சமூக வலைதளங்களில் சீற்றத்துடன் வெளிப்படுத்துகிறார்கள் மக்கள்.

பொருளாதாரத்தின் சரியான செயல்பாட்டிற்கு இன்றியமையாத பொது உற்பத்தி நிறுவனங்களின் செயல்பாடுகள், உற்பத்தி செய்யப்படும் பொருளை தனியாருக்கு சமமாக மறுபகிர்வு செய்வது என்பது, பொது சுகாதாரத்தின் நிதி நிலைத்தன்மை, கல்விக்கான அணுகல், நோய் மற்றும் வேலையின்மை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு ஆகியவைகளின் நிரந்தரத் தன்மையை குலைத்துவிடும்.

வேண்டுமென்றே நிறுவனங்கள் இயற்கை வளங்கள், எரிசக்தி, தகவல் தொடர்பு, பொது நீர் விநியோகம், எரிபொருள்கள் மற்றும் வங்கி போன்ற பகுதிகளை கட்டமைப்பதில் ஈடுபட்டுள்ளன. செயலற்ற, திறமையற்ற மற்றும் மூர்க்கத்தனமான ஊதிய நிர்வாகங்கள் உருவாக்கப்படுகின்றன. – நண்பர்களுக்கு வழங்கப்படுகின்றன. – நாங்கள் இழப்பீடு செலுத்துகிறோம் என்று முண்டியடித்து வருபவர்களை, இலாபகரமானவர்களாக தனியார்மயமாக்குகிறது அரசாங்கம்.

பொருளாதார மற்றும் நிதி சக்தியை பேராசை கொண்ட தனியார் நிறுவனங்களின் கைகளில் வழங்கும் இந்த முழுத் திட்டமும், பெரும் கொள்ளிவாய்பிசாசாகக் கருதப்படுகிறது, அதன் இலக்கு எளிதானது. குறுகிய கால லாபம். அரசு அதன் இலாபங்களிலிருந்து வருவாய் ஆதாரங்களை இழக்கிறது, மேலும் பெரும் பணக்காரர்களுக்கு (அவர்கள் நிறுவனங்களைக் கூட வைத்திருக்காதபோதும், தாங்கள் பெற்ற டெண்டர்களின் காரணமாக) ஈவுத்தொகையைப் பெறவும் இது அனுமதிக்கிறது. இதன் மறுபுறம், இலாபங்களை வரிகளாக மாற்றுவதும் மற்றும் வரி ஏய்ப்பு திட்டங்களை உருவாக்குவதுமான நிதி ஏமாற்று வித்தை நன்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் எங்களுக்கு இரட்டிப்பாக அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்த நகர்வுகளில்தான் வலதுசாரி அரசாங்கங்கள் நிலப்பிரபுத்துவ காலத்திற்கு, வேலையிலிருந்து வேலைக்கு, ஒரு கையால் பிச்சை எடுப்பதில் இருந்து தலையை மற்றொன்றுக்கு அடிபணியச் செய்வதற்கான அடையாளமாக திரும்பிச் செல்ல விரும்புகிறது. சமூக உரிமைகள் மற்றும் சமத்துவத்தின் உத்தரவாதமாக ஜனநாயகத்தின் தூண்களையும், அரசின் நிதி நிலைத்தன்மையையும் நொறுக்கும் தவிர்க்க முடியாத தன்மையால் நிரம்பியுள்ளன அவை.

III ஜோஸ் ஸரமாகோ : ஏழு கவிதைகள்

எல்லாவற்றையும் தனியார்மயமாக்குங்கள்,

 

மச்சு பிச்சுவைத் தனியார்மயமாக்குங்கள்,

சான் சானை தனியார்மயமாக்குங்கள்,

சிஸ்டைன் சேப்பலைத் தனியார்மயமாக்குங்கள்,

பார்த்தீனனைத் தனியார்மயமாக்குங்கள்,

நுனோ கோன்வால்வ்ஸைத் தனியார்மயமாக்குங்கள்,

சார்ட்ரஸ் கதீட்ரலைத் தனியார்மயமாக்குங்கள் ,

சிலுவையின் வம்சாவளியை தனியார்மயமாக்குங்கள்,

அன்டோனியோவிலிருந்து மையம் வரை

போர்ட்டிகோ ஆஃப் க்ளோரியைத் தனியார் மயமாக்குங்கள்

சாண்டியாகோ டி காம்போஸ்டெலாவையும்,

ஆண்டெஸையும் தனியார்மயமாக்குங்கள்,

 

எல்லாவற்றையும் தனியார்மயமாக்குங்கள்,

கடலையும் வானத்தையும் தனியார்மயமாக்குங்கள்,

நீரையும் காற்றையும் தனியார்மயமாக்குங்கள் ,

நீதி மற்றும் சட்டத்தை தனியார்மயமாக்குங்கள் ,

கடந்து செல்லும் மேகத்தை தனியார்மயமாக்குங்கள்,

கனவைத் தனியார்மயமாக்குங்கள்,

குறிப்பாகப் பகல்நேரமாக இருந்தால்

திறந்திருக்கும் கண்களையும்.

