லஞ்சம் கொடுக்காமல் தாலுகா அலுவலகங்களில் எந்த சான்றிதழையும் பெற முடியவில்லை எனவும், தாலுகா அலுவலகங்களில் அடிக்கடி திடீர் சோதனை நடத்த வேண்டும் எனவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.

தர்மபுரி மாவட்ட நிலம் கையகப்படுத்தும் பிரிவு சிறப்பு தாசில்தார் தர்மராஜ் ஊழல் குற்றச்சாட்டில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தார். அந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தர்மராஜ் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது, அதன்படி கடந்த 2016ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, தனது பதவி உயர்வைத் தடுக்கும் நோக்கில் 2018 ஆம் ஆண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தர்மராஜன் தரப்பில் வாதிடப்பட்டது, ஆனால் 2016 ல் வழக்கு பதிவு செய்யப்பட்ட வழக்கு 2018 ல் கவனத்திற்கு வந்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பணியிடை நீக்கம் என்பது துறைரீதியான விசாரணைக்கு ஏதுவாக இருக்க, அலுவல்களிலிருந்து ஒத்திவைப்பது தானே தவிர தண்டனை இல்லை எனத் தெரிவித்தார், துறை ரீதியிலான விசாரணையில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.

மேலும் நாடு முழுவதும் ஊழல் புற்றுநோய் போலப் பரவி உள்ளதாகவும், இதை தடுக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்த நீதிபதி, தாலுகா அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்காமல் எந்தவொரு சான்றிதழையும் பெறமுடியவில்லை எனவும்,  தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அடிக்கடி திடீர் சோதனையை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் நேர்மையான அதிகாரிகள் இருக்கின்றனர், அவர்கள் அனைவரும் தங்கள் அலுவலகங்களில் நடக்கும் ஊழல்களை வேடிக்கை பார்க்காமல் உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் அரசு அலுவலகங்களில் சான்றிதழ்கள் வழங்குவதை முறைப்படுத்தி, எத்தனை நாட்களில் அவை கிடைக்கும் எனக் குறிப்பிட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமென அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.