ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் நளினிக்கு வழங்கப்பட்ட பரோல் வரும் 25ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், மேலும் 3 வாரங்கள் பரோலை நீடித்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளனர். இதில் வேலூர் சிறையில் சுமார் 28 ஆண்டுகளாக இருந்து வருகிறார் நளினி.

வேலூர் சிறையில் உள்ள நளினி தனது மகள் திருமண ஏற்பாடுகளைச் செய்ய 6 மாதம் பரோல் கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கடந்த மாதம் 5ஆம் தேதி அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக நளினிக்கு அவரது தாய் பத்மா மற்றும் காட்பாடியைச் சேர்ந்த பெண் ஒருவரும் ஜாமீன் அளித்திருந்தனர்.

இதனையடுத்து சிறை நடைமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் 25ஆம் தேதி சிறையிலிருந்து நளினி வெளியே வந்தார். வேலூர் ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை மாநில துணை பொதுச் செயலாளர் சிங்காராயர் வீட்டில் அவர் தங்கி மகளின் திருமண ஏற்பாடுகளைக் கவனித்து வருகிறார்.

இந்நிலையில், வரும் 25ஆம் தேதியுடன் பரோல் முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்கக் கோரி நேற்று முன்தினம் நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள், அவரது பரோலை 3 வாரங்கள் நீட்டித்து உத்தரவிட்டனர்.