 

மற்றும் இறுதியாக தனியார்மயமாக்கலின் இறுதிக் காட்சியாக

மாநிலங்களைத் தனியார்மயமாக்குங்கள், ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரிப் பெற்று

தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தங்களை வழங்குங்கள்.

மூடி முத்திரையிடப்பட்ட சர்வதேச ஒப்பந்தம் மூலம்.

உலகின் இரட்சிப்பு ஒப்பந்தப் புள்ளிகளில் இருக்கிறது…

 

இப்போது அவர்கள் அனைவரையும் பெற்றெடுத்த அம்மாவும்

தனியார்மயமாக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்:

Machu Picchu : மச்சு பிச்சு,15 ஆம் நூற்றாண்டின் இன்கா கோட்டையாகும், இன்கா நாகரிகத்தின் அடையாளமான இது, லத்தீன் அமெரிக்காவின் புகழ் பெற்ற தொன்மம். இது தெற்கு பெருநாட்டின் மலைத்தொடரில் அமைந்துள்ளது.

Chan Chan: சான் சான் தென் அமெரிக்காவில் கொலம்பியனுக்கு முந்தைய காலத்தின் மிகப்பெரிய நகரமாக இருந்தது. இப்போது வடக்கு பெருவின் கடலோரப் பாலைவனத்தில் உள்ள ஒரு தொல்பொருள் இடமாகும்.

Sistine Chapel: சிஸ்டைன் சேப்பல் வத்திக்கான் நகரத்தில் போப்பின் அதிகாரப்பூர்வ இல்லமான அப்போஸ்தலிக் அரண்மனையில் உள்ள ஒரு தேவாலயம்.

Partenon: கிரீக் ஜனநாயகத்தின் நீடித்த அடையாளமான பார்த்தீனன்,கிரேக்க தெய்வமான ஏதீனாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில். இது பண்டைய கிரேக்கத்தின் மீதமுள்ள கட்டிடங்களில் மிகவும் முக்கியமானதாகும்.

Nuno Gonçalves : நுனோ கோன்வால்வ்ஸ் ( 1450-71 ) 15 ஆம் நூற்றாண்டின் போர்த்துக்கீசிய நீதிமன்ற ஓவியர். போர்த்துக்கல் மன்னரான அபோன்சோ க்ஷின் அரசவையின்கீழ் இயங்கிய நீதிமன்றத்தில் பணிபுரிந்தவர்.

Chartres Cathedral: சார்ட்ரஸ் கதீட்ரல், பிரான்ஸ் நாட்டில் உள்ள தொன்மை வாய்ந்த 4 ஆம் நூற்றாண்டு ரோமன் கத்தோலிக்க தேவாலயம், யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக நியமிக்கப்பட்டுள்ள இது, “பிரெஞ்சு கோதிக் கலையின் தலைசிறந்த படைப்பு” என்று அழைக்கப்படுகிறது.

The Descent from the Cross: சிலுவையின் வம்சாவளி என்பது சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை சிலுவையிலிருந்து இறக்கிய காட்சியை வரைந்த புகழ்பெற்ற ஓவியங்கள்.

Antonio : அன்டோனியோ என்பது, போஸ்னியன், கட்டலான், குரோஷியன், கலிசியன், இத்தாலியன், போர்த்துக்கீசியன், ருமேனியன் மற்றும் ஸ்பானிஷ் வம்சாவளியைச் சேந்த பகுதியாகும்.

Portico of Glory: போர்ட்டிகோ ஆஃப் க்ளோரி என்பது வடமேற்கு ஸ்பெயினின் ஷிணீஸீtவீணீரீஷீ பீமீ சிஷீனீஜீஷீstமீறீணீ நகரத்தில் உள்ள கதீட்ரலின் பிரதான வாயில் ஆகும். ரோமன்ஸ்க் என்னும் நவீன கட்டிடக்கலை 6 ஆம் நூற்றாண்டில் செழித்து வளர்ந்ததாகும். அந்தக்கலையில் போற்றத்தகுந்த கட்டிடம் இந்தக் கதீட்ரல்.

