தென்கொரியாவில் ஓட்டல் அறையை வாடகைக்கு எடுத்து தங்குபவர்களை ரகசிய கேமரா வைத்து ஒரு குழு ஆபாச காணொளியை தயாரித்து சமூகவலைதளத்தில் வெளியிட்டதால் 1600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாலியல்ரீதியான வீடியோக்கள் எடுப்பது தென்கொரியாவில் ஒரு தொற்றுநோயாக இருப்பதாக விவரிக்கப்படுகின்றது.

ஓட்டல் அறையில் உள்ள தொலைக்காட்சிகளில், ஹேர் டிரையர் மாட்டுவதற்கு வைக்கப்படும் பிடிப்பச்சட்டம் ((Holder) மின்சாரம் மூலம் இயங்க தேவையான பொருள்களுக்கான மின் புதைக்குழி (Socket) ஆகியவற்றில் மினி கேமரா வைத்து அந்தக் குழு ஆபாச படம் எடுத்திருக்கிறது. இப்படங்கள் மூலமாக 6200 டாலர்கள், அதாவது சுமார் நான்கு லட்சத்துக்கும் அதிகமான ரூபாய் சம்பாதித்ததாக குற்றம்சாட்டப்பட்டு நான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டால் பத்து ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டியதிருக்கும். மேலும் சுமார் 18 லட்ச ரூபாய் அபராதம் செலுத்தவேண்டியதிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ரகசியமாக பாலியல் சார்ந்த வீடியோக்களை எடுப்பதுதான் தென்கொரியாவின் தொற்றுநோய் என விவரிக்கப்பட்டது. இதனால்  இந்த விவகாரம்  அங்கு போராட்டங்கள் எழுச்சிப் பெறுவதற்கு  ஒரு காரணியாக அமைந்தது.

இதுகுறித்து கொரியன் காவல்துறை கூறியதாவது, “அந்தக் குழுவினர் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து 1 மினி லென்ஸ் கேமராவை பத்து தென் கொரிய நகரங்களில் உள்ள 30 வெவ்வேறு ஓட்டல்களில் பொதித்துள்ளனர். அதனையடுத்து நவம்பர் மாதம் ஒரு வெப்சைட் துவக்கி அதில் காணொளிகளை பதிவிட்டுள்ளது. முப்பது நொடிகள் இலவசமாக அக்காணொளியை பார்க்கவும் அதற்கு மேல் பார்ப்பதற்கு பணம் கட்ட வேண்டும் எனும் திட்டத்தை செயல்படுத்தியது. இந்தக் குழுவினர் 803 காணொளிகளை இதுவரை வெளியிட்டுள்ளனர். அந்நிய நாட்டு சர்வர்மூலம் இந்த வெப்சைட்டை நடத்தியாக தெரியவந்துள்ளது. இதுவரை 97 பேர் இந்த தளத்தில் பணம் கட்டியிருக்கின்றனர்.தற்போது இந்த தளம் முடக்கப்பட்டுவிட்டது” என தெரிவித்துள்ளது.

ஆபாச காணொளியை தயாரிப்பது, பகிர்வது ஆகியவை தென் கொரியாவில் சட்டப்படி குற்றமாகும். 2012-ல் இது போன்ற குற்றங்கள் தொடர்பாக 2400 வழக்குகள் இருந்தன, 2017-ல் 6000 வழக்காக அதிகரித்துவிட்டது. 5400 பேர் ரகசிய கேமரா வைத்து செய்யப்படும் குற்றங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டாலும் அதில் 2% பேர்தான் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆபாச காணொளிகள் தயாரித்து வெளியிடும் விவகாரத்துக்கு கொரியாவின் வேகமான இணையதள வசதி ஒரு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது. பல காணொளிகள் கழிவறை, உடை மாற்றும் அறையில் எடுக்கப்பட்டுள்னர். பொதுவாக ஒரு இணை, பிரிந்த பிறகு தனது முன்னாள் இணையை பழிவாங்க இவ்வாறு ஆபாச காணொளிகளை வெளியிவது ஒரு வழக்கமாக அங்கு இருந்துவந்தது.