அதிரடியாக விளையாடிய விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தனது இரட்டை சதத்தைப் பதிவு செய்துள்ளார்

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால் சதம் அடித்து அசத்தினார். இவர் 108 ரன்களில் ஆட்டமிழந்தார். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி 63 ரன்களுடனும் ரஹானே 18 ரன்களுடனும் களத்திலிருந்தனர்.

இரண்டாவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. ரஹானே அரை சதம் கடந்தார். அதன் தொடர்ச்சியாகக் கோலி தனது 26வது டெஸ்ட் சதத்தைப் பூர்த்திசெய்தார். இந்த ஆண்டில் அவர் அடித்த முதல் டெஸ்ட் சதமும் இதுதான்.

இதன்பின்னர் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 150 ரன்களை கடந்து அசத்தினார்.இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 9ஆவது முறை 150 ரன்களுக்கு மேல் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் கேப்டனாக 8 முறை 150 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார். இந்தச் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

தொடர்ந்து விளையாடிய கோலி இரட்டை சதம் விளாசினார்.இந்திய அணி 500 ரன்களை கடந்து வலுவான நிலையில் விளையாடி வருகிறது .