Santiago de Compostela: சாண்டியாகோ டி காம்போஸ்டெலா வடமேற்கு ஸ்பெயினைச் சார்ந்த கலீசியா பிராந்தியத்தின் தலைநகரம் ஆகும்.மிகவும் புகழ்பெற்ற புராதனம் மிக்க இந்த நகரத்தை உலகின் பாரம்பரிய நகரமாக நியமிமித்துள்ளது யுனெஸ்கோ.

கிஸீபீமீs: ஆண்டெஸ் அல்லது ஆண்டியன் மலைகள் உலகின் மிக நீளமான மலைத்தொடர். வெனிசுலா, கொலம்பியா, ஈக்வடார், பெரு, பொலிவியா, சிலி மற்றும் அர்ஜென்டினா ஆகிய ஏழு தென் அமெரிக்க நாடுகள் வழியாக வடக்கிலிருந்து தெற்கே நீளும் இது, ஆசியாவிற்கு வெளியே மிக உயர்ந்த மலைத்தொடர்.

விடியல்

 

நான் விடியலின் ஸ்படிகத்தில் பயணம் செய்கிறேன்,

அதில் பிரதிபலித்த குளிரின் திண்மை,

குரல்களற்ற இடமெங்கிலும் உருள்கிறது

கனத்த இரவின் புலம்பலின் கீழ்.

 

ஒரு சூல் கொண்ட மேகத்தில் திறக்கிறது ஸ்படிகம்,

நிழல், மௌனம் மற்றும் உணர்வுகள் அகழ்கின்றன.

மூச்சுத் திணறும் இரவிலிருந்து

வெடித்தெழுகிறது விடியல்.

துர்க் கனவு

 

விடியற்காலையின் கைகளில் அந்த பயங்கரம் உள்ளது,

கதவின் கிரீச் ஒளியில் திறந்து கொள்ளும்

நீண்ட கத்தியின் துளையிடும் அலறல்,

என்னை உளவு பார்க்கும் பிரம்மாண்டமான ஒற்றைக் கண்.

முடிவற்று நீளும் நிலச் சுழல்வு,

நோயாளியின் கிழிந்த ஓலம்,

அழும் குழந்தையின் மூச்சுத் திணறல்

எவரொருவரும் ஏற்றுக்கொள்ளாத சத்தியம்,

பதுங்கியிருந்து குதிக்கும் ஒரு மூலையில்,

ஒரு கருஞ் சிரிப்பு, ஒதுக்கிப்போடும் கை,

புழு பூத்த உணவு,

படுக்கையில் கிடக்கும் நொறுங்கிய பெண்

 

நரகத்தின் ஒன்பது வட்டங்கள் கனவு கண்டன,

ஜெயிக்க பன்னிரண்டு கொடும் சோதனைகள்,

ஆனால், அடுத்த நாள் விடிந்தது,

அந்த நாளை மற்றுமொரு நாளாக அல்லாமல் மறு சீரமைப்பு செய்ய வேண்டும்

இருண்ட இரவை வெட்டிக் கிழிக்கிறது விடியலின் தூய அன்பு!

பிரகடனம்

 

இல்லை, அது மரணம் இல்லை.

இந்தக் கல் கூட இறந்ததில்லை,

கீழே விழுந்த பழமும் இறந்ததில்லை:

என் கரங்களின் வெதுவெதுப்பை அதற்கு உயிரூட்டுங்கள்,

என் குருதியோட்டத்தை சுவாசிக்கிறது அது,

அதனூடே புத்துயிர்க்கிறது இந்த மூச்சு.

என்றாவது ஒரு நாள், இந்தக் கை காய்ந்ததும்,

மற்றொரு கையின் நினைவில் நீடிக்கும்,

இதழ்களின் அலாதியான அமைதியும்,

நீ முத்தமிட்ட அதரச் சுவையும்.

முத்தம்

 

இன்று, ஏன் என்று தெரியவில்லை,

உதடுகள் நமநமத்துக்கொண்டே இருக்கின்றன,

வெளியே, காற்று தனது வலிய கரங்களால் சைகை செய்கிறது.

மரங்கள் ஏற்றுக் கொள்ள முடியாமல் திமிறுகின்றன.

எனினும் ஒரு கிடார் கம்பியின் அதிர்வு

அந்த நிகழ்வை இனிமையாக்குகிறது

காற்றின் ஈரப்பதத்தை சுவைத்தாடுகின்றன மலர்கள்

அது உன் உமிழ் நீரின் குளிர்ச்சி.

