கொரோனா நடை  ஒரு வடிவத்துக்குள் வந்து விட்டது.

மொட்டை மாடி வீட்டாளர்கள் மாடி செவ்வகத்துக்குள், சதுரத்துள் நடக்கப் பழகிக் கொண்டார்கள்.

மொட்டை மாடி இல்லாதோர் வீட்டுக்குள் எட்டு எண் நடை பயிற்சிக்குப் பழகி விட்டார்கள் .( நாலு தெரு சொந்தக்காரர் அவர். அவர் நடைபயிற்சி செய்வதோ மொட்டை மாடி செவ்வகத்துக்குள் தான்-ஒரு புதுமொழி ).

இடம்பெயர்ந்தத் தொழிலாளர்கள்  ஊர் போகிற ஆசையில் நடந்துக் களைத்து செத்துப் போகிறார்கள். தொற்றால் அழுகுகிறார்கள்.தொடர்வண்டி பாதியில் விழுந்து சாப்பாத்திகள் மக்கிப்போவதைப்போல செத்துப்போகிறார்கள். மீறிப்போகிறவர்கள் முகாமில் அடை படுகிறார்கள். கொரோனா கிருமி நாசினி – தடுப்பு மருந்தை பீய்ச்சி அடித்து வரவேற்பு தருகிறார்கள்.

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள்  வலசைபோதல் என்பதற்கு உதாரணமாய் வயிறுப்பிழைப்புக்காகவும், சாதிய வன்முறைகளிலிருந்து தப்பிக்கவும் பயணம் மேற்கொள்கிறார்கள்.

வலசை போதல் பறவைகளுக்கு மட்டுமா,  மனிதர்களுக்கும் என்றாகிவிட்டது.

வலசை போதல் என்று தலைப்பிடு ஒரு நாவல் எழுத ஆரம்பித்தேன். முடிக்கவில்லை  எப்போதாவது தொடர்வேன். வேறு நாவல் எழுதும்  ‘வலசையாகி ‘விட்டதுதான்  காரணம். அந்நாவல் பறவைகளின் இடம்பெயர்தல் பற்றியதல்ல. மனிதர்களின் இடம்பெயர்தல் பற்றியதுதான். நான் திட்டமிட்டது வேறு. கொரோனா சூழலில் அதன் மையம் மாறிவிட்டது.

குளிர்காலத்தில் பறவைகள் உணவைத் தேடி பின் பல இடத்திற்கு திரும்புதல் என்பதை வலசை போதல் என்கிறார்கள். கடிகாரத்தின் பெண்டுலத்தின் அசைவுகள்  போல் ஓர் இடத்திற்குச் சென்று திரும்பும் பறவைகளுக்கு உணவு உள்மன தூண்டல்,  வாழ் நிலைக்கான  ஆதாரம் தேடுவதற்காக அமைந்திருப்பது பறவையிலளார்களுக்கும் மர்மமாகவே இருக்கிறது. பெரும் பருவ நிலை மாறுதலும் அவைகளை இடம் பெயறச் செய்கிறது

சுமார் பத்தாயிரம் வகைப் பறவைகளில் 2% ஆண்டுதோறும் பருவ காலத்தில் வலசை போகின்றன . வடக்கிலிருந்து தெற்கிற்கு  என்று சொல்லலாம்.  இனப்பெருக்கம் செய்து விட்டு பழைய பகுதிக்கே திரும்பும் பறவைகளும் உள்ளன.  நிலா , நட்சத்திரம்,  புவியின் காந்த ஈர்ப்பும் புலங்களை  அடிப்படையாகக் கொண்டு வலசை நிகழ்வதாக அறிஞர்கள் கருதுகின்றனர்

தமிழர்களின் இடம்பெயர்தல் கிறிஸ்துவுக்கு முன்பாக- 2500 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டிருக்கிறது. சங்க காலத்திலும் புறநானூற்றிலும் இதற்கு குறிப்புகள் உள்ளன முல்லைப்பாட்டு நெடுநல்வாடை ஆற்றுப்படை நூல்களில் போர் காரணமாக தமிழர்கள் இடம்பெயர்ந்து சென்றதைக் காண்கிறோம். அன்றைய பூம்புகார் வெளிநாடுகளிலிருந்து வந்த ” புலம் பெயர் மாக்கள்  கலந்தினி உறையும் ”  என்று குறிப்பு பட்டினப்பாலையில்  உள்ளது. “  அவன் உரை முனிந்த ஒக்கலோடு  புலம்பெயர்ந்து ” என்கிறது நன்றிணை.  “ கலம்  தரு திருவின்  புலம்பெயர்  மாக்கள் “  என சிலப்பதிகாரமும் கூறுகிறது .

