ஃபேஸ்புக்கில் உள்ள சிவில் இன்ஜினியரிங்க் லேனர்ஸ் (Civil Engineers Learners) என்ற பக்கத்தில், மே 27ஆம் தேதியன்று சுத்தியலின் படத்தை வெளியிட்டு, இதை உங்கள் நாட்டில் எப்படி அழைப்பீர்கள் எனக் கேட்கப்பட்டிருந்தது.

அந்தப் படத்தின் கீழ், தமிழரான விக்னேஷ் பிரபாகர் என்பவர், “இதை நாங்கள் சுத்தியல் என்று அழைப்போம். இதை எதன் மீதாவது அடித்தால் டங், டங் என சத்தம் வரும். ஜமீன் பங்களாவில் வேலை பார்க்கும்போது பெயிண்ட்டிங் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையை அவரது அண்ணன் மகன் இதை வைத்து உடைத்துவிட்டார். பாவம்.” எனக் குறிப்பிட்டிருந்தார். அடுத்தடுத்த கமென்ட்களில், நேசமணிக்காக பிரார்த்தனை செய்யவும் என்ற பொருளில், #Pray_for_Nesamani என்ற ஹாஷ்டாகையும் பயன்படுத்தியிருந்தார்.

சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, தேவயானி, வடிவேலு, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடித்த ஃப்ரண்ட்ஸ் திரைப்படம் கடந்த 2001ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தில் வடிவேலுவின் காமெடி மாஸ்சாக இருக்கும். கட்டட வேலைகளைச் செய்யும் கான்ட்ராக்டராக வரும் வடிவேலுவின் தலையில் ரமேஷ் கண்ணா சுத்தியலைப்போடும் காட்சியையே விக்னேஷ் பிரபாகர் வேடிக்கையாக அந்த ஃபேஸ்புக் கமெண்டில் குறிப்பிட்டிருந்தார். அந்தப் படத்தில் வடிவேலுவின் பெயர் நேசமணி. ரமேஷ் கண்ணாவின் பெயர் கிருஷ்ணமூர்த்தி.

சிறிது சிறிதாக பிரபலமான இந்த ஹாஷ்டாக் இன்று காலை முதல் உலக அளவிலும் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்துள்ளது. ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் டிரெண்டில் முதலிடத்தில் உள்ளது.

முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குன்றி மருத்துவமனையில் இருந்தபோது ஊடகங்களில் வெளியான செய்திகளைப் போன்ற செய்திகளை வடிவேலுவை வைத்து உருவாக்கி, வீடியோ காட்சிகளையும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றனர் மீம்ஸ் கிரியேட்டர்கள் மற்றும் நெட்டிசன்கள்.

மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நேசமணியின் உடல்குறை குறித்து அவ்வப்போது அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தகவல்கள் அளித்து வருவது போன்றும், நேசமணி இட்லி சாப்பிட்டார், கலக்கி சாப்பிட்டார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன என்று மாஸ் பங்க் செய்கின்றனர்.

வட கொரியா அதிபர், அமெரிக்க அதிபர் என வெளிநாட்டு தலைவர்களும் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு நேசமணியின் உடல்நிலை குறித்து விசாரிக்கின்றனர். இந்தியாவில் முடியாவிட்டால் எங்கள் நாட்டிற்கே நேசமணியை கொண்டுவந்து விடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என பிடிவாதமாக அவர்கள் கூறுகின்றனர்.

நேசமணி குணமாகிவிட்டால் பால்காவடி எடுப்பது, தீ மிதிப்படி என நேசமணிக்காக பிரார்த்தனைகள் குவிகின்றன. செய்தி ஊடகங்களையும் விட்டுவைக்காத நெட்டிசன்கள் ப்ரேக்கிங் நியூஸ் என்ற பெயரில் நேசமணிக்கு அடிப்பட்ட வீடியோவை வெளியிட்டிருக்கின்றனர். நேசமணியின் உடல்நிலை சரியில்லாததால், இன்று நடைபெற இருந்த பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா தள்ளிவைக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பரப்பட்டுவந்தன.

நேசமணி அடிபடுவதற்கு காரணமாய் இருந்த கிருஷ்ணமூர்த்தியும், சந்துருவையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர் என்றும் அதில் அவர்கள் இருவரையும் கைது செய்துவிட்டனர் என்றும் நெட்டிசன்கள் பதிவுகளை போட்டு தள்ளுக்கொண்டிருக்கின்றனர். மேலும் ஜமீந்தாரின் மகளான பத்மினி முன் ஜாமீன் கேட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

#Pray_for_nesamani யை வைத்து சிலர் அரசியல் ரீதியதான காமெடியாகவும் சமூக வலைதளங்களில் கமெண்டுகளை தெறிக்கவிடுகின்றனர். அனைவரின் அன்பாலும், பிரார்த்தனையாலும் நேசமணி மீண்டும் எழுந்து வருவார் என நம்புவோம். தற்போது நேசமணிக்காக நாமும் பிரார்த்திப்போம். #Pray_for_nesamani.