இளம் வயதில் கவிஞரின் உருவப்படம்

 

நாங்கள் பயணம் செய்த அந்த நதி நினைவில் உள்ளது

குழந்தைப் பருவத்துறைகளில் நிற்கும் படகுகள்

சலசலத்தாடும் மரக் கிளைகளின் வளைவு

தண்ணீரில் பட்டுத் தெறிக்கும் இலைத் துளிகள்.

 

ஒரு வேகமான துடுப்பு வலிப்பில்

அதிகாலை விடியலின் மௌனம் கலைந்து,

நீரலைகள் நகரும் புறத்தே

சுழன்றுருளும் கசங்கிய துண்டுகள்.

 

அதே இடத்தில் உள்ளது சூரியோதயம்,

அது வாழ்க்கைக்குள் நிகழ்த்திய தொடு உணர்வு,

விழித்திருக்கும் கண்களின்

தணிக்காத தாகத்திற்கான ஏக்கம்.

 

உடைந்துபோன தண்ணீரின் படம் அங்கு உள்ளது

இந்த நினைவிலிருந்து கீழே விழுந்து உடைந்த நதி,

எல்லா திசைகளிலும் உள்ளோடித் திறக்கிறது

அது படத்திற்குப் பழைய கதையைச் சொல்கிறது.

நான் படைப்பது, கவிதை.
காதல் கவிதைகள் எழுத வேண்டாம்
–ரெய்னர் மரியா ரில்கே

ஏன், ரெய்னர் மரியா? யார் தடுக்கிறார்கள்

இதயம் அன்பு செய்ய, யார் தீர்மானிப்பது

முதுகில் ஒலிக்கும் குரல்களா?

*குருட்டு ஆடு விளையாட்டு நம்மீது திணிக்கும்

முடிவற்ற தன்மையில் இருந்தா?

 

நீங்கள் ஏறிய படிக்கட்டுகளின் நீண்ட ஏணி

நிழலான போது, ஒரு வெற்றிடத்தில் உடைந்து விட்டது

மற்றவர்களின் காலடிப்படிகளிலிருந்து அது பிரிந்து விட்டது .

தலைசுற்றும் காற்றில் பறக்கும் உங்கள் விமானப்படிகளின்

பரிமாணத்தை எதிர்க்கிறேன் நான்.

நான் நிலம், மற்றும் இந்த நிலப்பரப்பில் வசிப்பவன்.

 

சக மனிதனான உன்னிடம் சொல்கிறேன்,

நான் படைப்பது, கவிதை.

குறிப்புகள்:

cabra-cega : குருட்டு ஆடு என்பது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு. இதில் பங்கேற்பாளர்களில் ஒருவர், கண்களை மூடிக்கொண்டு, குருட்டு ஆடாக மற்றவர்களைக் கண்டுபிடிப்பார்கள். அரசு படைவீரர்கள் பொழுதுபோக்காக விளையாடும் விளையாட்டு. நம் நாட்டின் கண்கட்டி விளையாட்டு போன்றது. மூலத்தில் இக்கவிதை தலைப்பில்லாமல் இருக்கிறது. நான் கவிதையின் இறுதி வரியைத் தலைப்பாக்கியுள்ளேன்.

IV பின்னிணைப்பு: காதல் கவிதைகள் எழுத வேண்டாம்.

ஆஸ்திரிய – ஜெர்மன் கவிஞரான ரெய்னர் மரியா ரில்கே (1875 – 1926), இருபதாம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்குமிக்க நவீனத்துவ கவிஞர்களில் ஒருவர். ரில்கேவின் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் நாடகங்கள் அவற்றின் புதிய பார்வையிலும் வடிவத்திலுமான நவீனத் தன்மையால் உலகம் முழுவதும் போற்றப்படுகின்றன. அவரது ஆரம்பகால கவிதைகள் ஜெர்மன் நாட்டுப்புற பாடல் பாரம்பரியத்துடன் ஒப்பிடப்பட்டன. வாழ்வுக்கும் மரணத்துக்குமான மிகவும் அசல் குறியீட்டுத் தன்மையுடன் புதிய மெட்டாபிசிகல் பார்வைகளை முன்வைத்தன.