தமிழகத்திலிருந்து இலங்கை மலேசியா சிங்கப்பூர் பர்மா இந்தோனேஷியா தென்னாப்பிரிக்கா பிஜித்தீவுகள்  போன்ற நாடுகளுக்கு தேயிலை ரப்பர்  கரும்புத் தோட்டங்களுக்கு வேலை பார்ப்பதற்காக சென்றனர்.  இது 16 ஆம் நூற்றாண்டில் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரைக்கும் மிகுதியாக நடந்திருக்கிறது .

புலம்பெயர் இலக்கியம் என்ற குறிப்பிடத்தக்க இலக்கிய வகை இன்று தமிழில் நிலைத்து விட்டது.  தமிழகத்தை கடந்து தொப்புள் கொடி உறவாக அவர்களின் அனுபவங்கள் தமிழிலக்கியத்தில் உரம் சேர்த்திருக்கின்றன.

பறவைகளில் வலசை போதல் இயல்பானது மனிதர்களின் இடம்பெயர்தல் பலவகை நெருக்கடிக்குள் அமைவதாகும். சுற்றுலா குறிப்பிட்ட வேலை சார்ந்து குறிப்பிட்ட கால அளவில் மாறுதல் இதனுள் அடங்காது .வீட்டிற்கு அடங்காதவன் ஊர்சுற்றி என்பார்கள் ஆனால் வயிற்றுப் பசியை அடக்காதவர்கள் உயிரை காத்துக் கொள்ள ஆசைப்படுபவர்கள் இடம் பெயர்தல் என்பது இந்நூற்றாண்டின் முக்கியமாக உள்ளது.  அது சார்ந்து அகதிகள் உருவாவது கூட.

உலகமயமாக்கல் சிறு தொழில்கள் விவசாயம் போன்றவற்றை ஒழித்து கிராமப்புற மக்களை பெரு நகரங்களுக்கு,  தொழிற்சாலை நகரங்களுக்கு இடம்பெயரச்  செய்கிறது . உள்நாட்டுக் கலவரங்களும் விடுதலை கோரிப் போராடும் தேசிய இனமக்களின் பிரச்சனைகளுக்கும் இடையே போர் காரணமாக உள்ளது. இது உலக நாடுகள் முழுக்க இன்று நிகழ்ந்து கொண்டிருப்பதாகும். கண்டுபிடித்துத் தீராத வழிகளை அவை கொண்டிருக்கின்றன

சென்ற நூற்றாண்டின் இறுதி உலகம் முழுவதும் அகதிகளை பரப்பிவிட்டு இருக்கிறது இலங்கை இனப் பிரச்சனை காரணமாக ஈழத்தமிழர்கள் உலகம் பூராவும் நிறைந்திருக்கிறார்கள் வெவ்வேறு நாடுகளுக்கான போர் மனப்பான்மை ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகள் தேசிய இனப் பிரச்சனைகள் உள்நாட்டுக் கலகங்கள் ஆகியவை மக்களை இடம்பெயரச் செய்து அவர்களை ஓட விட்டன.

உலகமயமாக்கலும் அதன் தொடர்பான தொழில் சிதைவுகளும்  அகதிகளாக மக்களை வெளித்துப்பிக் கொண்டிருக்கச் செய்கின்றன  அந்நிய முதலீடுகள் பெரிய தொழிற்சாலைகளை தோற்றுவித்துக் கொண்டிருக்கும் போது சுதேசிமயமான தொழிற்சாலைகளை மூடப்படுகின்றன.  இவை மூலமாக தொழிலாளர்களின் இடப்பெயர்வும் மக்களின் வாழ்நிலையை  பெருமளவில் பாதிக்கின்றன .

இந்த வகை இடப்பெயர்வுக்கு வறுமையும் வேலைஇல்லாத் திண்டாட்டமும் முதன்மைக் காரணங்களாக இருக்கின்றன. சமூக நிலையில் கீழ்ப்ப்டிலும் அதற்குச் சற்றே மேல் இருக்கும்  மத்திய தட்டுகளில் இருக்கும் தொழிலாளர்கள் இடம்பெயர்கிறார்கள் .

