நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் ஊழல்வாதிகளைத் தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இன்று (மார்ச் 28) கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமத்தில், கிராம நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றியவர் சரவணன். இவர் லஞ்ச பெற்ற வழக்கில் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து, அவரை பணி நீக்கம் செய்து ஈரோடு வருவாய் கோட்டச்சியார் கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டார். வருவாய் கோட்டச்சியார் உத்தரவை எதிர்த்து சரவணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு முன்பு இன்று (மார்ச் 28) விசாரணைக்கு வந்தது. அப்போது, பணி நீக்கத்தை மறு ஆய்வு செய்யும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது எனக்கூறிய நீதிபதி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், கருவறை முதல் கல்லறைவரை தற்போது இந்திய மக்கள் லஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகக் கூறினார் நீதிபதி சுப்பிரமணியம். கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களில் லஞ்சத்திற்குப் பதிலாக இச்சைக்கு இணங்க செய்யும் துரதிருஷ்டவசமான நிலையும் உள்ளதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.

சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் சட்டங்களை இயற்றுவதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும், மக்கள் பிரதிநிதிகளே ஓட்டுக்குப் பணம் கொடுப்பது ஜனநாயகத்தின் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்துவிடும் எனக்கூறிய நீதிபதி, வாக்குகளின் புனிதத்தை சில வாக்காளர்கள் உணர்வதில்லை எனவும் தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிராகப் போராடும் பாண்டவர்களை, ஊழல்வாதிகளான கவுரவர்களிடம் இருந்து நீதிமன்றங்கள்தான் பாதுகாக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி சுப்பிரமணியம், ஊழலுக்கு நீதித்துறையும் விதிவிலக்கு அல்ல என கூறியுள்ளார்.

ஊழல் செய்யும் நீதித் துறை அதிகாரிகளையும், அரசு அதிகாரிகளையும் தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் எனவும், இவர்களால் நாட்டின் வளர்ச்சி தடைபடுவதாகவும் நீதிபதி தெரிவித்தார். மேலும், ஊழலுக்கு எதிராகச் சட்டங்கள் இருந்தும் அவற்றைக் கடுமையாக அமல்படுத்தப்படுவதில்லை எனவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.