பயணங்கள் அவர் வாழ்வைப் பெரிதும் கவிமுனையை நோக்கித் தள்ளின. 1897 ஆம் ஆண்டில், ரில்கே ரஷ்யாவுக்குச் சென்றார். அங்கு இளம் கவிஞர் டால்ஸ்டாயைச் சந்தித்தார். மற்றும் அந்தக் காலகட்டத்தின் ரஷ்ய இலக்கிய ஆளுமைகளுடன் கலந்துறவாடியது என இந்தப்பயணம் ரில்கேவுக்கு ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. ரில்கே தனது வாழ்நாள் முழுவதும் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் எகிப்து என பல்வேறு நாடுகளுக்குத் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தார். ஆனால் பாரிஸ் அவரது வாழ்க்கையின் கவி மையமாக மாறியது. அங்கு அவர் முதலில் ஒரு புதிய பாணியிலான பாடல் கவிதைகளை உருவாக்கத் தொடங்கினார்.

முதலாம் உலகப் போர் வெடித்தபோது, ரில்கே பிரான்ஸை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, போரின்போது அவர் ம்யூனிச்சில் வாழ்ந்தார். 1919 ஆம் ஆண்டில், அவர் சுவிட்சர்லாந்திற்குச் சென்றார், அங்கு அவர் தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளைக் கழித்தார். இங்குதான் அவர் டிசம்பர் 29, 1926இல் ரத்த புற்றுநோயால் இறந்தார்.

ரில்கேவின் குழந்தைப் பருவம் மகிழ்ச்சியற்றதாக இருந்தது; அவர் ஒரு அதிகாரியாக வேண்டும் என்ற விருப்பத்துடன் அவரது பெற்றோர் அவரை இராணுவப் பள்ளியில் சேர்த்தனர். ரில்கேவுக்கு அது பிடிக்கவில்லை. ரில்கே, மிகவும் திறமையான குழந்தை என்பதை உணர்ந்த தனது மாமாவின் உதவியுடன், இராணுவ அகாடமியை விட்டு வெளியேறினார். இதன் தொடர்ச்சி அறுபடாமல் வரலாறு ஆக மாறியதைப் பார்க்கலாம் : ஆஸ்திரிய இராணுவ அதிகாரியாகப் பணிபுரிந்த ஃபிரான்ஸ் கப்பஸ் ( 1883 – 1966) என்பவர், கவிதைகள் எழுதுபவராக இருந்தார். ரில்கே, இராணுவ அகாடமியில் படித்த முன்னாள் மாணவர் என்பதை அறிந்த அவர், தனது கவிதைகளை ரில்கேவுக்கு அனுப்பி, அவைகளின் தரம் குறித்து ஆலோசனை கோரினார்.

ரில்கே ஃபிரான்ஸ் கப்பஸுக்குப் பத்து கடிதங்களை எழுதினார்; அவை வரலாற்றுப் பொக்கிஷங்களாக மாறின.

அந்தக் கடிதங்கள் “ஒரு இளம் கவிஞருக்கு எழுதிய கடிதங்கள்” என்ற தலைப்பில் ஒரு தனி நூலாக வெளியிடப்பட்டன. ரில்கேவின் விரிவான கடிதப் பரிமாற்றங்களில், இந்தக் கடிதங்கள் மிகப் பெரிய புகழைப் பெற்றன. இவை அவரது கவிதைகளின்மீதான வடிவம், உள்ளடக்கம், அவை வெளிப்படுத்தும் தீவிரமான வாழ்வியல் பிரக்ஞையால் படைக்கப்பட்டுள்ளது. அந்தக் காலத்தின் அவரது கவிதா அழகியல் தரிசனம், இந்தக் கடிதங்களில் அற்புதமாகப் பிரதிபலிக்கின்றன. அந்த வரலாற்றுப் பிரசித்தம் பெற்ற கடிதங்களின் முதல் கடிதத்தின் வரிகளைத்தான் ஜோஸ் ஸரமாகோ பெரும் விமர்சனத்துக்குள்ளாக்குகிறார். வாக்குவாதமான அந்த முதல் கடிதம் இந்தப் பின்னிணைப்பில் வெளியாகிறது.

ஒரு இளம் கவிஞருக்கு எழுதிய கடிதங்கள் – ரெய்னர் மரியா ரில்கே முதல் கடிதம்
பிப்ரவரி 17, 1903
பாரிஸ்.

