பிரபல இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையான துத்தி சந்த், அவரது கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வருவதாக தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் துத்தி சந்த். கடந்தாண்டு ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று, 2 வெள்ளிப்பதக்கங்களை நாட்டுக்காக வென்று கொடுத்தவர். 2014ம் ஆண்டு நடத்தப்பட்ட பாலின பரிசோதனையில் அவருக்கு ஆண்மைத்தன்மை இருப்பதாக கூறி போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு மன்றத்தை அணுகி நியாயம் கோரினார். இதனையடுத்து 2015 ஆம் ஆண்டு துத்தி மீதான தடை நீக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்காக அவர் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாக துத்தி சந்த் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை வெளியிட்ட பிறகு துத்தி சந்துக்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து பேசியுள்ள துத்தி சந்த், “என்னுடைய தன்பாலின விருப்பத்துக்கு எனது பெற்றோரே எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் என்னுடைய சகோதரி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். என்னை வீட்டைவிட்டே வெளியேற்றுவேன் என்றும் சிறையில் தள்ளுவேன் என்றும் மிரட்டுகிறார். எனது சகோதரி என் குடும்பத்தில் வல்லமை படைத்தவள். எனது சகோதரனின் மனைவியை பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றினாள். அதேபோல் என்னையும் விரட்டுவேன் என்று மிரட்டுகிறாள். என் துணையை தேர்ந்தெடுக்க எனக்கு உரிமை உண்டு. தற்போது என் கவனம் முழுவதும் வேர்ல்ட் சாம்பியன்ஸ் மற்றும் ஒலிம்பிக் போட்டியில்தான் உள்ளது. நான் கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தன்பாலினத்தில் துணையை தேர்வு செய்துள்ள முதல் விளையாட்டு வீரர் துத்தி சந்த் ஆவார்.