அவர்கள் அதிகம் படிக்காத முறைசாராத தொழிலாளர்களாக இருக்கிறார்கள் வேளாண்மை பொய்த்துப் போவது சாதாரணமாய் தண்ணீர் பற்றாக்குறை நிகழ்ந்து சொந்த நிலங்களை வைத்திருப்போர் வேளாண்மை செய்ய இயலாது வெளியேறுகிறார்கள். உறவினர்கள் யாராவது இருக்கும் பகுதியிலோ வீடுகளிலோ தற்காலிகமாய்க் குடியேறுகிறார்கள். பல இடங்களில் தற்காலிக் குடிசைக்ள் போதும் தற்காலிகமாக மின்சாரம் சாலை வசதிகள் போன்றவை தங்கள் ஊரில் இருந்ததை விட சிறப்பாக இருப்பது ஆறுதல் தருகிறது அவர்களுக்கு தண்ணீர் லாரிகள் காமதேனுகளாக  வாழ்கின்றன

குழந்தைகளின் படிப்பிற்குச் செலவு செய்யும் மனநிலை அற்று போகிறார்கள் நாங்கள் இவ்வளவு கஷ்டப் படும்போது குழந்தைகளுக்கு கல்வி தேவைதானா என்ற கேள்வியின் முடிவில் குழந்தைகளையும் வேலைக்கு அனுப்பத் துணிகிறார்கள். குழந்தைகளின் படிப்புச்  செலவுக்கும் துணிகளுக்கும் குறைவாகச் செலவிடுகிறார்கள் தினமும் குறைந்தது 12 மணிக்கும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது. இருப்பிடச் சூழலும் தொழிற்சாலை சூழலும் அவர்களுக்கு மன ரீதியில் பாதுகாப்பானதாய் இல்லை. உளவியல் சிக்கல்களையும் உளவியல் ரீதியான பாதுகாப்பின்மையும் சில விதங்களில் ஏற்படுத்திவிடுகின்றன தங்கள் உரிமை குறித்த அக்கறைகளுக்காக தொழிற்சங்கங்களின் அரசியல் இயக்கங்களில் சேர்வது மிகக் குறைவாக இருக்கிறது. 10 சதவீதமானவர்களே தொழிற்சங்கங்களில் சேர்கிறார்கள். தொழிற்சங்க அரசியல் இயக்கங்களை விட தங்கள் பிரதேச மக்களின் கூட்டமைப்பு தங்கள் ஜாதியினரின் சங்கங்கள் சேர்வது பாதுகாப்பானது என்று நினைக்கிறார்கள். இதன் ஆபத்தை உணர்வதில்லை ஓரளவு சம்பளமும் தொடர்ந்து வேலை கிடைத்ததும் அவர்களின் துயரங்களை எல்லாம் சற்றே                  ஒதுக்கி வைத்துவிட்டு அதிலுள்ளே இருக்க வைக்கின்றன. இன்னொரு பிரதேசத்திற்கு  நல்ல வேலை தேடிச் செல்கிற இடப்பெயர்வு கானல் நீர்தான் என்பதையும் உணர்கிறார்கள். பறவைகளுக்கு இப்படி கானல் நீர் அனுபவம் இல்லை. ஏதாவது உணவாவது கிடைத்துவிடும் பறவைகளுக்கு. எதற்கு இறக்க? மனிதன் கையால் பிடிபடக்கூடாது என்று பறக்கிறது.  பறப்பது அப்படி சுலபமா என்ன? பறக்கும் நிலை தோன்றும்போது இறக்கைகளுடன் சில பகுதிகளில் வளைந்து கொடுக்கும் நிலையும்  தேவைப்படுகிறது.

