ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் போக்குவரத்து விதிமுறையை மீறிய எம்.எல்.ஏவுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

நாடு முழுவதும் கடந்த 1ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது. அதன்படி, போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதம் மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் பயணித்தால் முன்னர் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது அது ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல, பல விதிமீறல்களுக்கு அபராதத்தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டது. ஹரியானா, ஒடிசா ஆகிய இரு மாநிலங்கள்தான் இதுவரை அதிக அபராதம் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒடிசாவில் இதுவரை 88 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புவனேஷ்வர் மத்திய சட்டமன்றத் தொகுதி ஆளும் கட்சியான பிஜூ ஜனதா தள எம்.எல்.ஏ.வான அனந்த நாராயண் ஜேனா, போக்குவரத்து விதிமுறைகளை மீறி நோ பார்க்கிங் பகுதியில் வாகனத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. தகவலறிந்த புவனேஷ்வர் காவல் துணை ஆணையர் அனுப் சஹோ, எம்.எல்.ஏ அனந்த நாராயணுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து, அதற்கான கட்டண ரசீதை வழங்கினார். காவல் துறையின் இந்த செயலுக்குப் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த பாராட்டுக்களை பெற்று தந்துள்ளது.