அன்புள்ள ஐயா,

உங்கள் கடிதம் சில நாட்களுக்கு முன்பு வந்தது. நீங்கள் என்னிடம் வைத்திருக்கும் மிகுந்த நம்பிக்கைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவ்வளவுதான் என்னால் செய்ய முடியும். உங்கள் கவிதைகளை என்னால் விவாதிக்க முடியாது; ஏனென்றால் எனக்கு எந்த விமர்சன நோக்கமும் இல்லை. விமர்சனச் சொற்களைப் போலவே நீங்கள் ஒரு கலைப் படைப்பைத் தொட முடியாது. அவை எப்போதும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அதிர்ஷ்டவசமான தவறான புரிதல்களை ஏற்படுத்துகின்றன. எல்லாவற்றையும் நாம் புரிந்துகொள்ள விரும்புவதில்லை. பெரும்பாலான அனுபவங்கள் மறுக்கமுடியாதவை. அவை எந்தவொரு வார்த்தையும் இதுவரை நுழையாத ஒரு இடத்தில் நிகழ்கின்றன. மற்ற எல்லாவற்றையும் விட அதிகம் விளக்க முடியாதவை கலைப் படைப்புகள். அந்த மர்மமான இருப்புக்கள், அவை கடந்து செல்லும்போது நம் வாழ்வின் அருகில் உள்ளன.

இந்தக் குறிப்பை ஒரு முன்னுரையாகக் கொண்டு, உங்கள் கவிதைகளுக்கு அவற்றின் சொந்த பாணி இல்லை என்று நான் உங்களுக்குச் சொல்லலாம். இருப்பினும் அவை தனிப்பட்ட விஷயங்களின் அமைதியான மற்றும் மறைக்கப்பட்ட தொடக்கங்களைக் கொண்டிருக்கின்றன. கடைசிக் கவிதையான “My Soul”லில் இதை நான் மிகத் தெளிவாக உணர்கிறேன். அங்கே, உங்களுடைய ஏதோ ஒன்று வார்த்தையாகவும் மெல்லிசையாகவும் மாற முயற்சிக்கிறது. “To Leopardi” என்ற அழகான கவிதையில், அந்தப் பெரிய, தனி நபருடன் ஒரு வகையான உறவு இருக்கலாம். ஆயினும்கூட, கவிதைகள் இன்னும் தங்களுக்குரிய ஒன்றல்ல. தன்னிறைவான எதுவும் இல்லை, கடைசி மற்றும் இந்த” லிமீஷீஜீணீக்ஷீபீவீ ” கூட. அவர்களுடன் வந்த உங்கள் அன்பான கடிதம், உங்கள் கவிதைகளைப் படிப்பதில் நான் உணர்ந்த பல்வேறு தவறுகளை எனக்குத் தெளிவுபடுத்த முடிந்தது, இருப்பினும் அவற்றை நான் குறிப்பாகப் பெயரிட முடியவில்லை.

உங்கள் கவிதை ஏதேனும் நன்றாக இருக்கிறதா என்று நீங்கள் கேட்கிறீர்கள். இதற்கு முன்பு மற்றவர்களிடம் கேட்டிருப்பீர்கள். நீங்கள் அவற்றைப் பத்திரிகைகளுக்கு அனுப்புகிறீர்கள். நீங்கள் அவற்றை மற்ற கவிதைகளுடன் ஒப்பிடுகிறீர்கள். சில ஆசிரியர்கள் உங்கள் படைப்புகளை நிராகரிக்கும்போது நீங்கள் வருத்தப்படுகிறீர்கள். இப்போது (என் ஆலோசனையை நீங்கள் விரும்புவதாக நீங்கள் கூறியுள்ளதால்) அந்த மாதிரியான காரியங்களைச் செய்வதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் வெளிப்புறமாகப் பார்க்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, அதைத்தான் நீங்கள் இப்போது தவிர்க்க வேண்டும். உங்களுக்கு யாரும் அறிவுறுத்தவோ உதவவோ முடியாது. – யாரும் இல்லை. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான். உங்களுக்குள் செல்லுங்கள். நீங்கள் எழுத உத்வேகமிடும் காரணத்தைக் கண்டறியவும். அது உங்கள் வேர்களை உங்கள் இதயத்தின் ஆழத்தில் ஊன்றியதா என்றும் பாருங்கள். நீங்கள் எழுத தடை விதிக்கப்பட்டால் நீங்கள் இறந்துவிடுவீர்களா என்று நீங்களே ஒப்புமை கொள்ளுங்கள். இது எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் இரவின் மிக அமைதியான நேரத்தில் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: நான் எழுத வேண்டுமா? ஆழ்ந்த பதிலுக்காக உங்களை நீங்களே தோண்டிக் கொள்ளுங்கள். இந்த பதில் உறுதியுடன் ஒலித்தால், இந்தப் புனிதமான கேள்வியை நீங்கள் ஒரு வலுவான, எளிமையான “நான் எழுதவேண்டும்” என்ற குரலாகச் சந்தித்தால், இந்த தேவைக்கு ஏற்ப உங்கள் வாழ்க்கையை உருவாக்குங்கள்; உங்கள் முழு வாழ்க்கையும், அதன் தாழ்மையான மற்றும் அலட்சியமான நேரத்திற்குள் கூட, இந்த தூண்டுதலுக்கு ஒரு அடையாளமாகவும் சாட்சியாகவும் மாற வேண்டும். பின்னர் இயற்கையின் அருகில் வாருங்கள். பின்னர், இதற்கு முன்பு யாரும் முயற்சி செய்யாதது போல, நீங்கள் பார்ப்பதை சொல்ல முயற்சிக்கவும், உணரவும், நேசிக்கவும் இழக்கவும் செய்யலாம்.