இறக்கைகளில் இப்பகுதிகள் முக்கியமானவை. மாற்றங்களின் போது இறக்கைகளைத் தொடர்ந்து தொடர்ந்து வீசுவதாலும் மற்றும் இறக்கைகள் பற்றிக்கொள்ள இருக்கும் உறுப்புகள் செயல்பாடு முக்கியமானதாகவும்  இருக்கிறது. சில பறவைகளுக்கு  இரு தோள் பட்டை இணைப்புக்கிடையே உள்ள இடைவெளியை ஒழுங்குபடுத்தும் அமைப்புகளாக செயல்படுகின்றன. இவ்வுறுப்பு ஸ்போர்ட்ஸ் கார் பறப்பதைப்போல அதற்கு தேவையான சக்தியை சேர்த்து வைக்கிறது. பறக்கும்போது இறக்கைகளை உயர்த்தி தாழ்த்தி மற்றும் சுழற்சிக்கு  உதவும் தசைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. இதற்காக இரண்டு கோட்பாடு மேலும் நான்கு இயற்கை கோட்பாடு தத்துவங்களின்படி  முன்னங்கால்களில் இருக்கும் சதைகளும் தொடர்ந்து இயங்கி மிக வேகமாகவும் படிப்படியாகவும்  பறக்க ஏதுவாகிறது. பெரிதாகவும் மற்றும் வலிமையான இறக்கைகளைக் கொண்டவை இயற்கை நிலையிலேயே  மாற்றமடைந்து இவை காற்றில் பறப்பதற்கேற்ற சிறந்த மாற்றமடைய செய்கிறது  என்கிறார் பேரா கருப்பண்ணன். பறவைகளில் பறக்க உதவும் உறுப்புகள் உடலில் உட்புறத்தில் அமைந்துள்ளன முதுகெலும்புள்ள மற்றும் பிராணிகள் இடத்தைவிட பறக்கும் நிலையில் முன்னங்கால்களில் மற்றும் பல குழப்பம் உள்ள மாற்றங்கள் தோன்றியுள்ளன பின்னங்கால்களில் அவ்வாறு மாற்றங்கள் ஏற்படுவதில்லை. மற்றும் பழக்கம் இல்லை ஆனால் பறவைகள் சில முக்கியமாக மற்றும் சிறப்பான சந்தர்ப்பங்களினால் சிறப்படைய இரண்டாம் வகை பலமான உறுப்புகளைக் கொண்டுள்ளன. அதாவது இறக்கைகள் பறப்பதற்கும் மற்றும் கால்கள் நடக்கவும் ஓடவும் மற்றும் நீரில் நீந்தவும் உதவுகின்றன. குணாதிசயங்கள் பறவைகள் பரிணாம முறையில் பறக்கும் பரப்பும் அமைப்பை பெற முக்கிய காரணமாக அமைகின்றன என்கிறார்கள் பறவைகள்  ஆய்வாளர்கள்.

உபாசகர் வாரியார் தம்பதிகளைக்  கண்டால் நலமா குழந்தை உண்டா என்று கேட்பாராம் இல்லை என்று சொன்னால் அப்படிச் சொல்லாதே இனிமேல்தான் என்று சொல் என்பாராம். அதுபோல் வலசை போதல் பறவைகள் மனிதனுக்கு மட்டுமா இன்னும் இருக்கிறது என மீன்களும் பூச்சிகளும் கூட வலசை போதல்  என இயல்பாக இருக்கிறது.

”  நாராய் நாராய் செங்கால் நாராய்/ பழம்படு பனையின் கிழங்குபிளந்தன்ன /  பவளக் கூர்வாய் செங்கால் நாராய்/  நீயும் உன் பெடையும் தென் திசை குமரியாடி வடதிசை ஏகுவராயின்..” என்ற பாடல்  போன்று தமிழ் இலக்கியங்களில் வலசை குறித்த பல பகுதிகள் உள்ளன.

உதிரிச் செய்தியாக  இருந்தாலும் அதிர்ச்சியளிக்கும் செய்தியொன்று. வலசை போகாத வண்ணத்துப்பூச்சிகள் பற்றியது கோவையில் உள்ள ஆனைகட்டி வழியாக மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு வழக்கமாக வலசை போதலில் அக்கறை கொள்ளும் பட்டாம்பூச்சிகள் சென்ற ஆண்டு ( 2017 ) அந்த வலசை போகும் காலம் கடந்தும் இடம் பெறவில்லை. வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனது , அதனால் தட்பவெப்பச் சூழலில் ஏற்பட்டிருக்கும் விபரீதங்கள்,  பட்டாம்பூச்சிகளுக்கான இருப்பிடம் பாதிக்கப்பட்டிருப்பது,  வறட்சி போன்ற காரணங்களால் பட்டாம்பூச்சிகள் வலசை போகாமல் இருக்கலாம் என்று அறியப்பட்டிருக்கிறது.

இடம்பெயரும் பட்டாம் பூச்சிகளின் எண்ணிக்கை வருடந்தோறும் கணிசமாக குறைந்து வருவதும் கண்டறியப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது .

இடம்பெயரும் மனிதர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பில்லாதபடி சாதாரண மனிதனுக்கு  சமூகப் பாதுகாப்பு இல்லாமல் அநாதை, அகதி என்ற வகையில் ஆகிப் போவதை கொரோனா காலம் காட்டுகிறது.