காங்கிரஸ் தலைவர் சத்ரூஹன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா இன்று சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். மேலும் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் லக்னோ தொகுதியில்  ராஜ்நாத் சிங்கிற்கு எதிராகப் போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சத்ருகன் சின்ஹா பாஜக சார்பில் பாட்னா சாஹிப் தொகுதியில் எம்.பியாக இருந்தார். அப்போது முதலே பாஜக-வின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சித்து வந்த அவர், அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த 28 ஆண்டுகளாக லக்னோ தொகுதி பாரதீய ஜனதா கட்சிவசம் உள்ளது. அத்துடன் இந்தத் தொகுதியிலிருந்து முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி லோக் சபா பிரதிநிதியாக 1991, 1996, 1998, 1999 மற்றும் 2004 தேர்தல்களில் வெற்றி பெற்று தேர்தேடுக்கபட்டார். 2009-ல் லால் ஜி டாண்டன் மற்றும் 2014 ஆம் ஆண்டில் ராஜ்நாத் சிங் வெற்றி பெற்றனர். இம்முறை லக்னோவில் மீண்டும் ராஜ்நாத் சிங் பாஜக வேட்பாளராகக் களம் காண்கிறார்.

இந்நிலையில் லக்னோ தொகுதிக்கு மே 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தொகுதிக்கான வேட்புமனுவை தாக்கல் செய்ய ஏப்ரல் 18 தேதியே கடைசி நாளாகும். ஆனால் இன்றுவரை சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இதனால் எல்லோருடைய கண்களும் லக்னோவை நோக்கி உள்ளன.

இதனையடுத்து  காங்கிரஸ் தலைவர் சத்ரூஹன் சின்ஹாவின் மனைவி பூனம் சின்ஹா இன்று அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். இவர்  சமாஜ்வாதி கட்சியின் சார்பாக லக்னோ தொகுதியில் பாஜக -வின் ராஜ்நாத் சிங்கை எதிர்த்துப் போட்டியிட உள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 18 ஆம் தேதி அவர் அதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.