காதல் கவிதைகள் எழுத வேண்டாம்; முதலில் மிகவும் பழக்கமான மற்றும் பொதுவான வடிவங்களிலிருந்து விலகிச் செல்லுங்கள் அவை வேலை செய்வது கடினமானது. மேலும் நல்ல, புகழ்பெற்ற, மரபுகள் ஏராளமாக இருக்கும் ஒரு தனிமனிதனை உருவாக்க ஒரு பெரிய, முழுமையாக பழுத்த சக்தி தேவை. எனவே இந்தப் பொதுவான கருப்பொருள்களிலிருந்து உங்களை மீட்டு, உங்கள் அன்றாட வாழ்க்கை உங்களுக்கு வழங்குவதைப் பற்றி எழுதுங்கள்; உங்கள் துக்கங்களையும் ஆசைகளையும் விவரிக்கவும், உங்கள் மனதைக் கடந்து செல்லும் எண்ணங்கள் மற்றும் ஒருவித அழகு பற்றிய உங்கள் நம்பிக்கை ஆகியவற்றையெல்லாம் விவரிக்கவும் இதய பூர்வமான, அமைதியான, எளிமையின் நேர்மையுடன், நீங்கள் வெளிப்படுத்தும்போது, உங்களைச் சுற்றியுள்ள விஷயங்களை, உங்கள் கனவுகளிலிருந்து வரும் காட்சிகளை மற்றும் நீங்கள் நினைவில் வைத்திருக்கும் பொருள்களைக் கவிதையாக்குங்கள். உங்கள் அன்றாட வாழ்க்கை உங்களுக்கு மோசமாகத் தெரிந்தால், அதைக் குறை கூற வேண்டாம்; உங்களை நீங்களே குற்றம் சொல்லுங்கள்; ஒரு கவிஞனின் செல்வத்தை வெளிப்படுத்த நீங்கள் போதுமானவர் அல்ல என்பதை நீங்களே ஒப்புக் கொள்ளுங்கள்; ஏனெனில் படைப்பாளனுக்கு வறுமை இல்லை, ஏழ்மை மற்றும் அலட்சியம் இல்லை. நீங்கள் ஏதேனும் சிறைச்சாலையில் இருந்தால், அதன் சுவர்கள் உலகின் எந்த விதமான ஒலிகளையும் உங்கள் உணர்வுகளை அடைய அனுமதிக்காது – உங்கள் குழந்தைப் பருவத்தை, அந்த சுவையான, கிடைத்தற்கரிய செல்வத்தை, நினைவுகளின் புதையலை நீங்கள் இன்னும் கொண்டிருக்கவில்லையா? உங்கள் கவனத்தை அதில் திருப்புங்கள்.

இந்த மகத்தான கடந்த காலத்தின் மூழ்கிய உணர்வுகளை உயர்த்த முயற்சி செய்யுங்கள்; உங்கள் ஆளுமை வலுவாக வளரும் உங்கள் தனிமை விரிவடைந்து, மற்றவர்களின் இரைச்சல் கடந்து செல்லும் ஒரு விடியற்காலையாக மாறும். உங்கள் சொந்த உலகில் மூழ்கியதிலிருந்து, உள்ளிருந்து கவிதைகளைப் பெறும்போது, அவை நல்ல கவிதைகள்தானா என்று யாரையும் கேட்க நீங்கள் நினைக்க மாட்டீர்கள். இந்தப் படைப்புகளில் நீங்கள் ஆர்வமுள்ள பத்திரிகைகளையும் முயற்சிக்க மாட்டீர்கள். ஏனென்றால் அவற்றை உங்கள் அன்பான இயற்கை உடைமை, உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி, அதிலிருந்து ஒரு குரல் என்று பார்ப்பீர்கள். ஒரு கலைப் படைப்பு அவசியத்திலிருந்து வெளியே வந்தால் நல்லது. இந்த வகையான தோற்றத்தில் அதன் தீர்ப்பு உள்ளது: வேறு எதுவும் இல்லை.

