தற்போது பதவி நீட்டிப்பில் இருக்கும் தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் வரும் 30ஆம் தேதி நிறைவடைவதையடுத்து டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தற்போது தமிழக காவல்துறையின் டிஜிபியாக பதவி வகித்து வருபவர் டி.கே.ராஜேந்திரன். இவரது பணிக்காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைவதால், புதிய டிஜிபி நியமனப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன்படி, பணிமூப்பு அடிப்படையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஜே.கே.திரிபாதி, காந்திராஜன், ஜாங்கிட், ஜாபர்சேட், ஆசீஷ் பங்ரா, ரமேஷ் குடவாலா, அசுதோஷ் சுக்லா, ஜாபர் சேட் உட்பட 14 பேரின் பட்டியலைத் தமிழக அரசு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு யுபிஎஸ்சிக்கு அனுப்பியது.

இவர்களில் ஜாங்கிட், காந்திராஜன், ஆசீஷ் பங்ரா, ரமேஷ் குடவாலா ஆகியோர் 6 மாதங்களுக்கு உள்ளாகவே ஓய்வு பெற உள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 6 மாதங்களுக்குள் ஓய்வு பெற உள்ளவரை டிஜிபியாக நியமிக்கக் கூடாது என்பதால் இவர்கள் 4 பேரும் டிஜிபியாகும் வாய்ப்பை இழந்தனர். மீதமுள்ள 10 பேரில் சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராகப் பதவி வகித்து வரும் ஜே.கே.திரிபாதி, சிபிசிஐடி தலைவராக உள்ள ஜாபர் சேட் ஆகிய இருவரும் டிஜிபி நியமனப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், தமிழகத்தின் அடுத்த டிஜிபி ஆக ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரிபாதி சென்னை காவல் துறை ஆணையராகவும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகவும் பணியாற்றியவர். முன்னதாக, தமிழக டிஜிபியாக ஜே.கே.திரிபாதியின் பெயரை மத்திய அரசும், ஜாபர் சேட்டின் பெயரை மாநில அரசு பரிந்துரை செய்திருந்ததாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.