இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது ஆஸ்திரேலியா.

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஷ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி, பர்மிங்காமில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா அணி, முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் எடுத்தது. ஸ்மித் 144 ரன்கள் எடுத்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 374 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 133 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 50 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 398 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஸ்டீவ் ஸ்மித்(142) , இரண்டாவது இன்னிங்ஸிலும் அபார சதம் அடித்தார்.  இதன் மூலம் ஆஷஷ் தொடரின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்த 5வது ஆஸ்திரேலியா வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். மேத்யூ வேட் 110 ரன் எடுத்தார். 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே தனது விக்கெட்டுகளை பறிகொடுத்துத் தடுமாறியது.

இறுதியாக 52.3 ஓவரில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் 6 விக்கெட்டுகளையும் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இங்கிலாந்து  அணியின் கிறிஸ் வோக்ஸ் மட்டும் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். 

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இதையடுத்து 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆக.14 தேதி தொடங்குகிறது.