ஆகையால் அன்புள்ள ஐயா, இதைத் தவிர வேறு எந்த ஆலோசனையையும் என்னால் தர முடியாது நீங்களே சென்று உங்கள் வாழ்க்கை நீரூற்றுகளின் ஆழத்தை ஆராய, அதன் மூலத்தில் நீங்கள் உருவாக்க வேண்டும் என்ற கேள்விக்கான பதிலைக் காண்பீர்கள். அந்தப் பதிலை உங்களுக்கு வழங்குவது போலவே, அதை விளக்க முயற்சிக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு கலைஞனாக அழைக்கப்படுவதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்.

வெளியில் இருந்து என்ன வெகுமதி வரக்கூடும் என்று எப்போதும் கேட்காமல், அந்த விதியை நீங்களே எடுத்துக்கொண்டு, அதன் சுமையையும் மகத்துவத்தையும் தாங்கிக் கொள்ளுங்கள். ஏனென்றால், படைப்பாளி தனக்குத்தானே ஒரு உலகமாக இருக்க வேண்டும் மேலும் தன்னிலும் இயற்கையிலும் உள்ள எல்லாவற்றையும் கண்டுபிடிக்க வேண்டும். அவனுடைய முழு வாழ்க்கையும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்த வம்சாவளியில் உங்களுக்கும் உங்கள் தனிமைக்கும் பிறகு, நீங்கள் ஒரு கவிஞனாக மாறுவதைக் கைவிட வேண்டியிருக்கும் (நான் சொன்னது போல், ஒருவர் எழுதாமல் வாழ முடியும் என்று ஒருவர் நினைத்தால், ஒருவர் எழுதக்கூடாது). ஆயினும்கூட, அப்போதும் கூட, நான் உங்களிடம் கேட்கும் இந்த சுய தேடல் ஒன்றும் வீணாகவில்லை. உங்கள் வாழ்க்கை இன்னும் அங்கிருந்து அதன் சொந்த பாதைகளைக் கண்டுபிடிக்கும், மேலும் அவை நல்லதாகவும், பணக்காரராகவும், பரந்ததாகவும் இருக்கக்கூடும் என்று நான் சொல்வதை விட அதிகமாக விரும்புகிறேன்.

நான் உங்களுக்கு வேறு என்ன சொல்ல முடியும்? எல்லாவற்றிற்கும் சரியான முக்கியத்துவம் உள்ளது என்று எனக்குத் தோன்றுகிறது; இறுதியாக நான் இன்னும் ஒரு சிறு ஆலோசனையைச் சேர்க்க விரும்புகிறேன். உங்கள் முழு வளர்ச்சியின் மூலமாகவும், அமைதியாகவும், ஆர்வமாகவும் வளரஉங்கள் அமைதியான நேரத்தில், உங்கள் உள்ளார்ந்த உணர்வு மட்டுமே பதிலளிக்கக்கூடிய கேள்விகளுக்கு வெளியில் இருந்து பதில்களுக்கு காத்திருக்க வேண்டாம்.

பேராசிரியர் ஹொராசெக்கின் பெயரை உங்கள் கடிதத்தில் கண்டறிந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த வகையான, நேசமான அறிஞர்மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. பல ஆண்டுகளாக நீடிக்கும் ஒரு நன்றியுணர்வு. என்னுடைய இந்த உணர்வை தயவுசெய்து அவரிடம் சொல்வீர்களா? அவர் என்னை இன்னும் நினைவில் வைத்திருப்பது மிகவும் கனிவானது, நான் பெருமைப்படுகிறேன்.  நீங்கள் என்னிடம் ஒப்படைத்த கவிதைகளை, நான் உங்களிடம் திருப்பி அனுப்புகிறேன். உங்கள் கேள்விகளுக்கும் நேர்மையான நம்பிக்கைக்கும் நான் மீண்டும் ஒரு முறை நன்றி கூறுகிறேன். அவற்றில், என்னால் முடிந்தவரை நேர்மையாக பதிலளித்ததன் மூலம், ஒரு அந்நியனாக நான் இருந்ததை விட இந்த நேர்மையான பதிலுக்குத் தகுதியுள்ளவனாக மாற முயற்சித்திருக்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
ரெய்னர் மரியா ரில்கே