தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவுபெறுவதையொட்டி புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி வருகின்ற 18ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக, திமுக சார்பில் பல குளறுபடிகளுக்கு மத்தியில் தலா 3 உறுப்பினர்கள் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யலாம் என்ற நிலை இருந்தது.

திமுக சார்பில் சண்முகம், வில்சன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ(திமுக கூட்டணியில்) ஆகியோர் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் முகம்மது ஜான், சந்திரசேகரன் மற்றும் அதிமுக கூட்டணியில் பாமகவின் அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர்.

6 உறுப்பினர்களுக்கான பதவிக்கு சரியாக 6 பேர் போட்டியிட்டதைத் தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல் செய்த அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து 6 பேருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதிமுக சார்பில் தேர்வான உறுப்பினர்கள், அன்புமணி ஆகியோர் முதல்வா் பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதே போன்று திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சண்முகம், வில்சன், மதிமுக எம்.பி. வைகோ ஆகியோர் திமுக தலைவா் ஸ்டாலினுடன் இணைந்து அண்ணா, கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.